வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

திருக்குறள் பேச்சுப் போட்டி - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

திருக்குறள் பேச்சுப் போட்டி


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி-8

அவையோர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்! இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதாகும். இச்சொற்றொடர் திருக்குறள் பொருட்பாலில் பெருமை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் அரிய குறளின் ஓர் பகுதியாகும். திருக்குறளின் பெருமையினை நான் சொல்லித்தான் இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்”


என்று மதுரைத் தமிழ்நாகனாராலும்,
“உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு”


என்று மாங்குடி மருதனாராலும் போற்றிப் புகழப்படும் மாண்புடைய நூல் திருக்குறளாகும். எக்காலத்தும் உலகப் பொதுமறை என்று உலக மக்களால் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நூல் திருக்குறளாகும்.

திருவள்ளுவர் நமக்கு அருளிய திருக்குறள் ஓர் அறிவு நூல், அறநூல், தத்துவ நூல். எப்படிப் புகழ்ந்தாலும் திருக்குறளின் முழுமையை நம்மால் வார்த்தைகளால் அளந்து கூறிவிட முடியாது. மக்கள் வாழ்வு முழுவதையும் திருவள்ளுவர் நுணுகி அறிந்து, ஆராய்ந்து உணர்ந்துள்ளார். தமிழரின் வாழ்வியலை மட்டுமின்றி உலக மக்களின் வாழ்வியலையும் தம் நுண்மாண் நுழைபுலத்தால் ஓர்ந்து உணர்ந்ததால்தான் அவரால் ஓர் உலகப் பொதுமறையைப் படைக்க முடிந்தது. குறள் கூறும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாழ்வியல் மெய்ம்மை நமக்கு இதனைத் தெளிவாக உணர்த்துகின்றது.

இச்சொற்றொடர் அமைந்த அந்த அரிய திருக்குறளை முழுதுமாக உங்களுக்கு நான் சொல்லிக்காட்ட விரும்புகின்றேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்: 972


இத்திருக்குறளுக்கு நேரிய பொருள்: பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒருவரே ஆவர். அவர்கள் செய்யும் தொழில்கள் வேறுபட்டிருந்தாலும் அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை என்பதாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது ஓர் அடிப்படை உயிரியல் உண்மை. இவ்வுண்மையைத் திருவள்ளுவர் வாழ்வியல் விழுமியமாக முன்வைக்கின்றார். பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படும் இந்தியச் சமூகச் சூழலில் திருவள்ளுவர் முன்வைக்கும் பிறப்பொக்கும் என்ற கருத்து ஒரு பாரிய புரட்சிக் கருத்தாகும். இந்தப் பரந்த உலகத்தையும் உலகத்து மக்களையும் இன்னும் கேட்டால் புல், பூண்டு, மரம், செடி., கொடி, பறவை, விலங்கு முதலான உலகத்து உயிர்கள் அனைத்தையுமே ஒரே தரத்தில் வைத்து எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்று உரத்து குரல் கொடுக்கின்றார் அவர். திருவள்ளுவரின் பொதுமைக் கரங்களில் அடங்காத சாதியில்லை, மதமில்லை, மொழியில்லை, வீடில்லை, நாடில்லை, நிறங்கள் இல்லை எல்லோரும் ஒன்று. ஒன்றே ஒன்றன்றி மேல் கீழ் என்ற பேதமில்லை, உயர்வு தாழ்வென்ற தரமில்லை, நான் நீ என்ற பிரிவில்லை, நாம், நாம், நாம்தான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவச் சிந்தனையின் வெளிப்பாடுதான் வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்ச்சி.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்!அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட
என்சிந்தை மிகவிழைந்த தாலோ


