செவ்வாய், 2 நவம்பர், 2021

கவிஞர் இராதேவின் அன்னை தெரசா பிள்ளைத்தமிழ் - நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ


தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் சங்க காலம் தொடங்கி இன்றுவரை உயிரோட்டத்தோடு நின்று நிலைபெற்று வாழும் இலக்கிய வகைமையாகத் தமிழின் சிற்றிலக்கியங்களைக் குறிப்பிடலாம். சங்க இலக்கியப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூற்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்து ஆற்றுப்படை நூல்களும் சிற்றிலக்கியங்களே. பின்னர் பக்தி இலக்கிய முன்னோடி காரைக்கால் அம்மையார் பாடிய பதிகம், அந்தாதி, இரட்டை மணிமாலை மூன்றும் சிற்றிலக்கியங்களே. தொடர்ச்சியாக உலா, பரணி, தூது, கோவை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், எனக் காலந்தோறும் பாடப்பட்டுவரும் சிற்றிலக்கியங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படிக் கிட்டத்தட்ட ஈராயிர ஆண்டுக்காலம் செல்வாக்கோடு திகழ்ந்த தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் காலம் முடிந்தது என்றொரு பொய்யான தோற்றத்தைப் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறானது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் சிற்றிலக்கியங்கள் அதிக அளவில் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை சிற்றிலக்கியப் பாட்டுடைத் தலைவர்கள் பெரிதும் கடவுளர்களாகவோ அரசர்களாகவோ வள்ளல்களாகவோ அமைந்தனர். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களினால் பாட்டுடைத் தலைவர்கள் பல்கிப் பெருகினர்.

சமயம் சார்ந்த சிற்றிலக்கியங்களுக்கு இணையாக அல்லது மிகையாக சமயம் சாராச் சிற்றிலக்கியங்களும் இருபதாம் நூற்றாண்டில் மிகுதியும் பாடப்பட்டன. இந்நூற்றாண்டில் தோன்றிய அரசியல் எழுச்சி மற்றும் தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனைகளை ஒட்டி நிறையப் பாட்டுடைத் தலைவர்கள் தமிழ்ப் புலவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள். 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரசியல் சார்ந்த சிற்றிலக்கியங்களுக்குத் தேசிய இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. இவ்வகையில் நூற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. சான்றாக, காந்தி பிள்ளைத் தமிழ், காமராசர் உலா, நவபாரதக் குறவஞ்சி  (தேசிய இயக்கம் சார்ந்தவை), கலைஞர் காவடிச் சிந்து, எம்.ஜி.ஆர். உலா, புரட்சித் தலைவி அம்மானை (திராவிட இயக்கம் சார்ந்தவை) முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழ் மறுமலர்ச்சி சார்ந்த சிற்றிலக்கியங்கள் பெரிதும் தமிழ்ப்புலவர்கள், தமிழ் அறிஞர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்டுள்ளன. சான்றாக, பாரதி பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ், கம்பன் திருப்புகழ் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

 அன்னை தெரெசா பிள்ளைத் தமிழ்எனும் இந்நூல் கவிஞர் இராதே என்றறியப்படும் பொறிஞர் இரா.தேவராசுவின் முதல் படைப்பு. கவிஞரின் முதல் படைப்பே ஒரு சிற்றிலக்கிய நூலாக வெளிவருவது சிறப்பு.

கவிஞர் இராதே புதுச்சேரியின் ஆற்றல் வாய்ந்த இளைஞர். கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலைக் கழகம் முதலான கலை இலக்கிய அமைப்புகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஆற்றலோடு செயல்பட்டு வருபவர். புதுச்சேரி காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துத் தொடர்ந்து சமூகசேவைகளை ஆற்றி வருபவர். மக்களிடையே கண்தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இடையறாது செயலாற்றி வருபவர். இலக்கிய விழாக்களை நடத்துவது, கவியரங்குகளில் கவிதை வாசிப்பது, சிற்றிதழ்களில் படைப்புகளை வெளியிடுவது முதலான இலக்கியப் பணிகளோடு நின்றுவிடாமல் தமிழ் உணர்வாளராக மொழி வளர்ச்சிக்கான ஆக்கப் பணிகளில் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு களத்தில் இறங்கிப் போராடவும் கூடிய செயற்பாட்டாளர் என்பதுதான் கவிஞர் இராதேவின் தனிச்சிறப்பு. இலக்கியத்துறை சாராதவர் எனினும் மரபார்ந்த கவிதைப் படைப்புகளில் ஆர்வத்தோடும் ஆற்றலோடும் செயல்படுவதோடு சந்தக் கவிதைகளைப் படைப்பதில் முழுமுனைப்பு காட்டி வருபவர். இவர் பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கியத்தைப் படைக்கத் துணிந்ததற்குக் கூட சந்தக் கவிதைகளின் பால் இவருக்குள்ள ஈடுபாடே காரணமாக இருக்கலாம்.

சிற்றிலக்கியங்களிலேயே பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உண்டு. கடவுளரையோ, மன்னர்களையோ, புலவர்களையோ, வள்ளல்களையோ நாம் வணங்கிப் பாராட்டத்தக்க ஒருவரைக் கற்பனையில் குழந்தையாகப் பாவித்து காப்பு முதலிய பத்துப் பருவங்கள் அமைத்துப் பாடி மகிழ்வது பிள்ளைத் தமிழ் இலக்கியமாகும். பாடல் யாப்பு ஆசிரிய விருத்தத்தில் அமைதல் மரபு.

