திங்கள், 18 ஏப்ரல், 2011

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி 3

சமூக மீறலும் எதிர்க்குரலும்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சமூக மீறலும் எதிர்க்குரலும்:

சித்தர் இலக்கியக் காலப்பகுதி என்று அடையாளம் காணப்படும் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக் காலங்களில் தமிழ்ச் சமூகத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டு போன சமயமும் ஆலயங்களும் பார்ப்பன மேலாதிக்கத்தின் பிடியில் இருந்தன. மன்னர்கள் தொடர்ந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் நிலங்களைத் தானமளித்து வந்தனர். பெரும்பான்மையான நிலங்கள் பார்ப்பனர்களிடமும் உயர்சாதி இந்துக்களான வேளாளர்களிடமுமே குவிந்திருந்தன. பார்ப்பனர்கள் வைதீகத்தின் பேரால் சமூகத்தை வருணங்களாகப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி வைத்திருந்தனர். ஆட்சியாளர்களால் வடக்கிலிருந்தும் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட்டதோடு இறையிலி நிலங்களும் வழங்கப்பட்டன. பார்ப்பனர்கள் சமயம், சமூகம், அரசியல், பொருள்நிலை அனைத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். அடுத்த நிலையில் வேளாளர்கள் இருந்தனர். பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாயினர்.

இத்தகு நெருக்கடியான சூழலில் தமிழகத்தில் இசுலாமும் கிருத்துவமும் நுழைந்தன. இசுலாத்தின் நுழைவு வைதீகக் காப்பாளர்களுக்கு உவப்பைத் தரவில்லை. மீண்டும் வைதீகத்தையும் வருணாசிரமத்தையும் தூக்கி நிறுத்தும் முயற்சியின் உச்சக் கட்டத்தில்தான் வைதீகம் மற்றும் வருணாசிரம எதிர்ப்பு ஆயுதங்களுடன் களத்தில் இறங்கினர் தமிழ்ச் சித்தர்கள். சிவவாக்கியரின் வருகை இத்தகு சமூக மீறலோடுதான் தொடங்குகின்றது. சித்தர்களின் ஆன்மீகப் பயணம் திருமூலர், ஒளவையார் போன்றவர்களின் வழியில் யோகமார்க்கத்தோடு தொடங்கினாலும் சித்தர்களின் சமூகப் பயணம் புத்தம் புதிய தளத்தில் கொஞ்சம் சமண, பௌத்த மிச்ச சொச்சங்களோடு வீறுநடை போட்டது.

தமிழகத்தின் இத்தகு நெருக்கடியான சூழல் வைதீகத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் எதிராகக் குரலெழுப்பும் துணிவைச் சித்தர்களுக்கு மட்டுமில்லாமல் வேறு சிலருக்கும் தந்திருக்கின்றது. சாதீயத்தையும் தீண்டாமையையும் வன்மையாக விமர்சித்து எழுதப்பட்ட கபிலரகவல் மற்றும் சாதியத்தினால், தீண்டாமையினால் கொடுமையாகப் பாதிக்கப்பட்ட உத்திரநல்லூர் நங்கை என்ற பெண்பாற் புலவர் எழுதிய பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் தோற்றம் பெற்றது இக்காலத்தில்தான். இரண்டு நூல்களுமே வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பைத் தர்க்கங்களோடு பதிவு செய்கின்றன.

ஊருடன் பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ? பாய்ச்சலூர் கிராமத்தாரே


சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேறதாமோ?
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர் கிராமத்தாரே
(பாய்ச்சலூர்ப் பதிகம்)

கபிலரகவல், பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான இலக்கியங்களில் வெளிப்படும் குரலின் முழுமை பெற்ற வடிவமே சித்தர்களின் குரல் என்று கொள்வதில் பிழையில்லை.
சாதியமைப்புக்கு எதிரான சித்தர்களின் கண்டனக் குரல்கள் ஒரு சமூகச் சீர்திருத்தக் குரலாக மட்டும் ஒலிக்கவில்லை. மாறாகச் சாதீய, சனாதன ஒடுக்கு முறைகளுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சமூகத்தின் புரட்சிகர எதிர்விளைவாகவே நினைக்கத் தோன்றுகிறது.

சிவவாக்கியர் பாடல்களில் இந்த அடையாளங்கள் இன்னும் அழுத்தமாகவே வெளிப்படுகின்றன. “பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?” என்ற சிவவாக்கியரின் குரலில் வெளிப்படும் ஆவேசம், சாதீய ஒடுக்குதலில் பீறிட்டுக் கிளம்பும் தலித்திய எதிர்க்குரலன்றி வேறென்ன?.

அதேபோல் பார்ப்பனர்களின் சாதீய அடையாளத் தோற்றம் குறித்து “பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும் பிறந்ததுடன் பிறந்ததோ” என்று வினா எழுப்பும் பகுதியில் பார்ப்பனர்களின் கோவணம், குடுமி, பூணூல் முதலான அவர்களின் புனித அடையாளங்களை விசாரணைக்குட்படுத்துவது நேரடியான எதிர்த் தாக்குதலாக அமைந்துள்ளமை வெளிப்படை. சிவவாக்கியரின் கவிதைகளில் வெளிப்படும் புனைவற்ற வெளிப்படையான மொழி அதாவது உயர்சாதினரால் நாசூக்கற்றதாகக் கருதப்படும் தலித்தியச் சொல்லாடல்கள் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்தும்.

சித்தர்; சிவவாக்கியர் பாடல்களில் வெளிப்படும் சமூகமீறல்களின் எதிர்க்குரலில் வெடித்துக் கிளம்புவது ஆதிக்கச் சாதிகளுக்கெதிரான ஒரு தலித்தியப் புரட்சிக்குரலே என்று கருத வாய்ப்புள்ளது.


துணைநின்ற நூல்கள்:
1. அருணன், தமிழரின் தத்துவ மரபு-இரண்டாம் தொகுதி, 2008
2. மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு-14 ஆம் நூற்றாண்டு,
3. க.கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், 1978
4. வா. சரவண முத்துப்பிள்ளை, பெரிய ஞானக்கோவை, (ஆ.இ)
5. க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003
6. ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், 1980

வெள்ளி, 28 ஜனவரி, 2011

தென்மொழி இதழல்ல இயக்கம் - பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம் -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பாவலரேறுவும் தென்மொழியும்:

தென்மொழி 1963 ஆம் ஆண்டில் மீண்டும் முழுவேகத்தோடு வெளிவரத் தொடங்கிய காலம்தொட்டே பாவலரேறு அவர்கள் தென்மொழியையும் தென்மொழி அன்பர்களையும், மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை என்ற இதழின் நோக்கத்திற்கு ஆற்றுப்படுத்தும் முயல்வில் இதழினை இயக்கமாக்கும் பணியில் முனைப்பு காட்டி வந்தார்கள். அறிவுக் கொளுத்தல்களும் உணர்வூட்டல்களும் மட்டும் போதா, அவை செயற்பாடு எய்தவேண்டுமெனில் ஓர் இயக்கம் இன்றியமையாதது என்னும் நிலையில் இதழின் முதலாண்டிலேயே தென்மொழி இயக்கம் குறித்த ஓர் அறிவிப்பினை இதழில் வெளியிட்டார்கள்.

