விழுமியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழுமியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

தமிழா! இதுதான் மானம் - தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-3

தமிழா! இதுதான் மானம் - தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-3

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புறநானூற்று மன்னர்களும் மான உணர்வும்:

சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகால் பெருவளத்தனோடு போரிட்டபோது கரிகால்வளவன் சேரலாதன் மார்பிலே எறிந்தவேல் அவன் உடலுக்குள் ஊடுருவி முதுகுவழியாகச் சென்றது. மார்பில் எறிந்தவேல் முதுகில் புண்ணை ஏற்படுத்தியதனால் சேரமன்னன் அதுவும் புறப்புண்ணுக்கு ஒப்பாகும் எனக்கருதி உயிர்வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர் துறந்தான். இதனை,புறப்புண் நாணி மறத்தகை மன்னன்வாள் வடக்கு இருந்தனன்

ஈங்குநாள் போற் கழியல ஞாயிற்றுப் பகலே! -புறம். 65.

என்று இத்தகு மான உணர்வுடைய வேந்தன் இல்லாமையால் ஞாயிற்றையுடைய பகல் இனி முன்போல் கழியாது என்று பாடுகிறார் கழாத்தலையார் என்ற புலவர். போரில் சேரமான் பெருஞ்சேரலாதன் தோல்வி அடைந்தாலும் புறப்புண் நாணி வடக்கிருந்ததால் வெற்றிபெற்ற கரிகால் வளவனைக் காட்டிலும் அவன் நல்லவன் என்று வெண்ணிக்குயத்தியார்,

வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே -புறம். 66

என்று சேரமான் பெருஞ்சேரலாதனைப் புகழ்ந்தரைக்கின்றார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர்செய்து தோல்வி அடைந்து சோழனால் சிறையிலிடப் பெறுகிறான். தனக்கு ஏற்பட்ட நீர்வேட்கை மிகுதியால் சிறைக்காவலரை நீர் தருமாறு கேட்கிறான். அவர்கள் காலந்தாழ்த்தி நீர் தருகின்றார்கள். இம்மானக்கேட்டை நினைந்து நீரை அருந்தாமல் உயிர் துறக்கிறான் சேரமன்னன் இரும்பொறை.

குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆஅள்அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்;படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே. -புறம். 74.


என்பது சேரமான் கணைக்கால் இரும்பொறையின் வாக்குமூலம் ஆகும்.அரசர்கள் தோல்வியுற்றுப் பகைவர்பால் துன்பமுற்று வாழ்வதையும் போர்க்களத்தில் புறப்புண் ஏற்படுவதையும் உண்ணுநீர் ஆயினும் பகைவரிடமிருந்து இரந்து பெறுதலையும் தம் மானத்திற்குப் பெரும் இழுக்காகக் கருதினார்கள் என்பதை மேற்கூறிய இரண்டு சான்றுகளும் புலப்படுத்துகின்றன.

தம்மக்களோடு போரிட நேர்ந்தது குறித்து நாணி வடக்கிருந்து உயிர்துறந்த சோழமன்னன் கோப்பெருஞ்சோழனும், ஆராயாது தீர்ப்புரைத்தமைக்காக வருந்தி உயிர்நீத்த சிலப்பதிகாரத்துப் பாண்டிய நெடுஞ்செழியனும் இத்தகு மானஉணர்ச்சிக்குப் பெருமை சேர்த்தவர்களே.

மேற்கூறிய மன்னர்கள் வாழ்க்கை பற்றிய செய்திகள் அனைத்திலும் அவர்கள் தம்பழிக்கு நாணியவர்கள் என்பதையும் தமது பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேர்ந்ததே என்று எண்ணியே தம் மானஉணர்ச்சியால் உயிர்கொடுத்துப் பழிதுடைத்தவர்களாக அவர்கள் விளங்கக் காண்கிறோம்.

இவர்கள் திருவள்ளுவர் கூறிய மருந்தோ மற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை என்பதற்கேற்பவும் உயிர் நீப்பர் மானம் வரின் என்பதற்கேற்பவும் தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்த அதனால் உண்டான உணர்ச்சியால் மானத்தைப் பேணியவர்கள்.

சங்ககால மக்கள் போற்றி ஒழுகிய மானம் என்பது உணவு முதலான வாழ்க்கைத் தேவைகளுக்காக அல்லாமல் உயர்ந்த கொள்கைகளைக் காப்பதற்காகத் தம் உயிரை இழக்கும் நிலை வந்தாலும் உவந்து ஏற்றுக்கொள்கிற பண்பாகும்.

தன்னலம் கருதிப் பிறர்மேல் கொள்ளும் கோபம் மானமன்று. தன்பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேராமல் உயிர் கொடுத்துப் பழிதுடைக்கும் ஒப்பற்ற பண்பாகும்.

இவ்வகையில் சங்ககாலப் புலவர்களின் கோப உரைகள் அவர்களின் நெஞ்சுரத்தைக் காட்டுமே அல்லாமல் அதனை அவர்தம் மான உணர்ச்சியின் வெளிப்பாடு என்பது பொருந்தாது. சங்ககால மன்னர்கள் சிலர் புறப்புண்ணுக்கு நாணியும், பகைவனிடம் நீர்வேட்கைக்காக மானம்கெட வாழ்தலை வெறுத்தும் உயிர்விட்ட செயலே மானம் என்றும் அதுவே சிறந்த பண்பு என்றும் துணிகின்றோம்.

சனி, 13 பிப்ரவரி, 2010

தமிழா! இதுதான் மானமா? -தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-2

தமிழா இதுதான் மானமா?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புறநானூற்றுப் புலவர்களும் மான உணர்வும்:

சங்ககால மன்னர்களும் மக்களும் தம்வாழ்வு உயிர் இரண்டைக் காட்டிலும் மானமே பெரிதெனப் போற்றி வாழ்ந்தார்கள் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களின் வழி அறிய முடிகின்றது. புறநானூற்றுக் கட்டுரையாளர்களும் திறனாய்வாளர்களும் பழந்தமிழர் வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், சங்ககாலப் புலவர்கள் பலர் தம்பாடல்களில் அவர்களது மானஉணர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மானஉணர்வுக்கு மன்னர்களால் இழுக்கு நேர்ந்தபோது அவர்களைத் துச்சமாக எண்ணிச் சாடியுள்ளனர் என்றும் பல சான்றுகளைக் காட்டி எழுதி வருகின்றார்கள். இப்படி அவர்கள் காட்டும் சான்றுகளை மறுபரிசீலனைச் செய்து புலவர்கள் வெளிப்படுத்தியது மானஉணர்வு என்பது பொருத்தமானதுதானா? என்பதை முதலில் ஆய்வோம்.

1. பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் கடியநெடுவேட்டுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்றபொழுது அவன் பரிசில்தரக் காலம் நீட்டித்ததைப் பொறுக்காமல் பாடிய பாடல் வரிகள் அவரின் மானஉணர்ச்சியை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுவார்கள். பெருந்தலைச் சாத்தனாரின் பாடல் வரிகள்,
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே.
... .... .... .... .... .... தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்களிறு
இன்று பெயரல பரிசிலர் கடும்பே. -புறம். 205.