சாற்றரிய காப்புதால் செங்கீரை சப்பாணி

மாற்றரிய முத்தமே வாரானை போற்றரிய

அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே

பம்புசிறு தேரோடும் பத்து. (வெண்பாப் பாட்டியல்-8)

இவ்வாறு பாடும் மரபு தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே உண்டென்பதைத் தொல்காப்பியர், குழுவி மருங்கினும் கிழவதாகும் (தொல்.புறத்.24) என்று பதிவு செய்வார். ஒவ்வொரு மனிதனும் தன் அன்பை முற்றமுழுதாகக் கொட்டிக் காண்பிக்க வாய்ந்த இடம் குழந்தைகளைக் கொஞ்சும் இடமல்லவா? அதனால்தானே திருவள்ளுவரும், மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் ஃமற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (குறள்: 65) என்றும், அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (குறள்: 64) என்றும் குழந்தைமை இன்பத்தைச் சிறப்பித்துப் பாடினார்.

அன்புணர்ச்சி, அழகுணர்ச்சிகளோடு கவித்துவமும் களிநடம் புரியும் சிற்றிலக்கியம் பிள்ளைத் தமிழே என்றால் அது மிகையன்று. எனவேதான் கவிஞர்கள் பாட்டுடைத் தலைவர்களை நாயக நாயகி பாவத்தில் வைத்துப் பாடும் அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கியங்களைப் பாடுவதைக் காட்டிலும் பாட்டுடைத் தலைவர்களைக் குழந்தைகளாக்கி மகிழ்ந்து பாடும் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களைப் பெரிதும் விரும்புகின்றனர். இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்களில் மிகுந்த எண்ணிக்கையில் பாடப்பட்ட இலக்கிய வகைகளில் பிள்ளைத் தமிழும் ஒன்று.

கவிஞர் இராதேவின், ‘அன்னை தெரெசா பிள்ளைத்தமிழ்மரபு வழிவந்த ஒரு சிற்றிலக்கிய வகை என்றாலும் மரபும் புதுமையும் இணைந்ததொரு புத்திலக்கியப் படைப்பாகவே இந்நூலினைக் கவிஞர் படைத்துள்ளார். மரபான பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம்பெற வேண்டிய காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், பொன்னூசல் முதலான பத்துப்பருவங்களை அமைத்து ஒவ்வொரு பருவத்திற்கும் ஐந்து பாடல்கள் என அன்னை தெரெசா பிள்ளைத்தமிழ் நூலைப் படைத்துள்ளார் கவிஞர். நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள தமிழ் வணக்கம், அவையடக்கம், நூற்பயன் என்ற மூன்று பாடல்களோடு காப்புப் பருவத்தில் ஆறு பாடல்கள் என ஒரு பாடல் மிகுத்ததால் நூலில் மொத்தம் ஐம்பத்து நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நூலின் அமைப்பு மரபோடு இயைந்தாலும் பாடல் எண்ணிக்கை அமைப்பு அவரின் புதுமை நாட்டத்திற்குச் சான்று பகர்கின்றன. மேலும், காப்புப் பருவத்தில் திருமால் முதலான தெய்வங்கள் பாட்டுடைத் தலைவரைக் காத்தல் வேண்டும் என்ற மரபை ஒதுக்கிவிட்டு இமயம், கங்கை, ஊக்ளி, வங்கக்கடல், இந்தியா முதலானவை பாட்டுடைத் தலைவியாம் அன்னை தெரெசாவைக் காக்க வேண்டும் என்று கவிஞர் இராதே தம் பிள்ளைத்தமிழ் நூலை அமைத்தமை அவரின் புதுமை நாட்டத்திற்கு ஒரு கூடுதல் சான்று.

பரிதி விரிகதி ரொளிர மலையுறு

படல உறைபனி யொள்ளொளி விட்டெழும்

பரவி உருகிட நழுவு நனிபனி

பருவ நடையினை யிட்டெழ மெட்டிடும்

அரிது மலைவிழு மருவி தருமொரு

அரிய இசையெழ மத்தள மிட்டிடும்

அரவு வளைவென ஒடிய நடமிட

அலையும் வழிகளும் கிட்டிடும் கிட்டிடும்

                பெடையின் துணையொடு பரவும் சிறகினம்

                                பிணைவு மகிழுற முத்திடும் கத்திடும்

                                பிளிறு களிறுடன் பிடியும் முலவிடும்

                                பெருமை இமமலை நல்லழ கெட்டிடும்    (பாடல் 1)

என்று தொடங்கும் அன்னை தெரெசா பிள்ளைத் தமிழின் ஒவ்வொரு பாடலுமே துள்ளும் சந்த நயத்துடனும் அள்ளும் பொருள் நலத்துடனும் அமைந்து சிறக்கின்றன.

அன்னை தெரெசா (1910-1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். பின்னாளில் இவர் இந்தியக் குடியுரிமை பெற்றார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்கத் துறவறச் சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஆதரவற்ற அனாதைகளுக்கும் இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் அன்னை தெரெசா. இவர் 1979இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரெசாவின், பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின்போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும். அன்பு மற்றும் தொண்டின் உருவமாக நடமாடி உலக மக்களின் இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர் அன்னை தெரெசா.

கவிஞர் இராதே, அன்னையின் தொண்டு வாழ்க்கையினை அம்மானைப் பருவப் பாடல் ஒன்றில் மிக அழகாகப் பதிவுசெய்கின்றார்:

ஓலம் கேட்கும் சேரியினில்

ஒழுகும் ஓலைக் குடிசையினில்

ஒல்கல் ஏழைத் துயரத்தில்

உழன்றே மடியும் வெறுமையினில்

காலம் நசுக்கும் தொழுநோயில்

கவலை யளிக்கும் பசிவயிற்றில்

கருகும் மகளிர் வாழ்வதனில்

கல்வி கற்றல் இன்மையினில்

கூலம் குப்பைத் தெருவதனில்

குவியும் பிணத்தின் மேடுகளில்

குழவிக் கொலையின் கொடுமைதனில்

குறிக்கோள் தொண்டின் முகங்கொண்டே

ஆலம் போல உறுதியுடன்

அல்லல் ஒழித்தாய் ஒடுங்கினவே

அரும்பே தெரெசா கோன்சாவே!

