புதன், 20 மே, 2009

மானுடம் பயனுற - இர.தியாகராசன் நூல் அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

மானுடம் பயனுற - இர.தியாகராசன்

நூல் அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

இர.தியாகராசனின் மானுடம் பயனுற எனும் இக்கட்டுரைத் தொகுப்பு அவரின் முதல்நூல். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல படைப்புகள் எழுதப்பெறாத மனப் பிரதிகளாக உள்ளுறைகின்றன. சிலர் அவற்றுக்கு எழுத்து வடிவம் தந்து வெளியே உலவ விடுகின்றனர். பலர் அந்த முயற்சியில் இறங்குவதே இல்லை. ஒவ்வொரு மனிதனின் மறைவின் போதும் எழுதப்படாத பல பிரதிகள் அவனோடேயே மறைந்து விடுகின்றன.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவைகளுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஏனோ தெரியவில்லை தமிழில் கட்டுரைகள் பெரிதும் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை கிடைக்கின்ற பழந்தமிழ் முதல் நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடுகொடுக்கின்றன. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதையே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப்பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். ‘விவாதித்து விவரிப்பதே’ கட்டுரையின் பண்பு என்பார் கா.சிவத்தம்பி. இந்த விளக்கங்கள் எல்லாம் செய்திக் கட்டுரைகளுக்குப் பொருந்தும். கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. நுளளயல என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் இவ்வகைக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

II
மானுடம் பயனுற என்னும் இக்கட்டுரைத் தொகுப்பு. தன்னுணர்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்து படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுகின்றது. நூலாசிரியர் இர.தியாகராசன் இந்நூலில் பல்வேறு காலங்களில் தான் சந்தித்த, சிந்தித்த, பேசிய, கேட்ட, விவாதித்த, சாதித்த பல செய்திகள் மற்றும் சம்பங்களைத் தொகுத்தளிக்கின்றார். அரசியல், சமூகம், ஆன்மீகம் முதலான பல தளங்களில் செய்திகள் பேசப்படுகின்றன. நூலாசிரியருக்குச் சமூகத்தின் மீது ஏற்பட்ட கோபம், ஆத்திரம், எரிச்சல் போன்றவைகளே நூலில் அதிகம் பதிவுபெற்றுள்ளன. தான் நம்புகின்றவைகளே சரியானவை என்னும் தொனியில் நூலை அமைத்திருக்கும் ஆசிரியர் பல சமயங்களில் நீதிபோதனைகளைப் போதிக்கும் ஒரு போதானாசிரியனாகவே வெளிப்பட்டிருப்பது நூலின் பலம் என்றும் பலஹீனம் என்றும் கருதவாய்ப்பளிக்கிறது.

நூலாசிரியர் இர.தியாகராசன் கடவுள் நம்பிக்கை மிக்கவர். விதி, பாவ புண்ணியங்களின் பலாபலன்களைத் திடமாக நம்புபவர். அவரின் கருத்து முதல்வாதக் கொள்கைகள் எனக்கு உடன்பாடில்லை. ஆயினும் அவர் வலியுறுத்தும் மானுட மேம்பாடு குறித்த சிந்தனைகளோடு ஒத்துப்போகிறவன் நான். ஆன்மீகம் குறித்தும் ஆன்மீக வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் குறித்தும் நூலாசிரியர் செய்யும் பதிவுகள் மிக ஆழமானவை.

"இக்காலத்தில் பக்தி என்பது ஒரு சம்பிரதாயமாக சடங்குகளாக மாறிவிட்டது. அகண்ட ஓங்கார பூஜை, 1008 பாலகுட அபிஷேகம், 108 விளக்கு பூஜை, 1008 சங்காபிஷேகம் இவைகள் எல்லாமே வியாபார நோக்கில் காலம் காலமாக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை". (இர.தியாகராசன், பக்தி)

