சிறுவர் இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர் இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஏப்ரல், 2009

வண்ணத்துப் பூச்சி – மாநி நூல் அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

வண்ணத்துப் பூச்சி – மாநி
அணிந்துரை


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி-8

தமிழில் பரவலாகக் குழந்தை இலக்கியம் என்ற பெயரில் அறியப்படும் இலக்கிய வகையே ஆய்வாளர்களால் சிறுவர் இலக்கியம் என்று குறிப்பிடப்படுகின்றது. சிறுவர் இலக்கியம் என்று இந்தவகை இலக்கியங்களை அழைப்பதுதான் பொருத்தமுடையது. பதினைந்து வயது வரையிலானவர்களை யாரும் குழந்தைகள் என்று குறிப்பிடமாட்டார்கள், அவர்கள் சிறுவர்களே. இத்தகுச் சிறுவர்களுக்காகப் பாடப்படும் இலக்கியங்கள் சிறுவர் இலக்கியங்கள் தானே.
சிறுவர் இலக்கியம் சிறுவர்கள் பாடுவது, சிறுவர்களைப் பற்றிப் பாடுவது, சிறுவர்களுக்காகப் பாடுவது என மூன்று வகைப்படும். மேற்கூறிய மூன்று வகைகளில் சிறுவர்கள் பாடுவது என்றவகை இன்றைய ஆங்கிலவழிக் கல்வியின் வருகையால் பெரிதும் சிதைவுக்கு ஆளாகியுள்ளது. ஏனெனில் கிராமப்புறங்களில் சிறுவர்கள் பாடிவந்த நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள், சிறுவர் விளையாட்டுப் பாடல்கள், மொழிப் பயிற்சி எண்ணுப் பயிற்சிப் பாடல்கள் காணாமல் போய் மண்ணுக்கு அந்நியப்பட்ட நர்சரி ரைம்ஸ்களாக மாறிவிட்டன.

இரண்டாவது வகையாகிய சிறுவர்களைப் பற்றிய பாடல்கள் தமிழில் பாடப்படவே இல்லை என்று கூறலாம். இந்தவகை இலக்கியங்களை உருவாக்க அதிக உற்றுநோக்கலும் உளவியல் கல்வியும் அவசியம். எப்பொழுதும் நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களால் இது சாத்தியமில்லை.
மூன்றாவது வகையாகிய சிறுவர்களுக்காகப் பாடுவது என்ற வகையில் நிறைய சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் தமிழில் உண்டு. ஆனால் இவ்வகைச் சிறுவர் இலக்கியங்களில் அனைத்துவகை இலக்கிய வடிவங்களுக்கும் முக்கியத்துவம் தராமல் கவிதை இலக்கியம் படைப்பவர்களே அதிகம். சிறுவர்களுக்கான நாடகம், நாவல் கட்டுரை இலக்கியங்களைப் படைப்பவர்கள் தமிழில் அதிகமில்லை. சிறுவர் கவிதை இலக்கியம் படைப்பவர்கள் அதிகமிருந்தாலும் அவர்களில் தனித்தன்மை உடைய படைப்பாளிகளைக் காண்பது மிகவும் அரிதாகவுள்ளது. பல சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் நூல் எண்ணிக்கை, நூலக விற்பனை, பரிசு, விருது போன்ற வாய்ப்புகளுக்காக எழுதுவதுதான் அதிகம். தனித்தன்மை அற்ற இவ்வகைப் படைப்புகள் ஒன்றைப் பார்த்து ஒன்று எனப் போலச் செய்தலில் உருவாக்கப் பட்டவை.
தமிழில், இத்தகு சிறுவர் இலக்கியச் சூழலில் கவிஞர் மாநி (மார்க்ரெட் நிக்கோலஸ்) அவர்களின் வண்ணத்துப் பூச்சி சிறுவர்களுக்கான கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. புதுவை மாநகரம் கவிதைப் பாரம்பரியம் மிக்க நகரம். அண்மைக் காலங்களில் அதாவது 2000 க்குப் பிறகு புதுவையில் அதிக அளவில் நூல்கள் வெளியிடப் பெறுவதும் அதிலும் குறிப்பாகக் கவிதை நூல்கள் மிகுதியாக வெளிவருவதும் கண்கூடு. இலக்கியப் படைப்புகளின் பெருக்கம் எப்பொழுதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். மாநி அவர்களும் வாழையடி வாழையெனவரும் தமிழ்க் கவிஞர் கூட்டத்தில் ஒருவராகக் கலந்துகொண்டார். தமிழ்க் கவிஞர்கள் பரம்பரையில் மேலும் ஒரு பெண்கவிஞர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.
சங்ககாலம் தொடங்கி காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார் எனத் தொடர்ச்சியான பெண்கவிதை மரபுத் தொடர்ச்சி தமிழில் உண்டு. நாட்டுப்புறங்களில் எண்ணிலடங்காத் தாலாட்டுப் பாடல்களைப் படைத்து மகிழும் பெண்கள் ஏட்டிலக்கியங்களில். சிறப்பாகச் சிறுவர் இலக்கியங்கள் படைப்பதில் அதிகப் பங்களிப்பைச் செய்யாதது வியப்பாகத்தான் உள்ளது. தமிழில் சிறுவர் இலக்கியம் படைக்கும் பெண்கள் மிக மிகக் குறைவு என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மாநி தொடங்கி வைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து இன்னும் பல பெண் படைப்பாளிகள் சிறுவர் இலக்கியங்களின் பக்கம் தங்கள் படைப்புப் பார்வையைத் திருப்ப வேண்டுமென்பது நமது அவா!.

