திங்கள், 20 ஜனவரி, 2014

அறிவியல் தமிழ் அறிஞர்கள்


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர், 
புதுச்சேரி-605008
புத்தம் புதிய கலைகள் -பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே –அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை .. .. ..
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
என்றெல்லாம் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கனவுகண்ட நம் மகாகவியின் கனவினை நனவாக்கும் விதத்தில் தமிழ் மொழியில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைக் (அறிவியலை) கொண்டுவந்து சேர்ந்த அரும்பணியாளர்கள் பலரின் அயராத உழைப்பால் நமக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்தான் அறிவியல் தமிழ். இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழறிஞர்கள் மிகப்பலராவர். அவர்களில் குறிப்பிடத்தக்க மூவரின் அறிவியல் தமிழாக்கப் பணிகள் சுருக்கமாக.

1. சிந்தனைச் சிற்பி .சிங்காரவேலர் (1860 -1946)
இந்தியாவின் மூத்த பொதுடைமை இயக்கத் தலைவர். பெரியார் முதலான தமிழகத்தின் முற்போக்கு இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக மதிக்கப்படுபவர். எளிய தமிழில் அறிவியலை எழுத்தில் பேச்சிலும் தமிழ்மக்களுக்கு எடுத்துரைத்த தம் அரும்பணியால் அறிவியல் தமிழின் பிதாமகனாகப் போற்றப்படுபவர்.
சிங்காரவேலர் அறிவியல் சிந்தனைகளைக் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு போன்ற இதழ்களில் 1930 களில் தொடர்ந்து எழுதியதோடு மட்டுமின்றி, அறிவியல் கட்டுரைகளுக் கென்றே 1934இல் தமது 75ஆம் வயதில் புது உலகம் என்ற பெயரில் மாதம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். முதல் இதழில் அவர் கீழுள்ளவாறு எழுதி யிருந்தார்,
Pure Science சுத்த விஞ்ஞானத்தை எடுத்துரைக்க தமிழ் பாஷையில் ஒரு தனித்த பத்திரிகைகூட இல்லை; இந்த அவசியத்தைப் பூர்த்தி செய்ய புது உலகம் என்ற பத்திரிகை வெளிவந்ததைப் போற்றுகின்றோம். பெரும் பான்மையான மக்கள் சயன்சின் மார்க்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளாத தோசத்தால் மூட ஒழுக்கங்களாலும், ஜாதி -சமய துராசாரங்களாலும் வாடி வதங்கி வருகின்றனர். நிழலைக் கண்டு பயப்படும் குதிரை, ஆடு, மாடுகளைப் போல் நமது நாட்டு மக்கள், பூமி நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சந்திர கிரகணத்தையும், சந்திரன் நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சூரிய கிரகணத்தையும் கண்டு பயப்படும் அறியாமையை என்னவென்று கூறுவது? இந்தக் குறைகளை நீக்குவதற்கு ஒரு விஞ்ஞானப் பத்திரிகை வேண்டுமென்ற கோரிக்கை இந்தப் புது உலகம் தோற்றத்தால் நிறைவேறு மென்று நம்புகின்றோம். - (புதுஉலகம் - மே - 1935)
குடியரசு இதழில் வாசகர்களின் அறிவியல் தொடர்பான கேள்விகளுக்குத் தொடர்ந்து இதழ்கள் தோறும் விரிவான பதிலளித்துவந்தார் சிங்காரவேலர். சான்றாக, கோழி முந்தியதா? முட்டை முந்தியதா? என்ற வாசகர் கேள்விக்கு அவர் அளித்த விரிவான பதிலின் ஒருபகுதி வருமாறு,
பறவைகள் ஊர்வன வற்றிலிருந்தும், ஊர்வன தவளைக் கூட்டங் களிலிருந்தும், தவளைகள் மீன்களிலிருந்தும், மீன்கள் புழு-பூச்சியிலிருந்தும், புழு-பூச்சிகள் சிறு கிருமிகளிலிருந்தும் சிறுகிருமிகள் நுண்முட்டை களிலிருந்தும் உயிர் பெற்றவை என டார்வின் கூறுவதை அவர் விளக்குகிறார். இந்தச் சிறுமுட்டைகள்தான் அனைத்து உயிர்கள் தோன்றுவதற்கும் காரணமாகும். தாவரங்களும் அந்தச் செல்களிலிருந்தே உருவாகின்றன. விதைகளும் முட்டை போன்ற வடிவுடையனவே ஆகும். முட்டைகளும், விதைகளும் தாதுக்களால் உண்டானவை. குறிப்பாக, முட்டையானது, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, கார்பன் ஆகியவை, தட்ப - வெப்ப இயற்கைச் சூழலால் கூட்டுச் சேர்க்கையாகி முட்டை வடிவம் பெறுகிறது. இந்த முட்டை எல்லா உயிர்களுக்கும் எப்படி மூலமுதலோ, கோழிக்கும் அந்த முட்டைதான் மூலமுதலாகும். எனவே கோழிக்கு முந்தியது முட்டையே யாகும்.
தமிழகத்தில் அறிவியல் உணர்வை வளர்க்க முயன்றவர்களில் சிங்காரவேலரே முதல் மனிதராவார்.
சிங்கார வேலரின் அறிவியல் படைப்புகளில் சில:
1. கடவுளும் பிரபஞ்சமும்
2. நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
3. மனிதனும் பிரபஞ்சமும்
4. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்
5. கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்
6. கல்மழை உண்டாகும் விதம்
7. விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
8. பிரபஞ்சப் பிரச்சினைகள்
9. விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
10. தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
11. விஞ்ஞானத்தின் அவசியம்
12. பேய், பிசாசு
13. தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
14. மனோ ஆலய உலகங்கள்
15. பிரகிருத ஞானம்
16. ஜோதிட ஆபாசம்
17. பகுத்தறிவென்றால் என்ன?
18. பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
19. பிரபஞ்சமும் நாமும்
20. உலகம் சுழன்று கொண்டே போகிறது
21. பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை
நம் மக்களிடத்துப் பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் பேய் -பிசாசு நம்பிக்கை, சாமியாடல், மந்திரம் வைத்தல், பில்லி -சூனியம், ஆன்மா, சகுனம் பார்த்தல், குறி பார்த்தல், மை வைத்துப் பார்த்தல் ஆகியவற்றையும் மற்றும் இந்து -கிறித்துவம், இசுலாம், புத்தம், சமணம், சைவம், வைணவம் போன்ற மதங்களிலுள்ள மூடநம்பிக்கை களையும் அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அரிய விளக்கங்களை சிங்கார வேலர் எடுத்துக் காட்டியுள்ளார்.
நமக்கு அறிவியல் கண்ணோட்டம் உருவாவதற்காக, எந்தப் பொருளையும் நிகழ்வையும் ஏன், எதற்கு, எப்படியென்று உற்று நோக்கி ஆராய வேண்டும் என்கிறார். குறிப்பாக, உற்று நோக்கல், சோதித்துப் பார்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளை நோக்கினால் தவறான நம்பிக்கை ஏற்படாமல் சரியான முடிவு கிடைக்கும் என்பது அவரின் கருத்து. அரசியல் களத்தில் நின்றுகொண்டு அவர் காலத்திய உலக அறிவியல் முன்னேற்றங்களை எல்லாம் தொடர்ந்து வாசித்து அவற்றைத் தமிழில் தமிழ்மக்களுக்காக ஆக்கித் தருவதில் சிங்காரவேலர் முனைப்பு காட்டினார். பகுத்தறிவும் சுயமரியாதையும் அறிவியல் கல்வியால் கிட்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து அறிவியல் விழிப்புணர்வைத் தமிழில் பரப்பும் பணியில் ஈடுபட்டு அறிவியல் தமிழ் வளர்த்தார் சிங்காரவேலர்.

2. பெநாஅப்புசாமி
பெ. நா.அப்புசாமி (1841-1986) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தமது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார் 1917 ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை இவர் எழுதியுள்ள கட்டுரைகள் 5000க்கும் மேலாக இருக்குமெனக் குறிப்பிடப்படுகிறது. இவற்றுள் 3000க்கும் மேற்பட்டவை அறிவியல் கட்டுரைகள் ஆகும். இவரது அறிவியல் கட்டுரைகள் தமிழர் நேசன், தினமணி, இளம் விஞ்ஞானி, தியாக பூமி, கலைக்கதிர், கலைமகள், செந்தமிழ், ஆனந்த விகடன் முதலான பல இதழ்களில் வெளிவந்துள்ளன. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நூற்றுக்கணக்கான கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர். சிறந்த மொழிபெயர்ப்பாளரான அப்புசுவாமியின் மொழிபெயர்ப்புகள் தரமானவை. இவரின் முதல் கட்டுரை பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா? என்ற தலைப்பிலானது. 1917ஆம் ஆண்டு தமிழ் நேசன் இதழில் இக்கட்டுரை வெளியானது.
பெ.நா.அப்புசாமி அவர்கள் தமிழில் எழுதியுள்ள நூல்கள் இருபத்தெட்டு. அவற்றில் சிறுவர்களுக்கான நூல்கள் பன்னிரண்டு. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த நூல்கள் இருபத்தைந்து.
பெ.நா.அப்புசாமி தமிழில் எழுதிய நூல்களில் சில,
1.    அற்புத உலகம்
2.    மின்சாரத்தின் விந்தை
3.    வானொலியும் ஒலிபரப்பும்
4.    அணுவின் கதை
5.    ரயிலின் கதை
6.    பூமியின் உள்ளே
7.    இந்திய விஞ்ஞானிகள்
8.    எக்ஸ்கதிர்கள்
9.    சர்வதேச விஞ்ஞானிகள்
10.    மூன்று சக்தி ஊற்றுக்கள்
11.    வாயுமண்டலத்தில் உள்ள வாயுக்கள்
12.    அற்புதச் சிறு பூச்சிகள்
13.    அணு முதல் ரேடார் வரை
14.    பயணம் அன்றும் இன்றும்
15.    பயணத்தின் கதை
16.    வானத்தைப் பார்ப்போம்
17.    சித்திரக் கதைப்பாட்டு 6 புத்தகங்கள்
18.    சித்திரக் கதைத்தொடர் 6 புத்தகங்கள்
அவர் மொழிபெயர்த்த நூல்களில் சில,
1.    விஞ்ஞானமும் விவேகமும் (Science & Common Science)
2.    அணுசக்தியின் எதிர்காலம் (Our Nuclear Future)
3.    அணுயுகம் (Report on the Atom)
4.    அணு முதல்பாடம் (Atomic Primer)
5.    விஞ்ஞான மேதைகள் (Giants of Science Vol.I, II)
6.    சுதந்திரத் தியாகிகள் (Crusaders for Freedom)
7.    காலயந்திரம் (Time Machine)
8.    இன்றைய விஞ்ஞானமும் நீங்களும் (Todays Science and You)
9.    இந்தியாவில் கல்வித்துறைச் சீரமைப்பு (Educational Reconstruction in India)
10.    ராக்கெட்டும் துணைக்கோள்களும் (Rockets and Satellites)
11.    ஏரோப்ளேன் (Aeroplane)
12.    டெலிபோனும் தந்தியும் (Telephone & Telegraph)
13.    விண்வெளிப் பயணம் (Space Travel)
பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கண்ணோட்டமும் அணுகுமுறைகளும் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டில் நிலவிவந்த சமூக அரசியல் சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தனவாக உள்ளன.
மக்கள் அறிவியலைக் கற்று, அறிவியல் மனநிலையைப் பெற்று அதற்கு இணங்க நடந்துவந்தால் அவர்கள் பகுத்தறியும் பண்பைப் பெறுவார்கள், நாடும் வளர்ச்சியுறும்.
என்ற இந்த நோக்கமே அவரை அறிவியல் தமிழின் பக்கம் ஆற்றுப்படுத்தியதென அறியலாம். இவருடைய அறிவியல் கட்டுரைகள் அனைத்துமே ஒரு சராசரி மனிதன் அறிவியலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எளிய தமிழ் நடையில் உள்ளன. அப்புசாமியின் எளிய மொழி நடைக்கு அவரது கலைச் சொல்லாக்கமும் ஒரு காரணமாகும். முடிந்தவரை மக்களின் பேச்சு வழக்கில் இருந்த சொற்களையும் எளிய கலைச் சொற்களையுமே அவர் பயன்படுத்தியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் வடசொற்களைக் கலந்து எழுதும் வழக்கம் இருந்தது. அப்புசாமியின் நடையிலும் தொடக்கத்தில் இப்போக்கே காணப்படுகிறது. காலப்போக்கில் நடையில் மாற்றம் ஏற்பட்டுத் தரம் வாய்ந்த அறிவியல் தமிழ்ச் சொற்களைப் பெய்து இயல்பான எளிய இனிய தமிழில் அறிவியலை ஆக்கும் முயற்சியில் அவர் பெருவெற்றி பெற்றுள்ளார்.