ஆடுக ஆடுக அம்மானை!           (பாடல் 38)

ஏழைகளின் இருப்பிடங்களில் அவர் குடிசைகளில் அவர்களது ஏழ்மைத் துயரத்தில் நிலைகலங்கிச் சாகும் இல்லாமையில் தக்க துணையெனத் துயர்துடைக்கும் அருமருந்தாய் ஓடிவந்து உதவுபவள் அன்னை கோன்சா! நெருங்கவே பிறர் அஞ்சும் தொழுநோயாளி களிடத்தும் கவலையோடு பசித்திருக்கும் ஏழை எளிய மக்களிடத்தும் ஆதரவற்றுக் கருகி மடியும் பெண்களிடத்தும் கல்வி கற்க வாய்ப்பின்றித் துயரத்தில் உழன்று கலங்கும் சிறார்களிடத்தும் அன்பு பாராட்டி ஆதரவளிப்பவள் அன்னை தெரெசா! குப்பைக் கூலங்கள் மண்டிக் கிடக்கும் ஒதுக்குப்புற வாழிடங்களில் மரணத்தின் வாயிலில் போராடிக் கிடக்கும் ஆதரவற்ற முதியோர் நோயாளிகளிடத்தும் சிசுக்கொலை என்ற கொடுஞ்செயல் அரங்கேறும் இடங்களில் என எங்கெங்கெல்லாம் தமது அன்பும் ஆதரவும் தேவைப் படுகின்றனவோ அங்கெல்லாம் தமது தொண்டினைச் செயற்படுத்தத் தவறாதவர் அன்னை ஆக்னஸ்! என இப்பாடலில் கவிஞர் இராதே அடுக்கிக் கூறும் அன்னையின் தொண்டு வாழ்க்கையினைப் படிப்பவர்கள் மலைக்காமல் இருக்க முடியாது.

கவிதையின் பொருண்மை சிறந்து நிற்பதைப்போல் இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள நுட்பமான சொல்தேர்வும் இயல்பான சந்த ஓட்டமும் கவிதைக்கு மேலும் மேலும் அழகைச் சேர்கின்றன. பிள்ளைத் தமிழ் என்றாலே இன்றைய நடைமுறை வழக்கில் அதிகம் பழகாத செந்தமிழ்ச் சொற்களைக் கொண்டு கடுநடையில் எழுதினால் சிறப்பு என்று கருதாமல் அழகான பழகு தமிழ்ச் சொற்களால் நூலைப் படைத்துள்ள கவிஞரின் சொல்லாட்சி பாராட்டத்தக்கது.

பிள்ளைத்தமிழ் நூலுக்கு அழகே, அழகழகான வருணனைகளும் அற்புதக் கற்பனைகளும்தான் என்ற மரபை மறவாமல் கவிஞர் இராதேவும் தக்க இடங்களில் கையாண்டு நூலுக்கு மெருகேற்றியுள்ளார். நூலின் பல பாடல்களில் இத்தகு அழகு மிளிர்கின்றது என்றாலும் சான்றுக்கு ஒரு பாடலைப் பார்க்கலாம்:

புல்லின் நுனியில் பனிசிரிக்கும்

பூவி னிதழில் தேன்சிரிக்கும்

புரளும் அலையில் நுரைசிரிக்கும்

புதுநீர் வரவில் மீன்சிரிக்கும்

நெல்லின் விளைவில் நிலஞ்சிரிக்கும்

நீரின் மிகையால் நதிசிரிக்கும்

நீளும் இரவில் இருள்சிரிக்கும்

நிலவின் உலாவில் ஒளிசிரிக்கும்

வெள்ளு டையம்மை குமிழ்சிரிப்பின்

விளைவில் வறியோர் வாழ்வுயரும்

வெற்றிச் செல்வி சிரிப்பழகி

வியனு லகாளும் கோமகளே!              (பாடல் 14)

இயற்கையின் சிரிப்பு எங்கெல்லாம் வெளிப்படுகின்றது என்பதனை மேற்காட்டிய கவிதையில் மிகச் சிறப்பாக வருணித்துப் பாடியுள்ளார் கவிஞர். புல் நுனியில் பனி சிரிப்பதும் பூவின் இதழில் தேன்சிரிப்பதும் இயல்புதான் என்றாலும் கவிஞரின் கற்பனையில் பல புதிய சிரிப்பலைகளை இக்கவிதையில் காணமுடிகிறது. புதுநீர் வரவில் மீன் சிரிப்பதும், நெல்லின் விளைச்சலில் நிலம் சிரிப்பதும் நீளும் இரவினில் இருள் சிரிப்பதும் நிலவின் உலாவில் ஒளிசிரிப்பதும் கவிஞரின் தனித்தன்மையை அடையாளம் காட்டும் பதிவுகள்.