"எல்லா வக்கிர புத்திகளையும் கொண்ட மனிதர்கள்தான் பக்தி என்ற பெயரில் விரதம் என்ற பெயரில் கோயிலை நாடுகிறார்கள். உண்மையான பக்திமான் பொல் வேடம் போடுகிறார்கள். நான் வெளிஉலகில் இவர்கள் நடத்தையைக் கவனிக்கிறேன். இவர்கள் எல்லாம் இப்படிப் பகல்வேடம் போட்டு வாழ்கிறார்களே என்று அங்கலாய்ப்பது உண்டு. மனம் நொந்துபோவது உண்டு. இத்தகைய மனம் கொண்ட பேர்வழிகள் தான் சபரிமலை என்றும், திருப்பதி என்றும் புனித ஸ்தலங்களுக்குச் செல்கிறார்கள் இங்கு காணிக்கை போடுகிறார்கள். இவர்களுக்கு ஓர் எண்ணம் நாம் செய்யும் எல்லாத் தவறுகளுக்கும் விரதம் இருந்து காணிக்கை போட்டால் கடவுள் நம்பக்கம் வந்துவிடுவார் என்ற ஒரு அற்ப விபரீத எண்ணம்". (இர.தியாகராசன், மனிதனின் விரோதச் செயல்கள்)

"இதையே! இப்படிச் செய்தால் என்ன? அத்தனைப் பணங்களையும் திருவிழாச் செலவுகளைக் குறைத்துவிட்டு, அந்தந்த ஊரில் உள்ள ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, ஏழைப் பிள்ளைகளுக்குப் படிக்க வசதி, பசியால்வாடும் ஏழை மக்களுக்கு உணவுவசதி என்று செய்யலாமே! இறைவன் ஆனந்தக் கூத்தாடுவானே! அப்போதுதானே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுடியும்". (இர.தியாகராசன், பகட்டுவாழ்வு)

மேலே சான்று காட்டியுள்ள போலி ஆன்மீகம் குறித்த சாடல் பகுதிகளைக் கூர்ந்து கவனித்தால் நூலாசிரியர் இர.தியாகராசனின் ஆழ்ந்த மானுடநேயம் புலப்படுவதை அவதானிக்க முடியும்.

அடுத்ததாக, அரசியல் குறித்து இர.தியாகராசன் வெளிப்படுத்தும் சத்திய ஆவேசம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ‘அரசியல் ஒரு சாக்கடை’ அது நமக்குத் தேவையில்லை என்று ஒதுங்கிப் பொகும் சராசரி இந்தியனின் பொதுப்பார்வையிலிருந்து நூலாசிரியர் வேறுபடுகிறார். அரசியல் விவாதிக்கப்பட வேண்டிய விசயம். அதில் கற்க, கற்பிக்க, கோபப்பட, போராட என்று பல நிலைகள் உள்ளன. கட்சி அரசியலின், அரசியல்வாதிகளின் கயமைகள் குறித்த இவரின் கோபமும் ஆவேசமும் நூலின் தனிச்சிறப்பு.

"அரசியல் என்பது நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யக்கூடிய ஒரு வழி! மார்க்கம். சம்பாதிப்பதற்கு அல்ல. இப்போது அரசியலுக்கு வரும் 90 சதவீதம் பேர் வருமானம் தேடிக்கொள்வதற்காக வருகிறார்கள். ஏதோ முதல் போட்டு வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும் என்ற முறையில், பேராசையில் வருகிறார்கள். விளைவு தன்னுடைய குடும்பத்தாரை வளப்படுத்துகிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள்". (இர.தியாகராசன், நாட்டுப்பற்று)

"மாயையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். பாதகம் செய்பவர்களைக் கண்டால் மோதி மிதித்திட வேண்டும், முகத்தில் காரி உமிழ்ந்திட வேண்டும். அந்த தைரியம் வர வேண்டும். இது எல்லா அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும். அரசியல்வாதி என்ன தவறு செய்தாலும் அவருடைய தொண்டன் அப்படியே ஏற்றுக்கொள்கிறானே! இந்த அறியாமைப் போக வேண்டும். தவறு செய்தால் நீ யாராக இருந்தாலும் உன்னைத் தட்டிக் கேட்பேன் என்று சூளுரைக்க வேண்டும். அப்படி செய்து பாருங்கள். ஒரு அரசியல்வாதி கூட மிஞ்ச மாட்டான். தவறு செய்தால் பொதுமக்கள் சும்மாவிட மாட்டார்கள் என்ற பயம் வந்துவிடும். முடிவு! ஏமாற்ற மாட்டான். பொய் சொல்லமாட்டான். சரியாகக் காரியம் செய்வான்". (இர.தியாகராசன், அப்பழுக்கற்ற வாழ்வு)

