வெள்ளி, 31 ஜூலை, 2009

வெள்ளைத் திமிர் மு.பாலசுப்பிரமணியனின் கலகக்குரல்

வெள்ளைத் திமிர்
மு.பாலசுப்பிரமணியனின் கலகக்குரல்


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

உலகக் கலைகளுக்கெல்லாம் தாய் இசைக்கலையே. புவிக்கோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமே உலக உயிரினங்களுக்கெல்லாம் ஆதாரம் ஆனதுபோல், இந்த இயற்கையின் கொடையாகிய வளிமண்டலமே இசைக்கு ஆதாரம். இயற்கையின் இசை அலாதியானது பாரதி இதனைப் பதிவு செய்கின்றான்.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசையினிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடல் எந்நேரமும் தானிசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்


நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாரதி பாடுவதில் இயற்கைக்கும் இசைக்கும் உள்ள நுட்பமான உறவு சொல்லப்படுகிறது.

இசையும் மொழியும் இணைந்தபோதுதான் கவிதை பிறந்தது. ஓசையை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தி அதில் சொற்களை இட்டுநிரப்பி மனிதன் கவிதையைக் கற்றுக்கொண்டான். ஆதியில் கவிதை என்பது பாட்டுதான். எழுத்துக்களைப் படைத்துக்கொள்வதற்கு முன்பே மனிதன் பாட்டைப் படைத்துவிட்டான். பாட்டில் இசையே முதன்மை பெற்றது, சொல்லும் பொருளும் அடுத்த இடத்தில்தான். இப்படித் தொடங்கிய பாட்டு, வாய்மொழிக் கவிதையாய் வளர்ந்து ஏட்டில் குடியேறி கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தனக்கும் இசைக்குமான தொடர்பை விட்டுவிடாமல் பற்றித் தொடர்ந்தது. பின்னர், கவிதை அச்சு ஊடகத்திற்கு இடம் பெயர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டு, கவிதையை இசையிலிருந்து பிரித்தது. பறக்கக் கற்றுக்கொண்ட குஞ்சுப் பறவைக்கு இனி தாய்ப்பறவையின் துணை தேவையில்லை. இனியும் தாய்ப்பறவை ஊட்டிக் கொண்டிருந்தால் குஞ்சுப்பறவை செயலற்றுப் போகும். கவிதைகளுக்கும் இதே விதிதான். கவிதைகள் வாய்க்கும் செவிக்குமாக ஊடாடும்வரைதான் இசை அல்லது ஓசை ஒழுங்கு தேவைப்பட்டது. கவிதைகள் அச்சு வாகனமேறி கண்ணுக்கும் கருத்துக்குமாக ஊடாடத் தொடங்கிய பின்னர், கவிதை தன் எல்லாக் கட்டுகளையும் உடைத்துக் கொண்டு, விட்டு விடுதலையாகி நிற்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் அதைத்தான் செய்தனஃசெய்கின்றன. நவீன கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ என்ற இத்தகு புதிய வடிவங்களின் வரவுகளுக்குக் காரணங்கள் இவைதாம்.

பாட்டரங்கங்கள் கவிதையைச் செவிக்குப் படைப்பன. அங்கே கவிதை பாட்டாயிருக்க வேண்டும். அதைவிடுத்துத் தமிழின் நவீன கவிதைகளைப் பாட்டரங்கங்களில் வாசிப்பது பாட்டி மஞ்சள் தேய்த்துக் குளித்த கதைதான். கவிதைகள் வாய்மொழியில், ஏட்டில், அச்சில் குடியிருந்த தலைமுறைகளைக் கடந்து நான்காவது தலைமுறையாக கணிப்பொறி வழி இணையத்தில் குடியேறத் தொடங்கிவிட்டன. இவை ஊடக மாற்றங்கள். ஒவ்வொரு ஊடக மாற்றத்திற்கும் ஏற்ப, கவிதைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றன.

II
பொறியாளர் மு.பாலசுப்பிரமணியனின் நான்காவது படைப்பு வெள்ளைத் திமிர் என்ற கவிதைத் தொகுப்பு. முதல் மூன்று படைப்புகளும் கூடக் கவிதைப் படைப்புகள்தாம்.

நடைவண்டி - சிறுவர் கவிதைகள்
வாழப் பிறந்தோம் - சமுதாயக் கவிதைகள்
அரைக்கீரை விற்கிறான் அம்பானி – ஹைக்கூ


என்று மூன்று படைப்புகளையும் வௌ;வேறு வடிவில்ஃ நோக்கில் வெளியிட்டு புதுவைக் கவிஞர்கள் பரம்பரையில் தமக்கென ஒரு தனியிடத்தை இயல்பாகப் பெற்றவர் பரிதிஅன்பன் என்று அறியப்படும் பொறியாளர் மு.பாலசுப்பிரமணியன்.

'வெள்ளைத் திமிர்' என்ற நூலின் தலைப்பே தனித்துக் குறிப்பிடப் பெறும் சிறப்புடையது. உலக வரலாற்றை ஒருவரியில் சொல்லும் ஒப்பற்ற சொற்கள் இந்த வெள்ளைத் திமிர். பின்னைக் காலனியியம் என்றதொரு புதிய அணுகுமுறையில் இன்றைக்கு அலசப்படும் சமூக பொருளாதார பண்பாட்டுச் சொல்லாடல் மதிப்புடையது இந்த சொற்கள். கவிஞர் இந்தச் சொற்களை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு என்ற ஒற்றைப் பொருளில் கையாண்டாலும் இந்தச் சொற்கள் வழங்கும் படிமம் விரிந்த பொருளுடையது. பன்முக வாசிப்புக்கு வழிவகுப்பது.

கவிஞர் மு.பாலசுப்பிரமணியனின் விரிந்த வாசிப்பு அனுபவமும் உலக நடப்புகளைச் சரியான கோணத்தில் புரிந்துகொள்ளும் கூர்த்த மதியும், புரிந்துகொண்டதைப் பதிவுசெய்யும் துணிச்சலும் இந்நூலின் பக்கங்கள் தோறும் காணக் கிடைக்கின்றன.

நூலின் உள்ளடக்கங்களைப் பார்க்கிறபோது கவிதைகளுக்கான பாடுபொருள்களைத் தேடிப் பிடிக்கும் சிரமம் மு.பாலசுப்பிரமணியனுக்கு ஒருநாளும் ஏற்பட்டிருக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது. வீட்டுச் சூழல், நட்புச் சூழல் சமூகச் சூழல், நாட்டுச் சூழல் என்று தாம் புழங்குகின்ற அனைத்துச் சூழல்களின் இயல்புகளையும் அவற்றின் சிக்கல்களையும் கவிதைகளாக்கும் செய்நேர்த்தி அவருக்கு கைவந்திருக்கின்றது. மு.பாலசுப்பிரமணியனின் முந்தைய கவிதைத் தொகுதிகளில் காணக்கிடைக்காத பல நவீன கவிதை உள்ளடக்கங்கள் இத்தொகுதியில் இடம்பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. சான்றாக, காலம், மனம், வாழ்க்கை, நினைவு, காலஓட்டம், தேடல் முதலான கவிதைகளைக் குறிப்பிடலாம். இவ்வகைக் கவிதைகளில் மு.பாலசுப்பிரமணியனின் தேடலும் வாழ்க்கை குறித்த விசாரணைகளும் நுட்பமாக வெளிப்படுகின்றன.

