வெள்ளி, 31 ஜூலை, 2009

ஆனந்தரங்கர் இலக்கியங்கள் - ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் - பகுதி-௨

ஆனந்தரங்கர் இலக்கியங்கள்
ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் - பகுதி-2


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

ஆனந்தரங்கர் மீதான கோவை ஒன்றா? இரண்டா?

ஆனந்தரங்கன் கோவை என்ற பெயரில் இரண்டு கோவை நூல்கள் உள்ளதாகவும் இவற்றில் ஒன்றை வைத்தியநாத தேசிகர் புதல்வர் சதாசிவ தேசிகர் இயற்றியதாகவும் மற்றொன்றைத் தியாகராயப் புலவர் இயற்றியதாகவும் ரா.தேசிகம் பிள்ளை தம் ஆனந்தரங்கப் பிள்ளை என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.7
ஆனந்தரங்கன் கோவையைப் பதிப்பித்த ந.சுப்பிரமண்யன் இக்கருத்தை மறுத்து ஆனந்தரங்கர் மீது பாடப்பட்டது ஒரேஒரு கோவை நூல்தான் என்றும் இதன் ஆசிரியர் தியாகராய தேசிகர்தான் என்றும் உறுதிபடக் கூறுகின்றார். இந்நூலின் பிரதிகள் இரண்டு ஓலைச் சவடிகளாகக் கிடைத்துள்ளன என்றும் இரண்டு சுவடிகளிலுமே தியாகராய தேசிகர் இயற்றியது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சான்றுகளுடன் ந.சுப்பிரமண்யன் நிறுவியுள்ளார்.8
“திருவாரூரிலிருக்கும் இலக்கண விளக்கம் செய்த வைத்திய நாத தேசிகர் குமாரர் தியாகராய தேசிகர் சித்தார்த்தி வரு~ம் ஆவணி மாதம் 15ஆம் தேதி சுக்கிரவார தினம் பிரம்பூர் மகா- மகா-ஸ்ரீ பிள்ளையவர்கள் வஜாரத விஜயவாநந்த ரங்கப்பிள்ளை அவர்கள் மேல் கோவைப் பிரபந்தம் பாட ஆரம்பித்து யுவ வரு~ம் ஆவணி மாதம் 3ஆம் தேதி நிறைவேறி அரங்கேற்றும் படி செய்தது.”9 ஆனந்தரங்கன் கோவை பதிப்பிற்குப் பயன்பட்ட ஓலைச் சுவடியில் வாசகமே இது.

கோவை நூல் அரங்கேற்ற முயற்சி

தியாகராய தேசிகர் இக்கோவை நூலை 1739 ஆம் ஆண்டில் பாடத் தொடங்கி 1755 ஆம் ஆண்டு வரை பதினாறு ஆண்டுகள் முயன்று படைத்துள்ளார் என்பது சுவடியின் வாயிலாகத் தெரிய வருகின்றது. இந்நூலை இயற்றி முடித்த பின்பும் ஆனந்தரங்கர், நூல் அரங்கேற்றத்திற்கு வேண்டுவன செய்து பரிசில் அளிக்க முன்வராமை கண்டு தியாகராய தேசிகர் ஆனந்தரங்கருக்கு மைத்துனரும் நெருங்கிய நண்பருமாயிருந்த முத்தையன் என்பாரை வேண்டிக்கொண்டு அவர் மூலம் ஆனந்தரங்கரின் நன்மதிப்பைப் பெற்று நூலை அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது. தியாகராய தேசிகர் அம்முத்தையனைப் புகழ்ந்து பாடிய தனிப்பாடலின் வழி இவ்வுண்மையை உணரமுடிகின்றது.
பத்தையன் என்றுதமிழ்ப் பாபுலவர் மெச்சவரு
முத்தையா கோவை மொழிவிளங்க- வித்தகநல்
ஆனந்த ரங்கைய னுக்குரிய அன்புவைத்துத்
தானந்த ரங்கமுறச் சாற்று
10
என்பது அப்பாடல்.

அரங்கேற்றத்திற்குத் தாமதம் ஏன்?