பிள்ளைத் தமிழுக்கு அம்புலி-புலி என்பார்கள். அம்புலிப்பருவம் பாடுவது அத்துணை கடினமானது என்பது அதன்பொருள். இரவில் வானில் தோன்றும் அம்புலியைப் பாட்டுடைத் தலைவியாகிய குழந்தையுடன் விளையாட வருமாறு கவிஞராகிய தாய் அழைப்பாள். அவ்வாறு அழைக்கும்போது இன்சொல், வேறுபாடு, கொடை, ஒறுப்பு (சாம, பேத, தான, தண்டம்) முதலான நிலைகளில் பாட்டுடைத் தலைவியோடு நிலவை ஒப்பிட்டுப் பாடவேண்டும். சிக்கலான இந்தப் பிள்ளைத்தமிழ் மரபையும் இந்நூலில் மிகச் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார் கவிஞர் இராதே.

அன்னை தெரெசா பிள்ளைத்தமிழ் கவிஞர் இராதேவின் முதல் இலக்கிய முயற்சி. அதிலும் சிற்றிலக்கிய முயற்சி. சிற்றிலக்கிய வகைகளில் எத்தனையோ எளிமையான இலக்கியங்கள் இருக்க, பிள்ளைத்தமிழ் வடிவத்தைத் தேர்ந்தெடுத்தது அவரின் துணிவைக் காட்டுகிறது. கவிஞர் அரிதின் முயன்று தம்பணியை நிறைவாகவே செய்துள்ளார். சீரும் தளையும் கற்று எளிதில் கவிபாடிவிடலாம், ஆனால் சந்தங்களோடு பழகுவதென்பது அத்துணை எளிய செயலன்று, பழகப் பழகவே கைகூடும். கவிஞர் இராதே சந்தங்களோடு நன்கு பழகிவிட்டார் என்பதனை இந்நூல் அடையாளப்படுத்துகின்றது. இனி அவர் துணிந்து எத்தகு யாப்பிலும் இலக்கியம் படைக்கலாம். நல்ல நூற்களை ஏற்றுப் போற்றிப் பாராட்டும் தமிழுலகம் இந்நூலையும் ஏற்றுப் போற்றும். கவிஞரின் எடுப்பான தொடக்கம் அவரைப் பீடுநடை போடவைக்கும் என்ற நம்பிக்கையோடு படைப்பாளரை வாழ்த்துவோம்.

 

 

 

திங்கள், 1 நவம்பர், 2021

முனைவர் ஆ. விஜயராணியின் சங்க இலக்கியத்தில் கபிலர் - நூல் அணிந்துரை

  

முனைவர் நா.இளங்கோ


குறிஞ்சி மலர்
 

தமிழில் இலக்கியத் திறனாய்வு மற்றும் ஆராய்ச்சிகள் பல்கிப் பெருகுவதற்கு அடிப்படையாகத் தளம் அமைத்துக் கொடுத்தப் பெருமை தமிழின் சுவடிப் பதிப்பாளர்களையே சாரும். அவர்களின் பதிப்புப் பணி முயற்சிகளால் ஏடுகளிலிருந்து அச்சு வடிவம் பெற்ற பழந்தமிழ் இலக்கியங்களே தமிழின் தொடக்க காலத் திறனாய்வுகளுக்கும் ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் மூலமாய் அமைந்தன. தமிழ் நூல்களின் அச்சு வரலாறு தம்பிரான் வணக்கம் (1557) என்னும் நூலிலிருந்து தொடங்குகிறது. ஐரோப்பிய மிஷனரிகளால் தோற்றம் பெற்ற தமிழ் அச்சு மற்றும் பதிப்புப் பணிகள் தமிழகத்தின் தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட 1712ஆம் ஆண்டு தொடங்கிப் பல்கிப் பெருகின.  

1810ஆம் ஆண்டிற்குப் பின்னரே தமிழில் இலக்கிய இலக்கணப் பதிப்பு முயற்சிகள் தொடங்குகின்றன. 1812ஆம் ஆண்டில் திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் வெளியிடப் பெற்றன. இந்நூல்களே தமிழில் அச்சுருவம் பெற்ற முதல் இலக்கிய நூல்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தொல்காப்பிய இலக்கண நூல் அச்சாகியது. மழவை மகாலிங்க ஐயர் 1848இல் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார்.. அதற்குப் பின்னர் 1885இல் யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியப் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட்டார்.

ஏடுகளில் இடம்பெற்றிருந்த தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வாகனம் ஏறியபின் தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வசதி பல்வேறு நூலாக்க முயற்சிகளுக்கு வழிவகுத்தது. 1850களில் ஏற்பட்ட பல்கலைக் கழகக் கல்வி (சென்னைப் பல்கலைக்கழகம் தோன்றிய ஆண்டு 1857) மொழி இலக்கியக் கல்வியில் பல புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்தது.

சங்க இலக்கியங்களுள் முதன்முதலாக அச்சேறிய நூல்  பத்துப்பாட்டு இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை. ஆண்டு 1851, பதிப்பித்தவர் ஆறுமுகநாவலர். சங்க நூல்களுள் பெரும்பாலானவற்றைப் பதிப்பித்துப் பெரும் புகழ் கொண்ட உ.வே.சா. அவர்கள் பத்துப்பாட்டு முழுவதையும் 1889 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தொடர்ந்து புறநானூறு (1894), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), ஆகிய நூல்களையும் பதிப்பித்தார். வா. மகாதேவ முதலியார் (பொருநர் ஆற்றுப்படை 1907), சௌரிப் பெருமாள் அரங்கனார் (குறுந்தொகை 1915), பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் (நற்றிணை 1915), ரா. இராகவையங்கார் (அகநானூறு 1918) ஆகியோர் சங்க இலக்கிய நூல் பதிப்புகளின் முன்னோடிகளாவர். சற்றேறக் குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் நூற்றாண்டில் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்புப் பணி இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டில் நிறைவு பெற்றது.