கவிதைகள் குறித்தும் கவிதைகளின் நோக்கம் குறித்தும் கவிதை எழுபவனின் கடமைகள் குறித்தும் சில தெளிவான வரையறைகளைக் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் உருவாக்கி வைத்துள்ளார். கவிஞரின் இலக்கியப் பயிற்சி இதற்குத் துணைபுரிந்திருக்க வேண்டும். கவிதை என்ற தலைப்பில் கவிஞர் எழுதியுள்ள ஒரு கவிதை அவரின் கவிதைக் கோட்பாட்டை/ விருப்பை வெளிப்படுத்துகின்றது எனலாம்.

நடந்ததை நடப்பதை நயமாக உரைக்கவும்
நடக்க இருப்பதில் நம்பிக்கை வைக்கவும்
கடந்ததைக் காதலைக் காவியம் ஆக்கவும்
கருத்தினைக் கடமையைக் கனிவாக உரைக்கவும்
துயிலுகின்ற மக்களைத் தூண்டி எழுப்பவும்
துணிவாகச் சமூகக் கொடுமைகள் சாடவும்
வெயிலாக வெளிப்பட்டு வெற்றுமைகள் கொளுத்தவும்
வேண்டும் கவிதை


என்றெல்லாம் கவிதைகளின் தேவையை வலியுறுத்தும் கவிஞர் இதே கவிதையில் இன்னும் ஒருபடி மேலேபோய், "உரிமைகள் வென்றிடும் குரலாய் மாறும், உண்மையில் கவிதையே உலகை ஆளும்" என்ற அசாத்தியமான நம்பிக்கையோடு கவிதையை முடிக்கின்றார்.

கவிதைகள் எவ்வளவுதான் உயர்ந்தவையாயிருந்தாலும் எழுதுபவனைப் பொறுத்தன்றோ கவிதை பயனுடையதாகும். கவிதைகளின் நோக்கத்தைப்போல் கவிஞனின் நோக்கமும் இலக்கும் உயர்வாயிருத்தல் வேண்டுமென்பதனையும் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் தெளிவுபடுத்துகின்றார்.

விருப்புக்குப் பாட்டெழுதி
வெறுந்தாளை நிரப்பாமல்
பொறுப்புக்குப் பாட்டெழுதி
பொதுவுடைமை போற்றிடுஎPர்
உறுப்புகளை வருணித்து
உணர்ச்சிகளைத் தூண்டாமல்
உழைப்பாளர் வியர்வையின்
உன்னதம் போற்றிடுவீர்


வெறுந்தாளை நிரப்பும் இன்றைய சராசரிக் கவிஞர்களைச் சாடுவதோடு மட்டுமின்றி கவிதையும் கவிஞனும் எப்போதும் ஒடுக்கப்பட்டவன் பக்கமே நிற்க வேண்டும் என்ற பொருளில் உழைப்பவர் பெருமை பேசவேண்டும் என்றும் சமத்துவம் போற்றப்பட வேண்டும் என்றும் ஆழமான சிந்தனைகளையும் ஆரவாரமின்றி பதிவுசெய்கின்றார் மு.பாலசுப்பிரமணியன்

கவிஞர்கள் தம்மைச் சுற்றி நடக்கும் அவலங்களை அத்துமீறல்களை அடக்குமுறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் கற்பனை உலகில் கவிதைத் தேர் ஒட்டிக்கொண்டிருப்பதும் கடவுளர் துதிபாடி காலத்தை வீணே கடத்திக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கன. வாழும் காலத்திற்குப் பயன்படாத கவிஞன் வெறுஞ்சதைப் பிண்டம். கவிஞன் தாம் வாழுகின்ற காலத்தின் குரலாய் இருக்க வேண்டும். கவிஞர் மு.பாலசுப்பிரமணியனின் வெள்ளைத் திமிர் சமகாலத்து உள்ளுர் மற்றும் உலக நடப்புகள் அனைத்தையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பதிவுசெய்கின்றது.

கவிழ்ந்த தேர் என்ற தலைப்பில் ஈழத்தின் அரசியல் மேதை பாலசிங்கம் மறைவை அழுத்தமான சோகத்தோடு கவிதையாக்குகின்றார். வெள்ளைத் திமிர் என்ற தலைப்பில் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பையும் சதாமின் மரணதண்டனையையும் ஆவேசமாகச் சாடிப் பாடுகின்றார். துறைமுக விரிவாக்கம் என்ற தலைப்பில் புதுவைத் தேங்காய்த்திட்டில் அமைக்க இருந்த துறைமுக விரிவாக்கத்திற்கெதிரான மக்கள் போராட்டத்தையும் ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கையும் கடுமையான கோபத்தோடு கவிதையாக்குகின்றார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

III
கடந்த இருபத்தைந்து ஆண்டு காலப் புதுவைக் கலை இலக்கிய வளர்ச்சியின் அடையாளம் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன். 1983 தொடங்கி புதுவையின் எல்லா இலக்கிய மேடைகளையும் பார்வையாளர் வரிசையிலிருந்து கூர்ந்து கவனித்து வளர்ந்தவர் இவர். கடந்த பத்தாண்டுகளாகப் புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இலக்கியப் பேராசான் ஜீவாவின் பாதையில் கலை இலக்கியங்களைப் படிக்க / படைக்க முற்படுபவர். சுயமரியாதைச் சிந்தனையும் முற்போக்கு அரசியல் பார்வையும் கொண்டவர். புதுவையின் வளர்ந்துவரும் புதிய தலைமுறையின் முன்னோடி. புதியவர்களை அரவணைத்து ஆற்றுப்படுத்தும் பண்பாளர். புதுவையின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக எதிர்காலத்தில் அடையாளம் காட்டத்தகும் ஆற்றலுடையவர்.

'அரைக்கீரை விற்கிறான் அம்பானி' நூலின் அணிந்துரையில் புதுவைத் தமிழ்நெஞ்சன் கவிஞர் மு.பாலசுப்பிரமணியனைப் பற்றிக் குறிப்பிடும் வரிகளைப் பொருத்தம் நோக்கி இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

பரிதிஅன்பன் (மு.பாலசுப்பிரமணியன்) சூடும் சுரணையும் மானமும் உள்ள ஒரு தோழன். இலக்கியத் தாகமும் இனவுணர்வு வேகமும் பொதுத் தொண்டில் ஈடுபாடும் இம்மண்ணின் மைந்தன் என்கிற அடையாளமும் மொழி, இன, நாட்டுணர்வின் முகவரியும் கொண்டவன்.

புதுவைத் தமிழ்நெஞ்சனின் பாராட்டுரைக்கு நூற்றுக்கு நூறு தகுதி பெற்றவர் மு.பாலசுப்பிரமணியன். தொடர்ந்துவரும் அவரின் தமிழ்ப்பணிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

முனைவர் நா.இளங்கோ

பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனாரின் சொற்பொழிவுக்கலை உத்திகள்

பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனாரின் சொற்பொழிவுக்கலை உத்திகள்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.