ஆனந்தரங்கர் கோவை நூலை அரங்கேற்றவும் பரிசளிக்கவும் தாமதம் செய்ததற்கு என்ன காரணம்? என்பதை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆனந்தரங்கர் கோவை முழுவதையும் படித்துப் பார்த்தால் பாட்டுடைத் தலைவர் புகழ்பாடும் அந்நூலின் எல்லாப் பாடல்களிலும் பிரம்பூர் ஆனந்தரங்கர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்பூரின் பெருமையே எல்லாப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்தரங்கர் குடும்பத்தோடு புதுச்சேரிககு வந்து சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பாடத் தொடங்கி பதினாறு ஆண்டுகள் பாடப்பட்ட இந்நூலின் எங்கேயும் புதுவையைப் பற்றிய செய்தியே இல்லை.
"புதுவையில் ஐந்தரு என்னும் முத்தியப்பன் மகிழ் மைத்துனன்”11 என்ற ஒரு பாடலில் மட்டுமே புதுவை குறிப்பிடப் படுகின்றது. இந்தப் பாடலும் முத்தியப்பன் புகழ்பாடும் பாடல் என்பதால் அரங்கேற்றத்திற்குத் தடை ஏற்பட்ட பின்னர் எழுதிச் சேர்க்கப்பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆனந்தரங்கரைப் பற்றிய எத்தகைய வரலாறும் நூலின் எங்கேயும் இடம்பெறவில்லை. பாட்டுடைத் தலைவனைப் பூவைநிலையில் திருமாலாக, கண்ணனாக, இராமனாகப் புகழ்ந்து பாடும் பாடல்களே நூல் முழுமையும் இடம் பெற்றுள்ளன. பிரஞ்சு அரசாங்கத்தில் ஆனந்தரங்கர் பெற்றிருந்த பதவியைப் பற்றியோ, பெருமையைப் பற்றியோ அவரின் அரசியல் அறிவைப் பற்றியோ, அன்றாட நடவடிக்கைகளைப் பற்றியோ எந்தக் குறிப்பும் நூலில் எங்கேயும் இல்லை. எனவே வரலாற்றுணர்வு மிக்க ஆனந்தரங்கருக்கு இந்நூல் முழு மனநிறைவைத் தந்திருக்க வாய்ப்பில்லை. செவிவழியாக ஆனந்தரங்கரின் ஊரையும் பெயரையும் மட்டுமே கேள்விப்பட்டு நூலை ஆக்கியுள்ள தியாகராய தேசிகர் ஆனந்தரங்கரின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போனதில் வியப்பேதும் இல்லை.

செஞ்சி விஜயாபுரம் டெல்லி மட்டுஞ் செங்கோல் செலுத்தும்
வெஞ்சிலை ஆனந்தரங்கன் 12
வங்கம் கலிங்கம் தெலுங்கம் புறமிட வாளெடுத்த துங்கன் 13


என்ற இரண்டு இடங்களில் மட்டும் ஆனந்தரங்கரின் அரசியல் செல்வாக்கை, கவிவழக்காக மன்னர் சாதனைபோல் புகழ்ந்து பாடும் பாடலைக் காணமுடிகிறது. வேறு சில இடங்களிலும் ஆனந்தரங்கரைமன்னராகவே புகழ்ந்து பாடும் பாடல்;களைக் காணமுடிகிறது. பின்வரும் பாடலை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

தென்னவன் செம்பியன் சேரலனாமெனுஞ் சீர்த்திபெற்ற
மன்னவன் ஆனந்தரங்கன் 14


என்ற இப்பாடலில் மூவேந்தர்களுக்கு இணையான புகழ்பெற்ற மன்னவன் ஆனந்தரங்கன் என்று சிறப்பிக்கப்பட்டுமையைக் காண்க.