3. பெரியசாமி தூரன் (1908- 1987)
பெரியசாமி தூரன், தமிழின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கித் தந்த அறிவியல் அறிஞர். இவர் பெரியார் மாவட்டம் ஈரோடு வட்டத்தில் உள்ள மொடக்குறிச்சியை அடுத்த மஞ்சக்காட்டுவலசு என்னும் சிற்றூரில் பழனிவேலப்பன் -பாவாத்தாள் தம்பதியினருக்கு 1908ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26ஆம் நாள் பிறந்தார். கணிதப் பட்டதாரி ஆசிரியரான இவர் 1929 முதல் 1948 வரை ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர்த் தமிழின் கலைக்களஞ்சியம் தயாரிக்கும் பணியில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். பதினைந்து ஆண்டுகள் அரும்பாடுபட்டுத் தமிழின் முதல் கலைக்களஞ்சியத்தை மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்தார்.
திசு.அவினாசிலிங்கம் தமிழகத்தின் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழ் வளர்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது. இக்கழகத்தின் சார்பில் தமிழில் கலைக்களஞ்சியம் பல தொகுதிகளாக வெளியிடத் திட்டம் தீட்டப்பட்டது. இந்த மாபெரும் பணிக்கு முதன்மை ஆசிரியராகத் பெரியசாமி தூரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 அக்டோபரில் கலைக்களஞ்சியப் பணி தொடங்கப்பட்டது. ஒவ்வொன்றும் எழுநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட பத்துத் தொகுதிகளாகக் கலைக்களஞ்சியத்தை அவர் உருவாக்கித் தந்தார். 1200 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் 15,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அரிய தகவல்களைக் கொண்ட கட்டுரைகளாக. இக்கலைக் களஞ்சியத்தில் வரலாறு, நிலவியல், அரசியல், தத்துவம், இலக்கியம் முதலான செய்திகளோடு வேளாண்மை முதல் புதிய அறிவியல் தொழில்நுட்பம் வரை அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
கலைக்களஞ்சியப் பணியில் பல்வேறு அறிஞர்கள் ஆங்கிலத்தில் தந்த கட்டுரைகளை எல்லாம் தூரனே முன்னின்று தமிழாக்கம் செய்தார். 1948 இலிருந்து ஆறாண்டுக் காலம் கடுமையான உழைப்புக்குப் பின்னர் 1954 இல் முதல்தொகுதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஏறத்தாழ ஆண்டுக்கு ஒரு தொகுதியாகக் கொண்டுவரப்பட்டு 1963 ஜனவரி 4ஆம்நாள் ஒன்பதாம் தொகுதி குடியரசுத் தலைவர் இராதாக்கிருஷ்ணன் தலைமையில் மக்களுக்குக் காணிக்கையாக்கப்பட்டது.
இக்கலைக்களஞ்சியத் தொகுப்புப் பணி மட்டுமல்லாது பல்வேறு அறிவியல் நூல்களையும் தூரன் அவர்கள் தமிழுக்கு ஆக்கித் தந்துள்ளார்கள். அவருடைய அறிவியல் நூல்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.. முதல் பிரிவு மரபணு (Genetic) தொடர்பானது. இவ்வகையில் அவர் மூன்று தமிழ் நூல்களைத் தந்துள்ளார்.
1. பாரம்பரியம் (1949),
2. பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1954),
3. கருவில் வளரும் குழந்தை 1956
நூலின் இறுதியில் கலைச்சொல் விளக்கங்களை இணைத்துத் தந்துள்ளார். பாரம்பரியம் நூலின் சுருக்கம்தான் பெற்றோர் கொடுத்த பெருங்கொடை என்ற நூல்.
இரண்டாம் பிரிவு உளவியல் தொடர்பானது. இவ்வகையில் அவர் ஏழு நூல்களைத் தந்துள்ளார்.
1.    குழந்தை உள்ளம் 1947,
2.    குமரப்பருவம் 1954,
3.    தாழ்வு மனப்பான்மை 1955,
4.    அடிமனம் 1957,
5.    மனமும் அதன் விளக்கமும் 1968
6.    குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் 1953 (குழந்தை உள்ளம் நூலின் விரிவாக்கம்
7.    மனம் என்னும் மாயக் குரங்கு 1956 (மனமும் அதன் விளக்கமும் நூலின் சுருங்கிய வடிவம்)
தமிழ்க் கலைக்களஞ்சியம் தந்த அறிவியலறிஞர் பெ.தூரனின் அறிவியல் தமிழ்ப்பணி அளப்பரியது. கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம் பெற்றுள்ள கலைக்களஞ்சியப் பதிவுகளில் அறிவியல் கட்டுரைகள் பல ஆயிரங்கள். காலத்திற்கும் நின்று புகழ்சேர்க்கும் அரும்பணியால் அறிவியல் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பெரியசாமி தூரன் அவர்கள்.
முனைவர் நா.இளங்கோதமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-605008