கவிஞர் மாநி அவர்களின் வண்ணத்துப் பூச்சி நூலைக் கவிதைத் தொகுப்பு என்று குறிப்பிடுவதை விட பாடல் தொகுப்பு என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாய் இpருக்கும். ஏனெனில் வருக வருகவே! என்ற முதல் பாடல் தொடங்கி அறிவுரை கேளாய்! என்று முடியும் ஐம்பத்தொன்றாம் பாடல் வரையிலான அனைத்துமே இசையோடு பாடுவதற்கேற்ற வகையில் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. சிறுவர் பாடல்களுக்கே உரிய மரபை ஒட்டி கவிஞர் மாநியும் சில அறிவுரைப் பாடல்கள், சில விலங்குப் பாடல்கள், தலைவர்கள் குறித்தப் பாடல்கள் சில என்ற மரபான தலைப்புகளிலேயே தம் நூலை அமைத்துச் செல்கிறார் என்றாலும் சில பாடல் தலைப்புகள் வண்ணத்துப் பூச்சியில் தனித்தன்மையோடு விளங்குகின்றன. குறிப்பாக வாழ்வுண்டு!, வாழ்வு காண்போம்!, வாழ்ந்திடுவாய்ப் பெண்ணே!, வாழ்க்கை முறை அறிந்திடு! முதலான தலைப்புகளைக் குறிப்பிடலாம். இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டுச் சிறுவர்கள் சென்ற நூற்றாண்டுச் சிறுவர்களைப் போலில்லை. அவர்கள் இன்றைய ஊடகச் சூழலில் மிகவும் மாற்றம் பெற்றுள்ளார்கள். எனவே அவர்களுக்கு வெறும் பொழுது போக்குப் பாடல்கள் மட்டும் போதா, வாழ்க்கை குறித்த சரியான புரிதலும் அவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்தே கவிஞர் மாநி அவர்கள் மேலே குறிப்பிட்ட வாழ்க்கை தொடர்பான பாடல்களை இணைத்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

பகையை அறுக்கப் போரிடு
பாய்ந்து சென்று வென்றிடு
வகையாய் வாழ்வை வகுத்திடு
வாழும் வரையில் உயர்ந்திடு
(மாநி, அறிவுரை கேளாய்!)

மேலே இடம் பெற்றுள்ள பாடலைப்போல் அறிவுரைப் பாடல்கள் பலவற்றிலும் புதிய புதிய உள்ளடக்கங்களோடு கவிஞர் மாநி படைத்துள்ள பாடல்கள் பொதுநிலையில் பார்ப்பவர்களுக்கு இவை சிறுவர் பாடல்களின்; உள்ளடக்கங்கள் தாமா? என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கலாம். ஆனால் இன்றைய சிறுவர்கள் மற்றும் அவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி வாழ்க்கைச் சூழல் இவைகளோடு பொருத்திப் பார்த்தால் இவ்வகை உள்ளடக்கங்களின் பொருத்தப்பாடு புலப்படும்.