இப்பாடலில் வரும் மூவேந்தராயினும் பேணாது, மதியாது தரும் பொருள் எமக்குத் தேவையில்லை என்று கூறும் புலவர் பாடலின் நிறைவுப் பகுதியில் தேர், யானைகளைப் பரிசிலாகப் பெறாமல் நாங்கள் பெயரமாட்டோம் என்கிறார். இது மானஉணர்வின் வெளிப்பாடா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

2. ஒளவையார், அதியமான் நெடுமானஞ்சி தமக்குப் பரிசில் தர ஒருசமயம் காலம் தாழ்த்தியபோது அவர் கூறிய சொற்கள் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.ஒளவையாரின் பாடல் வரிகளைக் காண்போம்,

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல் என்அறி யலன்கொல்
.... .... .... .... .... .... .... .... ....
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! -புறம். 206.


இப்பாடலில் அதியமான் என்தகுதியை அறியவில்லையா? அல்லது அவன் தகுதியை அறியவில்லையா? என்று கோபப்படும் ஒளவையார், இதோ உடனே புறப்படுகின்றேன் எங்கே சென்றாலும் எனக்குச் சோறு கிடைக்கும் என்கிறார்.

மேற்கூறிய ஒளவையின் சொற்களை திருவள்ளுவரின் மானம் பற்றிய இலக்கணங்களோடு பொருத்திப் பாருங்கள். அதுமட்டுமல்ல காலம் நீட்டித்ததற்காகக் கோபப்படும் இதே ஒளவையார் அதியமானைப் புகழ்ந்து பாடும் மற்றொரு பாடலில்,அதியமான், பரிசில் பெறூஉம் காலம்நீட்டினும் நீட்டாது ஆயினும், களிறுதன்கோட்டிடை வைத்த கவளம் போலக்கையகத்தது அது பொய்யா காதே! -புறம். 101. என்று பாடுகிறார்.

இப்பாடலில் அதியமான் பரிசில் தர எவ்வளவு காலம் நீட்டித்தாலும் யானைக் கொம்பிடையே வைத்த கவளம் போல உறுதியாகக் கிடைக்கும் என்கிறார். கோபப்பட்டதை மானஉணர்ச்சி என்றால், இதை என்னவென்று சொல்வது.

3. பெருஞ்சித்திரனார் என்ற புலவர் அதியமான் நெடுமானஞ்சி தம்மைக் காணாமலே தமக்குப் பரிசில் கொடுத்தனுப்பியபோது அவர் பாடிய பாடல் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.பெருஞ்சித்திரனாரின் பாடல் வரிகளைக் காண்போம்,

.... .... என்னையாங்கு அறிந்தனனோ
தாங்கரும் காவலன்காணாது ஈத்த இப்பொருட்கு
யான்ஓர்வாணிகப் பரிசிலன் அல்லேன்,
பேணித்திணை அனைத்து ஆயினும் இனிது
அவர்துணை அளவு அறிந்து நல்கினர் விடினே! -புறம். 208.


இப்பாடலில் என்னைப் பார்க்காமலே மன்னன் எப்படி என்தகுதியை அறிந்தான்? எப்படி என்னைப் பார்க்காமலே பரிசு கொடுத்தனுப்பலாம்? தினையளவு கொடுத்தாலும் என்னைப் பேணித் தருவதே சரி என்றெல்லாம் கோபப்படுகின்றார் பெருஞ்சித்திரனார்.

இதே புலவர் குமணனைப் புகழ்ந்து பாடும் போதும் மகிழ்ச்சியோடு நீ குன்றிமணியளவு கொடுத்தாலும் போதும் என்று கூறிவிட்டு, வேறொரு பாடலில் (புறம். 161.) நான் யானைமேல் ஏறிச் செம்மாந்து செல்ல விரும்புகிறேன் எனவே எனக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்காமல் என்தகுதியை நோக்காமல் நின்தகுதியை நோக்கி யானையைப் பரிசாகத் தரவேண்டுமென வேண்டுகிறார்.

அதியமானிடம் என்னைப் பார்க்காமலே என்தகுதியை எப்படி அறிந்தான் என்று மானஉணர்வுடன் கேட்கும் பெருஞ்சித்திரனார் குமண வள்ளலிடம் என்தகுதியைக் கணக்கிடாமல் எனக்கு யானையைப் பரிசாகத் தரவேண்டுமெனக் கேட்கிறார் என்றால் இதனை மானஉணர்ச்சியின் வெளிப்பாடாகக் கொள்வது எவ்வாறு பொருந்தும்?.

இதுபோன்றே பெருஞ்சித்திரனார் இளவெளிமானிடம் கோபப்படுவதையும் (புறம். 207) மதுரைக்குமரனார் சோழன் பெருந்திருமாவளவனிடம் கோபப்படுவதையும் (புறம். 197) மானஉணர்வின் வெளிப்பாடாகக் கொள்ள முடியுமா? என எண்ணிப் பார்க்கவேண்டும்.மேலே குறிப்பிட்ட புலவர்களின் பேச்சுக்களை எல்லாம் மானம் என்ற உயர்ந்த பண்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புலவர்களின் உணர்வு வெளிப்பாடு தன்னலம் சார்ந்ததாகவும் பிறர்மேல் சினம்கொண்டு கூறும் வசைமொழிகளாகவும் உள்ளனவே அன்றி தன்தவறு பற்றித் தன்நெஞ்சமே வருத்த அதனால் உண்டாகும் உணர்ச்சியாக இல்லை.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள்.-967


என்ற குறளுக்கேற்பவோ,

என்பாய் உகினும் இயல்பில்லார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார் -நாலடி 292

வற்றிமற்று ஆற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க -நாலடி 78


என்ற நாலடியார் கூற்றிற்கேற்பவோ வாழ்பவர்களே மானமுடையார் என்று சிறப்பித்துக் கூறும் பெருமைக்குரியவர்கள். தம்முடைய வறுமைநிலையைப் பலபடக்கூறிப் பரிசில் பெற விழைபவர்கள் இந்த வரையறைக்குப் பொருந்தமாட்டார்கள்.

இப்படிப் புலவர்களின் வெளிப்பாட்டை மானஉணர்வின்கண் அடக்கமுடியாது என்பதால் புலவர்களின் பெருந்தகைமைக்கு ஏதும் இழுக்கு நேர்ந்துவிடாது. சமூகத் தகுதியிலும் பொருளாதார நிலையிலும் உயர்ந்த இடத்தில் இருந்த மன்னர்களிடத்து இதன் நேர்எதிரான நிலையில் இருந்த புலவர்கள் நெஞ்சுரத்தோடு தம் எதிர்ப்பை, கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பதே சிறப்பிற்குரியதுதான்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-௧ - மானம்:

தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் - மானம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மானம்:

மானம் என்ற சொல் இன்றைய வழக்கில் பேசப்படும் பொருளுக்கும் திருக்குறள் சங்க இலக்கியக் காலங்களில் வழங்கப்பட்ட பொருளுக்கும் வேறுபாடு உண்டு. இன்றைக்கு மானம் என்பது வெட்கம், நாணம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.மானக்குறைவு ஏற்படுவதை அவமானம் என்ற சொல்லாலும் மானஉணர்ச்சி உடையவனை மானஸ்தன், மானி என்றும் குறிப்பிடுகின்றார்கள். ரோஷக்காரன், கோபப்படும் இயல்புடையன் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப் படுகின்றது. மேலும் தன்மானம் என்ற சொல்வழக்கும் மானம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

திருவள்ளுவர் மானம் என்ற பண்பை நற்குடிப் பிறப்பின் பண்பாகக் கருதுகின்றார் என்று அதிகார வரிசைமுறையை வைத்துப் பரிமேலழகரும் மணக்குடவரும் குறிப்பிடுகின்றனர். மானம் என்ற பண்பாவது எஞ்ஞான்றும் தம்நிலையில் தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம் என்பது பரிமேலழகர் தரும் விளக்கம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் -குறள். 954


என்று குடிமை என்ற அதிகாரத்தில் சொன்ன பண்பின் விரிவாகவே மானம் என்ற அதிகாரத்தைப் படைக்கிறார் திருவள்ளுவர். மானம் அதிகாரத்தில் வரும் 1, 2, 5 ஆம் திருக்குறள்கள் மேலே குறிப்பிட்ட திருக்குறளை(954) ஒத்ததாகவே படைக்கப்பட்டுள்ளன. மானஉணர்ச்சிக்குக் கேடு வருமேயானால் உயிரை விடுவதே மேலானது என்று அதிகாரத்தில் வரும் பிற குறட்பாக்கள் தெரிவிக்கின்றன.