தமிழர்க்குப் பேச்சுக்கலை புதியதல்ல. திருவள்ளுவர் சொல்வன்மை என்றே ஒரு தனியதிகாரம் படைத்துப் பேச்சுக்கலையின் மாண்பினைப் போற்றுகின்றார். கேட்டார் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாகச் சொல் இருக்கவேண்டும் என்று பேச்சாற்றலுக்கு இலக்கணம் வகுக்கின்றார் திருவள்ளுவர். ஆயினும் மேடைப்பேச்சு என்ற வடிவம் தமிழர்க்கு இருபதாம் நூற்றாண்டு வரவு. ஆங்கிலக் கல்வியால் தமிழகம் பெற்ற பல பயன்களில் இதுவும் ஒன்று.
உலக வரலாற்றில் பேச்சாற்றலால் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் மிகப்பலர். கிரேக்க மக்களைக் கவர்ந்த டெமாஸ்தனிஸ், ரோமானிய மக்களைத் தமது பேச்சாற்றலால் வியப்பில் ஆழ்த்திய சிசரோ, சொல்லாலும் கருத்தாலும் கேட்போர் மனம் கவர்ந்த பிரிட்டிஷ் சிந்தனையாளன் புருனோ, அனல் கக்கப் பேசி புத்துலகம் படைத்த மாவீரன் லெனின், மதங்களுக்கு எதிரான கருத்துக்களையும் மயக்கு மொழியில் எடுத்துச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைத்த பகுத்தறிவாளன் இங்கர்சால், மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில், ஆப்ரகாம் லிங்கன் என்று மேடைப்பேச்சால் வரலாறு படைத்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இந்தியாவில், தமிழகத்தில் பேச்சு என்பது தர்க்கம், விவாதம், விளக்கவுரை, அறவுரை போன்ற வடிவங்களிலேயே நெடுங்காலமாக வழங்கிவந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்தான் தமிழ் மேடைப்பேச்சுக் கலையின் தோற்றத்தைக் காணமுடிகிறது. ஆறுமுக நாவலரும், வள்ளலாரும் சமயநெறிப்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தி, தமிழரின் மேடைப்பேச்சுக் கலைக்குக் கால்கோள் இட்டனர். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் சிவநெறியும் செந்தமிழும் பரப்பத் தமிழ்நாடெங்கும் வலம்வந்து சொற்பொழிவாற்றி மேடைப்பேச்சுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தார். மேடைப்பேச்சுக் கலையைத் தமிழில் முழுமையாக உருவாக்கியவர் திரு.வி. கலியாண சுந்தரனார். அவரே சொற்பொழிவைத் தமிழில் கலையாக்கினார்.

மேடைத்தமிழுக்கு உரமிட்டு வளர்த்த பெருமை திராவிட இயக்கத்தினரையே சாரும். ஒவ்வொரு தலைவரும் தத்தமக்கே உரிய தனித்துவமான நடையழகோடு மேடைத்தமிழை வளர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தந்தைப்பெரியார், இலக்கியப் பேராசான் ஜீவா, பேரறிஞர் அண்ணா போன்றவர்களாவர். சுயமரியாதை இயக்கத்தவர்களின் சொற்பொழிவுகள் காரண காரிய வழிப்பட்ட வினா விடைகளைக் கொண்டும், அச்சமற்று எப்பொருள் குறித்தும் சிந்திக்கும் திறனைக் கொண்டும், பகுத்தறிவு வழிப்பட்ட தர்க்கங்களைக் கொண்டும் அமைந்திருந்திருந்தன. இத்தகு மேடைப்பேச்சுகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் அன்றைக்குப் புகழ் பெற்றிருந்தன. சுயமரியாதை இயக்கப் பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார்.

இரா.ச.குழந்தைவேலனாரின் மேடைப்பேச்சு:

குழந்தைவேலனார் ஓர் அரசுக் கல்லூரிப் பேராசிரியராகப் பணி ஏற்றிருந்தாலும், தம் இளமைக்காலம் முதல் இன்றுவரை தம்மை ஓர் சுயமரியாதை இயக்கச் சிந்தனையாளனாகவே வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். தனிப்பட்ட அரசியல் கட்சிச் சார்பில்லாமல் சிந்தாந்த பூர்வமாக இயக்கம் சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பது அவரின் தனிப்பட்ட சிறப்பு. வகுப்பறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சமூகச் சிந்தனையோடு ஒடுக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதுமாக அவரின் வாழ்க்கை அமைந்திருந்தது. தமது சிந்தனைகளையும் கருத்துக்களையும் எழுத்து வடிவில் படைப்பிலக்கியங்களாகவோ, கட்டுரைகளாகவோ பதிக்க வைக்க அவர் விரும்புவதில்லை. மாறாகப் பேச்சு வடிவில் மேடைப்பேச்சுகளாகத் தமிழகமெங்கும், குறிப்பாகத் தென்னார்க்காடு மற்றும் புதுவை மாவட்டங்களில் அவர் முழங்கிய மேடைகள் ஆயிரத்திற்கும் மேலிருக்கும்.

குழந்தை வேலனார் கையாண்ட மேடைப்பேச்சு வடிவங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:
1. தனிப்பேச்சு
2. வாழ்த்துரைகள்
3. திருமணத் தலைமை உரைகள்
4. பட்டிமன்ற உரைகள்
5. வழக்காடுமன்ற உரைகள்.
என்பன அவை.

பேச்சு நடை:

குழந்தை வேலனாரின் மேடைப்பேச்சு நடை தனித்தன்மை வாய்ந்தது. ஆராவாரமிக்க அலங்காரமான பேச்சு நடையை அவரிடம் காண்பது அரிது. மிக மிக எளிய இனிய சொற்களைக் கையாண்டு இயல்பான மேடைத்தமிழில் அவர் சொற்பொழிவாற்றுவார். வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்களை கூடியவரையில் தவிர்ததாகவே அவருடைய பேச்சு அமையும். நீண்ட தொடர்களையோ அடுக்கு மொழிகளையோ அவர் வலிந்து தம் பேச்சின் இடையில் புகுத்துவதில்லை. படித்தவர்கள் மட்டுமின்றி பாமரரும் புரிந்துகொள்ளும் படியாக அவரின் பேச்சு அமையும். கொச்சை மொழிகளையோ, குறுமொழிகளையோ அவர் பயன் படுத்துவதில்லை.

பேச்சின் தொடக்கத்தில் பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய எத்தகைய உத்திகளையும் அவர் கையாள மாட்டார். இலேசாகச் சலசலத்து ஓடும் ஒரு சிற்றோடையின் ஒழுக்குபோல் அவரின் பேச்சு தொடங்கும். பேச்சின் போக்கில் ஓடைகள் கலந்து பெருகி ஓடும் ஆற்றின் ஓட்டம்போல் பேச்சு வேகம் பிடிக்கும். ஆனால் சீரான வேகத்தில் மாற்றமிருக்காது. துள்ளிக்குதிப்பதோ, ஆர்ப்பரிப்பதோ, ஆரவாரம் செய்வதோ ஒருபோதும் இருக்காது. கருத்தின் ஆழமும் அழுத்தமும் கேட்பவர்களைப் பிணிக்க வேண்டுமே அல்லாமல் பேச்சின் வெற்று ஆரவாரத்தால் பயனில்லை என்பது குழந்தைவேலனாரின் கொள்கை.