கோவை பாடிப் புலவர் பெற்ற பரிசில்

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ஆனந்தரங்கன் கோவையைப் புலவர், ஆனந்தரங்கர் சபையில் அரங்கேற்றினார். நூல் அரங்கேற்றத்திற்குப் பின்னர் தியாகராய தேசிகரின் புலமை நலத்தை மெச்சிய ஆனந்தரங்கர் தமிழ் வள்ளல்களின் மரபையொட்டி புலவர்க்கு ஏற்றவாறு பரிசளித்துப் பெருமைப்படுத்தினார் என்பதை,
அண்டர்வரோ தயன்பிரம்பூர்த் திருவேங்க
டேந்த்ரநிதி யளித்த பாலன்
மண்டலங்கொண் டாடவரும் ஆனந்த
ரங்கதுரை மான ரத்ன
குண்டலமுஞ் சரப்பணியும் பதக்கமொடு
சாலுவையுங் கொடுத்தே நாளுந்
தண்டமிழா ரூர்வசிக்கப் பொன்முடிப்பும்
பூமிகளுந் தந்திட் டானே 15


என்ற தனிப்பாடல் வழியாகப் புலவர் பெற்ற பரிசில்களை அறிந்துகொள்ள முடிகின்றது.

கோவை குறிப்பிடும் ஆனந்தரங்கர் பண்பு நலன்கள்

பாட்டுடைத் தலைவரான ஆனந்தரங்கர் பற்றிய பல செய்திகள் பொதுவாக எல்லா வள்ளல்களுக்கும் பொருந்தக்கூடிய நிலையில் கோவையின் பல பாடல்களில் சொல்லப்பட்டிருந்தாலும் சில செய்திகள் ஆனந்தரங்கர் இயல்பை உணர்ந்து, அவரின் சிறப்பியல்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன. ஆனந்தரங்கர் குறிப்பறிந்து பிறர் வாய்திறந்து சொல்லுவதற்கு முன்பே அவர்கள் மனத்தில் நினைத்த கருத்தைச் சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் என்பதை,
எண்ணுக்கு முன் சொல்லும் ஆனந்தரங்கா16 என்று குறிப்பிடுவதன் வழியாகவும், சொன்ன சொல் தவறாதவர், வெற்றுச் சொல் பேசாதவர் என்பதை,
வசனம் தப்பாத ரங்கேந்திரன்17 என்றும் சொல்லொக்கும் செய்கைப் பிரம்பை ரங்கேந்திரன்18என்றும் தேசிகர் குறிப்பிடுவதன் வழியாகவும் அறிந்துகொள்ள முடிகிறது. பல பாடல்களில் ஆனந்தரங்கர் தமிழைப் போற்றி வளர்க்கும் செய்தியும் இசை நாடக வாணர்களுக்கு ஆதரவளித்த செய்தியும் பேசப்படுகின்றன.

ஆனந்தரங்கர் கோவையில் அகப்பொருள் மரபுகள்

பிற்காலச் சிற்றிலக்கியங்களில் கோவை ஓர் ஒப்பற்ற இலக்கியமாகும். இதனைத் தொடர்நிலைச்செய்யுள், சிறு காப்பியம் என்பார் தண்டி உரையாசிரியர். ஒரு புலவன் ஒரு தனிப்பொருளைக் குறித்து நீள நினைத்துப் பாடும் வாய்ப்பு இவ்விலக்கியத்திற்கு உண்டு. சங்க இலக்கியங்களின் அகப்பொருள் மரபுத் தொடர்ச்சியைக் கோவை நூல்களில்தான் முழுதுமாகக் காணமுடியும். ஆனாலும் சங்க இலக்கியங்கள் சிறப்பித்துப் பாடிய முதற்பொருள் கருப் பொருள்களைக் கோவை இலக்கியங்களில் இழந்துவிட்டோம். இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு என்ற தொப்புள்கொடி அறுபட்டுப் போய்விட்டது. கோவை நூல்களில் அந்த இடங்களைக் கடவுளர் கதைகளும் புராணங்களும் பிடித்துக் கொண்டன. பாடலில் இடம்பெறும் கிளவித் தலைமக்களின் நுட்பமான காதல் உணர்வுகள் பலியாக்கப்பட்டுப் பாட்டுடைத் தலைவர்களின் வீர தீரப் பிரதாபங்களில் அவை மூழ்கடிக்கப்பட்டன.
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்
(தொல்.அகத்.நூ.54)

என்ற அகப்பொருளின் உயிர்க்கோட்பாடு கோவை நூல்களில் கிளவித் தலைமக்களின் பெயர்சுட்டா மரபாகப் போற்றிப் பாதுகாக்கப் பட்டது.