வள்ளலாரின் திருஅருட்பாக்களின் அடிநாதமாய் விளங்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்ச்சிக்கு மேலே சொல்லப்பட்ட பாடல் ஒரு சான்று. இப்பாடலில் வரும் ‘எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்’ என்ற பாடலடிகளில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் புரட்சிக் குரலைக் கேட்கமுடியும். பிறப்பொக்கும் என்பதைத்தான் வள்ளலார் எத்துணையும் பேதமுறாது என்கிறார். எல்லா உயிர்க்கும் என்பதைதான் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி என்கிறார். ஆக திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற விழுமியமே வள்ளலாரால் ஆன்மநேய ஒருமைப்பாடு என்பதாக மாற்றம் பெறுகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம்புகிறவன் உள்ளத்திலேதான் இறைவன் திருநடனமிடுகிறார் என்று திருவள்ளுவரின் பொதுமைச் சிந்தனைக்கு ஆன்மீகம் என்ற புதிய பரிமாணத்தை அளிக்கின்றார் வள்ளலார்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று திருமூலர் படைத்துக் காட்டும் ஓருலக ஒருமைப்பாட்டுக்கும் வழியமைத்துக் கொடுத்தது திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடரே என்றால் மிகையில்லை.

மகாகவி பாரதி தமிழ்மரபில் தொடர்ந்து வரும் திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சிந்தனைமரபின் தொடர்ச்சியாக ஓர் புதுமையைப் புகுத்துகின்றார். அதனைப் பின்வரும் பாடல் தெளிவுபடுத்தும்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே


என்று பாடினான பாரதி;. இப்பாடலின் உள்ளீடு திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதேயாகும். எல்லாரும் ஓர் குலம் என்று பாடும் அந்தப் பாடலில் அவன் பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேசுகிறான்.
முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்கும் பொதுவுடைமை.
என்றும்

இனியொரு விதி செய்வோம் - அதை
எந்தநாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றும்

பாரதி பேசும் பொதுவுடைமைச் சிந்தனைக்கு பலம் சேர்த்தது திருவள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற விழுமியமே. சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்ற திருக்குறளின் வரிகளையும் அவன் உள்வாங்கியதால்தான் செய் தொழிலின் வேறுபாட்டால் சிறப்புகள் இல்லை. எனவே உழைப்பு பொது, அதேபோல் ஊதியமும் பொதுவாயிருக்க வேண்டும். உடல் உழைப்பாளி குறைந்த ஊதியம் பெற்றதால் போதிய உணவின்றி பசித்திருக்க நேருகின்றதென்றால் இந்த உலகத்தையே அழித்துவிடலாம் என்று ஆவேசப்படுகிறான். திருவள்ளுவரும் இப்படி ஆவேசத்தின் உச்சியில் பரந்து கெடுக உலகியற்றியான் என்று சபிப்பதை இங்கே நாம் நினைவிற்கொள்ளுதல் வேண்டும்.

இன்றைக்கு உலகின் உயர்ந்த சித்தாந்தமாகப் போற்றப்படும் மார்ச்சீய சிந்தாந்தத்தின் வித்தாக பாரதி அமைத்துக் காட்டியது திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயிர்த்துடிப்புள்ள அடிகளைத்தான் என்று நினைக்கும் போது உண்மையிலேயே நாம் வியந்து போகிறோம்.

திருக்குறள் ஒரு தெளிந்த நீரோடை. ஆதன் உண்மையான ஆழம் ஆயிரம் அடிகளும் அதற்கு மேலும், அது அதனை இரண்டடியாகக் காட்டி ஏமாற்றுகிறது.

நன்றி! வணக்கம்!

2 கருத்துகள்:

Mega சொன்னது…

super..........

agaramamuthan சொன்னது…

நேரடியாக ஒரு சொற்பொழிவையே கேட்டதுபோல் உள்ளது. மிக செழுமையான நடையில் அழகிய அரிய கருத்துக்களைக் கட்டுரையாக வள்ளுவன் குறளுக்கு விளக்கமாக அளித்துள்ளீர்கள். வாழ்க

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...