சமூகம் இரண்டு வகையான உழைப்பாளிகளைக் கொண்டுள்ளது. ஒன்று உடலுழைப்பு, மற்றொன்று மூளை உழைப்பு. இரண்டு வகையான உழைப்புகளுமே சமூகத்திற்கு இன்றியமையாதனவாகும். ஆனால் மக்கள் மூளை உழைப்புக்குத் தருகிற அங்கீகாரத்தையோ மதிப்பையோ உடல் உழைப்புக்கும் உடல் உழைப்பாளிகளுக்கும் தருவதில்லை. உடலுழைப்பு, வியர்வை, அழுக்கு இவைகள் குறித்துச் சமூகத்தின் நடுத்தட்டு மக்கள் ஒருவகை அசூயையே கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்போதே உடலுழைப்புக்கு எதிரான மனநிலையிலேயே வளர்க்கின்றனர். வியர்வை வராத அழுக்கடைய வாய்ப்பில்லாத பணிகளையே தங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும், அதுவே சமூகத்தில் உயர்ந்த பணி என்று நினைக்கும் பெற்றோர் இதே மனநிலையைப் பிள்ளைகள் பெறும்படியாக மூளைச் சலவை செய்துவிடுகின்றனர். தங்கள் பிள்ளைகள் டாக்டராகவோ எஞ்சினியராகவோ வர வேண்டும் என்பதிலேயே அவர்கள் இலக்கு மையப்படுத்தப்படுகிறது. எனவேதான் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆங்கில வழிக் கல்வி, ரேங்க் போன்ற சில குறுகிய வட்டங்களுக்குள்ளேயே நடுத்தட்டு மக்களின் சிந்தனைகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. கவிஞர் மாநி இவ்வகை மாயைகளை எல்லாம் போட்டு நொறுக்குகின்றார்.

வாழ வேண்டும் புறப்படு!
வளர வேண்டும் புறப்படு!
வருவாய் கொள்ளப் புறப்படு!
வருந்தி உழைக்கப் புறப்படு!
வெற்றி கொண்டு புறப்படு!
வேர்வை சிந்தப் புறப்படு!
(மாநி, புறப்படு தம்பி)

விளையும் அறிவில் விருப்பங்கொள்!
வேர்வை சிந்த விருப்பங்கொள்!
(மாநி, விருப்பங்கொள்வாய்)

மூளை உழைப்புக்கு இணையாக, இல்லை ஒரு படி மேலாக உடலுழைப்பைப் போற்றுகின்றார் கவிஞர். உடலுழைப்பும் வியர்வையும் மாண்புடையனவாகக் கவிஞரால் சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய சிறுவர்கள் மனதில் இக்கருத்து விதைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே கவிஞர் இப்படிப் பாடுகிறார்.

உழவு செய்யும் உழவன்!
ஊரைக் காக்கும் தலைவன் !
(மாநி, உழவனைப் போற்றிடு)

என்று உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாம் உழவனை ஊரைக் காக்கும் தலைவன் என வருணிக்கும் கவிஞரின் சமூகப் பார்வை உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது.
வண்ணத்துப் பூச்சி என்ற இத்தொகுப்பில் நல்ல பாடல்கள் பல தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்பட்டு மனநிறைவளிக்கின்றன. விருப்பங்கொள்வாய்!, வாழ்வு காண்போம்!, இயற்கை!, ப+க்கள் தெரிந்திடு!, படிப்பே உலகம்! முதலான பாடல்களை அந்த வகையில் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். படிக்கப் படிக்க இன்பம் தரும் பாடல்கள் அவை.

ஆடும் கடலும் அருவி நீரும்
கூடும் நதியும் உயிரைக் காக்கும்!
பாடும் குயிலும் ஆடும் மயிலும்
ஆடும் மலரும் அழகைச் சேர்க்கும்

சிட்டாய்ப் பறக்கும் குருவியும் புறாவும்
பட்டான், தட்டான் யாவும் இங்கே
பட்டுப் போன்ற இனிமை யாகும்
விட்டு விலகாக் காட்சி என்போம்!

கொட்டும் மழையும் குட்டை குளமும்
வட்டப் பாதையின் வளைவும் நெளிவும்
உயர்ந்த மலையும் உறையும் பனியும்
வயல்வெளி பசுமையும் வளமை ஆகும்
(மாநி, இயற்கை)

கவிஞர் மாநி தீட்டியுள்ள இயற்கை அழகோவியம் இது.
எளிய இனிய தமிழ்ச் சொற்கள், சந்த நயம், மரபுத் தொடர்ச்சி, புதிய உள்ளடக்கங்கள், சமுதாயச் சிந்தனைகள் என்று எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கும் வண்ணத்துப் ப+ச்சி என்ற இப்பாடல் தொகுப்பு நிச்சயம் பாராட்டத் தக்க ஒரு புதிய வரவு. கவிஞர் மாநி தொடர்ந்து பல நல்ல படைப்புளை உருவாக்கி தமிழுலகிற்கு அணி சேர்க்க வேண்டும்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்


என்பார் ஒளவையார். தொடர்ந்து பழகுவதால் எதுவும் சாத்தியமாகும், எளிமையாகும். கவிஞர் மாநி அவர்களும் தொடர்ந்து கவிதை எழுதிப் பழகப் பழக அவருக்கும் கவிதை சாத்தியமாகும் எளிமையாகும்.

