திங்கள், 18 ஏப்ரல், 2011

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -1

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல்


முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8


தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர்களின் காலம் என்பது சிக்கலான ஒரு விவாதக் கருத்தாகவே இருந்து வருகின்றது. திருமந்திரத்தில் சித்தன் என்ற சொல் காணப்படுவதால், திருமந்திரக் காலமாகிய கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே சித்தர் மரபு தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். திருமூலரே தமிழகத்தின் முதல்சித்தர் என்னும் கருத்து ஆய்வுலகில் வலுப்பெற்றிருக்கிறது. ஆனால் பிற்காலச் சித்தர்களுடைய பாடல்களே இன்று நமக்குக் கிடைத்திருக்கின்றன. பழைய நிகண்டுகள் எவற்றிலும் சித்தர் என்ற சொல் காணப்படாததால் நிகண்டுக் காலமான கி.பி. பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டுகட்குப் பிறகே தமிழ்ச் சித்தர்கள் தோன்றியிருக்க வேண்டும் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி, இடைக்காடு, கடுவெளி, குதம்பை மற்றும் பாம்பாட்டிச் சித்தர்கள் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் 16, 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தம் தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டு வரிசை நூற்களில் வரையறுக்கின்றார் மு.அருணாசலம். திருமூலர் காலத்திற்கும், தமிழ்ச் சித்தர் இலக்கியக் காலத்திற்கும் இடையே ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளி தென்படுகிறது.

சித்தர்கள் யோகம், மருத்துவம், சோதிடம் போன்ற பலதுறைகளிலும் நூல் செய்துள்ளார்கள். இவர்களில் யோகம் பற்றி நூல் செய்த சித்தர்களே காலத்தால் முற்பட்டவர்கள்;. இவ்வகைச் சித்தர் பாடல்களில் யோகம் குறித்த செய்திகளோடு சமயச் சடங்குகள், உருவ வழிபாடு, சாதிப்பிரிவினை போன்றவற்றிற்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். சித்தர் பாடல்களில் கவித்துவம் நிறைந்த இலக்கியத் தகுதி பெறுவன இவ்வகைச் சித்தர் பாடல்களே. எனவே சித்தர் பாடல்களில் யோகச் சித்தர் பாடல்களே சித்தர் இலக்கியம் எனும் சிறப்பினைப் பெறுகின்றன.

யோக இலக்கியம் படைத்த சித்தர்களுள் ஒளவையார், சிவவாக்கியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களாவர். (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.7) சமயங்களின் ஆதிக்கத்தில் இருந்தும் சமயச் சடங்குகளின் பிடியில் இருந்தும் மக்களை விடுவிக்கும் பொருட்டு கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் முகிழ்த்த சித்தர் நெறியே சமூக மீறல்களுக்கான எதிர்க்குரலை அழுத்தமாகப் பதிவு செய்த பெருமைபெற்றது.

சித்தர் பாடல் பதிப்புகள்:

சித்தர்களின் யோக, ஞானப் பாடல்களின் தொகுப்பு பெரிய ஞானக்கோவை, சித்தர் ஞானக்கோவை, சித்தர் பாடல்கள் போன்ற தலைப்புகளில் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பதிப்பிக்கப் பெற்ற வா. சரவண முத்துப் பிள்ளை பதிப்பே முதல் பதிப்பாயிருக்கலாம். ஞானவான்களுக்கு உபயோகமாகும் பொருட்டு சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் 44 அரிய நூல்களைச் சேகரித்துத் தொகுக்கப்பெற்றது என்ற குறிப்போடு பெரிய ஞானக்கோவை என்ற இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. வா.சரவண முத்துப்பிள்ளைப் பதிப்பு, வித்யாதர நாகர அச்சுக்கூடப் பதிப்பு, இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் பதிப்பு, எம்.ஆர். அப்பாத்துரைப் பதிப்பு ஆகியன பாடல் தொகுப்பில் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. இப்பதிப்புகளில் 34 சித்தர்களின் 44 நூல்கள் மூன்று பாகங்களாகத் தரப்பட்டுள்ளன.

வா.சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பை அடியொற்றிப் பிற பதிப்புகள் மிகச்சில மாற்றங்களோடு வெளியிடப் பட்டுள்ளன. சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் திரட்டப்பட்டன என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும் நூலின் முகவுரைப்பாடல், பாடல்கள் திரட்டப்பட்ட விதம்குறித்து வேறு தகவலைத் தெரிவிக்கின்றது. முகவுரைப்பாடலின் அப்பகுதி வருமாறு,

ஆவலோடு இவருரைத்த ஞானம் யாவும்
அவனியுள மனுக்களெலாம் அறிய வென்றே
பாவலரை நாவலரை பண்டி தோரை
பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு
மாவிதமாய்ப் பிழையின்றி திருத்தம் செய்து
மாசறவே அச்சியற்றி மகிழ்ந்த வாறே.