மேற்கோள்கள்:

இலக்கிய உரையானாலும் சமுதாயம் சார்ந்த உரையானாலும் இடையிடையே தக்க மேற்கோள்களைக் கையாண்டு பேசுவதில் அவர் சமர்த்தர். இலக்கிய மேற்கோள்களை அவர் மிகுதியாகக் கையாளுவார். குறிப்பாகப் பாவேந்தர் பாடல்கள் குழந்தைவேலனாரின் பேச்சில் மிகுதியும் இடம்பெறும். திருக்குறள், சங்க இலக்கியப் பகுதிகள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலான காப்பியப் பகுதிகளையும் தக்க இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவார். இலக்கியப் பகுதிகளைத் தாளில் குறித்துவைத்துக் கொண்டு வாசிக்கும் பழக்கம் அவரிடம் கிடையாது. நெஞ்சக் களஞ்சியத்திலிருந்து நேராக உணர்வு பூர்வமாக எடுத்தாளுவார். இலக்கிய மேற்கோள்கள் மட்டுமில்லாமல் அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சுவையான சம்பவங்களையும் தக்க இடங்களில் எடுத்துரைத்து, தாம் சொல்லவந்த கருத்துக்கு வலிமையூட்டுவார்.

ஆலய மேடைகளும் கடவுள் கதைகளும்:

தம் கொள்கை பகுத்தறிவுக் கொள்கை என்றாலும் தேவைப்படும் இடங்களில் புராண இதிகாச மேற்கோள்களைக் எடுத்துக்காட்டத் தயங்கமாட்டார். தாம் வலியுறுத்தப் போகும் சமூகநலம் சார்ந்த கருத்துக்களுக்குத் தெய்வக்கதைகள் பயன்படுமென்றால் அவ்வகைக் கதைகளைக் குறிப்பிட்டுத் தம் பேச்சுக்கு வலிமை சேர்ப்பார்.
குழந்தைவேலனாரோடு பல பட்டிமன்றங்களில் வழக்காடு மன்றங்களில் பேசிய அனுபவம் எனக்குண்டு. என்னுடைய மேடைப்பேச்சுக்குப் பட்டைதீட்டி அதைப் பொலிவுபெற வைத்த பெருமை அவருக்குண்டு. மேடைப்பேச்சில் பதட்டம் என்பதே அவருக்குக் கிடையாது. மேடை ஏறும் நேரம் வரைக்கும் உரிய பேச்சாளர்கள் வரவில்லை என்றாலும் ஒருபோதும் பதட்டமடையவே மாட்டார். மேடையச்சத்தை அவரிடம் நான் கண்டதேயில்லை.
சுயமரியாதைக்காரன் ஆலய மேடைகளில் ஏறி, புராணக் கதைகளைப் பேசலாமா? என்று அவர்மீது சிலர் கேள்விக் கணைகளைத் தொடுப்பதுண்டு. நோயுள்ள இடத்தில்தானே மருத்துவனுக்கு வேலையிருக்கிறது என்ற கொள்கையுடையவர் அவர். பகுத்தறிவாளனுக்கு வேலை இருக்கிற இடம் பக்தர்கள் கூட்டத்தில்தானே! எனவேதான் பக்தர்கள் மேடையில் அமர்ந்து அவர்கள் நம்புகிற புராண, இதிகாசங்களை விவாதப் பொருளாக்கி மக்களைச் சிந்திக்க வைக்கிற வேலையை அவர் தம் பேச்சுத் திறனால் மிக எளிதாகச் செய்துவிடுவார். குழந்தைவேலனாரின் மேடைப்பேச்சின் வெற்றியே அதில்தான் இருக்கிறது.

சில சிறப்புக் குறிப்புகள்:

குழந்தைவேலனார் பழகுதற்கு இனிய பண்பாளர். பல ஆண்டுகளுக்கு முன்படித்த மாணவர்கள் கூட பேராசிரியருக்கு இன்றும் உரிய மதிப்பளித்துப் பழகுவர். கடலூரை ஒட்டியுள்ள எல்லாக் கிராமங்களுமே பேராசிரியரின் மேடைப்பேச்சால் பயன்பெற்ற ஊர்கள் என்றால் அது மிகையன்று.
குழந்தைவேலனார் பேச்சின் தனித்தன்மையைச் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமென்றால், அவரின் பேச்சு எட்டிநின்று அறிவுரை கூறும் பேச்சாக இல்லாமல் நெருங்கி நின்று தோளோடு கைசேர்த்து ஆலோசனை கூறும் நண்பரின் வார்த்தைகளைப் போல் இருக்கும். காதோடு நின்றுவிடாமல் மனதுவரை சென்று ஆசனமிட்டு அமர்ந்து கொள்ளும். மேடைப்பேச்சில் இவ்வகைப் பேச்சு ஒரு புதிய பரிணாமம்.

ஆனந்தரங்கர் இலக்கியங்கள் - ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் - பகுதி-1

ஆனந்தரங்கர் இலக்கியங்கள்
ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் பகுதி-1


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய சிற்றிலக் கியங்களில் ஒன்று ஆனந்தரங்கன் கோவை. இதன் ஆசிரியர் திருவாரூரைச் சேர்ந்த தியாகராய தேசிகர் ஆவார். இவர் இலக்கண விளக்கம் படைத்த வைத்தியநாத நாவலரது புதல்வர். தம் தந்தையார் இயற்றிய இலக்கண விளக்க நூல் வரிசையில் விடுபட்டுப்போன இலக்கண விளக்கப்பாட்டியல் எனும் பகுதியை இத் தியாகராய தேசிகரே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராய தேசிகர் அவர்தம் தந்தையார் வைத்தியநாத நாவலருக்கு இரண்டாம் புதல்வர். இவர்தம் தமையனார் சதாசிவ தேசிகர் ஆவார்.

கோவை: அகப்பொருள் சிற்றிலக்கியம்

கோவை என்ற சிற்றிலக்கியம் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய் எழுந்த இலக்கிய வகையாகும். அகப்பொருட் செய்திகள் பல சிற்றிலக்கியங்களில் பேசப்பட்டாலும் கோவை இலக்கியத்தில் அவை கிளவித் தொகைகளாக அமைக்கப் பெற்றுத் துறைகளாக விரித்துக் கோவைப்படக் கூறப்படுதலின் கோவை என்றும் அகப்பொருள் கோவை என்றும் ஐந்திணைக் கோவை என்றும் பெயர் பெறுவதாயிற்று.
இறையனார் அகப்பொருள், நம்பி அகப்பொருள், இலக்கண விளக்க அகத்திணையியல் போன்ற நூல்களில் சொல்லப் பட்டிருப்பதைப் போல் தொல்காப்பியத்தில் அகப்பொருள் இலக்கணம் அகப்பொருள் நிகழ்ச்சிகளைத் தொடர்புபடக் கூறவில்லை. இறையனார் அகப்பொருள் உரையில் அகப்பொருள் நிகழ்ச்சித் தொடர்பும் ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற உதாரணச் செய்யுள்களும் கூறப்பட்டுள்ளன. இவ்விவரமே பிற்காலத்தில் கோவை நூல்கள் மேற்கொண்ட முயற்சிக்கு ஆதாரமாக அமைந்தது.

பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் நூல்,
கோவை என்பது கூறுங் காலை
மேவிய களவு கற்பெனும் கிளவி
ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ
முந்திய கலித்துறை நானூறு என்ப.1


என்று கோவையிலக்கணம் கூறுகிறது. எனவே அகப்பொருள் கோவைகள் அகப்பொருள் தொடர் நிகழ்ச்சிகளைத் துறையாய்ப் பெற்று நானூறு கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது என்பது பெறப்படும். ஆனந்தரங்கன் கோவை இவ்விலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த நூலாகும்.

கோவை இலக்கியத்தின் சிறப்பியல்புகள்:

தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் மிகுந்து கிடைக்கும் அகப்பொருள் கருத்துக்களை இடைக்காலங்களில் பரப்பத் தமிழ்ப்புலவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவே கோவை யிலக்கியமாகும். தொல்காப்பியக் கருத்தும் சங்கத் தொகைநூல் செய்திகளும் கோவை நூல்களில் மறுபிறவி எடுத்து உலவுகின்றன. அகத்திணை மாந்தர்களுக்குப் பெயரிடுதல் கூடாது என்னும் தொல்காப்பிய நெறியை எல்லாக் கோவை நூல்களும் புறநடையின்றிப் பின்பற்றுகின்றன.
கோவை, தலைவனும் தலைவியும் தாமே கண்டு தோழியின் துணைகொண்டு காதலின்பம் அனுபவிக்கும் களவொழுக்கம் முதல் ஊரறிய மணந்து விருந்தோம்பி மகப்பெற்று வாழும் கற்பொழுக்கம் வரை ஒன்றன்பின் ஒன்றாக நிரல்பட எல்லா நிகழ்ச்சிகளையும் தனித்தனித் துறைகளாக அமைத்து ஒருங்கே அமைவது. கோவை நானூறு பாடல்களால் பாடப்படும் என்பது பொது இலக்கணமாயினும் நானூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கோவைகளோ மிகப்பல. ஆனந்தரங்கன் கோவை சரியாக நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.

பாட்டுடைத் தலைவன்

அகப்பொருள் பாடல்களில் பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன் என்ற இருவகைத் தலைவர்களுக்கு இடம் உண்டு. கோவை இலக்கியங்களில் பெரும்பாலும் இருவகைத் தலைவர்களும் இடமபெறுவதுண்டு. விதிவிலக்காக அம்பிகாபதிக் கோவைக்குப் பாட்டுடைத் தலைவன் இல்லை. ஆனந்தரங்கன் கோவை ஆனந்தரங்கரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. கோவை நூல்களின் தோற்றத்திற்கும் பெருக்கத்திற்கும் பாட்டுடைத் தலைவனைப் பாடுதல் என்ற நோக்கமே காரணமாய் அமைந்துள்ளது. இந்தப் பாட்டுடைத்தலைவர்கள் கடவுளர்களாகவோ, அரசர்களாகவோ, வள்ளல்களாகவோ அமைவதுண்டு. பரிசில் பெறவோ, அருளைப் பெறவோ பாட்டுடைத் தலைவர்களின் புகழ்பாடும் இலக்கியத்தில் கிளவித் தலைவனும் தலைவியும் அத்துணை முக்கியத்துவம் பெறுவதில்லை.

கோவை - தோற்றம்

சங்க அகஇலக்கியங்கள் எல்லாம் துறைத் தொடர்பற்ற தனிப்பாடல்;கள் என்றாலும் அக நிகழ்ச்சிகளை தொடர் நிகழ்ச்சிகளாகத் தொகுத்துச் சொல்லும் கோவை முறை சங்க இலக்கியங்களிலேயே தொடங்கப்பட்டுள்ளது என்பதைக் கபிலரின் குறிஞ்சிப் பாட்டின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. இப்பாட்டு அறத்தொடு நிலை என்னும் துறையில் அமைந்துள்ளது. அன்னை ஏவத் தலைவியும் தோழியும் தினைப்புனம் காக்கச் சென்றதும், தலைவன் கெடுதி வினாயதும், மொழிபெறாது வருந்தியதும், யானையினின்று காத்ததும், புனலினின்று காத்ததும், முயங்கியதும், இரவுக்குறியின் இடையூறுகளும், வெறியாட்டும், அறத்தொடு நிற்றலும் என்ற களவு நிகழ்ச்சிகள் வரிசையாக இப்பாட்டில் வந்துள்ளன. ஆதலின் குறிஞ்சிப் பாட்டினைச் சங்கத்தின் கோவைப் பாட்டு என்று கூறலாம்.2
சங்க இலக்கிய அகத்திணைத் துறைகள் திருக்கோவையார் காலம்வரை படிப்படியான வளர்ச்சியைப் பெற்றன. நம்பியகப்பொருள் காலம் தொட்டு இலக்கணத்திற்கு இலக்கியம் காணுதல் எனும் புதியநிலை கோவை நூல்களுக்கு ஏற்பட்டது. காலப்போக்கில் அகப்பொருள் பாடும் நிலை தேய்ந்து புலவர்கள் தம்மை ஆதரித்த வள்ளல்கள் நாட்டம்போல் சிற்றின்பச் சுவையை இணைத்துப் பாடுவதற்குக் கோவை இலக்கிய வகையைக் கருவியாகப் பயன்படுத்தினர்.
இன்பம், பொருள், அறம் என்னும் சங்க இலக்கிய மரபு மாற்றம் பெற்ற பிற்காலத்துக் கோவை நூல்களில் பொருளே முதன்மையாகிப் பொருள், இன்பம், அறம், வீடு என்ற மாற்றம் பெற்ற நிலையைக் காணமுடிகிறது.3 பாட்டுடைத் தலைவர் ஆனந்தரங்கர்

பொதுவில் வரலாற்றுணர்ச்சி குறைந்திருக்கும் தமிழர்களில் ஆனந்தரங்கர் ஓர் அற்புதமான மனிதர். தமிழரிடையில் காணப்பெறாத வரலாற்று உணர்வும் ஆர்வமும் ஆனந்தங்கரிடம் மிகுதியாகவே இருந்தன. 1736 செப்டம்பர் 9 இல் தொடங்கி 25 ஆண்டுகாலம் -தனது வாழ்வின் இறுதிக்காலம்- 1761 ஜனவரி மாதம் வரையில் மிகுந்த ஈடுபாட்டோடும் விடாமுயற்சியோடும் தாம் கண்டதையும் கேட்டதையும் அவர் தமது தினசரியில் குறித்து வைத்துள்ளார். நோய்வாய்ப்பட்ட நாட்களிலும் வெளியூர் சென்ற நாட்களிலும் கூட விடாது எழுதியோ எழுதச் சொல்லியோ ‘தினசரி’ எழுதுதலை இடைவிடாத கடமையாக அவர் ஆற்றிவந்தார். தமது தினசரியைப் பிற்காலத்தினர் படிப்பார்கள் என அவர் நம்பினார். எனவேதான் “அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதனை நான் எழுதுகிறேன்”4 என்று நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார்.