“மொழி, இலக்கிய, இன, வரலாற்றுப் பாதுகாப்பிற்காக மட்டுமின்றி, மக்கள் வாழ்வியற் கூறுபாடுகளை ஆங்காங்கு அறிந்து துணைநிற்கவும், அவர்தாம் அல்வழிச் செல்லுங்கால் நல்வழிப்படுத்தவும், செவ்வழிப் போவார்க்கு அவ்வழி உதவவும் குல, சமய, அரசுச் சார்பின்றி ஒரு தனித்தமிழ்க் கழகம் வேண்டுவதாயிற்று. இதன் கொள்கைகளை ஒருவாறு வகுத்துரைப்போமாயின், தமிழ்க் குலமும், தமிழர் சமயமும், தமிழ் அரசும் நிறுவுகின்ற முயல்வே ஆம் எனக்கொள்க. இத்தகைய உயர்தனிச் செம்பொருட் கழகமே, நாம் நிறுவப் புகும் தென்மொழிக் கழகம்.”

தென்மொழிக் கழகத்தின் நோக்கங்களாக ஐயா அவர்கள் வரையறுத்துள்ள தமிழ்க் குலமும், தமிழர் சமயமும், தமிழ் அரசும் நிறுவுதல் என்ற மூன்று முதன்மைத் திட்டங்களும்தான் பாவலரேறு தமிழுலகிற்கு வகுத்தளித்த சமூக அரசியல் கோட்பாடு என்று வரையறுப்பது சாலப் பொருந்தும். பிற தமிழ் இயக்கங்களிலிருந்தும், திராவிட இயக்கங்களிலிருந்தும் ஐயாவின் தென்மொழி இயக்கம் வேறுபடும் மையப்புள்ளி இதுவே. இம்மையப் புள்ளியிலிருந்தே இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சமூக, அரசியல் இயக்கங்களை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பார்க்க இயலும்.

1916, தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாற்றில் முகாமையான பாத்திரம் வகித்த இரண்டு இயக்கங்கள் தோற்றம் பெற்ற ஆண்டு. முதல் இயக்கம், மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கம், இரண்டாவது இயக்கம், நீதிக் கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம். இந்த இரண்டு இயக்கங்களுமே தமிழ்த் தேசியக் கருத்தாக்கங்களுக்குப் பேருதவி புரிந்தவை. தனித்தமிழ் இயக்கம் மொழித்துறையில் வடமொழியின் ஆதிக்கத்தை எதிர்த்தும், தென்னிந்திய நலஉரிமைச் சங்கம். சமூகத்துறையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும் தொடங்கப்பட்ட இயக்கங்கள். பாவலரேறுவின் தென்மொழி இயக்கம் மொழித்துறை, சமூகத்துறை ஆகிய இரண்டு நிலைகளிலும் வடவர்களின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய இயக்கம்.

மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கமோ வேளாளச் சார்பும் சைவ சமயச் சார்பும் உடையது. பாவலரேறு ஐயாவின் தென்மொழி இயக்கமோ தமிழ்க் குலம், தமிழர் சமயம் எனச் சாதி, மத வேறுபாடுகளற்ற பொதுமையை வேண்டிப் போராடிய இயக்கம்.
நீதிக்கட்சி மற்றும் அதன் தொடர்ச்சியில் உருவான பெரியாரின் திராவிட இயக்கங்கள் போன்றவற்றிற்குச் சாதி, மத வேறுபாடுகளற்ற பொதுமை என்ற சிந்தனை யிருந்தது என்றாலும் தமிழ் அரசு நிறுவுதல் என்ற நோக்கம் அவற்றுக்கில்லை. தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நிலம் என்ற நிலையிலிருந்து மாறுபட்டுத் திராவிடம் என்ற கற்பனைக் கருத்தாக்கத்தால் இந்த வகை இயக்கங்களுக்குத் தமிழ்த் தேசிய ஓர்மை ஏற்படவில்லை. ஐயாவின் தென்மொழி இயக்கமோ தனித்தமிழ்நாடு ஒன்றே அனைத்துச் சிக்கலகளுக்குமான ஒரே தீர்வு என்ற கொள்கையில் உறுதிப்பாட்டுடன் இருந்தது.

“தமிழினம் தலைதூக்கவும் தமிழ்நாடு தன்னிறைவுறவும் தமிழ்மொழி தூய்மையுறவும் வேண்டும். இதற்குத் தடையாக இருப்பது பார்ப்பனியமும் இந்து மதமும். இவற்றுக்கு அடிப்படையாக இருப்பது இந்திய ஒருமைப்பாடு. எனவே நமது தலையாய அரசியல் பணி இதனைச் சிதைப்பதே. தமிழக விடுதலையே நமது மூச்சு என்பது அவரது அரசியல் தருக்கம். தமிழின விடுதலையின் மூன்று பெரும் எதிரிகளாக அவர் இந்து மதத்தையும், பார்ப்பனியத்தையும், இந்திய ஒற்றுமையையும் குறிப்பிடுவது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது. பிற தனித்தமிழ் இயக்கத்தினரிடமிருந்தும், பிற தனிநாட்டு இயக்கத்தினரிடமிருந்தும் பெருஞ்சித்திரனார் வேறுபட்டு நிற்கும் மிக முகாமையான புள்ளி இது.” (அ.மார்க்சு, பாவலரேறு பெருஞ்சித்தினார் வாழ்க்கைக் குறிப்புகள், ப.173-74)
மேலே இடம்பெற்றுள்ள மேற்கோளில் மார்க்சு அவர்கள் பெருஞ்சித்திரனார் வேறுபட்டு நிற்கும் புள்ளி என்று குறிப்பிடும் பகுதிதான் தென்மொழி இயக்கத்தின் தனித்தன்மை வாய்ந்த பகுதி.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தென்மொழி இயக்கம்:

பெருஞ்சித்திரனாரின் தமிழ் இயக்க மற்றும் அரசியல் பணியில் பெரும் பங்காற்றியது அவரின் தென்மொழி இதழே. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழன்பர்களின் போர்வாளாக இவ்விதழ் விளங்கியது. முதல் இதழ் 1-8-1959 இல் வெளியானது. இதழின் குறிக்கோள் முழக்கமாகப் பின்வரும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறுவது வழக்கம்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!


தென்மொழி இதழ் தன் குறிக்கோளில் ஒருபோதும் பின்வாங்கியதும் இல்லை, சமரசம் செய்து கொண்டதுமில்லை. தென்மொழி ஓர் இதழன்று, ஓர் இயக்கம் என்று பாவலரேறு அவர்களே குறிப்பிட்டதற்கேற்ப இதழின் கட்டுரைகளில் பாடல்களில் எப்பொழுதும் தமிழுணர்வு கொழுந்து விட்டெரியும்.