வாழ்த்துக்களுடன்
நா.இளங்கோ
14-04-2009
அம்பேத்கர் பிறந்த நாள்

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

கல்! நில்! வெல்!- புத்தக மதிப்புரை

கல்! நில்! வெல்!

உவப்புரை

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பாவலர் கு.அ.தமிழ்மொழி புதுவையின் இளைய பாவலர். கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருபவர். அதாவது அவரின் பத்து வயதில் எழுதத் தொடங்கியவர். பதினைந்தாம் அகவையைத் தொடும் பாவலர் தமிழ்மொழியின் படைப்புகள் வெளிவந்துள்ள இதழ்கள் இருபத்தைந்துக்கும் மேல். இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்புகள் இருபதுக்கும் மேல். பெற்றுள்ள விருதுகள் பத்துக்கும் மேல். இத்துணைச் சிறப்புகளுக்கும் உரிய பாவலர் கு.அ. தமிழ்மொழியின் முதல் கவிதைத் தொகுதி ‘சிறகின் கீழ் வானத்தை’ அடுத்து அவர் வெளியிடவிருக்கும் இரண்டாவது கவிதைத் தொகுதிதான் இந்த, “கல்! நில்! வெல்!”.
ஒரு பாவலர் தம் சிறார் பருவத்திலேயே இத்தகு ஆளுமைகளைப் பெற்றிருப்பது உண்மையிலேயே வியந்து பாராட்டுதற்குரியது. சக சிறார்களோடு ஒப்பிடுகையில் பாவலர் தமிழ்மொழி தனித்தன்மை வாய்ந்தவர். சுயமரியாதைக்காரர், தமிழ்த் தேசியப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் முதலான பன்முகப் பரிமாணங்களும் பாவலர் தமிழ்மொழிக்கு உண்டு. தமிழ்மொழி நல்ல ஓவியரும் கூட. புதுவைக்குப் பெருமை சேர்க்கும் இவர் 2006 ஆம் ஆண்டிற்கான நடுவண் அரசின் தேசியக் குழந்தைகள் விருதினைப் பெற்றிருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

பாவலர் தமிழ்மொழியின் முதல் தொகுதி சிறகின் கீழ் வானம் (2005) வெளிவந்தபோதே தமிழ் அறிஞர்கள் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதோடு கவிஞாயிறு தாராபாரதி ஐக்கூ விருது (2005), திருமதி சுந்தராம்பாள் இலக்கிய விருது (2004-05) ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுச் சாதனை புரிந்தது. 2008 இல் பாவலர் தமிழ்மொழி வெளியிட்டிருக்கும் கல்! நில்! வெல்! என்ற இந்த நூலும் பல்வேறு பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவது திண்ணம்.
II
கல்! நில்! வெல்! என்ற இந்த நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் சிந்தடி நான்காய் அமைந்த வஞ்சித் விருத்தம் (சிந்தடி நான்காய் வருவன வஞ்சி / யெஞ்சா விருத்தம் என்மனார் புலவர் -யாப்பருங்கலம்) யாப்பை ஒத்து அமைந்துள்ளமையும் அடிதோறும் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பதும் ஒரு புதுமை எனலாம். இதோ ஒரு சான்று,

கசடற எதையும் கல்
கற்ற வழியில் நில்
அறிவுப் பாதையில் செல்
எதையும் அறிவால் வெல்.


சிறார் பாடல்கள் என்ற இலக்கிய வகையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறார்களுக்காகப் பாடப்படும் பாடல்கள் அவை. பாவலர் தமிழ்மொழியின் சிறார் பாடல்கள் ஒரு புத்திலக்கியம். ஏனென்றால் பாடல்களை எழுதியவரும் சிறாரே. பாடலுக்கான வாசகர்களும் சிறார்களே.
நாட்டுப்புறப் பாடல் வகைகளில் சிறார் பாடல்கள் என்று ஒருவகை உண்டு. நாட்டுப்புறச் சிறுவர்கள் தம் ஆயத்தோடு விளையாடும் காலங்களில் இவ்வகைப் பாடல்களைப் பாடுவர். நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களில் விளையாட்டுப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், கேலிப் பாடல்கள், சொற்பயிற்சிப் பாடல்கள், எழுத்துப் பயிற்சிப் பாடல்கள் முதலான பல்வகைப் பாடல்களும் இடம்பெறும்.

