திங்கள், 18 ஏப்ரல், 2011

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி 3

சமூக மீறலும் எதிர்க்குரலும்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சமூக மீறலும் எதிர்க்குரலும்:

சித்தர் இலக்கியக் காலப்பகுதி என்று அடையாளம் காணப்படும் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக் காலங்களில் தமிழ்ச் சமூகத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டு போன சமயமும் ஆலயங்களும் பார்ப்பன மேலாதிக்கத்தின் பிடியில் இருந்தன. மன்னர்கள் தொடர்ந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் நிலங்களைத் தானமளித்து வந்தனர். பெரும்பான்மையான நிலங்கள் பார்ப்பனர்களிடமும் உயர்சாதி இந்துக்களான வேளாளர்களிடமுமே குவிந்திருந்தன. பார்ப்பனர்கள் வைதீகத்தின் பேரால் சமூகத்தை வருணங்களாகப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி வைத்திருந்தனர். ஆட்சியாளர்களால் வடக்கிலிருந்தும் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட்டதோடு இறையிலி நிலங்களும் வழங்கப்பட்டன. பார்ப்பனர்கள் சமயம், சமூகம், அரசியல், பொருள்நிலை அனைத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். அடுத்த நிலையில் வேளாளர்கள் இருந்தனர். பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாயினர்.

இத்தகு நெருக்கடியான சூழலில் தமிழகத்தில் இசுலாமும் கிருத்துவமும் நுழைந்தன. இசுலாத்தின் நுழைவு வைதீகக் காப்பாளர்களுக்கு உவப்பைத் தரவில்லை. மீண்டும் வைதீகத்தையும் வருணாசிரமத்தையும் தூக்கி நிறுத்தும் முயற்சியின் உச்சக் கட்டத்தில்தான் வைதீகம் மற்றும் வருணாசிரம எதிர்ப்பு ஆயுதங்களுடன் களத்தில் இறங்கினர் தமிழ்ச் சித்தர்கள். சிவவாக்கியரின் வருகை இத்தகு சமூக மீறலோடுதான் தொடங்குகின்றது. சித்தர்களின் ஆன்மீகப் பயணம் திருமூலர், ஒளவையார் போன்றவர்களின் வழியில் யோகமார்க்கத்தோடு தொடங்கினாலும் சித்தர்களின் சமூகப் பயணம் புத்தம் புதிய தளத்தில் கொஞ்சம் சமண, பௌத்த மிச்ச சொச்சங்களோடு வீறுநடை போட்டது.

தமிழகத்தின் இத்தகு நெருக்கடியான சூழல் வைதீகத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் எதிராகக் குரலெழுப்பும் துணிவைச் சித்தர்களுக்கு மட்டுமில்லாமல் வேறு சிலருக்கும் தந்திருக்கின்றது. சாதீயத்தையும் தீண்டாமையையும் வன்மையாக விமர்சித்து எழுதப்பட்ட கபிலரகவல் மற்றும் சாதியத்தினால், தீண்டாமையினால் கொடுமையாகப் பாதிக்கப்பட்ட உத்திரநல்லூர் நங்கை என்ற பெண்பாற் புலவர் எழுதிய பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் தோற்றம் பெற்றது இக்காலத்தில்தான். இரண்டு நூல்களுமே வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பைத் தர்க்கங்களோடு பதிவு செய்கின்றன.

ஊருடன் பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ? பாய்ச்சலூர் கிராமத்தாரே


சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேறதாமோ?
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர் கிராமத்தாரே
(பாய்ச்சலூர்ப் பதிகம்)

கபிலரகவல், பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான இலக்கியங்களில் வெளிப்படும் குரலின் முழுமை பெற்ற வடிவமே சித்தர்களின் குரல் என்று கொள்வதில் பிழையில்லை.
சாதியமைப்புக்கு எதிரான சித்தர்களின் கண்டனக் குரல்கள் ஒரு சமூகச் சீர்திருத்தக் குரலாக மட்டும் ஒலிக்கவில்லை. மாறாகச் சாதீய, சனாதன ஒடுக்கு முறைகளுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சமூகத்தின் புரட்சிகர எதிர்விளைவாகவே நினைக்கத் தோன்றுகிறது.

சிவவாக்கியர் பாடல்களில் இந்த அடையாளங்கள் இன்னும் அழுத்தமாகவே வெளிப்படுகின்றன. “பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?” என்ற சிவவாக்கியரின் குரலில் வெளிப்படும் ஆவேசம், சாதீய ஒடுக்குதலில் பீறிட்டுக் கிளம்பும் தலித்திய எதிர்க்குரலன்றி வேறென்ன?.

அதேபோல் பார்ப்பனர்களின் சாதீய அடையாளத் தோற்றம் குறித்து “பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும் பிறந்ததுடன் பிறந்ததோ” என்று வினா எழுப்பும் பகுதியில் பார்ப்பனர்களின் கோவணம், குடுமி, பூணூல் முதலான அவர்களின் புனித அடையாளங்களை விசாரணைக்குட்படுத்துவது நேரடியான எதிர்த் தாக்குதலாக அமைந்துள்ளமை வெளிப்படை. சிவவாக்கியரின் கவிதைகளில் வெளிப்படும் புனைவற்ற வெளிப்படையான மொழி அதாவது உயர்சாதினரால் நாசூக்கற்றதாகக் கருதப்படும் தலித்தியச் சொல்லாடல்கள் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்தும்.

சித்தர்; சிவவாக்கியர் பாடல்களில் வெளிப்படும் சமூகமீறல்களின் எதிர்க்குரலில் வெடித்துக் கிளம்புவது ஆதிக்கச் சாதிகளுக்கெதிரான ஒரு தலித்தியப் புரட்சிக்குரலே என்று கருத வாய்ப்புள்ளது.


துணைநின்ற நூல்கள்:
1. அருணன், தமிழரின் தத்துவ மரபு-இரண்டாம் தொகுதி, 2008
2. மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு-14 ஆம் நூற்றாண்டு,
3. க.கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், 1978
4. வா. சரவண முத்துப்பிள்ளை, பெரிய ஞானக்கோவை, (ஆ.இ)
5. க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003
6. ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், 1980

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...