1960 களின் தொடக்கத்தில் தென்மொழி முழுவீச்சில் செயல்படத் தொடங்கிய காலத்தில் தமிழின உணர்வுடைய ஒவ்வொரு தமிழனும் தென்மொழியை வாசிப்பதில் செம்மாப்பு எய்திய நிலை இருந்தது. தமிழுணர்வின் அடையாளச் சின்னமாகத் தென்மொழி அக்காலங்களில் விளங்கியது. பாவாணர், பாவலரேறு ஆகியோரின் படைப்புகள் தனித்தமிழ் உணர்வை ஊட்டியதோடு நில்லாமல் மொழி, இன, நில மீட்சிக்கான எழுச்சியை விதைப்பனவாகவும் விளங்கின. 1965 இல் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இந்தி எதிர்ப்பு மொழிப்போர் நடைபெற்றது. இம்மொழிப் போருக்கான உந்துசக்தியாக இருந்து செயலாற்றிய பெருமை தென்மொழிக்கு உண்டு.

தென்மொழியின் மைய நோக்கம் தமிழ்நாட்டு விடுதலையே என்பதனை அதன் ஒவ்வொரு இதழும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். தென்மொழி இரண்டாமாண்டின் முதல் இதழில் தென்மொழியின் இம்மைய நோக்கத்தை வலியுறுத்தி ஐயா எழுதிய ஆசிரிய உரையின் ஒருபகுதி பின் வருமாறு,

நாட்டு விடுதலை நோக்கி நாம் வைத்த வலக்காலை எக்காரணம் பற்றியும் பின்னிழுக்க மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஏதம் படுப்பாரை என்னவழி முயன்றேனும் சேதப்படுத்துவோம். இஃது உறுதி! பனிமலை அன்ன உறுதி! அரசினுக்கும் ஆளுமைக்கும் அஞ்சி, நம் முரசம் என்றும் தன் முழக்கை நிறுத்தாது. வாழ்க்கைக்கும் இன்பத்துக்கும் கெஞ்சி நாம் என்றும் நம் குரலில் குழைவைக் காட்டோம்! உயிர்மேல் நமக்கு உவப்பில்லை! செல்வ நிலைக்கு நாம் என்றும் அங்காந்ததில்லை! நாம் பிறந்த நாட்டுக்கும் மொழிக்கும் நமக்கிருக்கும் உடலும் உழைப்பும் செலவிடப்பெறும்.! ..இவற்றுக்கெல்லாம் படைக்கருவியாகத் தொடங்கியதே, தென்மொழி (சுவடி:2, ஓலை:1, ஆசிரிய உரை)

ஆசிரிய உரையில் ஐயா குறிப்பிட்டது போல் தென்மொழி கடைசிவரை தமிழ்நாட்டு விடுதலைக்கான போர்ப்படையாக விளங்கியது என்பதனையும் உயிர்மேல் நமக்கு உவப்பில்லை! செல்வ நிலைக்கு நாம் என்றும் அங்காந்ததில்லை! என்ற வரிகளுக்கு உண்மையாக ஐயாவின் முழுவாழ்க்கையும் அப்பழுக்கற்றதாக விளங்கியது என்பதனையும் காலம் மெய்ப்பித்தது.

தென்மொழி இயக்கத்துக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. தூய தமிழ் வளர்ச்சி, தமிழின அடிமை நீக்க முயற்சி, தமிழக விடுதலை என்பார் பாவலரேறு. இந்த மூன்று நோக்கங்களும் தமிழக விடுதலை என்ற ஒற்றை இலக்கில் மையம் கொண்டுள்ளன என்பதைத் தருக்க முறையில் விளக்கிச் சொல்லும் ஐயாவின் அரசியல் தெளிவு நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

இந்தியா ஒன்றாக இருக்கும்வரை இந்துமதம் இருக்கும். இந்துமதம் இருக்கும்வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும்வரை மதப்பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையிலிருந்தும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை தமிழ்மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது, தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது எனவே இந்து மதத்தினின்றும் மதப் பூசல்களினின்றும் ஆரியப் பார்ப்பனியதினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.
(பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு மலர், ப.105)

தமிழகத்தில் கடந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய தனித் தமிழியக்கம், திராவிட இயக்கம் முதலான இயக்கங்கள் மொழித் தூய்மையையும் ஆரிய மேலாதிக்க எதிர்ப்பையும் இருவேறு முரண்பட்ட நிலைகளில் சிந்தித்து மயங்கிக் கிடந்த சூழலில் பாவலரேறுவின் தென்மொழி இயக்கம் இந்த இரண்டு முரண்பட்ட இயக்கச் சிந்தனைகளையும் ஒன்றாக இணைத்துத் தமிழக விடுதலையால் அவை முழுமைபெறும் என்பதனை மெய்ப்பித்துக் காட்டியது. தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று எழுதியது பேசியதோடு மட்டும் நில்லாமல் எள்ளளவும் தம் கொள்கையிலிருந்து பிறழாமல் அடக்குமுறைகள் எத்தகு கொடியதாக இருந்தபோதும் தனியனாக நெடுவழி நடந்தவர் ஐயா அவர்கள். அவரின் போராட்ட வாழ்க்கையில் இறுதி மூச்சுவரை கொடுஞ்சிறைக்கும் அஞ்சாமல் தொடர்ந்து செயலாற்றிய காரணத்தால் சிறைவாழ்க்கை அவருக்குப் பூந்தோட்டமாயிற்று.

சனி, 15 ஜனவரி, 2011

பாவலரேறு பெருஞ்சித்தினரனார் வாழ்க்கைக் குறிப்புகள்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பாவலரேறு எனவும் பெருஞ்சித்திரனார் எனவும் போற்றி மதிக்கப்படும் இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்ற சிற்றூரில் 1933 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் நாளன்று பிறந்தார். இவரின் பெற்றோர் துரைசாமி -குஞ்சம்மாள் தம்பதியினர். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். ஆனால் இவர் தம்முடைய தந்தையார் பெயரை இணைத்துத் துரை.மாணிக்கம் என்று தன்பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார்.

பள்ளிப் பருவத்தில் குழந்தை என்னும் பெயரில் கையெழுத்து இதழையும் சிறிது காலம் கழித்து அருணமணி என்னும் புனைபெயரில் மலர்க்காடு என்ற கையெழுத்து இதழையும் நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களைத் துரை.மாணிக்கம் தம் பள்ளிப் பருவத்திலேயே இயற்றினார். சேலம் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இவரின் தமிழாசிரியர்களாக அமைந்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் சேலம் நடேசனாரும் தமிழ்மறவர் பொன்னம்பலனாரும் ஆவர்.

1950 இல் பள்ளிப்படிப்பை முடித்த துரை. மாணிக்கம் சேலம் அரசுக் கல்லூரியில் தம் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவரின் ஆசானாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைந்து சிறந்தது இக்கல்லூரியில்தான் என்பது மிக முகாமையான செய்தியாகும். கல்லூரியில் ஆசிரியர் மாணவர் என்ற நிலையில் தொடங்கிய இவர்களின் உறவு கடைசிவரை தொடர்ந்தது. கல்லூரிப் படிப்பிற்கு இடையிலேயே சேலம் ஆட்டையாம்பட்டி சின்னசாமி -செல்லம்மாள் இணையரின் புதல்வி கமலம் என்கிற தாமரையம்மையாரைக் காதலித்து மணம் புரிந்துகொண்டார். திருமண நாள் 25-4-1951.