‘பாவலரை நாவலரை பண்டி தோரை பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு’ என்ற முகவுரைப் பகுதி, பாடல்கள் வாய்மொழியாகக் கேட்டுப் பதிப்பிக்கப் பெற்றன என்று தெரிவிக்கின்றது.

மு.அருணாசலம், தமிழிலக்கிய வரலாறு 14 ஆம் நூற்றாண்டு நூலில் சித்தர் பாடல் பதிப்புகள் பற்றிக் குறிப்பிடும் போது சித்தர் ஞானக்கோவை ஆதாரபூர்வமான ஒரு நூலாகக் கொள்ளத்தக்க தன்று என்றும் தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் சித்தர் இலக்கியங்களாகா என்றும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பலர் சித்தர்கள் அல்லர் என்றும் இத்தொகுப்பின் காலம் கி.பி. 1875 -1900 என்று கருத வேண்டும் என்றும் மதிப்பிட்டுள்ளார்.
சித்தர் பாடல்களின் நம்பகத்தன்மை குறித்துப் பலரும் ஐயம் எழுப்பியுள்ள நிலையில் இத்தொகுப்புகளுக்கு ஆதாரமாயிருக்கக் கூடும் என்பதான ஓலைச்சுவடிகள் ஏதும் இதுவரை எங்கும் கிடைக்கப் பெறவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஓலைச்சுவடிகளோ முந்தைய பதிப்புகளோ அற்ற நிலையில் சித்தர்பாடல் தொகுப்புகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு பதிப்பிக்கப் பெற்றன? என்பது ஓர் அவிழ்க்க முடியாத புதிராகவே உள்ளது.

எதிர்க்குரல்களைக் கொண்ட சித்தர் பாடல்களின் உள்ளடக்க வீரியம் காரணமாகச் சித்தர் இலக்கியங்கள் சனாதனக் காப்பாளர்களால் பேணப்படாமல் போயிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. சைவர்கள், சிவவாக்கியர்;, பட்டினத்தார் பாடல்களைத் தேடிப்பிடித்து எரித்திருக்கிறார்கள் (Kamil V. Zvelebil, The Poets of the Powers. P. 10-20) என்ற செய்தியை வரலாற்று ஆதாரத்துடன் அயலகத் தமிழறிஞர் கமில் சுவலபிள் குறிப்பிடுகின்றார் என்று ச.மாடசாமி அவர்கள் தரும் அதிர்ச்சித் தகவல் (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.11) இக்கருத்தை உறுதிசெய்கின்றது. ஐரோப்பிய, இங்கிலாந்து ஆவணக் காப்பகங்களில் தேடினால் ஒருக்கால் சித்தர்பாடல் ஓலைச்சுவடிகள் கிடைக்கலாம்.

தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பில் ஈடுபடும் கள ஆய்வாளர்களுக்குப் பல சமயங்களில் நாட்டுப்புறப் பாடல்களோடு இணைந்து சித்தர் பாடல்களும் கிடைப்பது வழக்கம். அண்மைக்காலம் வரையிலும் சித்தர் பாடல்கள் வாய்மொழி இலக்கியமாக நாட்டுப்புற மக்களால் பாடப்பட்டு வருவது கண்கூடு. பொருளுணர்ந்தோ, உணராமலோ நாட்டுப்புற மக்களால் வாய்மொழி மரபில் காப்பாற்றப்பட்டு வந்த சித்தர் பாடல்களே இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அச்சுவடிவம் பெற்றன என்று முடிவு செய்வதில் பிழையில்லை. சித்தர் பாடல்களின் சிந்து, நொண்டிச் சிந்து, கும்மி, ஆனந்தக் கும்மி, கண்ணி முதலான வடிவங்கள் இதற்குத் துணை புரிந்திருக்கின்றன. சனாதனிகளின் எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே சித்தர்கள் வாய்மொழி மரபில் நின்று நிலைக்கத் தக்கதாக இத்தகு நாட்டுப்புறச் சந்த மெட்டுகளைக் கையாண்டிருப்பார்கள்.

சித்தர் சிவவாக்கியர்:

இதுவரை வெளிவந்துள்ள அனைத்துச் சித்தர் பாடல் தொகுப்புகளிலும் தவறாமல் இடம்பெறும் சித்தர் சிவவாக்கியர் ஆவார். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய திருமூலருக்குப் பின்னர் சற்றேறக் குறைய 800 ஆண்டுக்கால இடைவெளியில் சித்தர் சிவவாக்கியர் தோன்றுகின்றார். சரவண முத்துப் பிள்ளை அவர்களின் பெரிய ஞானக் கோவை பதிப்பின் முகவுரைப் பாடல் சித்தர்களின் பட்டியலைப் பாடல்வடிவில் தரும்போது,

திட்டமுள ஆரியநில் லாது நோக்கச்
செய்தசிவ வாக்கியந்தான் நூலே ஆதி
பட்டினத்தார் பாடலொடு புலம்பல் ஞானம்
பத்திரகிரி அருட்புலம்பல் பாம்பாட் டீசர் .. ..