சனி, 18 ஜனவரி, 2014

இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ்


முனைவர் நா.இளங்கோ,
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே டாக்டர் பிஷ் கிறீன் போன்ற ஐரோப்பியர் களாலும் வெ.பா. சுப்பிரமணிய முதலியார் போன்ற தமிழர்களாலும் சரியான இலக்கில் பயணப்பட்ட அறிவியல் தமிழ் இருபதாம் நூற்றாண்டில் மேலும் பல மைல்கற்களைத் தாண்டி இலக்கினை நெருங்கிவந்துள்ளது.
சாமுவேல் எழுதிய மானுட மர்ம சாஸ்திரம்:
மானுட மர்ம சாஸ்திரம் நூல் 1908இல் எஸ்.சாமுவேல் என்பவரால் எழுதப்பட்டு பர்மாவிலிருந்து வெளியிடப்பட்டது. இந்நூல் பர்மாவிலேயே அச்சிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கு, சிசு உற்பத்தி சிந்தாமணி என்ற வேறொரு பெயரும் இடப்பட்டுள்ளது. இந்நூலில் மனித உடற்கூறு பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிறப்பு உறுப்புகளைப் பற்றிய மருத்துவமும் மகப்பேறு மருத்துவமும் இந்நூலில் 12 பாகங்களில் அறுநூறு பக்கங்களில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர் எஸ். சாமுவேல் இரங்கூன் ஜென் ஜான்ஸ் கல்லூரியின் தலைமை ஆசிரியராவார். அவர் மேலும் மானஸ மர்ம சாஸ்திரம் என்ற தலைப்பில் மனோவசிய சாஸ்திர நூலொன்றை 272 பக்க அளவில் 1910 ஆம் ஆண்டிலும் மனோ தத்துவ அறிவியலான Hypopnotism பற்றி ஷிப்னாட்டிஸம் என்ற நூலை 1913 ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் மட்டுமின்றி இரஞ்சிதபோதினி என்ற அறிவியல் இதழையும் நடத்தியுள்ளார் என்று தெரிகிறது. பர்மாவைச் சேர்ந்த எஸ். சாமுவேல் என்கிற இந்நூலாசிரியரைச் சிலர் சாமுவேல் பிஷ் கிறீன் எனத் தவறாகப் புரிந்துகொண்டு இருவரும் ஒருவரே என்ற நிலையில் குறிப்பிடுகின்றனர். இந்தச் சாமுவேல் பிஷ்கிறீனின் வேறுபட்ட ஒருவர் என்பதை இரா. பாவேந்தனின் கட்டுரையொன்று ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியுள்ளது. (இரா.பாவேந்தன், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தமிழாக்கம், 1997)
எஸ்.சாமுவேல் அவர்களின் மானுட மர்ம சாஸ்திரம் நூல் பொது மக்களுக்காகவும், மானஸ மர்ம சாஸ்திரம், ஷிப்னாட்டிஸம் என்ற இரண்டு நூல்களும் மருத்துவர்களுக்காகவும் எழுதப்பட்டுள்ளன. மேற்சொன்ன மூன்று நூல்களும் வடமொழி கலந்த தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. புராண, இதிகாச, இலக்கிய, நாட்டுப்புற வழக்காறு முதலான சான்றுகளை முதலில் தெரிவித்துப் பின்னர் அறிவியலை எளிமையாக விளக்கும் பாணியிலேயே அவரின் அனைத்து நூல்களும் அமைந்துள்ளன.
மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் டாக்டர் பிஷ் கிறீன் அவர்கள் தொடங்கிவைத்த அறிவியல் மொழிபெயர்ப்பு நூலாக்கப் பணிகள் இருபதாம் நூற்றாண்டில் வேகம் பெறத் தொடங்கின. 1901இல் சேடன் பாபு இராசகோபாலாச்சாரி என்பவர் Euclid என்ற கணிதவியல் அறிஞரின் நூலை யூகிலிட்டின் சேத்திர கணிதப் பாலபோதினி என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூல் Geometry பற்றியது. தொடர்ந்து பல்வேறு ஆங்கில அறிவியல் நூல்கள் பாடநூல்களாகவும் பொதுமக்களுக்கான நூல்களாகவும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.
1924இல் பிலிப் எல்.நெல்சன், புதிய ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும் என்ற நூலை வெளியிட்டார். இந்திய நர்சுகளுக்கான பாடப்புத்தகம் ஒன்றை 1926இல் சிதம்பரநாத முதலியார் வெளியிட்டார். 1937இல் தமிழில் முடியுமா? என்ற தலைப்பில் டாக்டர் கிம்பாலி எழுதிய College Text Book of Physics என்ற நூலை மொழிபெயர்த்தார் இராசாசி. 1950 தொடக்கம் பலதுறை சார்ந்த மொழிபெயர்ப்பு நூல்கள் தொடர்ந்து வெளிவரலாயின. புற்றுநோய் (1957), சுகப்பிரசவம் (1958) என்ற இருநூல்களை எஸ்.இராமசாமி எழுதி வெளியிட்டார். பால் பிளாக்வுட் எழுதிய நூலொன்றை ஆற்றலோ ஆற்றல் (1961) என்ற பெயரில் தி. சு.கறுப்பண்ணன் மொழிபெயர்த்தார்.
அறிவியல் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் பெ.நா.அப்புசாமி ஆவார். அவர் இருபத்தைந்து அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவற்றுள் சில, இன்றைய விஞ்ஞானமும் நீங்களும் (Lynn pools – Todays Science and You), அணுசக்தியின் எதிர்காலம் (Our Nuclear Future)> ராக்கெட்டும் துணைக்கோள்களும் (Rockets and Satellite)
நா.வானமாமலை 1960இல் Stephen Heynn என்பார் எழுதிய The Cosmic Age என்ற நூலை விண்யுகம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து உடலும் உள்ளமும், உயிரின் தோற்றம், உடலியல் மருத்துவ வரலாறு முதலான நூல்களை மொழிபெயர்த்துத் தமிழ் அறிவியல் வளர்ச்சிக்குப் பணியாற்றினார். புதின எழுத்தாளர் தி.ஜானகிராமன் பூமி என்னும் கிரகம் என்ற தலைப்பில் George Gamow எழுதிய A Planet called Earth என்ற நூலை மொழிபெயர்த்து 1966இல் வெளியிட்டார்.
மேலும் ரஷ்யாவிலுள்ள மீர், ராதுகா பதிப்பகங்கள் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வழியாகப் பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழுலகிற்கு 1970, 1980 களில் தொடர்ந்து தந்தன. அவற்றுள் சில வருமாறு,
1. மூளையை நம்பலாமா? அ.கதிரேசன், 1972
2. தட்ப வெப்பத்தை மனிதன் மாற்ற முடியுமா? வைத்தீஸ்வரன், 1972
3. சுற்றுப்பாதையில் விண்வெளிக் கப்பல், கி.பரமேஸ்வரன், 1980
4. விளையாட்டுக் கணிதம், ரா.கிருஷ்ணய்யா, 1981
5. அனைவருக்குமான இயற்பியல் -வெப்பம், பழனியாண்டி, 1984
6. குழந்தைகள் வாழ்க, இரா.பாஸ்கரன், 1987
7. மின்பாதுகாப்பின் அடிப்படைகள், எஸ்.சீனுவாசன், 1988
மேலே குறிப்பிட்ட நூல்கள் மட்டுமின்றி நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் தொடர்ந்து பல அறிவியல் நூல்களை மொழிபெயர்த்தும், தமிழிலேயே உருவாக்கியும் பதிப்பித்து வருகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் அனைத்து அறிவியல் துறை நூல்களையும் தமிழில் வெளியிடும் நிறுவனம் என்ற பெருமை இப்பதிப்பகத்திற்கு உண்டு.
பயிற்சி மொழியான அறிவியல் தமிழ்:
அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பாதையில் 1930 ஆம் ஆண்டை ஒரு திருப்பு முனையாகவே கருதலாம். அதுவரை தனிப்பட்ட ஆர்வம் மற்றும் முயற்சியின் காரணமாக அறிவியல் தமிழ் நூல்கள் எழுதி வெளிவந்த நிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுநிலைப் பள்ளி வரை இருந்த தமிழ் பயிற்சி மொழித் திட்டம் பள்ளி இறுதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டது இந்த 1930ஆம் ஆண்டில்தான். முதலில் கலைப் பாடங்களையும் பின்னர் அறிவியல் பாடங்களையும் தமிழில் கற்பிக்கலாயினர். இதனால், கலைப் பாடநூல்களும் அறிவியல் பாடநூல்களும் பெருமளவில் எழுதிக் குவிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழில் பொதுவான அறிவியல் நூல்கள் வெளிவந்ததோடு பத்திரிக்கைகளில் அறிவியல் கட்டுரைகளும் அதிகளவில் எழுதப்படும் சூழ்நிலை உருவாகியது.
இதேபோல் 1960 களின் தொடக்கத்தில் கல்லூரிகளில் தமிழ்வழிப் பயிற்றல் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது தமிழ் அறிவியல் பாடநூல்களின் தேவை காலத்தின் தேவையாக மாற்றம் பெற்றது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பல தமிழ் அறிவியல் பாடநூல்களைத் தக்கவர்களைக் கொண்டு எழுதி வெளியிடலாயிற்று. வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம் முதலான அறிவியல் நூல்களோடு மருத்துவப் பாட நூல்களும் பொறியியல் சார்ந்த தொழில்நுட்ப நூல்களும் வெளிவரலாயின. இந்த வரிசையில் தமிழில் உருவாகிய நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்ற இரண்டு வகையான நூல்களும் இடம்பெற்றன.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன நூல்களின் மொழிநடையில் வடமொழிச் செல்வாக்கு குறைந்தும் நல்ல தமிழ் சொல்லாக்கங்கள் மிகுந்தும் காணப்பட்டன. பிரகிருதி சாஸ்திரம் இயற்பியலாகவும், இரசாயனம் வேதியலாகவும், விஞ்ஞானம் அறிவியலாகவும் மாற்றம் பெற்றன. அன்றைய தமிழகத்தின் சமூக, அரசியல் இயக்கங்களின் செல்வாக்கால் இந்த மாற்றங்கள் இயல்பாக நடைபெற்றன. பாடநூல்களைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொது அறிவியல் மற்றும் பாட அறிவியல் நூல்கள் மிகுந்த அளவில் உருவாகி வெளிவரத் தொடங்கின. கடந்த இருபதாம் நூற்றாண்டில் மட்டும் தமிழில் வெளியான அறிவியல் நூல்களின் எண்ணிக்கை ஆறாயிரத்துக்கும் மேலதிகமாயிருக்கும் என்று மதிப்பிடுவார் இராம.சுந்தரம் (தமிழ்வளர்க்கும் அறிவியல், ப.37) தொடர்ச்சியாக, அறிவியலுக்கென்றே தனிஇதழ்களும், அறிவியல் பகுதிகள் அடங்கிய பொது இதழ்களும் வெளிவரலாயின. இம்மாற்றங்களின் விளைவாகத் தமிழில் பொருத்தமான நல்ல தமிழ் அறிவியல் சொற்கள் பல உருவாகி அறிவியல் தமிழை வளப்படுத்தின.
தமிழில் கலைச்சொற்கள்
1935 வரை தமிழில் எழுதப்பட்ட நூல்களாயினும் கட்டுரைகளாயினும் அவை தரமான நல்ல தமிழிலே அமைந்தவை எனக் கூறுவதற்கில்லை. கிரந்த எழுத்துக்களோடு கூடிய சமஸ்கிருதச் சொற்களும் ஆங்கிலச் கலைச்சொற்களின் ஒலிபெயர்ப்பும் அதிகளவில் கலந்து வெளிவந்தன. 1935 ஆம் ஆண்டிற்குப் பின்னர், நல்ல தமிழை, தனித் தமிழைப் பயன்படுத்த வேண்டும் எனும் வேட்கை அழுத்தமாக எழுந்தது. புதிய கலைச்சொற்களைத் தனித் தமிழில் உருவாக்கும் முயற்சிகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டன. தமிழில் அறிவியலைக் கூற முற்பட்ட அதே சமயத்தில், அறிவியல் கலைச்சொற்களைப் பற்றிய சிந்தனையும், இம்முயற்சியில் ஈடுபட்டோரிடையே இருந்து வந்தது.
தமிழ்க் கலைச்சொல்லாக்க முயற்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்வு 1932 இல் நடைபெற்றது. இவ்வாண்டில் சென்னை அரசாங்கம் கலைச்சொல் குழுவொன்றை அமைத்து அக்குழுவின் சார்பில் கலைச்சொல் பட்டியல் ஒன்றனை வெளியிட்டது. உடலியல், நலவழி, வேதியியல், வாணிபவியல், நிலவியல், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்கை விஞ்ஞானம், இயற்பியல் பாடங்களுக்கான சுமார் 7400 சொற்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கலைச்சொற்கள் சமஸ்கிருதமாகவும், ஆங்கிலமாகவும் இருந்தன. சில மிகவும் நீண்ட தொடர்வடிவிலான சொல்லாக்கமாயிருந்தன. சான்றாக: Analytical Chemistry –விபேதன ரஸாயன நூல், Census Report –குலஸ்திரீ புருஷபாலவிருத்த ஆயவ்ய பரிமாண பத்திரிக்கை. இதே கலைச்சொற்கள் 1968 இல் வெளியான மற்றொரு பட்டியலில் பகுப்பாய்வு வேதியல் என்றும் மக்கள்தொகை அறிக்கை என்றும் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் திரவப் பதார்த்தம், திடப்பொருள், வாயு, ஆகர்ஷண சக்தி, பூகம்பம், அஸ்தி, வியாதி, வைத்திய சாஸ்திரம், நிவோஷம், கஷம்ணநாடி, பூகோளம், கிரகம் என்று வழங்கப்பட்ட கலைச்சொற்கள் அதே நூற்றாண்டின் பிற்பாதியில் முறையே நீர்மம், திண்மம், வளிமம், ஈர்ப்புச்சக்தி, நிலநடுக்கம், எலும்பு, நோய், மருத்துவ அறிவியல், மிகை வளர்ச்சி, தண்டுவடம், புவியியல், கோள் என வழங்கப்படலாயின. தமிழில் அறிவியல் துறை மிகவேகமான வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக இயல்பான தமிழ்க் கலைச்சொல்லாக்கங்கள் உருவாகி நிலைபெற்று வருகின்றன என்பதற்கு மேலே காட்டிய பட்டியல் ஒரு சான்றாகும்.
இருபதாம் நூற்றாண்டு அறிவியல் இதழ்கள்:
இருபதாம் நூற்றாண்டின் அறிவியில் வளர்ச்சி என்பது அறிவியல் நூல்களை மட்டும் சார்ந்தில்லாமல் அறிவியல் இதழ்களைச் சார்ந்தும் இருந்தமை கண்கூடு. இந்நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான அறிவியல் இதழ்கள் அறிவியலின் துறைகள் தோறும் தோற்றம் பெற்றன. சில தளர்நடையிட்டன, சில வீறுநடை போட்டன. வீறுநடை போட்ட இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவியல் இதழ்கள் சிலவற்றைக் காண்போம்.
கலைக்கதிர்:
புத்தம் புதிய அறிவியல் செய்திகளைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்னும் உயரிய நோக்கில் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் 1948 ஆம் ஆண்டில் கலைக்கதிர் என்ற திங்களிதழைத் தொடங்கினார். தொடக்கம் முதல் 1984 ஆம் ஆண்டுவரை அறிவியல் கட்டுரைகள் அதிகம் இடம்பெறும் பல்சுவை இதழாகவே வெளிவந்தது இவ்வேடு. அதன்பின் மாற்றம் பல பெற்று அறிவியல் செய்திகளை மட்டும் தாங்கிவரும் முழுமையான அறிவியல் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தக்க விளக்கப் படங்களுடனும் தனித் தமிழிலும் பல்வேறு தரப்பினருக்கும் மகிழ்வ+ட்டும் முறையிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இக்கலைக்கதிர் அறிவியல் வளர்ச்சி மலர், அணுமலர் எனச் சிறப்பு மலர்களையும் வெளியிட்டு அறிவியல் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளது.
பல்லாயிரம் அறிவியல் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கிய பெருமைக்குரியது கலைக்கதிர் இதழ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கலைக்கதிர் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், உயிரியல், பயிரியல், விண்ணியல், உளவியல், வேளாண்மை, மானிடவியல் முதலான பல்வேறு அறிவியல் கட்டுரைகளை அத்துறை வல்லுநர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டு வருகிறது. அது கலைச் சொல்லாக்கத்தை முன்முயற்சி செய்து வெளியிட்டுத் தமிழ்ச் சொல்வளத்தைப் பெருக்கியது. 1966-ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கலைக்கதிர் இதழில் வந்த கட்டுரைகள் சில வருமாறு: பால்பாதையும் சூரியமண்டலமும், நீரிழிவின் வரலாறு, மண்ணில்லா வேளாண்மை, நமது உடல், விஞ்ஞானப் புதுமைகள், திரைப்படத்தில் ஒலியின் பங்கு, கடல் நீரிலிருந்து யுரேனியம் போன்ற கட்டுரைகள் தெளிவாக விளக்கப்படங்களுடனும் வண்ணப் படங்களுடனும் வெளியிடப்பட்டன. கட்டுரைகள் நல்ல தமிழ்நடையில் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் இருந்தன.
இவ்விதழின் மற்றொரு சிறப்பம்சம் பல்வேறு அறிவியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்களை, அறிவியல் எழுத்தாளர்களாக மாற்றிய பெருமையாகும். இதற்காக மறைந்த டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள் மெற்கொண்டிருந்த இடைவிடா முயற்சியும் இத்துறையில் கொண்டிருந்த ஆர்வப் பெருக்கமும் என்றும் போற்றத்தக்கன. கலைக்கதிர் இதழ் அறிவியல் தமிழாக்கம், தழுவல், மூலமாக எழுதுதல் ஆகிய மூவகையிலும் அறிவியல் எழுத்தாளர்கட்கு ஆக்கமான பயிற்சிக் களமாகவே கடந்த இருபத்தைந்தாண்டு காலமாக விளங்குகிறதெனலாம்.
யுனஸ்கோ கூரியர்:
தமிழக அளவில் மட்டுமல்லாது, சர்வசே அளவில் அறிவியலைத் தெளிவாகவும் சொற்செட்டோடும், பொருட் செறிவோடும் தமிழில் தரமுடியும் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்த்தி, நிலைநாட்டிய பெருமை யுனெஸ்கோ கூரியர் எனும் தமிழ்த் திங்கள் இதழையே சாரும். இவ்விதழ் 34 உலக மொழிகளில் வெளிவருகிறது. இந்தியாவில் தமிழிலும் இந்தி மொழியிலும் மட்டும் வெளிவரும் இவ்விதழ் 1967 ஜுலை முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இது கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு இதழாக அமைந்திருந்தபோதிலும், மிக அதிக அளவில் இதில் இடம்பெறுவன அறிவியல் கட்டுரைகளேயாகும். இவ்விதழில் இடம்பெறும் அறிவியல் கட்டுரைகள் தற்கால அறிவியல் துறைகள் பலவற்றிலும் ஏற்பட்டுள்ள தற்போதைய முன்னேற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் அவ்வத் துறை சார்ந்த உலகப் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு எழுதப்படுகின்றன. அவைகள் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு மேனாட்டு இதழ்களுக்கு இணையாக ஆங்கில இதழ் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியிடப்படுகின்றன. இத்தகு அரிய வாய்ப்பைப் பெற்ற ஒரே தமிழ் இதழ் இதுவேயாகும். இவ்விதழில் வெளிவரும் கட்டுரைகள் முழுவதும் மொழிபெயர்ப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. ஆங்கிலக் கட்டுரையின் அளவிலேயே தமிழ் மொழிப்பெயர்ப்புக் கட்டுரையும் அமைய வேண்டுவது தவிர்க்க முடியாததாயினும் மொழிபெயர்ப்பு என்ற உணர்வே வாசகர்கட்கு ஏற்படா வண்ணம், மூலமாகத் தமிழில் எழுதப்பட்ட கட்டுரை போன்று தர வேண்டியுள்ளதால் புதிய உத்திகளைக் கையாண்டு அறிவியல் கட்டுரைகள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வாறு புதிய புதிய மொழிபெயர்ப்பு உத்திகளைக் கண்டறிந்து செயல்படுத்த ஏற்ற களமாகத் தமிழில் இவ்விதழ் அமைந்துள்ளதெனலாம்.
கூரியர் இதழ் வாயிலாகத் தமிழுக்கு நாள்தோறும் ஏற்பட்டு வரும் ஆக்கம் புதிய புதிய கலைச்சொற்களின் தோற்றமாகும். பெரும்பாலும் ஒலிபெயர்ப்போ அன்றி சமஸ்கிருதச் சொற்களோ அல்லாது, தனித் தமிழில் கலைச்சொல்லாக்கம் இதழ்தோறும் செய்யப்படுகின்றன. இவ்வகையில் கடந்த இருபதாண்டுகளில் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் கூரியர் இதழுக்கென உருவாக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தமிழின் தனித்திறனை உலகுக்குணர்த்துவதாக உள்ளது.
துளிர் அறிவியல் சிறுவர் இதழ்:
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறுவர்களுக்கென்றே சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே அறிவியல் மாத இதழ் துளிர் ஆகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுவை அறிவியல் இயக்கமும் இணைந்து 1987 ஆம் ஆண்டு நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று முதல் துளிர் இதழை வெளியிட்டன. சிறுவர்களின் உள்ளத்தில் அறிவியல் உணர்வை ஊட்ட வேண்டும் என்ற இலட்சியத்துடன் இவ்விதழ் தொடங்கப்பட்டது. அறிவியல் செய்திகளைத் தொகுத்துத் தருவதோடு யுரேகா, அறிவியல் கேள்வி பதில் போன்ற பகுதிகளைச் சிறுவர் முதல் பெரியோர் வரை படித்து இன்புறும் வண்ணம் வெளியிட்டு வருகின்றது.
அறிவியல் மாத இதழ் என்றால் வெறும் இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவஇயல், வானவியல் தொடர்பான கட்டுரைகள் மட்டும் வெளியிடுவது என்றில்லாமல் புவியியல், சுற்றுச்சூழலியல் என்று பலதரப்பட்ட பொருள்களில் துளிரில் படைப்புகள் வெளிவருகின்றன. பெரும்பாலும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் (6,7,8 வகுப்பு மாணவ மாணவியர்) புரிந்து கொள்ளும் இதழாகவே துளிர் தயாரிக்கப் படுகிறது. படிப்பவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது துளிரின் முக்கியப் பணி. அறிவியலுக்குப் புறம்பான வி~யங்கள், மூடநம்பிக்கைகள் இவற்றைச் சாடும் பணியையும் துளிர் செய்து வருகிறது. பாடப்புத்தகத் தன்மையற்ற படைப்புகளை வெளியிடுவதில் துளிர் அதிகக் கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் அறிவியலைத் தங்கள் சூழலோடு ஒன்றிப் பார்த்துப் புரிந்து கொள்ளவும், அவர்களே அறிவியலைச் செய்து பார்த்துக் கற்றுக் கொள்ளவும் துளிர் ஊன்றுகோலாக இருந்து செயல்படுகிறது. கதை, கட்டுரை, படக்கதை, துணுக்கு, கேள்வி பதில், பேட்டி, புதிர், படங்கள், பயிற்சி, விளக்கப்படம், பரிசோதனைகள் ஆகிய வடிவங்களில் துளிரில் படைப்புகள் வெளிவருகின்றன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இதழ்கள் மட்டுமன்றி நூற்றுக்கான தமிழ் இதழ்கள் அறிவியல் வளர்ச்சிக்குத் தம் பங்குப் பணியை ஆற்றிவருகின்றன. அவற்றுள், அறிவியல் கட்டுரைகளை அவ்வவ்போது வெளியிடும் இதழாகத் தினமணி இதழ் விளங்குகிறது. எளிய தமிழில் அறிவியல் கட்டுரைகளை, மொழிபெயர்ப்பாகவும் மூலமாகவும் எழுதி வெளியிடுவதோடு, அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள பல்வேறு பிரச்சினைகளை அவ்வத்துறை வல்லுநர்களைக் கொண்டே விவாதிக்கும் இதழாகவும் அவ்விதழ் அமைந்து வருகிறது. மற்றும் குன்றக்குடி அடிகளாரின் முயற்சியினால் வெளிவந்து கொண்டிருக்கும் அறிக அறிவியல் இதழும் இளம் விஞ்ஞானி இதழும் அறிவியலைத் தமிழில் சொல்லும் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான செந்தமிழ்ச் செல்வி, இலக்கிய இதழ்தான் ஆயினும் இவ்விதழில் அவ்வப்போது அறிவியல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கரின் அறிவியல் பூர்வமான ஆங்கிலக் கட்டுரைகள், க. ப.சந்தோஷம் என்பவரால் தொடர்ந்து சீராக மொழி பெயர்க்கப்பட்டுச் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தன. ஆனந்தவிகடன் இதழ் பொதுமக்களுக்குரிய பொழுதுபோக்கு இதழ்தான் என்றாலும் மருத்துவம் தொடர்பான ஆறிலிருந்து அறுபது வரை, உச்சி முதல் உள்ளங்கால் வரை என நம் உடற்கூறு தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இளைய தலைமுறையினர் அறிவியற் கருத்துகளைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இன்று வாய்ப்புகள் பெருகிவிட்டன. இன்று அறிவியலின் தேவை மிகுந்துவிட்டது. அதற்கு ஏற்ப அறிவியல் செய்திகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு இதழ்களுக்கு நிறையவே உண்டு. எனவே அறிவியல் செய்திகள் அடங்கிய சில பக்கங்களையேனும் இப்போது நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. இன்று வெளிவந்து கொண்டிருக்கும் தினத்தந்தி, தினமலர், தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது அறிவியல் தொடர்பான கட்டுரைகள் வெளிவருகின்றன. நம் இந்திய நாட்டின் விண்வெளிக் கூடங்கள் விண்ணில் செலுத்தும் செயற்கைக்கோள்கள் பற்றியும், வேளாண்மை வளர்ச்சி குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும், நீர்மேலாண்மை, எய்ட்ஸ் நோய், உடல் நலம், மகப்பேறு ஆகியன பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு அறிவியல் பார்வையை மக்களிடம் வளர்த்து வருகின்றமை போற்றத்தக்கதாகும்.
அன்றாடம் நாம் பயன்படுத்துகின்ற மின்னணுச் சாதனங்கள் பற்றியும், காற்றாலைகள் குறித்தும் வெளிவரும் அறிவியல் கட்டுரைகள் அரிய தகவல்களைத் தருகின்றன. தினமலர் ஞாயிறு இதழில் மதுரை அப்பொல்லோ மருத்துவமனையின் சார்பில் சர்க்கரை நோய், இதயக் கோளாறு, எலும்பு முறிவு போன்ற நோய்களின் தன்மைகளை எடுத்துக்கூறி அவற்றைத் தடுப்பது பற்றியும் அவற்றிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தினமணி நாளிதழில் மூட்டுவலி தொடர்பான மருத்துவம் குறித்த கட்டுரை முழுப்பக்க அளவில் வந்தமை இங்கே சுட்டிக்காட்டுவதற்கு உரியது. தினமணியின் தலையங்கப் பக்கத்தில் அவ்வப்போது அறிவியல் வல்லுநர்கள் எழுதும் அறிவியல் சிறப்புக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.
அறிவியல் தமிழ் வளர்ச்சியில் பல்கலைக் கழகங்கள்
அறிவியல் தமிழ் வளர்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1938 ஆம் ஆண்டிலேயே தொடக்க முயற்சிகளை மேற்கொண்டது. கல்லூரி நிலையில் தமிழில் அறிவியலைப் போதிக்கும் வகையில் வேதியியல் (Chemistry) நூல்களின் இரு தொகுதிகளைத் தமிழில் தயாரித்து வெளியிட்டது. அவ்வாறே 1941 ஆம் ஆண்டில் இயற்பியல் (Physics) நூலின் இரு தொகுதிகளையும், 1942 ஆம் ஆண்டில் உயிரியில் (Biology) நூலையும் தமிழில் வெளியிட்டது. இவை ஐந்தும் நல்ல தமிழில் வெளிவந்த தரமான வெளியீடுகளாகும்.