இப்படி நூலின் தொட்ட இடமெல்லாம் வெளிப்படும் நூலாசிரியர் இர.தியாகராசனின் கோபம் ஒரு நியாயத்தில் மையம் கொண்டிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. அந்த நியாயம் மானிட மேன்மை என்பதாகும். ‘மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா’ என்றானே பட்டுக்கோட்டை அந்த வழியில் ‘மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்றானே பாவேந்தன் அந்த வழியில் இன்னும்.. இன்னும்.. வள்ளலார், பாரதி போன்ற மனிதநேயப் படைப்பாளிகளின் வழியில் இர.தியாகராசன் மானுடம் பயனுற இந்த நூலைப் படைத்துள்ளார்.

"ஒருவர் டாக்டராக, இன்ஜினியராக, அரசியல்வாதியாக, ஆன்மீகவாதியாக, நாத்திகனாக எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் கூட அதையும் தாண்டி மனிதனாக வாழ்கிறானா? என்ற கோணத்தில் மட்டும்தான் பார்ப்பேன். அதென்ன ‘மனிதனாக இரு’ என்று அடிக்கடி செல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ரொம்ப சாதாரணமாக! பிறருக்காக வாழ்வதுதான் மனித வாழ்க்கை. இல்லையென்றால் மிருக வாழ்க்கை". (இர.தியாகராசன், பிறருக்காக வாழ்வது)

பிறருக்காக வாழும் மனித வாழ்க்கையை வலியுறுத்தும் நூலாசிரியருக்கு இத்தகு சிந்தனை வெறும் ஏட்டுக்கல்வி மற்றும் கேள்வி ஞானத்தால் மட்டும் வந்ததில்லை. அது அவரின் பரம்பரைச் சொத்து.

இர.தியாகராசனின் தந்தையார் விடுதலைப் போராட்ட வீரர் சு.இரத்தின வேல் அவர்கள் கற்றுத்தந்த வாழ்வியல் கல்வி அது. பெரியவர் சு. இரத்தின வேல் ஐயா அவர்களை நான் நன்கு அறிவேன். அவர் ஒரு சேவை மாமணி, மறக்கலாகா மாமனிதர், வாழ்வியல் நெறியாளர். அவர் தம் மைந்தர்களுக்கு விட்டுச் சென்ற மிகப்பெரிய சொத்து சேவை மனப்பான்மை. அவரின் மூத்த மகன் நூலாசிரியர் இர.தியாகராசன், அடுத்தவர் இர.ஆனந்தராசன், சிறிய மகன் என்னுடைய அன்பு மாணவர் மற்றும் இனிய நண்பர் சிங்கை. இரத்தின. வேங்கடேசன் மூவரும் தந்தையாரின் சேவை மனப்பான்மையைப் பொன்னேபோல் போற்றி ஒல்லும் வகையிலெல்லாம் சமுதாயப்பணி செய்து வருகின்றார்கள். நூலாசிரியர் தம் முன்னுரையிலும் இதனைக் கோடிட்டுக் காட்டுகின்றார்.

இர.தியாகராசனின் மானுடம் பயனுற என்னும் இக் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒரு தனிமனிதத் தன்னுணர்ச்சிக் கட்டுரைகள் என்ற அளவில் சுருங்கிவிடாமல் ஆன்மீகம், அரசியல், சமூகம் குறித்த பல்வேறு சிந்தனைகளை உடன்பாட்டு நிலையிலும் எதிர்மறை நிலையிலும் தூண்டிவிடுவதோடு, வாசகனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பிலக்கியப் பணியினையும் செய்கிறது. நல்ல சிந்தனைகளை விதைக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.

நா.இளங்கோ
புதுவை-8
1-5-2009
(மே தினம்)

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...