1954 இல் அஞ்சல்துறை உதவியாளராகப் புதுவையில் பணியமர்த்தம் கிடைத்தது. பாவேந்தரோடு பழகக்கூடிய வாய்ப்பை எண்ணி மிக மகிழ்வோடு புதுவைப் பணியை ஏற்றார் பாவலரேறு. எதிர்பார்த்தது போல் பாவேந்தருடனான நட்பு கிட்டியது. பாவலரேறுவின் பாக்கள் பல இதழ்களிலும் வெளிவந்தன. 1959 இல் பாவலரேறு கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாவலரேறுவின் அச்சிதழ் நடத்தும் நோக்கம் நிறைவேறும் தக்கசூழல் அமைந்தது கடலூரில்தான்.

பாவாணர் இக்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அகரமுதலிப் பணிப் பொறுப்பேற்றிருந்தார். பாவாணரின் வழிகாட்டுதலுடன் திங்கள் ஈரிதழாக 01-08-1959 இல் கடலூரிலிருந்து பாவலரேறுவின் தென்மொழி வெளிவரத் தொடங்கியது. துரை.மாணிக்கம் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் பொறுப்பாசிரியராகத் தென்மொழியில் இடம்பெற்றார். பதினாறு இதழ்கள் வெளிவந்த நிலையில் தொடர்ந்து இதழை நடத்தமுடியாமல் பொருள் முட்டுப்பாடு காரணமாக இதழ் நின்றுபோனது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1963 பிப்ரவரி முதல் மீண்டும் தென்மொழி புத்துயிர் பெற்றது. இதழின் சிறப்பாசிரியராகப் பாவாணர் இடம்பெற்றார். உறுப்பாசிரியர்களாக ம.லெனின் தங்கப்பா, மு.சாத்தையா, செம்பியன் ஆகியோர் குறிக்கப் பெற்றனர். தென்மொழி முன்னிலும் வீறுடன் மொழி, இன, நில விடுதலைக்கான சிந்தனைகளை ஆழமாகத் தமிழர் நெஞ்சில் விதைக்கத் தொடங்கியது. இந்நிலையில் 1965 இல் இந்தி வல்லாண்மை எதிர்ப்புப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இப்போராட்ட முனைப்புகளில் தென்மொழியின் பங்கு மிகக் கணிசமானது. போராட்டங்களின் உச்சத்தில் பெருஞ்சித்திரனார் தம் அஞ்சல்துறை அரசுப்பணியை உதறித்தள்ளினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டும் வகையில் எழுதிய காரணத்தால் தென்மொழி இதழின் பொறுப்பாசிரியரான பெருஞ்சித்திரனாரைக் கைதுசெய்து வேலூர் சிறையில் அடைத்தது தமிழக அரசு.

1966 இல் தென்மொழிக்கான சொந்த அச்சுக்கூடம் நிறுவப்பெற்றது. தமிழ்ச்சிட்டு எனும் சிறுவர் இதழ் பெருஞ்சித்திரனாரால் தொடங்கப்பெற்றது. 1968 இல் திருச்சியில் நடைபெற்ற தனித்தமிழ்க் கழக மாநாட்டின் போது உலகத் தமிழ்க் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக மொழிஞாயிறு பாவாணர் அவர்களும் பொதுச் செயலராகப் பெருஞ்சித்திரனார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொழிவளர்ச்சிப் பணிகளோடு நில்லாமல் நாட்டு விடுதலை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்ற முனைப்புடன் ஐயா அவர்கள் 1972 இல் திருச்சியில் தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு என்னும் பெயரில் தமிழக விடுதலை மாநாடு ஒன்றை நடத்தினார். இரண்டாவது தமிழக விடுதலை மாநாட்டினை 1973 இல் மதுரையில் நடத்த முற்பட்டபோது காவல்துறை பெருஞ்சித்தினாரைக் கைது செய்து சிறைப்படுத்தியது. 1974 இல் சிங்கை, மலேசியத் தமிழன்பர்களின் அழைப்பையேற்று ஐயா அவர்கள் மூன்று திங்கள் சிங்கப்பூர், மலேசியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்மொழி உணர்வினையும் இனவுணர்வினையும் ஊட்டும் பல பொழிவுகளை நிகழ்த்தித் தாயகம் திரும்பினார்கள்.

1974 இல் பாவலரேறுவின் குடும்பமும் தென்மொழி அச்சகமும் சென்னைக்கு இடம் பெயர்ந்தன. 1975 இல் மூன்றாவது தமிழக விடுதலை மாநாடு சென்னைக் கடற்கரையில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அரசு மாநாட்டை நடத்தவிடாமல் ஐயா மற்றும் முரசொலி அடியார் உள்ளிட்ட இருபத்திரண்டு தனித்தமிழ் மறவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தது. 1976 இல் நெருக்கடிக் கால அடக்குமுறைச் சட்டத்தின் கீழ்ப் பாவலரேறு ஐயா அவர்களைத் தளைசெய்து சிறையிலடைத்தது இந்திய நடுவணரசு. மிசா காலங்களில் தென்மொழி தடைசெய்யப்பட்ட போது ஐயாவின் தமிழ்ச்சிட்டு இதழே தென்மொழி இதழாக வெளிவந்தது. தமிழன்பர்களின் அழைப்பையேற்றுப் பாவலரேறு அவர்கள் 1977 இல் இலங்கைப் பயணத்தையும் 1978 இல் அந்தமான் செலவையும் மேற்கொண்டார்கள்.

தொடர்ந்து, ஐயா அவர்களின் தமிழ்ப்பணியோடு குமுகாயச் சீர்திருத்தப் பணிகளும் அரசியல் செயற்பாடுகளும் முடுக்கம் பெற்றன. 1981 இறுதியில் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பு நிறுவப்பெற்றது. இதன் தொடக்க மாநாடு சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் தமிழின உணர்வாளர்கள் பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். 1982 இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் இதழாகத் தமிழ்நிலம் தொடங்கப்பட்டது. 1983 -84 இல் தென்மொழி அன்பர் திரு. வளங்கோ அவர்களின் முன்முயற்சியில் பாவலரேறு அவர்கள் ஐரோப்பியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து, பிரான்சு, செருமனி, சுவிட்சர்லாந்து நாடுகளில் தமிழ்மொழி, இன உணர்வூட்டும் பொழிவுகளை ஆற்றித் தாயகம் திரும்பினார்கள். தொடர்ச்சியாக, தமிழ் மொழி, இன நலம் நாடும் அமைப்புகளெல்லாம் தத்தம் நிகழ்ச்சிகளில் பாவலரேறு அவர்களின் பங்கேற்பினை விழைந்தன. ஐயா அவர்களும் தமிழகமெங்கும் இடையறாது பயணம்செய்து சொற்பொழிவுகளாற்றித் தொடர்ந்து செயல்களத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