சென்னைப் பல்கலைக்கழகம் அறிவியல் நூலை எழுதும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 1938இல் அப்போதைய சென்னை இராஜதானிக்கான பரிசுத் திட்டத்தை அறிவித்து, தமிழ் மொழியில் மட்டுமல்லாது தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் வெளியிடும் சிறந்த அறிவியல் நூல்களுக்குப் பரிசளித்து ஊக்குவிக்கும் திட்டத்தை மேற்கொண்டது. இதனால் அறிவியலைத் தமிழில் தரவிழையும் எழுத்தாளர்களுக்குப் புதிய உற்சாகம் ஏற்பட வழியேற்பட்டது. ஈ.த. ராஜேஸ்வரி போன்ற அறிவியல் எழுத்தாளர்கள் அறிவியல் நூல்களை எழுதிப் பரிசு பெற இயன்றது.
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பல்வேறு வழிகளில் திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது. ஒரு புறத்திலே கலைச்சொற்களின் தொகுப்புப் பணியை மேற்கொள்கிறது. மறுபுறத்திலே அக்கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் நூல்களை எழுதுமாறு அவ்வத்துறை வல்லுநர்களைத் தேர்வு செய்து, அப்பணியை ஒப்படைக்கிறது. இதனால், அறிவியல் தமிழ் நூல்கள் பெருமளவில் வெளிப்பட வாய்ப்பேற்படுகிறது. இந்நூல்கள் கல்லூரி மட்டத்தில் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்ட மாணவர்கட்குப் பயன்படுவதைக் காட்டிலும் அவ்வத்துறை அறிஞர்கட்குத் தக்க ஆதார நூல்களாக (Source Books) இவை அமைகின்றன எனலாம். இன்றைய நிலையில் அறிவியலைப் பொறுத்தவரையில் தமிழில் ஒவ்வொரு துறைக்கும் நிறைய ஆதார நூல்கள் தேவைப்படுகின்றன. இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அறிவியல் நூற்பணி அமைந்து வருகிறது. அறிவியல் கலைக் களஞ்சியங்களைத் தொகுத்து வெளியிடும் பணியில் தமிழ்ப் பல்கலைக் கழகம் பெருவெற்றி பெற்றுள்ளது. அத்துடன், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு சிக்கல்களை அறிவியல் தமிழ் அறிஞர்கள், வல்லுநர்களைக் கொண்ட கருத்தரங்குகள் மூலமாக அடிக்கடி விவாதித்து ஆக்கப+ர்வமான முடிவுகளைப் பெறவும் வழியமைத்து வருகிறது.
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான ஆக்க வழிகளைக் காணுவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றம் வாயிலாக வெளியிடப்பட்டுவரும் களஞ்சியம் முத்திங்கள் இதழ், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான சிக்கல்களை, துறைவல்லுநர்களைக் கொண்டும் தமிழறிஞர்களைக் கொண்டும் விவாதித்துத் தீர்வு காணும் வழியாயமைந்து வருகிறது. நல்ல தமிழில் அறிவியல் -தொழில்நுட்பக் கட்டுரைகளை எவ்வாறு எழுதலாம் என்பதற்கு முன்னோடியாகத் தமிழில் அறிவியல் கட்டுரைகளை இதழ்தோறும் படைத்து வெளியிட்டு வருகிறது. (மணவை முஸ்தபா, காலம் தேடும் தமிழ், பக். 52-53)
இப்பல்கலைக் கழகங்கள் மட்டுமன்றித் தமிழகத்தில் பல்வேறு அறிவியல் அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டு அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகப் பின்வரும் அமைப்புகளைக் குறிப்பிடலாம்.
1. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (சென்னை, புதுச்சேரி)
2. சுதேசி அறிவியல் இயக்கம் (குன்றக்குடி)
3. மக்கள் அறிவியல் இயக்கம் (கோவை)
4. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் (தஞ்சாவூர்)
5. தமிழக அறிவியல் பேரவை (காரைக்குடி)
6. வளர்தமிழ் மன்றம் (அண்ணா பல்கலைக் கழகம்)
மேற்சொன்ன அறிவியல் இயக்கங்கள் ஒவ்வொன்றும் அறிவியல் தமிழ்வளர்ச்சிக்கு அவ்வப்போது கருத்தரங்குகள், மாநாடுகள் முதலானவற்றை நடத்தி அதில் வாசித்து விவாதிக்கப்படும் கட்டுரைகளை ஆய்வுத் தொகுதிகளாக வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இயக்கம் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகமாகும்.
1987இல் தொடங்கப்பட்ட இக்கழகம் இதுவரை பதினாறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. கருத்தரங்கின் மையப் பொருளாகப் பொதுஅறிவியல், பொறியியல், மருத்துவம், சுற்றுச்சூழல், வேளாண்மை, கலைச்சொல்லாக்கம் முதலானவை அமையும். கருத்தரங்கில் வாசிக்கப்படும் அனைத்துக் கட்டுரைகளையும் நூலாக்கி வளர் தமிழில் அறிவியல் என்ற பெயரில் நூலாக்கி வெளியிட்டு வருகிறது இக்கழகம். இதுவரை இருபத்து மூன்று தொகுதிகள் வெளியாகியுள்ளன. இவற்றுள் 1500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்று அறிவியல் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளன. பண்டைய தொழில்நுட்ப அறிவியல் முதல் இன்றைய தொழில்நுட்ப அறிவியல் வரையிலான ஒரு தொடர்ச்சியான வரலாற்று அறிவை இக்கருத்தரங்குகள் வழங்குகின்றன. நுட்பமான அறிவியல் செய்திகளைக் கூடத் தமிழில் எளிமையாகக் கூறமுடியும் என்பதற்கு இக்கருத்தரங்குகள் சான்றாக அமைகின்றன. சில கட்டுரைகள் அறிவியல் தமிழின் அமைப்பு பற்றியும் கலைச்சொற்கள் பற்றியும் மொழியியல் பார்வையில் வெளிப்படுத்தின. அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத்தின் பணி அளப்பரியது.
தமிழ் அறிவியல் வளர்ச்சியில் பதிப்பகங்களின் பங்கு:
1954-இல் தொடங்கப்பட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட பிறமொழி அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமன்றி, தமிழாக்கமாகவும் பல அறிவியல் நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. சராசரிக் கல்வி கற்றவரும் ஆர்வத்துடன் வாசிக்குமாறு எளிய நடையில் விளக்கப் படங்களுடன் வெளியான மொழிபெயர்ப்பு நூல்கள் தரமானவையாக உள்ளன. பற்றவைப்பு முதல் மருந்தியல் ஈறாக அனைத்து அறிவியல் துறை நூல்களையும் வெளியிட்ட பெருமை இந்நிறுவனத்திற்குண்டு. இந்திய அரசாங்கத்தின் தேசியப் புத்தக நிறுவனம் பல அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவ மாணவியர் தமிழின் வழியாக உயர்கல்வி பயிலுவதற்காக, தமிழ்நாடு அரசினால் 1962-இல் தமிழ்நூல் வெளியீட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் முப்பத்தைந்து அறிவியல் நூல்களைத் தமிழாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு, பின்னர் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 450 அறிவியல் நூல்களில், பல தழுவல்களாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் விளங்கின.
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், மீரா பப்ளிகேஷன்ஸ், ஸ்டார் பிரசுரம், வானதி பதிப்பகம், கலைமகள் பதிப்பகம் போன்றவை தமிழில் அறிவியல் மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பித்த முக்கியமான பதிப்பகங்கள் ஆகும்.
தமிழில் கணிப்பொறி அறிவியல்:
தமிழில் கணிப்பொறி அறிவியலைத் எழுதும் முயற்சி சென்ற நூற்றாண்டின் எண்பதுகளிலேயே தொடங்கிவிட்டது எனலாம். மணவை முஸ்தபா, சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் கணிப்பொறி விந்தைகளைக் கதைகளில் எழுதியது மட்டுமின்றிக் கணிப்பொறி அறிவியல் குறித்துப் பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளனர். சுஜாதா கணித்தமிழ்ச் சொல்லாக்க முயற்சியாக ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் என்னும் நூலை வெளியிட்டார். பத்திரிக்கைகளிலும் பொதுவான கணிப்பொறிச் செய்திகளை அவ்வப்போது எழுதிவந்தார். யுனெஸ்கோவின் கூரியர் தமிழ்ப் பதிப்பில் அதன் ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் தொடக்கக் காலந்தொட்டே கணிப்பொறி தொடர்பான கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
1993-ஆம் ஆண்டில் தினமலர் செய்தித்தாளின் வியாழன் இணைப்பான வேலைவாய்ப்புக் கல்வி மலரில் கற்போம் கம்ப்யூட்டர் என்னும் தலைப்பில் தொடர்கட்டுரைகளை வெளியிட்டனர். கணிப்பொறித் துறையில் பயனாளருக்கு உதவும் பாட விளக்கமாக முதன்முதலில் தமிழில் எடுக்கப்பட்ட முயற்சி அத்தொடர் எனலாம். கணிப்பொறி அறிவியலைக் கற்கும் ஆர்வலர்களிடையே குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடையே அத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து குமுதம் வார இதழ் படித்தவர்க்கும் பாமரர்க்கும் கணிப்பொறி என்னும் தொடரை வெளியிட்டது. கணிப்பொறி அறிவியலின் அனைத்துத் துறைகளையும் தொட்டுக் காடடுவதாய் அத்தொடர் அமைந்தது.
பல்வேறு வார மாத இதழ்களும் அவ்வப்போது கணிப்பொறி பற்றிச் செய்திகளை, கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. 1994 நவம்பரில் வளர்தமிழ் பதிப்பகம், தமிழ் கம்ப்யூட்டர் என்னும் கணிப்பொறி இதழைத் தமிழில் வெளியிட்டது. கணிப்பொறித் துறைக்கென்றே தமிழில் வெளியான முதல் இதழ் என்பது மட்டுமன்று, இந்திய மொழிகளிலேயே கணிப்பொறிக்கெனத் தனித்த இதழ் வெளியிட்ட முதல்மொழி தமிழ் என்ற பெருமையும் அவ்விதழ் மூலம் கிடைத்தது எனலாம். கணிப்பொறி அறிவியல் பற்றிய பொதுவான கட்டுரைகள், குறிப்பிட்ட கணிப்பொறி இயக்க முறைமைகள் (Operating Systems), கணிப்பொறி மொழிகள் (Computer Languages), பயன்பாட்டுத் தொகுப்புகள் (Application Packages) பற்றிய கட்டுரைத் தொடர்களும் வெளியிடப் படுகின்றன. கணிப்பொறியில் பணியாற்றுவோர்க்கு ஏற்படும் சிக்கல்கள், ஐயங்கள், கேள்வி-பதில் பகுதியில் தீர்த்து வைக்கப்படுகின்றன.
’தமிழ் கம்ப்யூட்டர்’ இதழைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் நேரம் என்னும் இதழ் வெளியிடப்பட்டது. 1998 நவம்பர் முதல் கம்ப்யூட்டர் உலகம் என்னும் இதழ் வெளியிடப்படுகிறது. 1999 அக்டோபர் முதல் இணையத்திற்கென்றே ஒரு தனி இதழ் இன்டர்நெட் உலகம் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. எத்தனையோ இந்திய மொழிகளில் கணிப்பொறி அறிவியலுக்கெனத் தனித்த இதழ்களே இல்லாத சூழலில் இணையத்திற்கெனத் தனித்த இதழ் தமிழில் வெளிவருவது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
பிப்ரவரி 2000 முதல் கணிமொழி என்னும் ஒரு மாத இதழ் வெளிவருகிறது. கணிப்பொறி, இணையம், மற்றும் பல்லூடகத் தொழில்நுட்பம் பற்றிய செய்திகளை ஜனரஞ்சக நடையில் தருகின்றனர். ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இதழை ஒரு தொழில் நுட்பப் பத்திரிக்கையாக இல்லாமல், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் படிக்கக்கூடிய வெகுஜனப் பத்திரிகையாக வழங்கி வருகின்றனர்.
கணிப்பொறி அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் பற்றியும் மேற்கண்ட இதழ்களில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. சாதாரணமாகக் கணிப்பொறியின் செயல்பாடு தொடங்கி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மீத்திறன் கணிப்பொறித் தொழில்நுட்பம் (Super Computer Technology) வரையிலான அதிநவீன கணிப்பொறி அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய கட்டுரைகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. மேற்கூறப்பட்ட ஐந்து இதழ்களுமே கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தைக் கருத்தில்கொண்டு கட்டுரைகளைக் கவனமாகத் தொகுத்து வெளியிடவில்லை என்ற போதிலும், மறைமுகமாகவேனும் கணித்தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு அவை பங்களிப்புச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
-முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-8