சங்க இலக்கியப் பதிப்பு முயற்சிகளைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களை, சங்ககாலப் புலவர்களை அறிமுகப்படுத்தும் பணிகள் தமிழிலக்கிய உலகில் தொடர்ந்தன. சங்கத் தமிழ்ப் புலவர்களில் இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெரும் புலவர்கள் பலரில் முதன்மையானவர் கபிலர் ஆவார். 1936ஆம் ஆண்டிலேயே வே. வேங்கடராஜூலு ரெட்டியார் கபிலர் என்ற தலைப்பில் கபிலர் வரலாறு, கபிலர் இலக்கியங்கள் குறித்த விரிவான விளக்கங்களுடன் ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து 1939ஆம் ஆண்டில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கபிலர் என்ற அதே தலைப்பில் ஒரு ஆய்வு நூலை வெளிட்டார். கடந்த நூற்றாண்டில் தொடர்ச்சியாகப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் கபிலர் தொடர்பாக வெளியிடப் பட்டன. கல்விப் புலத்திற்கு வெளியே இத்தகு முயற்சிகள் தொடர்ந்த நிலையில் கல்விப் புலத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வுக்கு உரிய பொருண்மையாகக் கபிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு முழுமையான ஆய்வினை வெளியட்ட பெருமை முனைவர் ஆ.விஜயராணி அவர்களையே சாரும். முனைவர் ஆ.விஜயராணி அவர்களின் முனைவர்ப் பட்ட ஆய்வேட்டின் நூலாக்க வடிவமே சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்த ஆய்வுநூல்.

முனைவர் ஆ.விஜயராணி புதுச்சேரி அரசின் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். இவர் புதுச்சேரிப் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில் ”பிரஞ்சிந்திய விடுதலை இயக்கத்தில் காரைக்காலின் பங்கு” என்ற தலைப்பில் இளமுனைவர்ப் பட்ட ஆய்வினையும் ”சங்க காலக் கபிலர்” என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் முப்பத்திரண்டு இளமுனைவர்ப் பட்ட ஆய்வுகளுக்கும் எட்டு முனைவர்ப் பட்ட ஆய்வுகளுக்கும் நெறியாளராக இருந்து வழிகாட்டியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ள இவர், சிறந்த கவிஞரும் ஆவார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ள பேராசிரியர் விஜயராணி பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதோடு பல கருத்தரங்குகளுக்கு ஒருங்கிணைப் பாளராகத் திறம்பட செயலாற்றியுள்ளார். அவர் முதுகலைத் தமிழ் பயின்ற காலத்தில் அவருக்குப் பயிற்றுவிக்கும் வாய்ப்பு பெற்ற என்னை இன்றளவும் ஆசானாக ஏற்றுப் போற்றிப் புகழ்ந்து வருகிற பண்பாளர் என்ற பெருமை அவருக்குண்டு. ஆளுமை மிகுந்த பேராசிரியராக மட்டுமன்றி கல்லூரின் நிர்வாகப் பணிகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் திறமை அவரின் தனிச்சிறப்பு. பேராசிரியர். ஆ.விஜயராணியின் அரிய ஆய்வுத் தேட்டத்தில் உருவான சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்த ஆய்வுநூல் அவரின் கல்வி மற்றும் ஆய்வுப் பயணத்தில் ஒரு தனித்த சிறப்பிற்குரிய படைப்பாகும்.

சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்நூல் முன்னுரை, முடிவுரை தவிர்த்து நான்கு தலைப்புகளில் தமிழிலக்கியப் பெரும்புலவர் சங்க இலக்கியக் கபிலரின் வாழ்க்கை வரலாறு, அவரின் சமகால அரசர்கள், புலவர்களின் வரலாறு, அவரின் இலக்கியப் பணி மற்றும் அவர் கவிதைகளின் நடையியல் கூறுகள் முதலான செய்திகளை விரிவாகப் பேசுகின்றது.

·         தமிழ் இலக்கியங்களில் கபிலர்

·         சங்க காலக் கபிலர்

·         வரலாற்று நோக்கில் கபிலர்

·         நடையியல் ஆய்வில் கபிலர்

என்ற நான்கு தலைப்புகளும் தமிழிலக்கிய ஆய்வுலகில் இதுவரை பேசப்பட்டு விவாதிக்கப் பட்டு வந்துள்ள கபிலர் தொடர்பான அத்துணை சிக்கல்களுக்கும் தீர்வுகாண முயற்சி செய்கிறது. குறிப்பாகக் கபிலர் பலர் என்ற விவாதத்தை முன்னெடுத்து கால ஆய்வுகளின் துணையோடும், அரசர்கள், குறுநில மன்னர்கள், கடையேழு வள்ளல்களாகப் புகழப்படும் இனக்குழுத் தலைவர்களின் வரலாறுகளோடு சார்த்தியும் கபிலர் படைப்புகளின் நடையியல் கூறுகளின் துணையோடும் இலக்கியப் பாடுபொருளின் அடிப்படையிலும் முழுமையான ஆய்வினை நிகழ்த்தி விடைகாண முயன்றுள்ளது. நூலின் நான்காவது இயலாக இடம்பெற்றுள்ள நடையியல் ஆய்வில் கபிலர் என்ற இயலில் நூலாசிரியரின் அரிய உழைப்பினைக் காண முடிகிறது. நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள பின்னிணைப்புகள் பதினேழும் வருங்கால ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் விளைக்கும் வகையில் பட்டியலிடப் பட்டுள்ளன.