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை -குறள். 964


மருந்தோமற் றூன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து -குறள். 968


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் -குறள். 969


மேலும் மானம் உடையவர் தம்மை மதியாதார் பின்சென்று வாழ்வதை விட உயிரை விடுவதே மேலானது என்றும் கூறுகின்றார்.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள். 967


மானம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், மானம் என்பது தமக்குப் பிறர் செய்யும் மானக்கேட்டை எண்ணி அவர்மேல் கோபப்படுவதோ அவரைத் தூற்றுவதோ மானஉணர்ச்சி என்று எங்கும் எப்பொழுதும் குறிப்பிடப் படவில்லை. தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்த அதனால் உண்டாகும் உணர்ச்சியே சிறந்த மானமாகும்.

மானம் உடையவர் தன்னலம் குறைந்தவராக விளங்க வேண்டுமே அல்லாமல் தன்னலம் கருதிப் பிறர்மேல் சினமும் பகையும் கொள்ளல் கூடாது. ஆதலால் அந்தத் தன்னல உணர்ச்சியை மானம் என்று கூறுவது பொருந்தாது.

இன்னும் ஆராய்ந்தால் மானம் என்பது தன்குடி தன்நாடு முதலியவற்றின் பெருமையையும் உலக வாழ்க்கைக்கு அடிப்படையான உயர்ந்த கொள்கைகளின் பெருமையையும் காக்கப் பயன்படுவதே அல்லாமல் தன்னல அடிப்படை கொண்ட தன்பழி, தன்புகழ், தன்ஆக்கம், தன்கேடு என்பனவற்றைப் பொருளாகக் கொள்வது அன்று.

மானம் உடையவர்கள் உயிர் வாழ்க்கையின் அடிப்படை கெடுவதாக இருந்தாலும், உயிர் நீங்குவதாக இருந்தாலும், உயர்ந்த நெறியிலிருந்து பிறழ மாட்டார்கள். உயர்ந்த கொள்கைகளை இழக்கும் நிலை வந்தால் அந்தக் கொள்கைகளை வாழவைத்துத் தம் உயிரை விட்டுவிடுவார்கள். இத்தகைய உணர்ச்சிக்கே மானம் என்பது பெயர்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-1, சங்க இலக்கியக் காட்சிகள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

சங்க இலக்கியக் காட்சிகள்

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு காட்சி வருணனைகளோடு இக்கட்டுரையைத் தொடங்குகின்றேன்.

காட்சி ஒன்று : மதுரைக் காஞ்சி

மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி பாடலில் மதுரை நகரை வருணிக்கும்போது நகர வீதிகளில் வலம்வரும் விலைமாதர்களை வருணிக்கும் பகுதி.

நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மாணப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
(மதுரைக் காஞ்சி 569 -576)

மதுரை நகர வீதிகளில் கைவீசி நடந்துவரும் விலைமாதர்கள், பிற நாட்டினின்றும் தங்கள் ஊரிலிருந்தும் வந்த இளைய செல்வர்களை வஞ்சனை நிறைந்த பொய்ம்மொழிகளினாலே கூட்டிக்கொண்டு சென்று அணைகின்றனர். அவர்களுடைய செல்வத்தையெல்லாம் வாங்கிக்கொள்ளும் வரையில் அன்புடையார் போல் நடிக்கின்றனர். தேனை உண்டு பின் வண்டு மலர்களைத் துறப்பது போல இவர்களும் தங்களை விரும்பி வந்தவர்களது செல்வத்தை வாங்கியபின் அவர்களைக் கைவிட்டு விடுகிறார்கள். பழமுள்ள மலர்களைத் தேடிச்செல்லும் பறவைபோல வாழ்கிறார்கள்.

காட்சி இரண்டு : பரிபாடல்

நல்லந்துவனார் பாடிய பரிபாடல் 20 ஆம் பாடலில் இடம்பெற்றுள்ள பரத்தைக்கும் தலைவியின் ஆயத்தாருக்குமான உரையாடலின் ஒரு பகுதி.
தலைவன் தலைவியரோடு வையை ஆற்றில் புனலாட வந்த தோழியர், தலைவியிடமிருந்து காணாமல் போனதாகக் கருதப்பட்ட வளையும் ஆரமும் கூட்டத்திலிருந்த பரத்தையொருத்தி அணிந்திருத்தலைக் கண்டனர். அதனால் இப்பரத்தை நம்தலைவியின் மாற்றாள் என எண்ணினர். தலைவன் நாணினான். இதனை அறிந்த பரத்தை மகளிர் கூட்டத்தில் புகுந்து மறைந்தாள். தோழியர் அவளைப் பின்தொடர்ந்தனர். அதுகண்ட பரத்தை என்னை ஏன் பின்தொடர்கின்றீர்? என்று சினந்தாள். அப்போது தோழியர் பரத்தைக்குக் கூறும் மறுமொழி,
.......... ......... அமர் காமம்
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
துற்றுவ துற்றும் துணைஇதழ் வாய்த்தொட்டி

முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக்
காரிகை நீர்ஏர் வயல் காமக்களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முதுசாடி

மடமதர் உண்கண் கயிறாக வைத்துத்
தடமென் தோள் தொட்டுத் தகைத்து மடவிரலால்
இட்டார்க்கு யாழ்ஆர்த்தும் பாணியில் எம்இழையைத்
தொட்டு ஆர்த்தும் இன்பத்துறைப் பொதுவி
-(20, 48-58)

இந்த வசைமொழிகளின் பொருள்,
''காமத்தைப் பொய்யோடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப் பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலில் கள்ளாகிய நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது உழுகின்ற பழைய சாலே! பொருள் வழங்குவோரைக் கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம் மிகும்பொருட்டு இசையினையும் எம்பால் களவுகொண்ட அணிகளை அணிந்துகொண்ட அவ்வழகையும் ஊட்டுகின்ற பொதுமகளே!"" என்பதாகும்.

மேலே காட்டப்பட்ட இரண்டு காட்சிகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளவை. முதல் காட்சி புறப்பாடல் காட்சி, இரண்டாம் காட்சி அகப்பாடல் காட்சி. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இரண்டுமே இலக்கண வகையாலும் இலக்கிய வகையாலும் பரத்தையர் குறித்த பல்வேறு தகவல்களைப் பதிவு செய்துள்ளன. தொல்காப்பியர் காமக்கிழத்தி, பரத்தை இரண்டு சொற்களைக் கையாண்டுள்ளார்.

சங்க இலக்கியங்களில் பரத்தை என்ற சொல் பயின்று வந்தாலும் காமக்கிழத்தி, காதல் பரத்தை, சேரிப் பரத்தை, நயப்புப் பரத்தை, இல் பரத்தை முதலான பெயர்கள் சங்க இலக்கியப் பாடல்களுக்கு தொகுப்பாளர் அல்லது உரையாசிரியர்களால் இடப்பெற்றுள்ள துறைக் குறிப்புகளிலேயே இடம்பெற்றுள்ளன. மூல நூலில் இத்தகு ஆட்சிகள் இல்லை. திணை, துறை வகுத்தோர் காலத்து வழக்காறுகளே இப்பெயர்களால் சுட்டப்படுகின்றன.