ஆனந்தரங்கர் சென்னையை அடுத்த பிரம்பூரில் 1709 மார்ச் 30 இல் பிறந்தார். இவரது தந்தை திருவேங்கடம் பிள்ளை வசதியான வணிகராக இருந்தார். இவரின் தாயார் 1712 இல் ஆனந்தரங்கருக்கு மூன்று வயது ஆனபோது காலமாகிவிட்டார். திருவேங்கடம் பிள்ளையின் மைத்துனராகிய நைனியப்ப பிள்ளை புதுச்சேரியில் பிரஞ்சு அரசாங்கத்தில் திவானாக இருந்து வியாபாரம் செய்து வந்தார். இவரது வேண்டுகோளின்படி திருவேங்கடமும் அவரது குடும்பமும் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தனர். 1716ஆம் ஆண்டு இவர்கள் புதுவை வந்தார்கள் என்றும் அப்போது ஆனந்தரங்கருக்கு வயது ஏழு என்றும் கோவை நூலின் முன்னுரையில் ந.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். 1721-22ல் ஆனந்தரங்கருக்கு வயது 12-13 இருக்கையில் புதுச்சேரிக்குக் குடிபுகுந்தார் என்று இர. ஆலாலசுந்தரம் குறிப்பிடுகின்றார். ஆலாலசுந்தரம் அவர்களின் கூற்று5 நாட்குறிப்பில் ஆனந்தரங்கர் குறிப்பிடும் தகவலின் அடிப்படையில் சொல்லப் படுவதால் அதுவே ஏற்புடையதாயிருக்கும்.

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு

ஆனந்தரங்கர் தமிழில் எழுதியுள்ள நாட்குறிப்புகள் தமிழ்மொழிக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கி~ம் என்றே குறிப்பிடவேண்டும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்ததோடு மட்டுமில்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மனிதராகவும் இருந்த காரணத்தால் இவரின் நாட்குறிப்பு ஒரு காலப்பெட்டகமாகவும் வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது. தன்னைச் சுற்றி நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை முயற்சி குன்றாமல் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து பதிவுசெய்து வைத்த சாதனையாளர் ஆனந்தரங்கர். வரலாற்றுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் இது ஒரு அரிய நூலே. இவ்வளவு நீண்டதொரு உரைநடை நூலைத் தமிழிலக்கியம் இதுவரைக் கண்டதில்லை. நாட்குறிப்பு இலக்கியம் என்ற வகையிலும் இது ஒரு சாதனையே.

ஆனந்தரங்கர் இலக்கியங்கள்

ஆனந்தரங்கர் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். தமிழ் மட்டுமின்றி பிரஞ்சு, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளையும் அவர் அறிந்திருந்தார். தமிழ் மொழியின் மீது இவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு அடையாளமாக அவரைச் சுற்றி எப்போதும் தமிழ்ப்புலவர் பெருமக்கள் பலர் இருந்தனர். அவர்கள் ஆனந்தரங்கரைப் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வது வழக்கமாயிருந்தது. அருணாசலக் கவிராயர் தாம் இய்றிய இராம நாடகத்தைத் திருவரங்கத்தில் மட்டுமில்லாது ஆனந்தரங்கர் சமூகத்திலும் அரங்கேற்றினார் என்ற செய்தி அருணாசலக் கவிராயர் சரித்திரத்தில் காணப்படுகிறது.6

நமச்சிவாயப் புலவர்,
படிக்காசுப் புலவர்,
மதுர கவிராயர்,
இராம கவிராயர்,
ஜவ்வாது புலவர்,
தியாகராய தேசிகர்


முதலான புலவர்கள் ஆனந்தரங்கரைப் புகழ்ந்துபாடிப் பரிசில் பெறுவதற்காக இயற்றிய பல தனிப்பாடல்கள் இன்றும் கிடைக்கின்றன. தனிப்பாடல்கள் மட்டுமின்றி ஆனந்தரங்கர் புகழ்பாடும் பல நூல்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளில் பாடப்பட்டிருக்கின்றன.

ஆனந்தரங்கன் கோவை,
ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்,
கள்வன் நொண்டிச் சிந்து,
ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்,
ஆனந்தரங்க விஜயசம்பு (சமஸ்கிருதம்),
ஆனந்தரங்க ராடசந்தமு (தெலுங்கு),
ஆனந்தரங்கர் புதினங்கள் (பிரபஞ்சன் புதினங்கள்)


முதலானவற்றை ஆனந்தரங்கர் புகழ்பாடும் இலக்கியங்களாகக் குறிப்பிடலாம்.
ஆனந்தரங்கர் புகழ்பாடும் இலக்கியங்களில் தனிப்பெரும் சிறப்பைப் பெற்ற நூல் ஆனந்தரங்கன் கோவையே. இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்ட மிகப்பெரிய இலக்கிய வகையாகும். இந்நூலாசிரியர் தியாகராய தேசிகர் ஆழமான இலக்கண இலக்கியப் புலமை பெற்றவராவர். தமிழிலக்கியச் சூழலில் தகுதி வாய்ந்த புலவரொருவரால் மிகச்சிறந்த கோவை பாடப்பெறும் வாய்ப்பு அத்துணை எளியதல்ல.

ஆனந்தரங்கர் இலக்கியங்கள் - ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் - பகுதி-௨

ஆனந்தரங்கர் இலக்கியங்கள்
ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் - பகுதி-2


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

ஆனந்தரங்கர் மீதான கோவை ஒன்றா? இரண்டா?

ஆனந்தரங்கன் கோவை என்ற பெயரில் இரண்டு கோவை நூல்கள் உள்ளதாகவும் இவற்றில் ஒன்றை வைத்தியநாத தேசிகர் புதல்வர் சதாசிவ தேசிகர் இயற்றியதாகவும் மற்றொன்றைத் தியாகராயப் புலவர் இயற்றியதாகவும் ரா.தேசிகம் பிள்ளை தம் ஆனந்தரங்கப் பிள்ளை என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.7
ஆனந்தரங்கன் கோவையைப் பதிப்பித்த ந.சுப்பிரமண்யன் இக்கருத்தை மறுத்து ஆனந்தரங்கர் மீது பாடப்பட்டது ஒரேஒரு கோவை நூல்தான் என்றும் இதன் ஆசிரியர் தியாகராய தேசிகர்தான் என்றும் உறுதிபடக் கூறுகின்றார். இந்நூலின் பிரதிகள் இரண்டு ஓலைச் சவடிகளாகக் கிடைத்துள்ளன என்றும் இரண்டு சுவடிகளிலுமே தியாகராய தேசிகர் இயற்றியது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சான்றுகளுடன் ந.சுப்பிரமண்யன் நிறுவியுள்ளார்.8
“திருவாரூரிலிருக்கும் இலக்கண விளக்கம் செய்த வைத்திய நாத தேசிகர் குமாரர் தியாகராய தேசிகர் சித்தார்த்தி வரு~ம் ஆவணி மாதம் 15ஆம் தேதி சுக்கிரவார தினம் பிரம்பூர் மகா- மகா-ஸ்ரீ பிள்ளையவர்கள் வஜாரத விஜயவாநந்த ரங்கப்பிள்ளை அவர்கள் மேல் கோவைப் பிரபந்தம் பாட ஆரம்பித்து யுவ வரு~ம் ஆவணி மாதம் 3ஆம் தேதி நிறைவேறி அரங்கேற்றும் படி செய்தது.”9 ஆனந்தரங்கன் கோவை பதிப்பிற்குப் பயன்பட்ட ஓலைச் சுவடியில் வாசகமே இது.