      நூலின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் தமிழிலக்கிய வரலாற்றின் நெடும் பரப்பு தோறும் கபிலர் என்ற பெயரிலும் தொல்கபிலர், கபிலதேவர், கபில தேவநாயனார் என்ற பெயர்களிலும் பல்வேறு கபிலர்களை உள்ளனர் என்றும். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள அகப்புறப் பாடல்கள் பாடிய கபிலர் மட்டுமல்லாது குறிஞ்சிக் கலி பாடிய கபிலர், ஐங்குறுநூற்றின் குறிஞ்சிப் பாடல்களைப் பாடிய கபிலர், பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தினைப் பாடிய கபிலர், பத்துப்பாட்டில் குறிஞ்சிப் பாட்டை பாடிய கபிலர், பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இன்னா நாற்பதைப் பாடிய கபிலர் முதலான சங்க காலக் கவிஞர்கள் மட்டுல்லாது கபிலரகவல் பாடிய புலவர் பக்தி இலக்கியக் கபிலர், பிற்காலத் தனிப்பாடல்களைப் பாடிய கபிலர் என கபிலர்களின் பட்டியல் நீள்கிறது என்றும் இந்த ஆய்வு சங்க காலக் கபிலரைப் பற்றியது என்றும் வரையறை செய்து விடுகிறார்.

      நூலின் முடிவுரையில்

சங்க காலக் கபிலர் என்ற ஆய்வின்வழி சங்க இலக்கியங்களில் கபிலர் என்ற பெயரில் நான்கு வேறுபட்ட புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் உள்ளன என்றும்.

அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் கபிலர் பெயரில் இடம்பெறும் பாடல்களைப் பாடிய புலவர் ஒருவர்.என்றும் கலித்தொகையில் இடம்பெறும் குறிஞசிக் கலி பாடல்களைப் பாடிய கபிலரும், ஐங்குறுநூற்றில் இடம்பெறும் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடிய கபிலரும் பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டினைப் பாடிய கபிலரும் வேறு வேறானவர்கள். இந்த மூன்று இலக்கியங்களையும் பாடிய கபிலர்கள் தொகைநூலில் இடம்பெற்றுள்ள அகப்புறப் பாடல்களைப் பாடிய கபிலருக்குக் காலத்தால் பிற்பட்டவர்கள் என்பதனைத் தெளிவுபட உரைத்துள்ளார். இக்கூற்று நூலாசிரியர் ஆய்வு உறுதி மற்றும் ஆய்வுத் திறத்துக்கு எடுத்துக்காட்டாகும்.

கபிலர் என்ற சங்க காலப் புலவர் என்ற மையப் பொருளில் இந்த நூல் அமைந்திருந்தாலும் ஒவ்வொரு இயலும் சங்க இலக்கியத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணப்பட்டு சங்க இலக்கியங்களின் முழுமையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சங்க கால அரசர்கள், புலவர்கள் பலரின் வரலாறும் இலக்கியப் பாடுபொருள்களும் இடையிடையே பேசப்படுவதால் சங்க இலக்கியங்களை முழுமையாகக் கற்றுணர்ந்த நிறைவு நமக்கு ஏற்படுகிறது.

ஆய்வுக்கான கடுநடை இல்லாமல் எளிமையான இனிமையான தமிழில் சங்க இலக்கியச் செய்திகளை விவரித்துச் செல்லும் ஆய்வாளரின் மொழிநடை பாராட்டுதற்குரியது. ஆழ்ந்த இலக்கிய இலக்கணப் பயிற்சி இல்லாமல் சங்க இலக்கியங்களைக் கற்பதோ ஆய்வு செய்வதோ இயலாத செயலாகும். நூலாசிரியர் முனைவர் ஆ.விஜயராணி செப்பமாக இந்த ஆய்வினைச் செய்து முடித்துள்ளமை அவரின் ஆழ்ந்த நூலறிவினைப் புலப்படுத்துகிறது. தொடர்ந்து இத்துறையில் அவர் மேலும் பல ஆய்வுகளை நிகழ்த்தி பொதுமக்களிடம் நமது செம்மொழி இலக்கியங்களின் சிறப்பினைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அணிந்துரையை நிறைவு செய்கிறேன். நல்ல நூல்களை ஏற்றுப் போற்றிப் பராட்டும் தமிழுலகம் இந்நூலையும் போற்றிப் புகழும் எனபதில் ஐயமில்லை.

முனைவர் நா.இளங்கோ

nagailango@gmail.com    

 

 

 

வை.இராமதாசு காந்தியின் சிலம்பு கூறும் சீரிய அறம் நூல் அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ


 

தமிழின் முதல்காப்பியம் என்ற பெருமைபெற்ற சிலப்பதிகாரம், தன் காப்பியக் கட்டமைப்பாலும் எடுத்துரைப்பாலும் உலகின் வேறெந்த மொழியிலும் காணக் கிடைக்காததோர் முன்மாதிரிக் காப்பியம் என்ற பெருமையினைப் பெறுகின்றது. வாய்மொழிக் காப்பியம், எழுத்து மொழிக் காப்பியம் என்ற வரையறைகளைக் கடந்து இரண்டின் பிணைப்பாலும் இயன்றதோர் புத்தாக்கப் படைப்பாகச் சிலப்பதிகாரம் திகழ்வது கற்போர்க்குப் பெருவியப்பினை அளிக்கின்றது. இக்காப்பியத்தின் தனித்தன்மை யானதோர் அகக் கட்டமைப்பை உணர்ந்தே நம் முன்னோர்கள் இதனை இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றும் முத்தமிழ்க் காப்பியம் என்றும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் பலவாறாகப் பல அடைகளோடு அடையாளப்படுத்த முனைந்தனர்.