வெள்ளி, 17 ஜனவரி, 2014

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ்


முனைவர் நா.இளங்கோ, 
Dr Samuel Fisk Green
அறிவியலும் தொழில் நுட்பமும் மனித சமூக வளர்ச்சியின் முக்கியமான மைல்கற்களாகும். உலகின் ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான சொந்த அறிவியல் தொழில்நுட்ப அறிவினைப் பெற்றே வளர்ந்து வந்துள்ளது. நாகரீகமடைந்த சமூகம் மட்டுமன்றிப் பழங்குடி மற்றும் நாட்டுப்புறச் சமூகங்களுக்கும் இவ்விதி பொருந்தும். பழந்தமிழ்ச் சமுதாயம் பெற்றிருந்த அறிவியல் தொழில்நுட்ப அறிவும் நுண்மாண் நுழைபுலனும் தமிழகத்தின் பல்வேறு வரலாற்று ஆதாரங்களில் காணக் கிடைக்கின்றன. தமிழ் இலக்கிய இலக்கண ஆதாரங்கள் மட்டுமன்றிப் புதைபொருட் சுவடுகளிலும் இன்றும் நின்று நிலைத்திருக்கும் பழந்தமிழர் கட்டிடக் கலைச் சின்னங்களிலும் தமிழர்தம் அறிவியல் தொழில்நுட்ப ஆற்றல் பொதிந்து கிடக்கின்றது. பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பப் புலமை, பல்வேறு மொழி, இன, நில ஆதிக்கச் சூழலில் சிதைவுகளுக் குள்ளாகிக் காலப்போக்கில் தன் அடையாளத்தை இழந்துநின்ற நிலையில் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த ஐரோப்பியர் வருகை பல புதிய மாற்றங்களை இந்திய அளவிலும் தமிழக அளவிலும் கொண்டுவந்தது.
ஐரோப்பியர் வருகை, அச்சியந்திர அறிமுகம், ஆங்கிலக் கல்வி மூன்றும் இணைந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின. உரைநடை வடிவம் தமிழர்க்குப் புதியதன்று என்றாலும் மேற்சொன்ன மூன்று காரணிகளும் தமிழ் உரைநடையின் பாரிய பாய்ச்சலுக்கு அடித்தளமிட்டன என்பதில் மிகையில்லை. தொடக்கத்தில் தமிழ் உரைநடை, சமயக் கருத்தாக்கங்களை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு வடிவமாக மட்டுமே பயன்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி நாட்குறிப்புகளாக, கட்டுரைகளாக, கதைகளாக, புனைகதைகளாக, பாடநூல்களாக முன்னேற்றமடைந்தன. தமிழ் உரைநடையின் முன்னேற்றப் படிக்கற்கள் ஒவ்வொன்றிலும் ஐரோப்பியப் பாதிரிமார்களின் பங்கும் பணியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.
இன்று நாம் கற்றுப் பயன்கொள்ளும் அறிவியல் தொழில்நுட்பமும் அது குறித்த கல்வியும் ஐரோப்பியர் வருகையை ஒட்டி நமக்கு அறிமுகமானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அறிவியலும் தொழில்நுட்பமும் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. ஆங்கிலேயர்களின் உலகப் பரவலாக்கமும் ஆங்கிலத்தின் உலகப் பரவலாக்கமும் இணைந்து ஆங்கிலமே உலகின் அறிவுமொழி, அறிவியல் மொழி என்ற நம்பிக்கை காலனி நாடுகளில் வேர்விட்டு நின்று நிலைபெற்ற காலம் அது. தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் தம் காலனி நாடுகளில் ஆங்கில வழியிலேயே கல்வியைப் புகட்டத் தொடங்கினர். தாய்மொழி வழியாகக் கல்வியை -அறிவியலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலமே சிந்தனைத்திறமும் புதியன படைக்கும் வேட்கையும் அதற்கான ஆராய்ச்சி ஆற்றலும் பெருகும் என்ற விழிப்புணர்வு மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. காலம் செல்லச்செல்லத் தாய்மொழிவழிக் கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த கிருத்துவப் பாதிரிமார்கள் தாய்மொழிக் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கினர். கற்கும் மக்களின் தாய்மொழியில் கல்வியை, குறிப்பாக அறிவியலைக் கொண்டு சேர்ப்பதில் கிருத்துவப் பாதிரிமார்களின் பணி மகத்தானதாயிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் மக்களின் கல்வி வளர்ச்சியிலும் அறிவுப் பெருக்கத்திலும் அக்கறை கொண்ட ஆட்சியாளர்களும் கல்வியாளர்களும் கிருத்துவச் சமய அமைப்புகளும் தமிழ்மொழி மூலம் கல்வியை - அறிவியலைப் பரப்பும் வழி பற்றி முனைப்புடன் சிந்திக்கலாயினர். தமிழில் அறிவியலைக் கற்பிக்க, பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் இளம் மாணவர்களுக்கேற்ற முறையில் பாடத்திட்டத்தை அடியொற்றித் தமிழில் அறிவியல் பாடங்களை எழுதி வழங்க வேண்டும். மேலும் அதே அறிவியல் செய்திகளைப் பொதுமக்கள் விரும்பிப் படித்துத் தெளிவு பெறும் வகையில் கட்டுரை வடிவிலும் கதைப் போக்கிலும் சுவாரசியமாகச் சொல்லும் வகையில் தருதல் வேண்டும். தொடக்கக் காலங்களில் இந்த அடிப்படையில் ஆங்கில அறிவியல் நூல்கள் மொழியாக்க வடிவாகவும், மறுஆக்கப் படைப்பாகவும் உருவாக்கப்பட்டன.
பொறியாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் 1920களில் அறிவியல் கலைச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழில் அறிவியல் சொற்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து செந்தமிழ்ச் செல்வி என்ற இதழில் எழுதினார். ஜஸ்டிஸ் பத்திரிக்கையிலும் அவர் இப்பணியைத் தொடர்ந்தார். விஞ்ஞானம், சாஸ்திரம் என்ற சொற்களுக்குப் பதிலாக அறிவியல் என்ற கலைச்சொல்லை உருவாக்கியவர் அவரே. பா.வே.மாணிக்க நாயக்கரால் அறிவியல் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1919 என்பார் இராம.சுந்தரம். (தமிழ் வளர்க்கும் அறிவியல், ப.82)
அறிவியல் தமிழ், கருக்கொண்டு, உருக்கொண்டு சற்றேறக் குறைய இருநூறு ஆண்டுகளைத் தொட்டுவிட்ட பிறகும் தமிழின் மொழி வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் இன்றும் அறிவியல் தமிழை இணைத்துக் காணும் நிலை உருவாகவில்லை. அறிவியல் தமிழ், இலக்கிய வரலாற்றில் புறக்கணிக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் குறிப்பிடும் பின்வரும் பகுதியை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாகவே அமைய முடியாது.

தமிழ்வழிக் கல்வி:
ஐரோப்பிய அறிவியலைத் தமிழில் தரும் முயற்சிகள் முதன்முதலில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது. இலங்கைக்குச் சமயப்பணி செய்யவந்து, தம் பெயரைப் பெரிய சஞ்சீவநாத சுவாமிகள் என மாற்றம் செய்து கொண்ட கிருத்துவப் பாதிரியார் ஒருவர் பதினேழாம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில் வழக்கில் இருந்த அறிவியல் உண்மைகளைத் தொகுத்து ஓலைச்சுவடிகளில் எழுதினார். அவர் காலத்தில் அச்சுமுறைகள் வழக்கில் இல்லாததால் அவருடைய முயற்சிகள் அச்சேறவில்லை. அச்சுவடி பின்னர், அண்டபிண்ட வியாக்கியானம் என்று தலைப்பில் 1874 ஆம் ஆண்டு அச்சேறியது.
அறிவியல் கருத்துகளைத் தமிழில் மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கருத்து 1830 ஆம் ஆண்டு வாக்கில் வேகமும் விறுவிறுப்பும் அடையத் தொடங்கியது. இந்த ஆண்டில்தான் தாய்மொழியாகிய தமிழ் மூலம் சிறுவர்கட்குப் பாடம் புகட்டும் தமிழ்ப் பயிற்சி மொழித்திட்டம் ஆட்சியாளர்களாலும் கல்வித்துறையினராலும் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழே பயிற்சி மொழியாக்கப்பட்டது. பாடமொழி தமிழாகியதால் அதற்கிணங்கப் பாடநூல்கள் தமிழில் எழுத வேண்டிய இன்றியமையாத தேவை ஏற்பட்டது. அதற்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

முதல் அறிவியல் மாத இதழ்
அறிவியலின் தமிழாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அம்முயற்சிக்கு வலுவ+ட்டும் முறையில்  1831இல் சென்னைக் கிருத்துவத் துண்டறிக்கைச் சங்கத்தால் தமிழ் மேகசின் எனும் பெயரில் தமிழ் மாத இதழொன்று வெளிவரத் தொடங்கியது. இவ்விதழில் அறிவியல் கட்டுரைகள் பல வெளியிடப்பட்டன.