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-2, பரத்தையரும் விலைமகளிரும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பரத்தையரும் விலைமகளிரும்:

தமிழிலக்கிய நெடும்பரப்பில் பரத்தை, காமக்கிழத்தி, கொண்டி மகளிர், பொதுமகள், பொருட்பெண்டிர், வரைவின் மகளிர், விலைமகள், கணிகை, சலதி, வேசி, தாசி, தேவரடியாள் (தேவிடியாள்) முதலான பெயர்களால் சுட்டப்படும் பெண்கள் ஒரு சமூக நிறுவனத் தன்மையோடு இயங்கிவந்தமை பதிவாகியுள்ளன. சுட்டப்படும் பெயர்கள் பலவாயினும், பொதுப்பார்வையில் இவர்கள் அனைவரும் விலைமகளிர் என்றே கருதப்படுகின்றனர். ஆனால் நுணுகிப் பார்த்தால் இவர்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம் என்று தோன்றுகிறது.

1. பரத்தை, காமக்கிழத்தி முதலான பெயர்களால் அகப்பொருள் இலக்கியங்களில் இடம்பெறும் புலனெறிப் பாத்திரங்கள்.

2. வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், கணிகை, கொண்டி மகளிர், தாசி, வேசி முதலான பெயர்களால் சுட்டப்படும் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களாக இடம்பெறும் பெண்கள்.
முதல் வகையில் இடம்பெறும் பரத்தை என்ற புலனெறிப் பாத்திரப் படைப்புப் பெண்களையும் இரண்டாம் வகையில் இடம்பெறும், விலைமகளிர் எனப் பொது நிலையில் சுட்டப்படும் நடைமுறை வாழ்க்கைப் பெண்களையும் வேறுபடுத்தி அடையாளம் காண இயலாமல் தமிழகப் பரத்தையர் குறித்த ஆய்வில் இடர்ப்படுவோர் பலருண்டு.

முதல் பிரிவில் இடம்பெறும் அகப்பொருள் பரத்தையர் விலைமகளோ, பொருட்பெண்டிரோ அல்லர். அவர்கள் அகப்பொருள் தலைவனின் மனைவியர் பலருள் ஒருவர். இவ்வகைப் பரத்தையர் குறித்து விரிவாக ஆய்ந்து சிலம்பு நா.செல்வராசு அவர்கள் தரும் முடிபுகள் வருமாறு,

“அ. பரத்தையர், பரத்தை என்ற சொற்கள் தலைமகளின் வேறானவர், அல்லது அயலவர் என்ற பொருளிலேயே குறிக்கப் பெற்றுள்ளன. பரத்தை என்பதற்குப் பொதுப்பெண்டிர், விலைமகளிர் என்று பொருள் கொள்வதற்குத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் சான்றுகளில்லை.

ஆ. சேரிப்பரத்தை முதலான வகைப்பாடுகள் உரையாசிரியர் காலத்தவை.

இ. இளம்பூரணர் கூறிய ‘ஒருவர் மாட்டும் தங்காதவர்’ என்ற கொள்கையை விளக்கச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் இல்லை. அவ்வாறே ஆடவர் பலரோடு பரத்தையர் தொடர்பு கொண்டமைக்கும் சான்றுகளில்லை.” (வள்ளுவப் பெண்ணியம், பக் 102-103)

சங்க இலக்கிய மருதப்பாடல்கள் பலவற்றில் பரத்தையைத் தலைவிக்குச் சகோதரியாகவும் தலைவி பெற்றெடுத்த புதல்வனுக்குத் தாயாகவும் சித்தரித்துள்ளனர். தலைவியைப் போலவே பரத்தையையும் வதுவை அயர்ந்து (திருமணத்தின் வழி) பெற்றான் என்று சில பாடல்கள் பதிவுசெய்துள்ளன. (அகநானூறு, 36, 46, 206) தலைவியருக்கும் பரத்தையருக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை பற்றியது. பரத்தைக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை கிடையாது என்பதுதான். (நற்றிணை, 330)

இவ்வகைப் பரத்தையர், புலவர் மரபில் புலனெறி வழக்காகப் படைத்துக் கொள்ளப்பட்டவர்களே அன்றி நடைமுறைப் பாத்திரங்களாகார். சங்க அக இலக்கியங்கள் தொடங்கி, கீழ்க்கணக்கு அகநூல்கள், திருக்குறள் காமத்துப்பால், கோவை இலக்கியங்கள் வரை புலனெறியாகப் படைக்கப்படும் அத்துணை அக இலக்கியங்களிலும் இவ்வகைப் பரத்தையர் அச்சுப்புள்ளி மாறாமல் ஒரே வார்ப்பாகப் படைக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாம் பிரிவில் இடம்பெறும் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களான வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், கணிகை, கொண்டி மகளிர், தாசி, வேசி முதலான பெயர்களால் சுட்டப்படும் பெண்கள் குறித்து விரிவாகப் பேசுவதற்கு இடமிருக்கின்றது. பொதுவில் இவர்களைப் பதியிலார் என்று குறித்தல் பொருந்தும். மதுரைக் காஞ்சி கொண்டி மகளிர் என்ற அடையாளத்தோடு வருணிக்கும் மதுரை நகர விலைமாதர்கள் இவ்வகைப் பதியிலார்களே.

நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மாணப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
(மதுரைக் காஞ்சி 569 -576)

தமிழ் இலக்கியப் பரப்பில் சங்க காலம் தொடங்கி நேற்றைய இலக்கியங்கள் வரை இவ்வகைப் பெண்கள் குறித்த பதிவுகள் முற்ற முழுதாக ஆணின் பார்வையிலேயே பதிவாகியுள்ளன. மாயப் பொய்பல கூட்டிக் கவவுக் கரந்து, நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினம் மாண, பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல முதலான வசைகளின் வழி மாங்குடி மருதனார் முன்வைக்கும் (பொருட்)பெண்டிர் குறித்த மதிப்பீடுகளை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். இவ்வகை மதிப்பீடுகளே பதினெண் கீழ்க்கணக்கின் அறநூல்களிலும் நீட்சி பெற்றுள்ளன. திருக்குறளும் இதற்கு விதிவிலக்கில்லை.

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-3, திருக்குறளில் பரத்தையரும் விலைமகளிரும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

திருக்குறளில் பரத்தையரும் விலைமகளிரும்:

திருக்குறள் காமத்துப்பாலில் இடம்பெறும் ஊடல் தொடர்பான அதிகாரங்களில் தலைவிக்கு ஊடல் தோன்ற பரத்தையே காரணமாகிறாள் என்பதைத் திருவள்ளுவர் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

நண்ணேன் பரத்த நின் மார்பு (குறள்: 1311)

ஒருத்தியைக் காட்டிய சூடினீர் (குறள்: 1313)

யாரினும் யாரினும் என்று (குறள்: 1314)

யார் உள்ளித் தும்மினீர் என்று (குறள்: 1317)

நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ (குறள்: 1318)

பிறர்க்கு நீர் இந்நீரர் ஆகுதிர் (குறள்: 1319)

யார் உள்ளி நோக்கினீர் (குறள்: 1320)


புலவி நுணுக்கம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மேலே சான்று காட்டப்பட்டுள்ள அனைத்து குறட்பாக்களிலும் தலைவியின் ஊடலுக்குக் காரணமாகத் தலைவனின் பரத்தமை ஒழுக்கம் பேசப்படுகிறது. இக்குறட்பாக்களில் இடம்பெறும் பரத்தையர் அகப்பாடல்களில் இடம்பெறும் புலனெறி வழக்குப் பரத்தையர்.