1983 இல் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போரின்போதும் அதற்கு முன்பும் தமிழகம் வரும் தமிழீழத் தலைவர்கள் பலரும் பாவலரேறு அவர்களைச் சந்திப்பதும் கலந்துரையாடுவதும் கருத்துரைகள் பெறுவதும் வழக்கமாயிருந்தன. விடுதலைப் புலிகள், தமிழீழப் போரில் முனைப்புடன் வினையாற்றிக் கொண்டிருந்த காலங்களில் பாவலரேறு ஐயா அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதும் எழுதுவதும் காலத்தின் கடமை என்பதனை உணர்ந்து செயலாற்றிக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராசீவ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ ஆதரவுக் குரல்களுக்கு இந்திய அரசு தடைவிதித்தது. விடுதலைப் புலிகள் இயக்கமும் தடை செய்யப்பட்டது. ஐயா அவர்கள் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து எழுதியும் பேசியும் வந்தார்கள். 1993 இல் தமிழீழ ஆதரவுப் பேரணி நடத்தத் திட்டமிட்டதாலும் தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையைத் தென்மொழியில் தொடர்ந்து எழுதியதாலும் ஐயா பாவலரேறு அவர்களைத் தடா எனும் அடக்குமுறைச் சட்டத்தின்படி கைதுசெய்து கொடுஞ்சிறையிலடைத்தது தமிழக அரசு. தடாச் சிறைக் கொடுமைகளால்; ஐயாவின் உடல்நலம் நலிவுற்றது.

ஏழுமாத கால தடாக் கொடுஞ்சிறை வாசத்தின் பின்னர் ஐயா அவர்களின் உடல் நலிவுற்றாலும் உள்ளம் முன்னிலும் பலமடங்கு வீறுகொண்டெழுந்தது. தொடர்ந்து போராட்டங்கள், சிறைவாழ்க்கை என ஐயாவின் செயல்களங்கள் விரிந்தன.
1995 மார்ச் திங்களில் உடுமலைப்பேட்டை, ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் பங்கேற்கப் புறப்பட்ட ஐயா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை திரும்பினார். தொடர்ந்து காய்ச்சலில் துன்புற்ற நிலையிலும், தமிழே பயிற்றுமொழி, ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தித் தலைநகர்த் தமிழ்க்கழகம் நடத்திய பேரணியில் குடும்பத்தோடு பாவலரேறு ஐயா அவர்கள் கலந்துகொண்டு தளைப்பட்டார்கள். ஐயா அவர்கள் பங்கேற்ற இறுதிப் போராட்டம் இதுவே.

பின்னர் 7-6-95 இல் இராமச்சந்திரா மருத்துவமனையில் உடலநலக் குறைவு காரணமாக மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதிப்பட்டிருந்த ஐயா அவர்களின் குருதி அழுத்தம் குறைந்து சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் 11-6-1995 ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணியளவில் பாவலரேறு ஐயா இயற்கை எய்தினார்கள். உலகத் தமிழர்களின் உரிமைக்குச் செயலாற்றும் ஒப்பற்ற ஒரு போராளி மறைந்தார். 16-6-1995 அன்று ஐயா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட உலகத் தமிழன்பர்கள் கலந்துகொண்டு தமிழின விடியலுக்கான வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்.

சனி, 25 டிசம்பர், 2010

கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு - அணிந்துரை

செ. பவானியின்
கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி தமிழிலக்கிய வரலாற்றில் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் கவிதைகள் காலவெள்ளத்தால் கரைந்து போகாத கவித்துவமும் கருத்துச் செறிவும் உடையவை. பாவேந்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலத்துக் கவிஞர். இந்த இருவரது படைப்பாளுமைகளையும் உள்வாங்கித் தமக்கென ஒரு புதுப்பாதை சமைத்துக் கொண்டவர். பாரதி, பாவேந்தர் வரிசையில் புதுச்சேரி தமிழுலகிற்குத் தந்த மிகப்பெரிய கொடை கவிஞர் தமிழ்ஒளி. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதநேயப் படைப்பாளி. எங்கும் எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே உரத்துக் குரல் கொடுத்தவர். அவருடைய படைப்புகள் பல பரிமாணங்களைக் கொண்டவை.

மனிதாபிமானம், தேசியம், சமத்துவம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய மற்றும் நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத, ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் படைப்புகளில் பாராட்டினார், துணைநின்றார்.

கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவரின் காவியங்களும் சிறுகதைகளும் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே படைக்கப்பட்டிருக்கும். அவரின் வாழ்க்கைச் சூழல் அப்படி. சொகுசு மாளிகைகளில் இருந்துகொண்டு கற்பனைகளில் மிதந்து அவர் தம் இலக்கியங்களைப் படைக்கவில்லை. வறுமை, பசி, பட்டினி இவைகளோடு வாழ்க்கையே போராட்டமாய்க் காலந்தள்ளும் மக்களோடு மக்களாய் இருந்து தம் படைப்புகளைப் படைத்தவர் தமிழ்ஒளி.

கவிஞர் தமிழ்ஒளி கவிதைத் துறை மட்டுமல்லாது தமிழிலக்கியத்தின் பல்வேறு படைப்பிலக்கிய வடிவங்களிலும் தம் கவனத்தைச் செலுத்தியவர். நாடகம், வரலாறு, காவியங்கள், குறு நாவல்கள், சிறுகதைகள் என அவர் படைத்த நூல்களின் பட்டியல் நீளும். படைப்பிலக்கியத்துறை மட்டுமல்லாது ஆய்வு நூல்கள் படைப்பதிலும் தமிழொளி முத்திரை பதித்துள்ளார்.

II
கவிஞர் தமிழ்ஒளியின் ‘உயிரோவியங்கள்’ சிறுகதைத் தொகுதி பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இச் சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகளை ஆய்வு செய்து கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் -ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நூலாகத் தந்துள்ளார் செ.பவானி. இவர் என்னுடைய வழிகாட்டுதலில் தம் இளமுனைவர் பட்ட ஆய்வினை இதே தலைப்பில் நிகழ்த்தியவர். அந்த ஆய்வேடே நூலாக்கம் பெற்று இப்பொழுது வெளிவருகின்றது.

இன்றைய கல்வியாளர்களின் ஆய்வுகள் குறித்துக் கல்விப் புலத்துக்கு வெளியே ஓர் அவநம்பிக்கையே நிலவிவரும் சூழலில் இத்தகைய ஆய்வுகள் வெளிவருவது ஒரு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயலாகும். பட்டங்களுக்காக நிகழ்த்தப்படும் பல்கலைக் கழக ஆய்வுகள் கடந்த முப்பதாண்டுகளில் பல்கிப் பெருகிவிட்டன. அதிலும் பல பல்கலைக் கழகங்கள் வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தம் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் இளமுனைவர் பட்டப் படிப்புகளைத் தொடங்கியபோது கல்வியாளர்கள் மற்றும் நல்ல ஆய்வாளர்கள் மத்தியில் ஓர் அச்சம் தொற்றிக்கொண்டது. அந்த அச்சம் நியாயமானதுதான் என்பதனைக் கடந்தகால நடைமுறைகள் நமக்கு நிரூபித்தன. ஆனால் அதிலும் ஒரு மெல்லிய ஆறுதலை இப்படிப்பட்ட சில நல்ல ஆய்வுகள் நமக்கு வழங்கின. அந்தவகையில் ஆய்வாளர் பவானி அவர்களின் இவ் ஆய்வு முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

கவிஞராக மட்டுமே தமிழுலகிற்குத் தெரிந்த கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆய்வாளர் இப்பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டமையே அவரின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட பொருளை நுணுகிக் கற்று வகைதொகை செய்து நல்லதொரு ஆய்வாகப் பின்வரும் நான்கு இயல்களாக அமைத்துள்ளார் செ.பவானி.