முதல் தமிழ் அறிவியல் நூல்
தமிழில் முதல் அறிவியல் நூலை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் பாதிரியாராவார். செருமனி நாட்டைச் சேர்ந்த இவர் 1832இல் ஆங்கில அறிவியல் நூலை அடியொற்றிப் பூமி சாஸ்திரம் எனும் பெயரில் பூகோள நூல் ஒன்றினைத் தமிழில் எழுதி வெளியிட்டார். மேலும், பூகோளம், சரித்திரம், இயற்கை, வான சாஸ்திரம், மனுக்குல வரலாறு, சூரிய மண்டலம், பிரெஞ்சு இலக்கணம், கால நூல், தர்க்கம் முதலான பாட நூல்கள் பலவற்றையும் ரேனியஸ் பாதிரியார் தமிழில் எழுதியளித்துள்ளார். தமிழில் அறிவியல் நூல்களை உருவாக்குவதில் முன்னோடியாக இவர் ஆற்றியுள்ள தமிழ்ப்பணி சிறப்பிற்குரியதாகும்.
தமிழின் முதல் அறிவியல் நூலான பூமி சாஸ்திரத்தின் முன்னுரையில் ரேனியஸ் தம் அறிவியல் தமிழ் முயற்சியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
நீங்கள் குடியிருக்கிற தேசத்தின் வயனங்களையும் இந்தத் தேசம் அடங்கிய பூமியின் வயனங்களையும் அறியாமல் இந்தத் தேசமே பூலோக மென்று அநேகர் நினைக்கிற படியினாலே, நான் அந்த வயனங்களை உங்களுக்கு அறிவிக்க விரும்பி, ஐரோப்பாக் கண்டத்திலுள்ள கல்விமான்கள் பூமியைக் குறித்துச் செய்த புத்தகங்களைப் பார்த்து பூமி சாஸ்திரமெனப்பட்ட இந்தப் புத்தகத்தைச் செய்தேன்
பூமி சாஸ்திரத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச்சொற்களை ரேனியஸ் நாமங்கள் என்று குறிப்பிடுகின்றார். இந்நூலில், பூமி சாஸ்திரத்திலே குறிக்கப்பட்டிருக்கிற நாமங்களின் அட்டவணை என்ற தலைப்பில் 51 கலைச் சொற்களடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் கலைச் சொல்லாக்கத்துக்கு எந்தவிதக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்தார் என்பதை அறிதற்கில்லை. ரேனியஸ் கலைச்சொல் பட்டியலே தமிழின் முதல் கலைச்சொல் பட்டியலாகும். ரேனியஸே தமிழின் முதல் கலைச் சொல்லாக்குநரும் ஆவார். (http://www.koodal.com/tamil/research/கலைச்சொல்லாக்கம்: சாமுவேல் பிஷ் கிறின்)
இதனைத் தொடர்ந்து பூமி சாஸ்திரச் சுருக்கம், பூமி சாஸ்திரப் பொழிப்பு,பூமி சாஸ்திரப் பாடங்கள் ஆகிய நூல்கள் 1846 வரை தமிழாக்கமாகத் தமிழில் வெளிவந்தன. இக்காலக் கட்டத்தில் பள்ளியளவில் பயன்படுத்தத்தக்க அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிடுவதில் குறிப்பிடத்தக்கவை 1850க்கும் முன்னதாக உருவாக்கப்பட்ட சென்னைப் பாடசாலைப் புத்தகச் சங்கம், 1854 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட தென்னிந்திய கிருத்துவப் பாடசாலைப் புத்தகச் சங்கம் ஆகியவை ஆகும்.

தமிழில் முதல் கணித நூல்
தமிழில் கணிதத்தைப் போதிக்கும் வகையில் வெளிவந்த முதல்நூல் என்ற பெருமையைப் பெற்றது 1849ஆம் ஆண்டு வெளிவந்த பால கணிதம் என்னும் நூலாகும். இது இலங்கையிலிருந்து வெளிவந்தது. இக்கணித நூல் முழுமையான மொழிபெயர்ப்பாக அமையாமல் ஆங்கிலக் கணித முறைகளின் சிறப்பியல்புகளும் தமிழ்க் கணித முறையின் சிறப்புக் கூறுகள் சிலவும் இணைந்த முறையில் வெளிவந்தது. 179 பக்கங்களைக் கொண்ட இந்நூல் மூலநூலாகத் தமிழில் எழுதப்பட்ட கணித நூல் எனும் தோற்றத்தையுடையதாக வெளிவந்தது. அடுத்து 1855 இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரோல், விஸ்வநாதன் என்பவர்கள் அல்ஜீப்ரா கணிதத்தைத் தமிழில் இயற்கணிதம் என்ற பெயரிலும் வீச கணிதம் என்ற பெயரிலும் வெளியிட்டனர். 
Cutter's Anatomy, Physiology and Hygiene, 1852 
தமிழ் மருத்துவ அறிவியலின் முன்னோடி  டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன்
டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன் என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிருத்தவச் சமய ஊழியருமாவார். இலங்கையின் மானிப்பாய் என்ற ஊரில் மருத்துவச் சேவையும் மருத்துக் கல்வியும் வழங்கியவர். தமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிறீன், ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி, தமிழில் மருத்துவம் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தவர், தாம் இறந்தபின் தம் கல்லறையின் நினைவுக்கல்லில் தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to the Tamilsஎனப் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் பிஷ் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப் பட்டது.
அமெரிக்க மிஷன் ஊழியராக யாழ்ப்பாணம் வந்து ஊழியஞ் செய்த டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன் மேனாட்டு மருத்துவக் கலையை நம்மக்களிடையே படிப்படியாக அறிமுகப்படுத்தினார். இலங்கையின் மானிப்பாயிலே மருத்துவமனை நிறுவி, மருத்துவம் செய்ததுடன் அவர் நின்று விடவில்லை. தொடர்ந்து, தமிழர்களுக்கு மேனாட்டு மருத்துவப் பயிற்சி அளித்தார். காலப்போக்கில், தமிழிலேயே மருத்துவக் கல்வியைத் தொடங்கினார். ஆங்கில மொழி மூலம் 29 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமிழ்மொழி மூலம் 33 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமிழ் மக்களிடையே பணியாற்ற வருமுன்பே ஓரளவு தமிழ் பயின்றார், வந்தபின், கிராமம் கிரமமாகச் சென்று தமிழ் பயின்று, மேனாட்டு மருத்துவ நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டார்.
டாக்டர் கட்டர் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த மருத்துவ நூலான Anatomy, physiology and Hygiene எனும் ஆங்கில நூலை அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல் என்னும் பெயரில் 1852 இல் டாக்டர் சாமுவேல் பிஷ்கிறீன் மொழி பெயர்த்தார். தமிழ் வடிவில் முதன்முதலாக வெளிவந்த முழுமையான மருத்துவ நூல் இதுவேயாகும். இதன்பின் 1857 ஆம் ஆண்டில் டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன் அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட மருத்துவ நூல் பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம்  (Midwiferyஎன்பதாகும்.
டாக்டர் சாமுவேல் பிஷ்கிறீன் அவர்கள் மொத்தம் 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார். அவற்றில் சில:
1. கட்டரின் அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல் - Cutter's Anatomy, Physiology and Hygiene, 1852 
2. மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் - Maunsell's Obstetrics, 1857
3. பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம்  (Midwifery) 1857
4. துருவிதரின் இரணவைத்தியம் -  Druitt's Surgery, 1867
5. கிறேயின் அங்காதிபாதம் -  Gray's Anatomy, 1872
6. மனுசகரணம் -  Dalton's Physiology, 1883
7. வைத்தியாகரம் - (1872)
8. கெமிஸ்தம் -  Well's Chemistry, 1875
9. கலைச் சொற்கள் - 1875
10. இந்து பதார்த்த சாரம் -  Pharmacopoeia and India 1884 (மொழிபெயர்ப்பு உதவி)
11. வைத்தியம்  -Practice of Medicine, 1884 (மொழிபெயர்ப்பு உதவி)

இவைதவிர, பெண்கள் குழந்தைகளுக்கான மருத்துவ நூல்களும் பதார்த்த சாரம், சிகிச்சம், மருத்துவம் முதலிய வேறுபல சிறு கைநூல்களும் அவரால் வெளியிடப்பட்டன.

டாக்டர் சாமுவேல் பிஷ்கிறீன் அவர்களின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு:
தமிழின் முதல் கலைச்சொல் ஆக்குனரான ரேனியஸ் கோட்பாடுகள் எதனையும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் பிஷ்கிறீன் கலைச் சொல்லாக்கத்துக்கு முறையான விதிகளை வகுத்துக் கொண்டதோடு அவ்விதிகளைத் தம் நூலின் இறுதியில் வெளியிட்டுள்ளார். எனவே பிஷ் கிறீன் தமிழின் முதல் அறிவியல் கலைச்சொல் கோட்பாட்டாளர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
கிறீனின் கலைச்சொல்லாக்கக் கோட்பாடு வருமாறு:
1. சொல் இணக்கமும் சுருக்கமும் ஓசையுமாய் இருக்கவும் அச்சொல் தமிழில் உண்டோவென்று பின் சொல்லப்படும் எட்டு விதங்களுள் ஓர் விதிப்படி முதலில் தேடிப்பார்க்கவும்.
2. ஒரு மொழியாவது தொடர் மொழியாவது வழங்கிவரும் சொல்லை நல்லதென்றெடுக்கவும்.
3. வழக்கமான உரிய சொல்லில்லாதிருந்தால் சற்றே கருகலானாலும் குறிப்பான சொல்லாய் எடுக்கவும்.
4. குறிப்பான தனிமொழி இரண்டாவது பலவாவது சேர்த்து ஓர் சொல்லாக்கவும்.
5. குறிப்பான பகுதியும் விகுதியும் சேர்த்துச் சொல்லாக்கவும்
6. குறிப்பான ஓர் பகுதியும் ஓசையான யாதேனும் ஓர் ஈற்றசை சேர்த்து வேறுபடுத்திச் சொல்லாக்கவும்.
7. இங்கிலீஷ்மொழிமூலத்தின் பயனையுள்ள சொல் தெரிந்தெடுக்கவும்.
8. ஒரு பயனுக்குப் பல மொழியாவது ஒரு மொழிக்குப் பல பயனாவது இருந்தால் சொல் தேவைக்கிணங்கிய பொருள்பட அதை வரைவுப் பண்ணிக் கொள்ளவும்.
9. இங்கிலீஷ் தொடர் மொழியின் உறுப்புக்களைத் தனித்தனியே மொழி பெயர்த்து அம்மொழிக்குச் சரியான சொல் பிறக்க இவைகளைப் புணர்க்கவும்
10 பூரணமான சொல் தமிழிலே பெற வழுவும்போது பின்காட்டப்படும் பத்து விதிகளுள் ஓர் விதிப்படி சமஸ்கிருதத்தில் தேடவும்.
****
1. இங்கிலிஷ்சமஸ்கிருத அகராதி ஒன்றில் பார்த்து அதிலே தெரிந்து கொள்ளவும்.
2. சமஸ்கிருத இங்கிலீஷ் அகராதி ஒன்றிலே தெரிந்தெடுக்கவும்.
3. இவ்விரு அகராதிகளையும் சரியொத்துக் காட்டும் சொல் சிறந்ததென் றெடுக்கவும்.
4. பெயரிடப்பட வேண்டிய பொருளுக்கு உரிய சொல்காணாதிருந்தால் அப்பொருளின் குறிப்புக்களில் ஒன்றையாவது பலவையாவது வாடிக்கைப்படாத ஓர் சொல்லை அதற்குரியதாக்கவும்.
5. குறிப்பான தனிமொழி இரண்டாவது பலவாவது சேர்த்து ஓர் சொல்லாக்கவும்.
6. காரியத்திற்கு அதிக இணக்கமானால் ஏற்ற பகுதி விகுதிசேர்த்து ஓர் சொல் ஏற்படுத்தவும்.
7. இங்கிலீஷ் மொழிமூலத்தின் பயனையுள்ள ஓர் சொல்லாகவும்.
8. ஒரு பயனுக்குப் பலமொழியாவது மொழிக்குப் பல பயனாவது இருந்தால் சொல் தேவைக் கிணங்கிய பொருள்பட அதை வரைவு பண்ணிக் கொள்ளவும்.
9. தொடர்மொழிகள் யாதொன்றின் உறுப்புக்கிணக்கமான தமிழ்மொழி உண்டானால் அதை ஆரிய மொழியுடன் சேர்த்துச் சில இடங்களில் வழங்கலாம்.
10. இங்கிலிஷ் தொடர்மொழியின் உறுப்புக்களை வெவ்வேறாய் மொழி பெயர்த்து அதற்குச் சரியான தொடர்மொழியாய் இதன்வழி இவைகளைப் புணர்த்தவும்.
****
தமிழாவது சமஸ்கிருதத்திலாவது சொல்காணாதபோது பின் சொல்லப்படும் மூன்று விதங்களில் ஓர் விதிப்படி இங்கிலீஷ் சொல்லைச் சேர்க்கவும்.
1. சொல்லை அதன் ஒலிப்படி தமிழ் எழுத்தால் எழுதிக்கொள்ளவும்.
2. தேவையான இடங்களில் இணக்கமான விகுதி கூட்டி அதை வேறுபடுத்திக் கொள்ளவும்.
3. தொடர்மொழி யாதொன்றின் உறுப்புக்கு வாடிக்கைப்பட்ட தமிழ்மொழி உண்டானால் அதை இங்கிலீஷ் மொழியொடு சேர்த்துச் சொல்லாக்கவும் (கிறீன் 1857:205)
பிஷ் கிறீனின் இக்கோட்பாடு சொற்களை முதலில் தமிழிலும், பின் சமஸ்கிருதத்திலும் பின் ஆங்கிலத்திலும் கலைச் சொற்களை ஆக்கிக்கொள்ள வழிகாட்டுகிறது.