திருவள்ளுவர் தம் பொருட்பால் வரைவின் மகளிர் அதிகாரத்தில் கடிந்து சாடும் பரத்தையர்கள் அகப்பொருள் பரத்தையர்கள் அல்லர். அவர்கள் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களான விலைமகளிர்.

பொருள் விழையும் ஆய்தொடியார் (குறள்: 911)

பண்புஇல் மகளிர் (குறள்: 912)

பொருட்பெண்டிர் (குறள்: 913)

பொதுநலத்தார் (குறள்: 915)

மாய மகளிர் (குறள்: 918)

வரைவுஇலா மாண் இழையார் (குறள்: 919)

இருமனப் பெண்டிர் (குறள்: 920)


பொருட்பெண்டிர், மாய மகளிர், வரைவுஇலா மாண்இழையார், இருமனப் பெண்டிர் முதலான அடை மொழிகளோடும் பிணம், அளறு முதலான வசவுகளோடும் திருவள்ளுவர் குறிப்பிடும் பெண்கள் விலைமகளிரே என்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.

திருக்குறள் காமத்துப்பாலில் ஊடலுக்குக் காரணமாகச் சுட்டும் பரத்தையர், பொருட்பாலில் கடிந்துரைக்கும் பொருட்பெண்டிர் ஆகிய இரண்டு வகையினரையும் பிரித்துணராமல் குழப்பங்களுக்கு ஆட்படுவோர் இரண்டு பிரிவினர்.

1. வரைவின் மகளிர் அதிகாரத்தில் பொருட்பெண்டிரைச் சாடும் குறள் கருத்தை ஒப்புக் கொண்டு, காமத்துப்பாலில் திருவள்ளுவர் பரத்தையர்களைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்று வாதிடுவோர் ஒரு பிரிவினர்.

2. காத்துப்பாலில் இடம்பெறும் பரத்தையர்கள் பற்றிய செய்திகளை ஒப்புக்கொண்டு, பொருட்பால் வரைவின் மகளிர் அதிகாரத்தில் இடம்பெறும் பொருட்பெண்டிர் விலைமகளிர் அல்லர், அவர்கள் ஆண்களால் பொருள் கொடுத்து பெறப்பட்ட பரத்தையர்களே. அவர்கள் பொதுமகளிர் அல்லர். பொருள் கொடுத்த ஆடவனுக்கு மட்டுமே இன்பம் நல்கும் வரைவு - இல் - மகளிர். அதாவது திருமணம் செய்துகொள்ளாத மனைவியர் என்று வாதிடுவோர் சிலர் (சிலம்பு நா.செல்வராசு, வள்ளுவப் பெண்ணியம், பக். 68)

திருக்குறள் காமத்துப்பாலில் ஊடலுக்குக் காரணமாகச் சுட்டும் பரத்தையர், பொருட்பாலில் கடிந்துரைக்கும் பொருட்பெண்டிர் ஆகிய இரண்டு வகையினரையும் பிரித்துணர்ந்து, காமத்துப்பால் பரத்தையர் புலனெறி வழக்கு என்றும் பொருட்பால் பொருட்பெண்டிர் உலகியல் நடைமுறைச் சித்தரிப்பு என்றும் பொருள்கொள்ளுதல் சிக்கலைத் தீர்க்க உதவும்.

பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள அறநூல்கள் பலவும் திருக்குறளை அடியொட்டியே பொதுமகளிர் குறித்த வசவு மற்றும் சாடல்களைத் தொடர்கின்றன.

ஆமாபோல் நக்கி அவர் கைப்பொருள் கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதுஎன்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை
(நாலடியார்: 38, பொதுமகளிர்: 7)

காட்டுப் பசுபோல் நக்கிச் சுகமளித்துக் கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் கணிகை, எல்லாம் கவர்ந்தபின் காட்டு எருது போலப் பாய்ந்து விலகி பிறரிடம் சென்றுவிடுவாள். அவளது இந்த அற்ப அன்பினை உண்மை என நம்பி ஏமாறுகிறவர்களது வாழ்க்கை பிறரால் நகைக்கக் கூடியதாய் இழிவுறும்

நாலடியாரில் இடம்பெறும் பொதுமகளிர் என்ற அதிகாரம் முழுவதும் விலைமகளிர் குறித்த சாடல்களே. பழமொழி நானூறு, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை போன்ற அறநூல்களிலும் இதேநிலைதான்.

பாலியல் அறமும் பரத்தையரும் - பகுதி 4 -கற்பு ஒரு கற்பிதம்

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
புதுச்சேரி-8

கற்பு ஒரு கற்பிதம் :

சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அல்லது அக இலக்கிய மரபுகள் குறிப்பிடுகின்ற காதல், கற்பு, ஒருதாரமணம் இவைகள் எல்லாமே பழைய தாய்வழிச் சமூகம் மாறித் தந்தைவழிச் சமூகம் உருவானபோது உடைமைச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளே. தந்தைவழிச் சமூகத்தின் போது உருவான தனியுடைமைச் சமூகத்தில்தான் சொத்துரிமையைப் பாதுகாக்க ஒருதாரமணம் தேவைப்பட்டது.

தந்தைவழிச் சமூகத்தில் தன்னுடைய உடைமையை நேரடியாகத் தன் வாரிசே பெற பெண் ஒருதாரமணத்தைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. (இங்கே ஒருதாரமணம் என்று குறிப்பிடப்படுவது உண்மையில் ஒருகணவமணமே) ஏனெனில் ஒருபெண் ஒருவனோடு மட்டுமே உறவு உடையவளாக இருந்தால் மட்டுமே தந்தைவழிச் சமூகம் நிலைக்கமுடியும். இத்தகைய சூழ்நிலையில்தான் ஒருதாரமணக் கோட்பாட்டைக் கட்டிக்காப்பதற்காகக் (பெண்களுக்கு மட்டும்) காதலும் கற்பும் கோட்பாடுகளாக ஆக்கம் பெற்றன.

எல்லாக் காலங்களிலும் காதலும் கற்பும் பெண்களுக்கு வலியுறுத்தப் பட்டனவே அல்லாமல் ஆண்களுக்கு அவை வலியுறுத்தப்படவில்லை. பெண்களுக்குக் காதலும் கற்பும் ஒருதாரமணமும் வலியுறுத்தப்பட்ட அதே சமூகத்தில்தான் ஆண்களுக்குப் பரத்தையர் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது.

தனியுடைமை, ஆணாதிக்கம் இவைகளைக் கட்டிக்காக்கவே காதல், கற்புக் கோட்பாடுகள் காலந்தோறும் மக்களாலும் இலக்கியவாதிகளாலும் மிக உயரியதாகவும் புனிதமானதாகவும் கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தன. கற்பு ஒரு கற்பிதம். அதன் நோக்கமும் தேவையும் பெண்ணடிமையே. காதல் புனிதமானது என்று பெண்ணை நம்பச்செய்த ஆண்கள் காதலை ஒருபோதும் புனிதமாகக் கருதவில்லை.

குலமகள் - பரத்தை:

ஆடவரே உயிர் என்று போற்றி ஒழுகும் பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாகப் போற்றப்பட்டனர். அவர்களின் ‘செயிர்தீர் கற்பு கடவுள் கற்பு’ என்பது ஆடவனுக்கு உடலாலும் உள்ளத்தாலும் உண்மையாய் இருத்தல் என்று கற்பிக்கப்பட்டது.