1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் படைப்பும்
2. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் கருவும் உருவும்
3. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் பாத்திரப்படைப்பு
4. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாயப் பார்வை.


நான்கு இயல்களிலும் இழையோடியிருப்பது கவிஞர் தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகள்தாம் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

உயிரோவியங்கள் நூலின் முன்னுரையில் கவிஞர் இன்குலாப் தமிழ்ஒளியின் மனிதநேயம் எப்படிப்பட்டது என்பதை மிகத் தெளிவாக வரையறுக்கின்றார். அப்பகுதி வருமாறு,
“மனிதநேயம் என்பது ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுவனையும் ஒரே நிலையில் வைத்து, அன்பு காட்டுவதன்று. .. .. மனசாட்சியுள்ளவன் இருவருக்கும் பொதுவாக நிற்கமாட்டான். தமிழ்ஒளியின் மனிதநேயம் ஒடுக்குமுறைக்கு எதிரானது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒருகுரல் வேண்டியிருக்கிறது. தம் காலத்தில் கவிஞர் தமிழ்ஒளி அத்தகைய குரலாக இருந்திருக்கின்றார். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் தமக்குச் சொந்தமான ஒரு குரலைக் கேட்காமல் போனதுதான் பரிதாபத்துக்குரியது. இதற்குக் கவிஞர் தமிழ்ஒளியோ, ஒடுக்கப்பட்டவர்களோ பொறுப்பாக மாட்டார்கள். இந்த நியாயத்தின் குரல்களைத் தமது பகட்டு ஆரவாரத்தால் மூழ்கடிக்கும் முதலாளியம் மட்டுந்தான் இதற்குப் பொறுப்பாகும்.”

கவிஞர் இன்குலாப்பின் மேற்கோளைத் தமது நூலில் எடுத்துக்காட்டும் நூலாசிரியர் செ.பவானி தமது நூலின் மையப்புள்ளியாக தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகளை அமைத்துக் கொண்டுள்ளார். ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான குரலாகவும் சிறுகதையாசிரியர் தமிழ்ஒளியின் குரல் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அவரின் ஆய்வுநூல் அமைந்துள்ளது.

தமிழ்ஒளியின் சிறுகதைகள் எப்பொழுதும் பசி, பட்டினி, வறுமை, சாவு என்று ஒரே சோக மயமாயிருக்கிறது என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரின் சிறுகதையிலேயே அவர் பதில் சொல்கிறார். பட்டினிச் சாவு கதையில் கதையாசிரியரும் (தமிழ்ஒளி) அவரது நண்பர் ராமுவும் பேசிக் கொள்வதாக வரும் உரையாடல் பின்வருமாறு,

‘சமுதாயம் முன்னேறுகிறது’ என்று ராமு சொன்னான், ‘இல்லை செத்துக் கொண்டிருக்கிறது’ என்று நான் பதில் சொன்னேன். ‘உனக்கு எப்பொழுதும், சாவு, பயங்கரம், ட்ராஜெடி இதுதான் நினைவு, எல்லாம் கற்பனை’ என்று தன்னுடைய எதிர் வாதத்தைத் தொடங்கினான்.
‘எட்ட இருந்துகொண்டு சமுதாயத்தைப் பார்த்தால் எல்லாம் கற்பனையாகத்தான் இருக்கும்’ என்று நான் சூடு கொடுத்தேன்.
‘நான் எழுத்தாளனல்ல, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க. எனக்கு வேறே வேலையிருக்கிறது’ என்றான்.

சமுதாயத்தை எட்ட இருந்துகொண்டு வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் தமழ்ஒளியின் சிறுகதைகள் சோகக் கற்பனைகளாகத் தோன்றலாம். ஆனால் அவை புனைவுகளற்ற முழு உண்மைகள். அச்சோகங்களைப் பதிவுசெய்வதும் தீர்வுகளை முன்மொழிவதும் படைப்பாளனின் தலையாய பணி என்பதையே தமிழ்ஒளி தம் சிறுகதைகளில் பிரகடனம் செய்கிறார்

காலவெள்ளத்தில் கரைந்துபோன தமிழ்ஒளியின் சிறுகதைகளை ஆய்வுப் பொருளாக்கி மறைக்கப்பட்டஃ மறுக்கப்பட்ட அவரின் படைப்பாளுமையை வெளிக் கொணர்கிறார் நூலாசிரியர். சிறுகதைகளின் வடிவ நேர்த்தியில் வெளிப்படும் படைப்பாளுமையை விட உணர்வு பூர்வமான உள்ளடகத்தால் வெளிப்படும் படைப்பாளுமையே சிறந்தது. அந்தவகையில் தமிழ்ஒளியின் சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்பாக விளங்குகின்றன என்பதே அவரது ஆய்வு நமக்குத் தரும் செய்தியாகும்.

நல்லதோர் ஆய்வுப்படைப்பை வழங்கியிருக்கும் நூலாசிரியர் செ.பவானியின் ஆய்வுப்பணியும் எழுத்துப்பணியும் தொடர வாழ்த்துக்கள்.


6-12-2010

தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு -அணிந்துரை

வி.அமலோற்பவமேரியின்
தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு
-அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கவிஞர் தமிழ்ஒளி இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவி. அவர் திராவிட இயக்கச் சிந்தனைகளில் கால்கொண்டு பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளில் தம் சிறகுகளை விரித்தவர். சுரண்டுகிறவனும் சுரண்டப்படுகிறவனுமாகப் பிரிந்துகிடக்கும் இச்சமூக அமைப்பில் ஒரு படைப்பாளி யார் பக்கம் நிற்கவேண்டும் என்பதில் தெளிவான பார்வை அவருக்கிருந்தது.

ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா!
நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும்
கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா?
துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா?


என்று தம் கவிதைகளில் கேள்வியெழுப்பும் கவிஞர் தமிழ்ஒளி, தம் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான் இருந்தார். 1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி, தமிழ், தமிழினம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே நிலைபெற்ற சிலை, வீராயி ஆகிய காவியங்களைப் படைத்தார்.

1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தார். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார். 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953க்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் கவிதைகள், காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தம் இன்னல் மிகுந்த வாழ்வின் கடைசிவரை உழைக்கும் மக்களுக்கான படைப்பாளியாகவும் களப் போராளியாகவும் வாழ்ந்தவர். ஆக, தமிழிலக்கிய நெடும்பரப்பின் மிகச்சிறந்த பொதுவுடைமைக் கவிஞராக வாழ்ந்து மறைந்த தமிழ்ஒளிக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைத்த பாடில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்துவிட்டதைத் தவிர, அவர் வேறு ஒருபிழையும் செய்யவில்லை. தமிழகத்தின் சாதீயச் சமூகம் தமிழ்ஒளியை மறைத்துவிட்டது, மறந்துவிட்டது.