கோவை நூல் அரங்கேற்ற முயற்சி

தியாகராய தேசிகர் இக்கோவை நூலை 1739 ஆம் ஆண்டில் பாடத் தொடங்கி 1755 ஆம் ஆண்டு வரை பதினாறு ஆண்டுகள் முயன்று படைத்துள்ளார் என்பது சுவடியின் வாயிலாகத் தெரிய வருகின்றது. இந்நூலை இயற்றி முடித்த பின்பும் ஆனந்தரங்கர், நூல் அரங்கேற்றத்திற்கு வேண்டுவன செய்து பரிசில் அளிக்க முன்வராமை கண்டு தியாகராய தேசிகர் ஆனந்தரங்கருக்கு மைத்துனரும் நெருங்கிய நண்பருமாயிருந்த முத்தையன் என்பாரை வேண்டிக்கொண்டு அவர் மூலம் ஆனந்தரங்கரின் நன்மதிப்பைப் பெற்று நூலை அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது. தியாகராய தேசிகர் அம்முத்தையனைப் புகழ்ந்து பாடிய தனிப்பாடலின் வழி இவ்வுண்மையை உணரமுடிகின்றது.
பத்தையன் என்றுதமிழ்ப் பாபுலவர் மெச்சவரு
முத்தையா கோவை மொழிவிளங்க- வித்தகநல்
ஆனந்த ரங்கைய னுக்குரிய அன்புவைத்துத்
தானந்த ரங்கமுறச் சாற்று
10
என்பது அப்பாடல்.

அரங்கேற்றத்திற்குத் தாமதம் ஏன்?

ஆனந்தரங்கர் கோவை நூலை அரங்கேற்றவும் பரிசளிக்கவும் தாமதம் செய்ததற்கு என்ன காரணம்? என்பதை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆனந்தரங்கர் கோவை முழுவதையும் படித்துப் பார்த்தால் பாட்டுடைத் தலைவர் புகழ்பாடும் அந்நூலின் எல்லாப் பாடல்களிலும் பிரம்பூர் ஆனந்தரங்கர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்பூரின் பெருமையே எல்லாப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்தரங்கர் குடும்பத்தோடு புதுச்சேரிககு வந்து சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பாடத் தொடங்கி பதினாறு ஆண்டுகள் பாடப்பட்ட இந்நூலின் எங்கேயும் புதுவையைப் பற்றிய செய்தியே இல்லை.
"புதுவையில் ஐந்தரு என்னும் முத்தியப்பன் மகிழ் மைத்துனன்”11 என்ற ஒரு பாடலில் மட்டுமே புதுவை குறிப்பிடப் படுகின்றது. இந்தப் பாடலும் முத்தியப்பன் புகழ்பாடும் பாடல் என்பதால் அரங்கேற்றத்திற்குத் தடை ஏற்பட்ட பின்னர் எழுதிச் சேர்க்கப்பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆனந்தரங்கரைப் பற்றிய எத்தகைய வரலாறும் நூலின் எங்கேயும் இடம்பெறவில்லை. பாட்டுடைத் தலைவனைப் பூவைநிலையில் திருமாலாக, கண்ணனாக, இராமனாகப் புகழ்ந்து பாடும் பாடல்களே நூல் முழுமையும் இடம் பெற்றுள்ளன. பிரஞ்சு அரசாங்கத்தில் ஆனந்தரங்கர் பெற்றிருந்த பதவியைப் பற்றியோ, பெருமையைப் பற்றியோ அவரின் அரசியல் அறிவைப் பற்றியோ, அன்றாட நடவடிக்கைகளைப் பற்றியோ எந்தக் குறிப்பும் நூலில் எங்கேயும் இல்லை. எனவே வரலாற்றுணர்வு மிக்க ஆனந்தரங்கருக்கு இந்நூல் முழு மனநிறைவைத் தந்திருக்க வாய்ப்பில்லை. செவிவழியாக ஆனந்தரங்கரின் ஊரையும் பெயரையும் மட்டுமே கேள்விப்பட்டு நூலை ஆக்கியுள்ள தியாகராய தேசிகர் ஆனந்தரங்கரின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போனதில் வியப்பேதும் இல்லை.

செஞ்சி விஜயாபுரம் டெல்லி மட்டுஞ் செங்கோல் செலுத்தும்
வெஞ்சிலை ஆனந்தரங்கன் 12
வங்கம் கலிங்கம் தெலுங்கம் புறமிட வாளெடுத்த துங்கன் 13


என்ற இரண்டு இடங்களில் மட்டும் ஆனந்தரங்கரின் அரசியல் செல்வாக்கை, கவிவழக்காக மன்னர் சாதனைபோல் புகழ்ந்து பாடும் பாடலைக் காணமுடிகிறது. வேறு சில இடங்களிலும் ஆனந்தரங்கரைமன்னராகவே புகழ்ந்து பாடும் பாடல்;களைக் காணமுடிகிறது. பின்வரும் பாடலை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

தென்னவன் செம்பியன் சேரலனாமெனுஞ் சீர்த்திபெற்ற
மன்னவன் ஆனந்தரங்கன் 14


என்ற இப்பாடலில் மூவேந்தர்களுக்கு இணையான புகழ்பெற்ற மன்னவன் ஆனந்தரங்கன் என்று சிறப்பிக்கப்பட்டுமையைக் காண்க.

கோவை பாடிப் புலவர் பெற்ற பரிசில்

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ஆனந்தரங்கன் கோவையைப் புலவர், ஆனந்தரங்கர் சபையில் அரங்கேற்றினார். நூல் அரங்கேற்றத்திற்குப் பின்னர் தியாகராய தேசிகரின் புலமை நலத்தை மெச்சிய ஆனந்தரங்கர் தமிழ் வள்ளல்களின் மரபையொட்டி புலவர்க்கு ஏற்றவாறு பரிசளித்துப் பெருமைப்படுத்தினார் என்பதை,
அண்டர்வரோ தயன்பிரம்பூர்த் திருவேங்க
டேந்த்ரநிதி யளித்த பாலன்
மண்டலங்கொண் டாடவரும் ஆனந்த
ரங்கதுரை மான ரத்ன
குண்டலமுஞ் சரப்பணியும் பதக்கமொடு
சாலுவையுங் கொடுத்தே நாளுந்
தண்டமிழா ரூர்வசிக்கப் பொன்முடிப்பும்
பூமிகளுந் தந்திட் டானே 15


என்ற தனிப்பாடல் வழியாகப் புலவர் பெற்ற பரிசில்களை அறிந்துகொள்ள முடிகின்றது.