கற்புடைய பெண்களின் மேன்மைக்காக எதிர்நிலையில் பரத்தையர்கள் பற்றிய புலனெறி வழக்கு (இற்பரத்தை, காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலநிலைகளில்) உருவாக்கப்பட்டது. கற்பைப் போற்றிக் காக்கும் தலைவியின் பெருமையை மிகுவிக்கவே அல்லது வலிமைப்படுத்தவே பரத்தையர்கள், பரத்தையர் ஒழுக்கம், ஊடல், ஊடல் தணிக்கும் வாயில்கள் படைத்துக் கொள்ளப்பட்டன. மருதத்திணையின் முழுநேர வேலையே பரத்தையர் காரணமான ஊடலும் ஊடல் நிமித்தங்களுமாயின.

பரத்தையர்களே சங்க காலத்தில் இல்லையா? இவை முழுக்க முழுக்கக் கற்பிதங்களா? என்றால், பரத்தையர்களே கற்பனை என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. பரத்தமை ஒழுக்கம் பற்றிய புலனெறி வழக்குகள், மருத உரிப்பொருள் தொடர்பான செய்திகள் இவைகளே கற்பிதங்கள்.

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”


என்பார் தொல்காப்பியர். அகப்பொருளின் புலனெறி வழக்குகள் புனைவியல் தன்மையோடு எதார்த்தத்திலிருந்து புனைந்து கொள்ளப்பட்டவையே. இவை உள்ளதும், இல்லதும் ஆகிய இரண்டின் கூட்டால் உண்டான புனைவு. பரத்தையர்கள் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் அனைத்தும் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்த புலனெறி வழக்கே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பாலியல் அறமும் விலைமகளும்:

நமது பொதுச்சிந்தனையில், சமூக ஒழுங்கைக் கட்டிக்காக்க, சமுதாயம் கெட்டுப் போய்விடாமல் பாதுகாக்க அறங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்ற கருத்து பதிந்துள்ளது. உண்மையில் அறங்கள் அதிகாரத்தைக் கட்டுபவை. ஆதிக்க சக்திகளின் நலன்களைப் பாதுகாப்பவை.

“அறங்கள் வெற்று விதிகள் அல்ல. இவை, மேலாதிக்க சமூக ஒழுங்கை அல்லது நடப்பில் நிலவுகின்ற ஆதிக்க -ஆட்பட்ட உறவுகளைச் சாசுவதமாக்குகின்றன. ஒரு சாராரின் நலனே ஒட்டுமொத்தச் சமூக நலன் என்று அறங்கள் நியாயப் படுத்தவல்லவை. இவ்வாறு இவை நியாயப் படுத்துவதன் மூலமாக, நடப்பிலுள்ள சமூக ஒழுங்கும், உறவுகளும் இயல்பானவை, மாறாதவை, மாற்றக் கூடாதவை என்று ஆக்குகின்றன. அறங்கள் இயற்கைச் சட்டம் என்கிற அரணைப் பெறுகின்றன. நடப்பவற்றைக் கேள்விக்கு அப்பாற் பட்டவையாக, இதிலே கேட்பதற்கு என்ன இருக்கிறது என்பதாக அறங்கள் ஆக்குகின்றன.”
என்பார் ராஜ் கௌதமன். (தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், பக். 8-9)

அறங்கள் ஆதிக்க சக்திகளின் நலன் காப்பவை எனும்போது உடைமைச் சமூகத்தில் ஆதிக்கச் சக்தியாய் விளங்கும் ஆண்களின் நலன் பேணுவதும், ஒடுக்கப்படும் பெண்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையாகவும் அவை விளங்குகின்றன. விலைமகளிர் குறித்த அறச்சொல்லாடல்களும் பெண்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையே என்பதை அறநூல்கள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றன.

பெண்களின் பாலியல் வேட்கையைக் கற்பு என்ற சங்கிலியால் பிணைத்துவிட்டு ஆண்கள் பாலியல் சுதந்திரத்தோடு கட்டுப்பாடற்று இயங்கும் சமூகத்தில் பொதுமகள் தவிர்க்க முடியாத பாத்திரமாகிறாள். இப்பொதுமகள் குறித்த வசவுகளாக மதுரைக்காஞ்சியில் கேட்ட அதேகுரல்தான் திருக்குறளிலும் நாலடியாரிலும் பழமொழி நானூற்றிலும் திரிகடுகத்திலும் ஆசாரக் கோவையிலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.

வெள்ளி, 29 பிப்ரவரி, 2008

தமிழர் ஈகைக் கோட்பாடு (சங்க இலக்கியம்)

தமிழர் ஈகைக் கோட்பாடு
(சங்க இலக்கியம்)

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பசியும் பாலுணர்வும் உயிரினங்களுக்கு இயற்கை அளித்த கொடை. உயிரினங்களின் சந்ததிச் சங்கிலி அறுபடாமல் தொடர, தமது இனத்தைத் தொடர்ந்து பெருக்கிக்கொண்டே செல்ல, இனப்பெருக்கத்திற்கான இயல்பூக்கமாக பாலுணர்வு அமைந்தது. உயிரினங்கள் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் இதன்பொருட்டே. வாழ்தலுக்கு உணவு தேவை. உணவுண்ணத் தேவைப்படுவது பசி என்னும் இயல்பூக்கம். பசி இயற்கையானது. பசியாறத் தேவைப்படும் உணவு இயல்பாய்த் தேவைப்படும் போதெல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கும்வரை உயிரினங்களுக்குப் போராட்டம் இல்லை. மனித சமூகத்திற்கும் இதே விதிதான்.

மனிதனின் போராட்ட வாழ்க்கை பசியில் தொடங்கிப் பசியில் தொடர்கின்றது. மனிதன் கூட்டமாக வேட்டையாடி, கிடைத்த உணவைத் தங்களுக்குள் பகிர்ந்து உண்டதெல்லாம் பழையகதை. தன் பசி தெரிந்த மனிதன் சக மனிதனின் பசியையும் உணர்ந்து கிடைத்ததைக் கொடுத்து உண்டது இனக்குழுச் சமூகத்தில். உடைமைச் சமூகத்தில்தான் தன் பசியும் சக மனிதர்களின் பசியும் பிரச்சனைக்குள்ளாயின.

இனக்குழுச் சமூகத்தில் உணவு வயிற்றுத் தேவைக்காகச் சேகரிக்கப்பட்டது. பசிக்கு உணவு என்பது அந்தச் சமூகத்து நிலை. உடைமைச் சமூகத்தில் உணவு உபரியாகச் சேகரிக்கப்பட்டு அல்லது படைக்கப்பட்டு ஒரு பிரிவினரின் உடைமையாக, செல்வமாக ஆக்கப்பட்டது. இவ்வகைச் சமூகத்தில் உபரியான உணவு அதை வைத்திருந்தவனுக்கு ஒரு தகுதியை, பெருமையைக் கூட்டியது. திருக்குறள் அரசனுக்குரிய ஆறு அங்கங்களில் ஒன்றாகக் கூழ் (உணவு) என்பதனைக் கூட்டிச் சொன்னது இதன்பொருட்டே.