ஆனால், கடந்த முப்பதாண்டுகளில் கல்விப்புலத்தில் பெருகிவரும் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான களம் காலத்தால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல படைப்பாளிகளின் படைப்புகளை ஆய்வு செய்து தமிழுலகிற்கு மீட்டெடுத்து வருகின்றது. அவ்வகையில் வி. அமலோற்பவமேரி என்னுடைய வழிகாட்டுதலில் உருவாக்கிய இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமே தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு என்கிற இந்நூல்.

நாற்பதாண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி கவிதை, காவியங்கள், சிறுகதை, குறுநாவல்கள், நாடகம், ஆய்வுக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல துறைகளிலும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவை அனைத்தும் 1944 முதல் 1965 வரையிலான இருபத்தோரு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை. சிறுகதை, நாடகம், குறுநாவல்கள், ஆய்வு என அவரின் படைப்புகள் பன்முகப்பட்டாலும் தமிழ்ஒளிக்கு மிகுந்த பெயரும் புகழும் பெற்றுத்தந்த படைப்புகள் அவரின் குறுங்காவியங்களே. தமிழ்ஒளி மொத்தம் ஒன்பது குறுங்காவியங்களைப் படைத்துள்ளார்.

குறுங்காவியங்கள்: எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டு
1. கவிஞனின் காதல் 1944 1947
2. நிலைபெற்ற சிலை 1945 1947
3. வீராயி 1947 1947
4. மேதின ரோஜா 1952 1952
5. விதியோ? வீணையோ? 1954 1961
6. மாதவி காவியம் 1958 1995
7. கண்ணப்பன் கிளிகள் 1958 1966
8. புத்தர் பிறந்தார் 1958 1966
9. கோசலக்குமரி 1962 1966


மேற்கண்ட தமிழ்ஒளியின் ஒன்பது குறுங்காவியங்களில் முதல் மூன்று குறுங்காவியங்களான கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி குறித்த ஆய்வே இந்நூலாகும்.

II
இந்நூலாசிரியர் வி.அமலோற்பவமேரி என்னுடைய ஆய்வு மாணவர். சிறந்த கவிஞர், நல்ல மேடைப் பேச்சாளர், நுணுக்க ஆய்வாளர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் வழியாகத் தமிழுலகம் அறிந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரர். மாடலிங் துறையிலும் ஆர்வத்தோடு முனைந்து செயல்படுபவர். முற்போக்கு இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர். அதுமட்டுமன்றி உழைப்பே உயர்வு என்ற கொள்கையாளராய் நாளும் சுறுசுறுப்போடு தொடர்ந்து இயங்கிவருபவர். தம் இளமுனைவர் பட்டத்திற்கு வழக்கமான தலைப்புகளிலிருந்து மாறுபட்டு முற்போக்குச் சிந்தனையாளரும் பாட்டாளிகளின் தோழனும் மிகச்சிறந்த மனிதநேயப் படைப்பாளியுமான தமிழ்ஒளியின் படைப்புகளை ஆய்வுப்பொருளாகத் தேர்ந்தெடுத்தமையே இந்நூலாசிரியரின் சமூக அரசியல் ஈடுபாட்டினை வெளிப்படுத்தும். எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருளை வகைதொகை செய்பவராக மட்டும் அமையாமல் சமூகம் பயன்கொள்ளத்தக்க வகையில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைத் தமிழுலகிற்கு மிகச்சரியாக இனம் காட்டும் பெரும்பணியினையும் இவர் செய்துள்ளார். அந்தவகையில் நூலாசிரியர் அமலோற்பவமேரியின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது.

தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்யும் இந்நூல் பின்வரும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் பணியும்.
2. கவிஞர் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் ஓர் அறிமுகம்.
3. சமூக நோக்கில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள்.

முதல் இயல், தமிழனே! நான் உலகின் சொந்தக் காரன், தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து எனப் பிரகடனம் செய்துகொண்ட மக்கள்; கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் அவரின் படைப்புகள் குறித்த அறிமுகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இயல், காவிய இலக்கியவகை குறித்த அறிமுகங்களோடு ஆய்வுக்குரிய மூன்று குறுங்காவியங்களின் கதைச் சுருக்கம் மற்றும் பாத்திரப்படைப்புகளை அறிமுகம் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இயல், ஆய்வுக்குரிய கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி காவியங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்கிறது. அந்த வகையில் இக்குறுங்காவியங்களில் பேசப்படும் சாதியச் சிக்கல்கள், தொழிலாளர் பிரச்சனை, வறுமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பொதுவுடைமைச் சமூகத்திற்கான போராட்டம், தமிழ்மொழி உயர்வு முதலான உள்ளடக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இவ்வியல்.

நூலின் நிறைவுப் பகுதியில் நூலாசிரியர் தரும் முடிப்புரை பயன்தரத்தக்க வகையில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளது.

நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கவொன்றாகும். எளிய இனிய மொழிநடையில் இவ்ஆய்வுநூல் அமைந்திருக்கின்றது. ஆய்வு நூல்களுக்கே உரிய கடுநடை தவிர்க்கப்பட்டு எளிய இனிய தமிழில் இடையிடையே தமிழ்ஒளியின் கவிதைப் பகுதிகள் மிளிர ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் மாணவர்களும்கூட இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
கவிஞர் தமிழ்ஒளி, 1947இல் வெளியிட்ட வீராயி காவியத்தின் முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்.

“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்"


கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பாளுமை அளப்பரிது. அவர் படைப்பின் உள்ளடக்கங்களோ வீரியமிக்க புரட்சி வித்துக்களைக் கொண்டது. காலத்தின் தேவை கருதி இவ்வாய்வு நூலைத் தமிழுலகிற்கு உவந்தளிக்கும் வி. அமலோற்பவமேரி பாராட்டுக்குரியவர். அவரின் சமூகப் பணியும் எழுத்துப் பணியும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

கோவைக் கொண்டாட்டம் - அணிந்துரை

தோழர் புதுச்சேரி லெனின் பாரதியின்
கோவைக் கொண்டாட்டம்

அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
புதுச்சேரி-8


இன்றைய சமூக அரசியல் சூழலில் ஒரு தகவலைப் பதிவு செய்வதிலும் பதிவு செய்யாமல் விடுவதிலும் கூட அரசியல் உண்டு. ஏனென்றால் பதிவுகளே வரலாற்றிற்கான மூலங்கள். எப்பொழுதும் வரலாறுகள் பதிவுகளைக் கொண்டே புனையப்படுகின்றன.
* * *

கோவைக் கொண்டாட்டம் என்ற இந்நூல் தோழர் புதுச்சேரி லெனின் பாரதியின் அரிய உழைப்பால் உருவான ஒரு தொகுப்பு நூலாகும். கடந்த 2010 ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் கோயம்பத்தூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டிய ஒரு சிறிய பதிவே இந்நூல்.

தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசும் அதன் பிதாமகன் கலைஞர் அவர்களும் இம்மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. பொதுவாக இத்தகு அரசியல் பின்னணி கொண்ட மாநாடுகள் மிகப் பெரிய அளவில் கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் மட்டுமே கவனம் செலுத்தி வேடிக்கை காட்டுவதுதான் வாடிக்கை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சற்றே விதிவிலக்கானது. கோவை மாநாட்டிலும் கொண்டாட்டங்கள் உண்டு என்றாலும் அதில் நேரடியான அரசியல் வண்ணங்கள் தலைகாட்டவில்லை என்பது ஓர் ஆறுதல். மாநாட்டின் இன்றியமையாத பகுதியான கல்வியாளர்கள் பங்கேற்ற ஆய்வரங்கப் பகுதிகள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செம்மையாக நடைபெற்றன என்பது மாநாட்டின் தனிச்சிறப்பு.

தோழர் லெனின் பாரதி மிகச்சிறந்த சமூக சேவகர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சமூக அரசியல் மாற்றத்தை விரும்பும் ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர். உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தோழர் லெனின் பாரதியின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பதற்கான ஓர் அடையாளமே அவரின் கோவைக் கொண்டாட்டம் என்ற இத்தொகுப்பு நூல்.

இந்நூலைத் தாம் தொகுத்து வெளியிட முயன்றதற்கான நோக்கத்தை அவரே நூலின் முன்னுரையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்,

மாநாட்டு நிகழ்வுகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் தமிழக அரசு தொகுப்பாக வெளிக்கொணர வேண்டுமென அறிஞர் பெருமக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறிய படைப்பாவது பதிவாக வேண்டுமே என்ற ஆதங்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்தச் சிறிய நூல். முடிந்தவரை பேச்சுகளும் தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. (முன்னுரை)

பதிவுகளுக்கான ஆதாரங்களாக அவர் எடுத்துக்கொண்டன ஹிந்து, தினமலர், தினகரன், தினத்தந்தி, தீக்கதிர் முதலான செய்தித்தாள்களில் இடம்பெற்ற தகவல்களைத்தாம். நமது தினசரிகளிலிருந்து இத்தகு நல்ல தகவல்களைத் திரட்ட முடிந்திருந்திருக்கிறது என்பதே ஒரு வரலாற்று அதிசயம்தான்.

மாநாடு தொடர்பான அவரது பதிவுகளை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை,
1. மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள்.
2. மாநாட்டுப் பங்கேற்பாளர்களின் கருத்துப் பதிவுகள்.
(குறிப்பாக வெளிநாட்டுப் பேராளர்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்கள்)
3. மாநாட்டோடு ஒட்டிய தகவல் குறிப்புகள்.

மாநாட்டு உரைகளில் தமிழக முதல்வரின் தொடக்கவிழாப் பேருரையும் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வாழ்த்துரையும் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக, யெச்சூரி அவர்களின் உரையில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டுக்குப் பிந்தைய பணிகள் பற்றிய கருத்துரை கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

அவை வருமாறு,
தமிழுக்குப் பழமையான மரபு உண்டு. இன்றைக்கும் மிகவும் பொருந்தக் கூடிய பெருமைமிகு இலக்கியங்களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது. இது தவிர ஏட்டில் எழுதப்படாத வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும் அபரிமிதமாகக் கொண்டுள்ள மொழி தமிழ். இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களை உடனடியாக ஆவணப்படுத்தி என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாக மாற்றிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

நாட்டுப்புற இசை, நாடகம், கூத்து, நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கி~ங்களாகக் கிராமப்புற மக்கள் மத்தியில் விளங்குகின்றன. இவற்றைப் பாதுக்காக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநாடு எடுக்குமென்று நான் நம்புகிறேன்.

தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களால் தமிழ்ச் சமூகம் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்பு மூலம் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்து இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். (சீத்தாராம் யெச்சூரி)

இடதுசாரிகள் ஆதரவு பெற்ற அரசால் தமிழ் செம்மொழித் தகுதி பெற்றது என்ற வரலாற்றை யெச்சூரி அவர்கள் தம்பேச்சின் இடையே குறிப்பிட, அதனையே தலைப்பாக்கி அவரது பேச்சைத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பது லெனின் பாரதியின் படைப்பாற்றலுக்குத் தக்க சான்றாகும்.

தொகுப்பின் இடையிடையே பொருத்தமான படங்களை இடம்பெறச் செய்திருப்பது நூலுக்கு அழகு சேர்ப்பதோடு வரலாற்று ஆதாரங்களாகவும் அமைந்து சிறக்கின்றன. சான்றாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி இந்திய அஞ்சல் துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது என்ற தகவலோடு மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட அந்த அஞ்சல் அட்டையின் படத்தையும் நூலில் இணைத்திருப்பதனைக் குறிப்பிடலாம்.

செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் முன்மொழிந்த மாநாட்டுத் தீர்மானங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் மிக மிக இன்றியமையாதனவாகும். வருங்காலத் தலைமுறைக்கும் தமிழின் வருங் காலத்துக்கும் தேவைப்படுவன அவை. மாநாட்டுத் தீர்மானங்களைத் தொடர்ந்து தீர்மானங்களின் செயல்வடிவம் குறித்த சில தகவல்களும் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையூட்டக் கூடியதாயுள்ளது.

நூலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய பதிவுகள்:
1. தொடக்கவிழாவில் அணிவகுத்த இனியவை நாற்பது என்று பெயரிடப்பட்ட அலங்கார ஊர்திகள் பற்றிய விபரங்கள்.
2. செம்மொழி மாநாட்டுக் கண்காட்சி அரங்கு குறித்த தகவல்கள்.
3. சமயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கருத்தரங்கச் செய்தித் திரட்டுகள்.
4. ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்ட பல இன்றியமையாத தகவல்களின் தொகுப்பு.
5. வெளிநாட்டுத் தமிழறிஞர்களின் பேட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுவையான தகவல்கள்

தொகுப்பாசிரியர் தோழர் லெனின் பாரதி தம்முடைய குரலை எங்குமே பதிவு செய்யாமல் விட்டிருப்பதும் மாநாட்டுக்கு முன்னும் பின்னுமான அரசியல் குறித்தும் அதற்கான எதிர்வினைகள் குறித்தும் ஏதும் பேசாமல் மௌனம் சாதித்திருப்பதும் இத்தொகுப்பின் பலமா? பலவீனமா? என்கிற விவாதம் இந்நூலில் தொக்கி நிற்கின்றது. பதிவாக வேண்டும் என்ற நூலூசிரியரின் ஆதங்கமே இந்நூலை உருவாக்கக் காரணம் என்பதனால் தொகுப்பு முயற்சி என்ற வகையில் நூலாசிரியர் மிகக் கடுமையாக உழைத்து நூலை உருவாக்கியுள்ளார். தோழர் லெனின் பாரதியின் தமிழார்வமே இத்தகு கடின உழைப்புக்கு உந்துசக்தியாக இருந்துள்ளது. செம்மொழிக்கு அணிசேர்க்கும் வகையில் கோவைக் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ள நூலாசிரியரின் பணி பாராட்டுதலுக்குரியது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...