கோவை குறிப்பிடும் ஆனந்தரங்கர் பண்பு நலன்கள்

பாட்டுடைத் தலைவரான ஆனந்தரங்கர் பற்றிய பல செய்திகள் பொதுவாக எல்லா வள்ளல்களுக்கும் பொருந்தக்கூடிய நிலையில் கோவையின் பல பாடல்களில் சொல்லப்பட்டிருந்தாலும் சில செய்திகள் ஆனந்தரங்கர் இயல்பை உணர்ந்து, அவரின் சிறப்பியல்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன. ஆனந்தரங்கர் குறிப்பறிந்து பிறர் வாய்திறந்து சொல்லுவதற்கு முன்பே அவர்கள் மனத்தில் நினைத்த கருத்தைச் சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் என்பதை,
எண்ணுக்கு முன் சொல்லும் ஆனந்தரங்கா16 என்று குறிப்பிடுவதன் வழியாகவும், சொன்ன சொல் தவறாதவர், வெற்றுச் சொல் பேசாதவர் என்பதை,
வசனம் தப்பாத ரங்கேந்திரன்17 என்றும் சொல்லொக்கும் செய்கைப் பிரம்பை ரங்கேந்திரன்18என்றும் தேசிகர் குறிப்பிடுவதன் வழியாகவும் அறிந்துகொள்ள முடிகிறது. பல பாடல்களில் ஆனந்தரங்கர் தமிழைப் போற்றி வளர்க்கும் செய்தியும் இசை நாடக வாணர்களுக்கு ஆதரவளித்த செய்தியும் பேசப்படுகின்றன.

ஆனந்தரங்கர் கோவையில் அகப்பொருள் மரபுகள்

பிற்காலச் சிற்றிலக்கியங்களில் கோவை ஓர் ஒப்பற்ற இலக்கியமாகும். இதனைத் தொடர்நிலைச்செய்யுள், சிறு காப்பியம் என்பார் தண்டி உரையாசிரியர். ஒரு புலவன் ஒரு தனிப்பொருளைக் குறித்து நீள நினைத்துப் பாடும் வாய்ப்பு இவ்விலக்கியத்திற்கு உண்டு. சங்க இலக்கியங்களின் அகப்பொருள் மரபுத் தொடர்ச்சியைக் கோவை நூல்களில்தான் முழுதுமாகக் காணமுடியும். ஆனாலும் சங்க இலக்கியங்கள் சிறப்பித்துப் பாடிய முதற்பொருள் கருப் பொருள்களைக் கோவை இலக்கியங்களில் இழந்துவிட்டோம். இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு என்ற தொப்புள்கொடி அறுபட்டுப் போய்விட்டது. கோவை நூல்களில் அந்த இடங்களைக் கடவுளர் கதைகளும் புராணங்களும் பிடித்துக் கொண்டன. பாடலில் இடம்பெறும் கிளவித் தலைமக்களின் நுட்பமான காதல் உணர்வுகள் பலியாக்கப்பட்டுப் பாட்டுடைத் தலைவர்களின் வீர தீரப் பிரதாபங்களில் அவை மூழ்கடிக்கப்பட்டன.
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்
(தொல்.அகத்.நூ.54)

என்ற அகப்பொருளின் உயிர்க்கோட்பாடு கோவை நூல்களில் கிளவித் தலைமக்களின் பெயர்சுட்டா மரபாகப் போற்றிப் பாதுகாக்கப் பட்டது.

ஆனந்தரங்கன் கோவையின் சிறப்பியல்புகள்

1. ஆனந்தரங்கன் கோவை தனக்கு முந்தைய கோவை நூல்களில் ஒன்றான அம்பிகாபதிக் கோவையைப் பெரிதும் அடியொற்றி அமைந்தது எனலாம். பல பாடல்கள் அப்படியே அம்பிகாபதிக் கோவைப் பாடல்களைப் பிரதிபலிப்பனவாக உள்ளன.
சான்றாக: பா. 104, 289, 346, 370.
2. ஆனந்தரங்கன் கோவையின் பல பாடல்கள் சங்கத் தொகை அகப்பாடல்கள் பலவற்றின் புதிய வடிவாக அமைந்து சிறக்கின்றன.
3. வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழைச் சிறப்பித்துக் கூறுதலும் ஆனந்தரங்கர் தமிழைப் போற்றிப் புரப்பவர் என்று கூறுதலும்.
4. திருக்குறள் நாலடியார் போன்ற இலக்கியங்களையும் தக்க இடத்தில் கையாண்டு சிறப்பித்தல். பா.42, 234.
5. இருபதுக்கும் மேற்பட்ட அணிவகைகளைச் சிறப்புறக் கையாண்டு நூலின் சுவையைக் கூட்டுதல்.
சான்றாக: பா. 20, 21, 46, 109, 218, 277.

முடிவுரை

1. ஆனந்தரங்கர் மீது பாடப்பட்ட நூல்களிலேயே அளவால் பெரியதும் சிறப்பிற் குரியதும் இக்கோவை நூலே.
2. ஆனந்தரங்கர் மீது இரண்டு கோவை நூல்கள் பாடப்பட்டன என்ற கருத்து தவறானது. தியாகராய தேசிகரின் கோவை மட்டுமே பாடப்பட்டுள்ளது.
3. தியாகராய தேசிகர் ஆனந்தரங்கரை முழுமையாக அறிந்து வரலாற்றுணர்வோடு இந்நூலைப் பாடாதது ஒரு பெருங்குறை. இக்காரணத்தாலேயே நூல் அரங்கேற்றம் தடைப்பட்டிருக்கலாம்.
4. வள்ளல்களின் மரபையொட்டி ஆனந்தரங்கர் தேசிகருக்குச் சிறந்த பரிசுகளை அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.
5. தமிழ் இலக்கண வளங்களை முற்றாக உள்வாங்கிப் படைக்கப்பட்ட ஆனந்தரங்கன் கோவை இவ்வகைச் சிற்றிலக்கியங்களில் ஒரு சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை.
குறிப்புகள்
1. பன்னிரு பாட்டியல், செய்யுளியல் 220
2. வ.சுப.மாணிக்கம், தலைமையுரை, சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள்,
நான்காவது மாநாடு, ப.32.
3. கி.இராசா, ஒப்பிலக்கிய நோக்கு, ப.68
4. இரா.ஆலாலசுந்தரம், ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம், ப.1.
5. இரா.ஆலாலசுந்தரம். ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம், ப.207.
6. ரா.தேசிக பிள்ளை, ஆனந்தரங்கப்பிள்ளை, ப.25.
7. ரா.தேசிக பிள்ளை, ஆனந்தரங்கப் பிள்ளை,ப.25
8. ந.சுப்பிரமண்யன், முகவுரை, ஆனந்தரங்கன் கோவை, ப. ஒஒஎii
9. ந.சுப்பிரமண்யன், முகவுரை, ஆனந்தரங்கன் கோவை, ப. ஒஒஎii
10. ஆனந்தரங்கன் கோவை, ப.138.
11. ஆனந்தரங்கன் கோவை, ப.391.
12. ஆனந்தரங்கன் கோவை, ப.8.
13. ஆனந்தரங்கன் கோவை, ப.46.
14. ஆனந்தரங்கன் கோவை, ப.86.
15. ஆனந்தரங்கன் கோவை, ப.138.
16. ஆனந்தரங்கன் கோவை, ப.170.
17. ஆனந்தரங்கன் கோவை, ப.214.
18. ஆனந்த்ரங்கன் கோவை, ப.100.

(புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம், சாகித்ய அகாதமி இணைந்து 18-7-2009 புதுவை சோலைநகர் இளைஞர் விடுதியில் நடத்திய ஆனந்தரங்கர் 300 ஆம் பிறந்தநாள் விழா சிறப்புக் கருத்தரங்கத்தில் வாசிக்கப்பெற்றது.)

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...