உணவு உள்ளவன் உணவு இல்லாதவனுக்குப் பகிர்ந்தளித்த வேட்டைச் சமூகப் பழங்குடி வழக்கம் சங்க காலத்து குறுநிலத் தலைவர்கள் ஃ மன்னர்கள் என்று வருணிக்கப்பட்ட வள்ளல்களிடம் இயல்பாக இருந்தது. இந்தவகை உணவுப் பங்கீட்டில் கொடுப்பவன், பெறுபவன் என்ற ஏற்றத்தாழ்வு இருப்பதில்லை. இந்நிலை காலப்போக்கில் மாற்றமடைந்து உடைமைச் சமூகத்தில், உணவு உள்ளவன் உணவு இல்லாதவனுக்கு இரக்கத்தோடு உணவளித்தல், வழங்குதல், ஈதல் என்ற அறமாக மாற்றம் பெற்றது. இங்கே உணவைக் கொடுப்பவன், பெறுபவன் இடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டது. கொடுத்தல் ஈகை, பெறுதல் இரத்தல் என்றும் கொடுப்பவன் உயர்ந்தவன், பெறுபவன் தாழ்ந்தவன் என்றும் சமூக மதிப்பீடுகள் மாற்றம் பெற்றன. சக மனிதனுக்கு உணவு வழங்குவது ஈகை என்றானதும் இந்த ஈகை அறம் என்றானதும் இந்த உடைமைச் சமூகத்தில்தான்.

சங்க இலக்கியங்களில் ஈகை அறம்:
சங்ககாலச் சமூகம் இனக்குழுச் சமுதாய அமைப்பிலிருந்து உடைமைச் சமூகமாக மாறிக்கொண்டிருந்த ஒரு காலகட்டமாகும். சங்க இலக்கியங்களில் வேட்டையோடு தொடர்புடைய குறுநிலத் தலைவர்கள் தம்மை நாடிவந்த பாணர் மரபைச் சேர்ந்த பாணர், பொருநர், விறலியர், கூத்தர் முதலான கலைஞர் குழுக்களுக்கு இறைச்சியோடு கலந்த உணவும், கள்ளும், ஆடையும் வழங்கி மகிழ்ந்தமை சிறப்பாகப் பாராட்டப்படுகின்றது. சிற்றரசர்களின் இவ்வகை உபசரிப்பு அறத்தகுதி பெறவில்லை.

குறுநிலத் தலைவர்களின் இவ்வகை உபசரிப்பு குறித்த பாடல்கள் பல புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலைச் சான்றாகக் காண்போம். அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறித்து ஒளவையார் பாடிய பாடலின் பகுதி இது,
''புன்தலைப் பொருநன் அளியன் தான்எனத்
தன்உழைக் குறுகல் வேண்டி, என்அரை
முதுநீர் பாசி அன்னஉடை களைந்து
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்னடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கி
கொண்டி பெறுக என்றானே "

(புறநானூறு பா. 390)

'அதியமான் தன் நெடுமனை முற்றத்தில் நின்று முன்னிரவு நேரத்தில் தடாரிப் பறையை இசைக்கும் பொருநனைக் கண்டவுடன், இப்பொருநன் இரங்கத் தக்கவன் என்று கருதி அவன் இடையிலிருந்த நீர்ப்பாசியன்ன பழைய ஆடையை நீக்கி மலர் போன்ற புத்தாடையை அணியுமாறு செய்து மதுவோடு ஊன் துவையையும் சோற்றையும் வெள்ளிக் கலத்தில் இட்டு அதனை உண்பித்ததோடு அவன்சுற்றத்தாரது வறுமைத் துயரத்தையும் போக்க நெற்குவியலையும் கொடுத்தான் என்று ஒளவையார் பாடுகின்றார்.

மற்றுமொரு பாடல், 'பாணன் ஒருவன் ஓய்ந்த நடையினை உடையவனாய் வருத்தத்துடன் பலா மரத்தினடியில் தன் சுற்றத்துடன் தங்கியிருந்த போது அங்கு வந்த வில்லையுடைய வேட்டுவன் ஒருவன் விலங்கின் ஊனைத் தீயினில் சுட்டு அவர்களை உண்ணச் செய்ததோடு, தான் காட்டு வழியில் இருப்பதால் அவர்களுக்குக் கொடுப்பதற்கு வேறு பரிசுப் பொருள்கள் இல்லை என்றுகூறித் தனது மார்பில் அணிந்திருந்த முத்து வடங்களையுடைய ஆரத்தையும் முன்கைக்கணிந்த கடகத்தையும் கொடுத்தான் என்றும் அவனது பெயரையும் நாட்டையும் கேட்டபோது கூறாமல் போய்விட்டான் என்றும் வழியில் பிறரைக் கேட்டபோது அவன் கண்டீரக்கோ பெருநள்ளி என்பதைப் பாணன் அறிந்தான் என்றும் வண்பரணர், பெருநள்ளி என்ற குறுநிலத் தலைவனின் புகழ்விரும்பா வள்ளண்மையைப் புகழ்கின்றார்.

.. .. .. .. .. .. வீறுசால் நன்கலம்
பிறிதுஒன்று இல்லை, காட்டு நாட்டேம்என
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்
எந்நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ எனப் பேரும் சொல்லான்

(புறநானூறு பா. 150)

தம்பெயர் மற்றும் ஊரின் பெயரைக் கேட்டும் சொல்லாமல், உணவும் பரிசிலும் வழங்கிச் சென்ற கண்டீரக்கோ பெருநள்ளியின் செயல், உடைமைச் சமூக அறம், ஈகை குறித்த சொல்லாடல்களிலிருந்து வேறுபட்டது.

ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் ஆய் அண்டிரனின் வள்ளண்மையைப் புகழும்போது

இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறிஎன
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே

(புறநானூறு பா. 134)

ஆய் அண்டிரனின் கைவண்மை மறுமை நோக்கிச் செய்யப்பட்ட அறமன்று என்றும் அப்படி மறுமை நோக்கிச் செய்யப்படும் ஈகை அறம் அறத்தை விலைகூறி விற்கும் வணிகத்தை ஒத்தது என்றும் முடமோசியார் பாடுகிறார். அவர் பாடுவதிலிருந்து ஆய் மன்னன் காலத்திலேயே பாணர் மரபினரைப் பேணி உபசரிக்கும் அறமதிப்பு பெறாத பகுத்துண்ணும் மரபும் புலவர் மரபினரைப் போற்றிப் புரந்து பரிசில் வழங்கும் அறமதிப்புடைய ஈகை அறமும் வழக்கில் இருந்ததனைக் கவனத்தில் கொள்ளலாம்.
பாணர் மரபினரைப் புரக்கும் குறுநில மன்னர் /தலைவர்களின் செயல்களில் வரிசை அறிதல் இல்லை. ஆனால் புலவர் மரபினருக்கு வழங்கப்படும் ஈகையில் வரிசை அறிதல் உண்டு. வரிசை அறியாது மன்னன் தரும் பரிசில் புலவர்களால் கடியப்பட்டது. மலையமான் திருமுடிக்காரி புலவர்களிடத்துப் பொதுநோக்கு உடையவனாய் இருந்தமையைக் கபிலர் கடிந்து கூறிப் பாடிய பாடல் வருமாறு,

ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசை
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்
அதுநன்கு அறிந்தனை யாயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே

(புறநானூறு பா. 121)

ஈகை எளியசெயல், பரிசுபெற வந்தவர்களின் தகுதியை அறிந்து வழங்குவதுதான் அரியசெயல். எனவே புலவர்களைப் பொறுத்தமட்டில் பொது நோக்கைக் கைவிடுவாயாக என்கிறார் புலவர். அதியமான் நெடுமானஞ்சியிடம் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் பரிசில் பெறச் சென்றபோது, மன்னன் அவரை நேரில் காணாமலே அவருக்குப் பரிசுப் பொருள்களைக் கொடுத்தனுப்புகின்றான்.