பதிவமைப்பு
பிஷ்கிறீனின் இக்கோட்பாட்டின்படி தாம் ஆக்கிக்கொண்ட கலைச் சொற்களைத் தம் நூல்களின் இறுதியில் அருஞ்சொல்லகராதி என்ற தலைப்பில் தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் என்ற பதிவமைப்பு முறையில் வெளியிட்டுள்ளார். பெரும்பாலான கலைச்சொற்களின் இறுதியில் தாம் உருவாக்கிய கலைச்சொற்களை அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் ஆக்கப்பட்ட சொல்லை (T.1) சமஸ்கிருதத்தில் ஆக்கப்பட்ட சொல்லை (S.2) ஆங்கிலத்தில் ஆக்கப்பட்ட சொல்லை (E.1) எனவும் குறிப்பிட்டுள்ளார். T.S.E. இவைகளுக்கு அடுத்தபடியாக வரும் எண்கள் முறையே தமிழ் சமஸ்கிருத ஆங்கில கலைச் சொல்லாக்க விதிகளைக் குறிப்பவை. (http://www.koodal.com/ tamil/ research/ கலைச் சொல்லாக்கம்: சாமுவேல் பிஷ் கிறீன்)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறிவியல் தமிழ் முயற்சிகள் பிற:
1861 ஆம் ஆண்டில் அர்னால்டு என்பவர் வான சாஸ்திரம் என்ற நூலை வெளியிட்டார். சாலமன் என்பவர் கேஷத்ர கணிதம்  (Geometry)நூலை எழுதினார். 1865 இல் ஜெகந்நாத நாயுடு என்பார், சரீர வினா விடை  (A cotechism of Human Anatomy and physiologyஎன்ற பெயரில் வினா விடை வடிவிலான மருத்துவ நூலொன்றைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். 1868 ஆம் ஆண்டில் மற்றொரு புதுவகை அறிவியல் நூல் தமிழில் வெளிவந்தது. லூமிஸ் என்பவர் எழுதிய தி ஸ்டீம் ரூ தி ஸ்டீம் என்ஜீன் என்ற தமிழ் நூலே அது. அந் நூலில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கப்பட எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாகவே அமைக்கப்பட்டுள்ளன என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.
இதே காலக்கட்டத்தில் வீட்டு விலங்கு பற்றிய ஊர் திரி விலங்கு என்ற நூலும் காட்டு விலங்குகளைப் பற்றிய வனவிலங்கியல் மற்றும் மீன்களைப் பற்றி மச்சவியல் என்ற நூல்களும் அடுத்தடுத்து வெளிவந்தன. 1883இல் வெ.பா. சுப்பிரமணிய முதலியாரால் டாக்டர் ஜேம்ஸ் மில்ஸ் அவர்களின் Veterinary Science என்ற நூலின் ஒருபகுதி இந்தியாவிலுள்ள கால்நடைகளின் வியாதிகளைப் பற்றிய தெளிவான குறிப்புகள் என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. பின்னர் 1885இல் அவரே முழு நூலினையும் இந்து தேசத்துக் காலநடைக்காரர் புஸ்தகம் என்ற இந்தியாவிலுள்ள கால்நடைகளின் வியாதிகளைப் பற்றிய தெளிவான குறிப்புகள் என்ற விரிவான தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நல்ல தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இந்நூல் வெளிவந்தது. இந்நூல் பத்து அதிகாரங்களைக் கொண்டு 238 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. நூலின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ள தமிழ் -ஆங்கிலம் கலைச்சொல் அட்டவணையில் உள்ள அடிக்குறிப்பில், அருஞ்சொல் விளக்கம், பல இங்கிலீஷ் வைத்திய புஸ்தகங்களையும் இங்கிலீஷிலிருந்த மொழி பெயர்க்கப் பட்டிருக்கிற அநேக தமிழ் வைத்திய புஸ்தகங்களையும் பார்வையிட்டுக் கூடிய கவனத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த நூலுக்கு முன்பே தமிழில் பல மருத்துவ நூல்கள் வெளிவந்துள்ளமை தெளிவாகின்றது. அந்நூல்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. இந்நூலில் கையாளப்பட்ட புதிய சொல்லாக்கங்கள் பலவும் சிறப்பான கலைச் சொற்களாக இன்றளவும் இத்துறையினரால் தமிழில் கையாளப்பட்டு வருவனவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழில் வெளிவந்த அறிவியல் நூல்களில் மிகப்பல யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டவையாகும்.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்களின் பங்கு
அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கும் கணிசமான பங்கு உண்டு. 1831 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் தமிழ்ப் பத்திரிக்கையின் பெயரே “தமிழ் மேகசின்” என்பதுதான். இதில்தான் பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளும் முதன்முதலில் வெளிவரத் தொடங்கின. இதற்குப் பிறகு நீண்டகாலம் வேறு தமிழ் இதழ்கள் எவையும் அறிவியல் செய்திகளைக் கூறும் வகையில் அமையவில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பின் 1870 இல் “அகத்திய வர்த்தமானி” என்ற பெயரில் வைத்திய முறைகளை விவரிக்கும் கட்டுரைகளுடன் தமிழ் இதழ் ஒன்று வெளிவந்தது. அடுத்து 1887 இல் “சுகசீவனி” என்ற பெயரில் வைத்திய மாத இதழொன்று பெங்க@ர் நகரிலிருந்து வெளிவந்தது. இதில் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளுடன் ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெற்று வந்தன. தொடர்ந்து 1891 ஆம் ஆண்டில் “சுகாதார போதினி” என்ற பெயரில் மருத்துவம் பற்றி, குறிப்பாகப் பொதுச் சுகாதாரம் பற்றிய கட்டுரைகளோடு கூடிய இதழ் வெளிவந்தது. தொடர்ந்து 1908 இல் “ஆரோக்கிய வழி” என்ற இதழும் ஆயுர்வேத வைத்திய முறைகளின் அடிப்படையில் “ஆயுர்வேத பாஸ்கரன்” என்ற இதழும் வெளிவந்தன. இவையெல்லாம் நீண்ட ஆயுளைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1909 இல் ப+னா நகரினின்றும் ஆரம்பிக்கப்பட்ட “நல்வழி” இதழ் நீடித்த ஆயுளுடன் இன்றும்கூட வெளிவருகிறது.
அறிவியல் இதழுக்கான தோற்றப் பொலிவுடன் “ஞானபோதினி” என்னும் ஏடு 1897 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் ஆசிரியர் பூர்ணலிங்கம் பிள்ளையாவார். இதில் இடம்பெற்ற தத்துவார்த்தக் கட்டுரைகளினும் அறிவியல் தொடர்பான கட்டுரைகளே அதிகமானவை எனலாம். இதேபோன்று மற்றொரு ஏடு கல்யாண சுந்தர நாடன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “சித்தாந்த தீபிகை” எனும் இதழாகும். இதில் சமய, தத்துவ ஞானக் கட்டுரைகளோடு பௌதிக, இரசாயனக் கட்டுரைகளும் வெளிவந்தன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தமிழாக்க நூல்கள் கணிசமான அளவுக்கு வெளிவந்தது போன்றே அறிவியல் இதழ்களும் ஓரளவு வெளிவந்தன. இவற்றுள் தொழிற்கல்வி இதழாக 1914 முதல் வெளிவரத் தொடங்கிய இதழும், அதே ஆண்டில் மருத்துவ அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதற்கென்று வெளிவந்த “வைத்தியக் கலாநிதி” இதழும் குறிப்பிடத்தக்க இதழ்களாகும். 1911 ஆம் ஆண்டில் தமிழர் கல்விச் சங்க வெளியீடாக வந்த “தமிழர் நேசன்” இதழ் ஒரு தனித்துவமான போக்கில் அறிவியல் செய்திகளையும் குறிப்புகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் நல்ல தமிழில் வெளியிட முனைந்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவ இதழ்கள் சில அடுத்தடுத்து வெளிவந்தன. ஆயுர்வேத மருத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்காக “தன்வந்திரி” என்ற இதழ் சென்னை ஆயுர்வேதக் கல்லூரி சார்பில் வெளிவந்தது. இதேபோல்  அமைந்த மற்றொரு மருத்துவ இதழ் “ஆயுர்வேதம்” என்பதாகும். இவ்விரண்டு இதழ்களும் ஆயுர்வேத மருத்துவத்தின் பல்வேறு சிறப்புத் தன்மைகளையும் நோயறி திறனையும், மருந்துகள் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. இதே சமயத்தில்தான் ஆங்கில மருத்துவ முறையான அலோபதி மருத்துவ முறை பற்றிய கட்டுரைகளைக் கொண்ட, அதிலும் குறிப்பாகக் குழந்தை நலம், மற்றும் மருத்துவ முறைகளை விளக்கும் வகையில் “ஆரோக்கியமும் சிசுவின் சுகவாழ்வும்” என்ற மாத இதழும் வெளிவந்தது. (மணவை முஸ்தபா, காலம் தேடும் தமிழ், பக். 48-50)
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய இதழ்களின் பட்டியலைக் காணும்பொழுது பெரும்பாலான இதழ்கள் மருத்துத்துறை தொடர்பான இதழ்களாகவே இருப்பது கண்கூடு. பிற அறிவியல் துறை சார்ந்த இதழ் முயற்சிகள் அரிதாகவே உள்ளன. மருத்துவத்துறை அறிவியல் தமிழாக்க நூல்கள் பெருமளவில் வெளிவர வழிவகுத்த, கலைச்சொல் ஆக்கம் முதலான பல முன்னோடிப் பணிகளுக்கு வழிகாட்டிய பெருமை டாக்டர் பிஷ் கிறீன் அவர்களையே சாரும்.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-605008

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...