உனக்கும் எனக்கும் போட்டி
கதை சொல்லடி பாட்டி
தமுக்கு அடிப்பவன் தோட்டி
கையிலே பிடிப்பது ஈட்டி
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு போறா சோக்கா
எழுந்து போடா மூக்கா
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள நாட்டுப்புறச் சிறுவர் பாடல் மரபை அடியொற்றி இயைபுத் தொடையமைந்த முச்சீரடிகள் நான்கு கொண்ட பாடல் வடிவத்தைப் பாவலர் தமிழ்மொழி கையாண்டிருப்பது தமிழ்க்கவிதை உலகில் ஒரு புதுமையான பாராட்டத்தக்க முயற்சியே.

பாவலர் தமிழ்மொழி தமிழ்வழிக் கல்வி கற்று வருபவர். அதனால் தாய்மொழியிலேயே சிந்திக்கவும் எழுதவுமான வாய்ப்பு அவருக்கு முழுமையாகக் கிடைத்துள்ளது. தாய்மொழி வழியாக அல்லாமல் ஆதிக்க மொழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இத்தகு வாய்ப்புகள் அமைவதில்லை. உயர்நிலைக் கல்வியைக்கூட இன்னும் முடிக்காத அவருக்கு இருக்கும் தமிழ்மொழியின் சொல்வளம் வியக்கத்தக்கதாய் உள்ளது. தமிழில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட இத்தகு சொல்வளம் பெற்றிருப்பார்களா? என்பது அய்யமே. தமிழ்மொழியில் இடம்பெறும் சொற்களில் சற்றேறக்குறைய ஒன்றுபோல் ஒலிக்கக்கூடிய ண – ன, ல – ள, ர – ற வேறுபாடுடைய சொற்களைத் தேர்ந்தெடுத்து அதன் பொருள் விளக்கமுறுமாறு இயைபுத் தொடையமைய எளிய இனிய நடையில் கவிதை யாத்துள்ள பாவலர் தமிழ்மொழியின் முயற்சி பலபடப் பாராட்டத்தக்கது. நூலின் இறுதியில் கவிதைகளில் பயின்றுவந்துள்ள சொற்களின் ‘சொற்பொருள் அகரவரிசை’யை இணைத்துள்ளமை மிகுந்த பயனளிக்கக்கூடியது.

ஒருவகைப் புல்லே தினை
ஒழுக்கம் இடம்பொருள் திணை

கரும்பின் கட்டி வெல்லம்
நீரின் பெருக்கு வெள்ளம்

கடலின் பெயரோ பரவை
பறக்கும் உயிர்கள் பறவை


தமிழில் பிழையின்றி எழுத விரும்பும் மாணவர்கள் கட்டாயம் இந்தக் கவிதை நு}லை வாசித்துப் பயிற்சி செய்துகொள்வது நல்லது.

கடலில் தோன்றும் அலை
சிலந்தி பின்னும் வலை
ஓவியம் என்பது கலை
சிற்பி வடிப்பது சிலை


கவிதை விளையாட்டு போல் இயைபுத் தொடை அமைய நல்ல ஓசை நயத்தோடு படைக்கப்பட்டிருக்கும் பாவலர் தமிழ்மொழி இவ்வகைக் கவிதைகள் மொழித்திறன் வளர்க்கும் கருவியாக அமைந்திருப்பது “கல்! நில்! வெல்!” என்ற இத்தொகுதிக்குக் கூடுதல் பயனையும் மதிப்பையும் அளிக்கின்றன.

எதையும் செய்வாய் ஆய்வு
உடலுக்குத் தேவை ஓய்வு
பைசா கோபுரம் சாய்வு
வேலையில் வேண்டும் தோய்வு


“எதையும் செய்வாய் ஆய்வு” என்றும் “வேலையில் வேண்டும் தோய்வு” என்றும் சிறார்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் நல்ல பல செய்திகளையும் தம் கவிதைத் தொகுதி வழி வழங்கியிருக்கும் பாவலர் கு.அ.தமிழ்மொழி மேலும் பல நல்ல படைப்பாக்கங்களைத் தமிழுக்குத் தந்து சிறப்புற வேண்டும். அதற்கான அடையாளங்கள் அவர் படைப்பில் மிளிர்கின்றன.
வாழ்க! வளர்க!!
15-8-2008 நா.இளங்கோ

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...