காணா தீத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
திணையனைத் தாயினும் இனிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே

(புறநானூறு பா. 208)

ஷஷபல குன்றுகளும் மலைகளும் கடந்து வந்த என்னை நயந்து நேரில் காணாமலேயே, ''இப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு செல்க" என்று சொல்ல வேந்தன் எவ்வாறு என்தகுதியை அறிந்துகொண்டான். என்னைக் காணாமல் தந்த இப்பரிசுப் பொருள்களைப் பெற்றுச்செல்ல நான் வாணிகப் பரிசிலன் அல்லன். புலவர்களது கல்வி, புலமை முதலான தகுதிகளை அறிந்து விரும்பித் தினையளவு பரிசு கொடுத்தாலும் அதுவே நன்று என்கிறார் பெருஞ்சித்திரனார்.பாணர் மரபினருக்கு வரிசை அறிதல், அதாவது பெறுபவன் தகுதியைப் பற்றிய எந்த ஓர்மையும் இல்லாமல் அவன் பசி மற்றும் தேவைகளை மட்டுமே கருதி பகிர்ந்தளிக்கப்பட்ட /வழங்கப்பட்ட ஈகை, மாற்றம் பெற்றுப் புலவர் மரபினர்க்கு வழங்கப்படும் போது பசி மற்றும் தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வழங்குபவன் தகுதி, பெறுபவன் தகுதி முதலான அளவுகோல் களுக்கிடையே அறத்தகுதியும் பெறுவதாயிற்று. இவ்வகை ஈதலறம் கொடுப்பவன் பெறுபவனுக்கிடையிலான வணிகமாகவும் பரிணாமம் பெற்றது. வணிகத்தில் கொடுப்பது பெறுவது இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெறும். இவ்வகையில் கொடுப்பவன் பொருள்களைக் கொடுக்கிறான் கொடுத்ததற்கு மாற்றாக இவ்வணிகத்தில் எதைப்பெறுகிறான் என்றால் ஈத்துவக்கும் இன்பத்தையும் புகழாகிய இசையையும் பெறுகின்றான். பெறுபவன் நிலையிலிருந்து பார்த்தாலும் இந்தவகைப் பரிமாற்றம் நடைபெறுகின்றது. அறவிலை வணிகன் ஆஅய் அல்லன், வாணிகப் பரிசிலன் அல்லேன் முதலான சங்க இலக்கியச் சொல்லாடல்கள் அறம் வணிகமாகிப் போன நிலைமையை எதிர்மறையில் பதிவுசெய்கின்றன. சங்க காலத்திலேயே இம்மையில் ஒருவன் செய்த நன்மை மறுமையில் அவனுக்குப் பெரிய இன்பமாக வந்து விளையும் என்னும் கருத்து நிலைபெறத் தொடங்கிவிட்டது.

எத்துணை யாயினும் ஈத்தல் நன்றுஎன
மறுமை நோக்கிற்றோ அன்றே, பிறர்
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே

(புறநானூறு பா. 141)

என்று வையாவிக் கோப்பெரும் பேகனின் கைவண்மையைப் புகழ்ந்துரைக்கின்றார் பரணர். இப்பாடலும் நமக்கு இருவகை ஈகையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஒன்று பிறர் வறுமை நோக்கிய ஈகை. மற்றொன்று தம் மறுமை நோக்கிய ஈகை. இரண்டாவது வகை ஈகையே அறத்தகுதி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.

இல்லற அறம் ஈகையும் விருந்தோம்பலும்.
குழுத் தலைவர்களின், அரசர்களின், வேந்தர்களின் வழங்கல் மரபு பங்கிட்டுண்ணல், கொடுத்தல், ஈகை என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து அறம் என்ற புதிய வடிவமெடுத்த பின்னர், இயல்பாகச் சக மனிதனின் பசியாற்றல் என்ற உயிர்ப் பண்பிலிருந்து மேலெழுந்த ஈகை, இல்லறக் கடமையாகவும், இல்லறத்தானின் கடமையாகவும் புதிய பரிமாணம் பெற்றது. இந்நிலை உடைமைச் சமூகத்தில், இல்- அறம் என்றானது. மன்னர்களைப் பாடிப் பரிசில்களாகக் கொண்டுவந்த பலவகைப் பொருட்களையும் தானே வைத்து அனுபவிக்க வேண்டும் என்று நினைக்காமல் எல்லோருக்கும் கொடு என்கிறார் ஒரு புலவர்.

நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னார்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!

(புறநானூறு பா. 163)

''குமணவள்ளல் தந்த இந்த வளங்களை எல்லாம், கொடு, கொடு, எல்லோர்க்கும் கொடு, உற்றார் உறவினர்களுக்கும் நம்முடைய வறுமைக்காலத்தில் நமக்குத் தந்து உதவியவர்களுக்கும் கொடு. யாருக்குக் கொடுப்பது என்று யோசிக்க வேண்டாம். என்னைக் கேட்காமலேயே கொடு, இந்த வளங்களையெல்லாம் நாமே வைத்துக்கொண்டு வளமாக வாழலாம் என்றெல்லாம் நினைக்காமல் எல்லோர்க்கும் கொடு'' என்று மனமகிழ்ச்சியோடு மனைவிக்கு அனுமதி வழங்குகின்றார் பெருஞ்சித்திரனார்.

சங்க காலத்தில் உடைமைச் சமூக அமைப்பு மெல்லத் துவங்கி இறுக்கம் பெற்ற நிலையில் இருப்பவன் -இல்லாதவன் இடையிலான வேறுபாடு பெரிதாகத் தெரியத் தொடங்குகிறது. உடைமைச் சமூகத்தின் உடனடி விளைவான பசியும் பட்டினியும் சமூகச் சிக்கல்களாகின்றன. உடைமையாளர்களுக்குப் பிறர் பங்கைத் திருடிய குற்றஉணர்வு சிறிதுமில்லை. உடைமைச் சமூகத்தை நியாயப்படுத்தவும் இருக்கிற சமூக அமைப்பைக் கட்டிக் காக்கவும் உருவாக்கப்பட்ட அறங்கள், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் உள்நோக்கத்தோடு கொடையை, ஈகையை, விருந்தோம்பலை முன்மொழிகின்றன. ஷசெல்வத்துப் பயனே ஈதல் என்கிறபோது ஈகைக்குப் பயன்படுகிற செல்வம், ஈகைக்காகவே செல்வம் என, செல்வம் நியாயப்படுத்தப்படுகிறது. உபரி உணவும் சொத்தும் பொருளும் அறத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால் குற்றமற்றதாகி விடுகின்றன.
''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்''
(குறுந்தொகை- 63)
என்றும் பொருளைத் தேடுவதே பிறருக்குக் கொடுக்கத்தான் என்னும் பொருளில்
''பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு
காமர் பொருட்பிணி போகிய நங்காதலர்''

(நற்றிணை- 186)
என்றும் சங்க இலக்கியங்கள் அறத்தின் பேரால் நியாயம் பேசின.

சஙக இலக்கியங்களில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, திருக்குறள் முதலான நீதி நூல்களில் சமண, பௌத்த மதச்சொல்லாடல்களுக்கு ஒப்பப் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது. அற்றார் அழி பசி தீர்த்தல் (குறள்- 226) ஈகை, வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (குறள்- 221) என்றெல்லாம் ஈகை அறம், பசி தீர்த்தல் அதுவும் வறியவனின் பசியைத் தீர்த்தல் என்ற பொருளில் வலியுறுத்தப்பட்டது. புகழ் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் ஈதலால் இசைபெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைக்கின்றார். விருந்தோம்பல் என்ற சங்க இலக்கியத்து ஈகையைத் திருவள்ளுவர் இல்லறத்தான் கடமைகளில் ஒன்றாகத் தனித்து வலியுறுத்துகின்றார்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...