என்று பட்டியலைத் தொடருகின்றது. சிவவாக்கியந்தான் நூலே ஆதி என்ற குறிப்பைக் கொண்டு, கி.பி. 14 ஆம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்ற தமிழ்ச் சித்தர் மரபு சிவவாக்கியரிலிருந்தே தொடங்குகின்றது எனலாம். சிவவாக்கியர், பூமியில் பிறக்கையில் சிவ என்று சொல்லிக்கொண்டு விழுந்தபடியால் இவருக்கு இப்பெயர் இடப்பட்டது என்று அபிதான சிந்தாமணி பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுகின்றது. அது பொருந்துமாறில்லை. சிவவாக்கியம் என்ற நூலைச் செய்தவர் என்ற காரணம் பற்றி அவர் சிவவாக்கியர் என்றழைக்கப் பட்டார் எனக்கொள்வதே பொருத்தமுடையதாகும். தாம் இயற்றிய நூலின் பெயரை அவரே தம் காப்புச் செய்யுளில் சிவவாக்கியம் எனப் பதிவு செய்கின்றார்.

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
(சிவ.வா. காப்பு)

என்பது அக்காப்புச் செய்யுள். சிவவாக்கியரின் வாழ்க்கைக் குறிப்புகளாக அபிதான சிந்தாமணி, சாம்பசிவம் பிள்ளையின் மூலிகை அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, பாவலர் சரித்திர தீபகம் முதலான நூல்களின் வழி நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எதுவும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல் பௌரானிகத் தன்மைகளோடு உள்ளன. சிவவாக்கியரும் திருமழிசை ஆழ்வாரும் ஒருவரே என்று ‘குரு பரம்பரை பிரபாவம் பன்னீராயிரம்’ குறிப்பிடுகின்றது. மொத்தத்தில் சிவவாக்கியர் வாழ்க்கை குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் ஒன்றுகூடக் கிடைக்கப்பெறவில்லை.

சிவவாக்கியம் நூலின் அகச் சான்றுகளைக் கொண்டு அவரைச் சைவர் என்றும் வைணவர் என்றும் தனித்தனியே சொல்லுவாருண்டு. சிவவாக்கியர் சமயச் சிமிழ்களுக்குள் அடைபடாத சமரச யோகி என்பதே உண்மைநிலை. சிவவாக்கியர் காலத்தை வரையறை செய்யும் மு.அருணாசலம் அகப் புறச் சான்றுகளின் துணைக்கொண்டு சிவவாக்கியர் வாழ்ந்த காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி, 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்கின்றார். தமிழக வரலாற்றில் சிவவாக்கியர் வாழ்ந்த இந்தக் காலப்பகுதியே, தமிழகம் சமய, சமூக அரசியல் சூழல்களில் பல புதிய மாற்றங்களை எதிர்கொண்ட காலமாகும்.

சிவவாக்கியர் காலம்:

தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர் பலநிலைகளில் தனித்தன்மை வாய்ந்தவர். நிறுவன மயமாக்கப்பட்ட சமயத்தை, சமயச் சடங்காசாரங்களை முழுமூச்சோடு எதிர்ப்பதில் அவர் முனைந்து நின்றார். அவர் காலத்தில் புனிதத்தன்மை வாய்ந்தது என்று கருதப்பட்ட அனைத்து அம்சங்களையும் அவர் துச்சமென நிராகரித்தார். தமது கண்டனங்களில் மென்மையான அணுகுமுறையை அவர் வேண்டுமென்றே தவிர்த்தார். கறாரான தமது விமர்சனங்களால் பார்ப்பனக் கருத்தாக்கங்களை மட்டுமின்றி பார்ப்பனர்களையும் நேரடியாகத் தாக்கினார். இத்தகு கூர்மையான விமர்சன எதிர்க்குரலைப் பதிவுசெய்வதில் சிவவாக்கியருக்குத் தூண்டுகோலாய் அமைந்த சமூகச்சூழல் குறித்து விவாதிப்பது இங்கு அவசியமாகிறது.

பிற்காலப் பாண்டிய மன்னர்களின் பங்காளிச் சண்டையால் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட இசுலாம், சிவவாக்கியர் காலத்தில் தமிழகத்தில் நன்கு அறிமுகமாயிருந்தது. நிறுவன மயமாகிப் போன சமயங்களின் பேரால் நிகழ்ந்துவரும் சமூகக் கொடுமைகளின் உக்கிரமே சிவவாக்கியரின் உரத்த எதிர்க் குரலுக்கு அடிப்படை என்றாலும் இசுலாத்தின் வருகை தந்த விழிப்புணர்வும் இப்புதிய போக்கிற்குப் பங்காற்றியிருக்கிறது.

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஐயா வணக்கம்

தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

நன்றி.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...