எந்தவொரு இலக்கியப் படைப்பும் தான் தோன்றிய காலத்தின் சமூகச்சூழல், தேவை இவற்றோடு மட்டும் முழுமை பெற்றுவிடுவதில்லை. அது ஒவ்வொரு காலத்தின் தேவைகளுக்குத் தகுந்தவாறு மீண்டும் மீண்டும் மறுவாசிப்புக்கு உள்ளாகி எப்பொழுதும் தன்னை ஒரு நிகழ்கால இலக்கியமாக நிலைநிறுத்திக் கொள்கிறது. என்பார் பேராசிரியர் க.பஞ்சாங்கம். அந்த வகையிலிலேயே சிலப்பதிகார இலக்கியமும் தமிழ்ச் சமூகம் இருபதாம் நூற்றாண்டில் எதிர்கொண்ட பல்வேறு சமூக அரசியல் சூழல்களுக்கு ஏற்பப் பல்வேறு வாசிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்று சென்ற நூற்றாண்டில் செல்வாக்கு செலுத்திய அத்தனை இயக்கங்களுக்கும் இடமளிக்கும் வகையில் சிலப்பதிகாரம் பல்வேறு வாசிப்பு மற்றும் விளக்கங்களைப் பெற்றுள்ளது. இனிவரும் காலத்து சமூக அரசியல் சூழல்களுக்கும் இடமளித்து புதிய வாசிப்புகளுக்கும் களமாக அமையத்தக்க இலக்கியமாக சிலப்பதிகாரம் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.

இலக்கிய வாசிப்பு என்பதனைத் தனிமனித வாசிப்பு, சமூகத்தின் வாசிப்பு என்று வகைப்படுத்த முடியும். தனிமனித வாசிப்புகளைவிட சமூகத்தின் வாசிப்பு என்பது காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. சிலப்பதிகாரம் தமிழ்ச் சமூகத்தின் வாசிப்பில் பல்வேறு காத்திரமான தாக்கங்களை சமூக, அரசியல், படைப்புத் தளங்களில் நிகழ்த்தியுள்ளது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திற்கு முன்னும் பின்னும் கண்ணகி என்ற பெண் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று ஒரு அடையாளமாக, ஒரு குறியீடாக ஒரு தொன்மமாக மாற்றம் பெற்றுள்ளாள். மொழி எல்லைகளை, நாட்டு எல்லைகளைக் கடந்தும் கண்ணகித் தொன்மம் பரவலாக்கம் பெற்றுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

      புதுச்சேரிக் கவிஞர் வை.இராமதாசு காந்தி ஓர் இலக்கியச் செயற் பாட்டாளர், தமிழ் மரபுக் கவிதைகளில் நல்ல தேர்ச்சி உடையவர், புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளோடு இணைந்து செயல்படக் கூடிய துடிப்புமிக்க தமிழ் ஆர்வலர். இலக்கிய நண்பர்களை இணைப்பதிலும் ஆற்றுப் படுத்துவதிலும் இடையறாத ஆர்வமுடையவர் பல்வேறு இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ள பெருமைக் குரியவர். அனைத்திற்கும் மேலாக வள்ளலார் வழி ஒழுகும் பண்பாளர். அவரது வாழ்க்கைத் துணை திருமதி விசயலட்சுமி அமைமையார் போற்றி ஒழுகும் வள்ளலார் வாழ்வியலுக்கு என்றும் துணைநிற்பவர். அந்த வகையில் என்னைப் பெரிதும் கவர்ந்தவர்.

கவிஞர் வை.இராமதாசு அவர்களின் இலக்கியப் படைப்பு வரிசையில் ஏழாவது இலக்கியப் படைப்பு சிலம்பு கூறும் சீரிய அறம் என்ற இந்நூல். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்தை இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் வாசிப்புக்கு உரியதாக மறுஆக்கம் செய்துள்ளார் இராமதாசு காந்தி. சிலப்பதிகாரத்தின் மூன்று காண்டங்களில் வஞ்சிக் காண்டத்தைத் தவிர்த்து புகார், மதுரைக் காண்டங்களின் கதைப்போக்கினையும் கருத்துச் செறிவினையும் காப்பிய அழகுகளாம் கற்பனை, உவமை, உருவகங்களையும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வாரியெடுத்து தமது எளிமையான கவிதை நடையில் இன்றைய இளந் தலைமுறையினரும் வாசித்துச் சுவைக்கத் தக்க வகையில் சிலம்பு கூறும் சீரிய அறம் என்ற இக் காப்பியத்தை உருவாக்கி அளித்துள்ளார். நூலின் இறுதியில் சிலப்பதிகாரக் கதைச் சுருக்கத்தினை அறுபத்தெட்டு இனிமை வாய்ந்த சந்தப் பாக்களில் வடித்துள்ளமை நூலுக்கு ஒரு மணிமகுடம்.

அகவற் பாக்களால் முத்தமிழ்க் காப்பியமாகப் படைத்தளித்த காப்பியப் புலவன் இளங்கோவின் கவிதைகளை எழுத்தெண்ணி வாசித்து அதன் கவிநலத்திலும் கவிநயத்திலும் தோய்ந்து மூலநூலின் பெருமைக்கு எந்த விதத்திலும் ஊறுநேர்ந்திடா வகையில் சொற்களைச் செதுக்கிச் செதுக்கிச் சிலம்புக்குப் புதுவடிவம் கொடுத்துள்ளார் இராமதாசு காந்தி. அகவற் பாக்களை விருத்தப் பாக்களாகவும் சந்தப் பாக்களாகவும் மாற்றிப் புதுக்கோலம் புனைந்ததில் புதுவைப் புலவர்கள் பாவேந்தர், தமிழ்ஒளி கவிதை நடைகளின் சாயல் மிளிர்வது பாராட்டத் தக்கது.

கவிஞர் இராமதாசு காந்தி அவர்களின் கவிப்பெருக்கின் பெருமைக்கு நூல் முழுமையுமே அத்தாட்சி என்றாலும் சான்றாக ஒருபாடலை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் இருந்தும் இராமதாசு காந்தியின் சிலம்பு கூறும் சீரிய அறம் நூலிலிருந்தும் தருகின்றேன். வழக்குரை காதையில் வாயிற் காவலன் கண்ணகியின் வருகையை பாண்டிய மன்னனுக்கு உரைக்கும் பகுதி இது. இரண்டு பகுதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வீர்! சுவைத்துணர்வீர்!

 

சிலப்பதிகாரம்

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி  
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் 40 
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே

சிலம்பு கூறும் சீரிய அறம்

வாயிலில் மங்கை வளர்தெழு கனலாய்

தாயவள் கூந்தல் தலைவிரி கோலம்

கையொரு சிலம்பும் காரிகை அவள்தன்

மெய்யுடல் குருதி மேலவள் கறையாம்

வேல்கை கொண்ட வெற்பெனும் கொற்றவை

சேல்விழி தடக்கை சினந்தவள் தோற்றம்

சப்த கன்னிகையில் சன்னதி இளையோள்

ஒப்பிலாப் பிடாரி உற்றவோர் தோற்றம்

ஞால இருளில் நன்னடம் புரியும்

கோல விழியாள் கொற்றவை தோற்றம்

அன்றவள் அப்பால் அழலொடு நடமிடும்

பொன்தாள் காளி புதுப்பொழில் கொண்டவள்

தாருகா சூரன் தன்மார் பிளந்த

நேரிடை துர்கா நீள்கண் கனலாள்

வாள்கண் சினமும் வரிசிலம் பவள்கை

தாள்நிலம் நில்லா தளிர்மகள் இவளே!

கணவனை இழந்த காரிகை தானும்

காண நின்றாள் கடைவாய் உள்ளாள்

 

சிலப்பதிகாரத்தை மறுஆக்கம் செய்வதில் சவாலான பகுதிகள் அரங்கேற்றுக் காதையும் கானல்வரியும். கவிஞர் இராமதாசு காந்தியின் சிலம்பு கூறும் சீரிய அறம் என்ற இந்நூலை வாசித்துக் கொண்டே வருகையில் அரங்கேற்றுக் காதையையும் கானல்வரியையும் வாசிக்கத் தொடங்கும்போதே பதட்டமும் பதைபதைப்பும் என்னைப் பற்றிக் கொண்டன. இளங்கோவடிகளின் கவிதைச் சுவையைக் கருத்தாழத்தை நுண்மாண் நுழைபுலத்தை இந்தக் கவிஞர் இளங்கோவடிகளுக்கு இழுக்கு நேராமல் சிலம்பைச் சிதைக்காமல் புதுவடிவம் தந்திருக்க வேண்டுமே என்ற தயக்கத்தோடு வாசிக்கத் தொடங்கினேன். வாசித்தேன்.. சுவாசித்தேன்.. ரசித்தேன்.. மகிழ்ந்தேன். கவிஞர் இராமதாசு காந்தி இந்தப் படைப்பில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டார் என்பதற்கு இந்நூலின் அரங்கேற்றுக் காதையும் கானல்வரிகளுமே சாட்சி. சொல்லழகும் பொருளழகும் மிளிர கவிதைகள் இந்நூலில் களிநடம் புரிகின்றன. இந்த அணிந்துரையை நான் கவிதைகளால் நிரப்பிவிட விரும்பவில்லை. கவிதைகளை நீங்கள் நூலின் அகத்தே நுழைந்து வாசித்துக் கொள்ளுங்கள்.

ஒரு மூலநூலை எவ்வளவுதான் கைதேர்ந்த இருமொழிப் புலமையுள்ள ஒரு படைப்பாளி மொழிபெயர்த்தாலும் மூலநூலின் எல்லா ஆழ அகலங்களையும் ஒரு படைப்பாளியால் அப்படியே கொண்டுவந்துவிட முடியாது. அது மூலநூலின் கவிதைகளுக்கே உரிய தனிச்சிறப்பு. மறுஆக்கங்களிலும் இதே நிலைமைதான் கவிதையின் உள்ளடக்கங்களை மறுஆக்கம் செய்வதுபோல் மூலநூலின் கவிதைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் கொண்டுவந்துவிட முடியாது. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல.

இசை, நாடக நுணுக்கங்களோடும் நாட்டுப்புற வரிப்பாடல் சந்தங்களோடும் நாட்டுப்புறக் கலைவடிவ ஆடற்சந்தங்களோடும் ஒரு நிகழ்த்துகலை வடிவம் போல் படைக்கப்பட்ட சிலப்பதிகார முத்தமிழ்ப் படைப்பை காலத்திற்கேற்ப ஒரு இயல்தமிழ் படைப்பாக மாற்றி,

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கடிய சந்தம் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்றான். ஒரிரண்டு வருத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும். 

   (மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதம், முன்னுரை

என்ற மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப கவிஞர் இராமதாசு காந்தி எளிய சொற்களோடும் எளிய நடையிலும், அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய சந்த நயங்களோடும் இக்காலத்துத் தமிழ் மக்களுக்கு நன்கு விளங்கும்படியான காவியம் ஒன்றனைச் செய்து தந்துள்ளார். தமிழுலகம் கவிஞரின் தமிழ்ப்பணியினை என்றென்றும் போற்றிப் பாராட்டி மகிழும் என நான் நம்புகிறேன்.

 

முனைவர் நா.இளங்கோ

 

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...