ஆனந்தரங்கன் கோவையின் சிறப்பியல்புகள்

1. ஆனந்தரங்கன் கோவை தனக்கு முந்தைய கோவை நூல்களில் ஒன்றான அம்பிகாபதிக் கோவையைப் பெரிதும் அடியொற்றி அமைந்தது எனலாம். பல பாடல்கள் அப்படியே அம்பிகாபதிக் கோவைப் பாடல்களைப் பிரதிபலிப்பனவாக உள்ளன.
சான்றாக: பா. 104, 289, 346, 370.
2. ஆனந்தரங்கன் கோவையின் பல பாடல்கள் சங்கத் தொகை அகப்பாடல்கள் பலவற்றின் புதிய வடிவாக அமைந்து சிறக்கின்றன.
3. வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழைச் சிறப்பித்துக் கூறுதலும் ஆனந்தரங்கர் தமிழைப் போற்றிப் புரப்பவர் என்று கூறுதலும்.
4. திருக்குறள் நாலடியார் போன்ற இலக்கியங்களையும் தக்க இடத்தில் கையாண்டு சிறப்பித்தல். பா.42, 234.
5. இருபதுக்கும் மேற்பட்ட அணிவகைகளைச் சிறப்புறக் கையாண்டு நூலின் சுவையைக் கூட்டுதல்.
சான்றாக: பா. 20, 21, 46, 109, 218, 277.

முடிவுரை

1. ஆனந்தரங்கர் மீது பாடப்பட்ட நூல்களிலேயே அளவால் பெரியதும் சிறப்பிற் குரியதும் இக்கோவை நூலே.
2. ஆனந்தரங்கர் மீது இரண்டு கோவை நூல்கள் பாடப்பட்டன என்ற கருத்து தவறானது. தியாகராய தேசிகரின் கோவை மட்டுமே பாடப்பட்டுள்ளது.
3. தியாகராய தேசிகர் ஆனந்தரங்கரை முழுமையாக அறிந்து வரலாற்றுணர்வோடு இந்நூலைப் பாடாதது ஒரு பெருங்குறை. இக்காரணத்தாலேயே நூல் அரங்கேற்றம் தடைப்பட்டிருக்கலாம்.
4. வள்ளல்களின் மரபையொட்டி ஆனந்தரங்கர் தேசிகருக்குச் சிறந்த பரிசுகளை அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.
5. தமிழ் இலக்கண வளங்களை முற்றாக உள்வாங்கிப் படைக்கப்பட்ட ஆனந்தரங்கன் கோவை இவ்வகைச் சிற்றிலக்கியங்களில் ஒரு சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை.
குறிப்புகள்
1. பன்னிரு பாட்டியல், செய்யுளியல் 220
2. வ.சுப.மாணிக்கம், தலைமையுரை, சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள்,
நான்காவது மாநாடு, ப.32.
3. கி.இராசா, ஒப்பிலக்கிய நோக்கு, ப.68
4. இரா.ஆலாலசுந்தரம், ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம், ப.1.
5. இரா.ஆலாலசுந்தரம். ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம், ப.207.
6. ரா.தேசிக பிள்ளை, ஆனந்தரங்கப்பிள்ளை, ப.25.
7. ரா.தேசிக பிள்ளை, ஆனந்தரங்கப் பிள்ளை,ப.25
8. ந.சுப்பிரமண்யன், முகவுரை, ஆனந்தரங்கன் கோவை, ப. ஒஒஎii
9. ந.சுப்பிரமண்யன், முகவுரை, ஆனந்தரங்கன் கோவை, ப. ஒஒஎii
10. ஆனந்தரங்கன் கோவை, ப.138.
11. ஆனந்தரங்கன் கோவை, ப.391.
12. ஆனந்தரங்கன் கோவை, ப.8.
13. ஆனந்தரங்கன் கோவை, ப.46.
14. ஆனந்தரங்கன் கோவை, ப.86.
15. ஆனந்தரங்கன் கோவை, ப.138.
16. ஆனந்தரங்கன் கோவை, ப.170.
17. ஆனந்தரங்கன் கோவை, ப.214.
18. ஆனந்த்ரங்கன் கோவை, ப.100.

(புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம், சாகித்ய அகாதமி இணைந்து 18-7-2009 புதுவை சோலைநகர் இளைஞர் விடுதியில் நடத்திய ஆனந்தரங்கர் 300 ஆம் பிறந்தநாள் விழா சிறப்புக் கருத்தரங்கத்தில் வாசிக்கப்பெற்றது.)

ஞாயிறு, 28 ஜூன், 2009

விளம்பரம் X க்கு விற்பதோ Y ஐ இலவசம் Z

விளம்பரம் X க்கு
விற்பதோ Y ஐ
இலவசம் Z


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

இன்றைய உலகம் ஊடக உலகம். இந்த ஊடக உலகின் மிகப் பெரிய பலமும் பலஹீனமும் விளம்பரங்கள்தாம். குறிப்பாக அச்சு ஊடகங்களும் மின் ஊடகங்களும் விளம்பரங்கள் இல்லையென்றால் இயங்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவகையில் இந்த ஊடகங்களின் வாழ்வாதாரமே விளம்பரங்களை நம்பித்தான் உள்ளன. பொருளாதார ரீதியில் விளம்பரங்களைச் சார்ந்தே ஊடகங்கள் இயங்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் ஊடகங்கங்களால் விளம்பரங்கள் உயிர்வாழும் நிலைமை தலைகீழாகி விளம்பரங்களால் ஊடகங்கள் உயிர்வாழ்கின்றன. விளம்பரங்களின் இந்த அதீத பலத்திற்கு ஆதாரம் விளம்பரங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரமே. தம்மால் உருவாக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தால் கொழுக்கும் இவ்விளம்பரங்கள் தமக்கு இடமளிக்கும் ஊடகங்களையும் தின்று கொழுத்து அசுர வளர்ச்சி பெற்றுவருகின்றன.

ஊடகம், விளம்பரம், நுகர்வோர்:

ஊடகங்கள் செயல்படப் பணம் தேவை. மாறிவரும் இன்றைய ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிச் சூழலில் ஊடகங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுப் போட்டிகளைச் சமாளித்து வாசகர்கள்/ நேயர்கள்/ பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பணம் தேவை. ஊடகங்கள் தயாரிப்புச் செலவைச் சமாளித்து அதனை நுகர்வோர் மேல் திணிக்காமல் நிலைத்து இயங்க வேண்டுமென்றால் பணம் தேவை. இந்நிலையில் ஊடகங்கள் நம்பியிருப்பதும் சார்ந்திருப்பதும் விளம்பரங்களைத்தாம். இந்த விளம்பரங்களை ஊடகங்களுக்கு வழங்குபவை பன்னாட்டு, உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களே. எனவே திட்டமிட்டோ திட்டமிடாமலோ இந்தத் தொழில் நிறுவனங்கள் ஊடகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. விளைவு, தொழில் நிறுவனங்களின் அதாவது வெளிநாட்டு, உள்நாட்டு, பன்னாட்டுத் தொழிலதிபர்களின் நலம் நாடுவதே ஊடகங்களின் பணியாகிறது. தொழிலதிபர்களின் நலன் பொருள் உற்பத்தி, விற்பனை, இலாபம், கொள்ளை என்ற நுகர்வோர் கலாச்சாரப் பெருக்கத்தில் உள்ளது. ஊடக விளம்பரங்கள் இந்த மகத்தான பணியைத்தான் மிகநுட்பமாகச் செயல்படுத்துகின்றன. இத்தகு நுகர்வோர் கலாச்சாரத்துக்கான இலக்கு உயர்மத்தியத் தர வகுப்பினர்களே. இவர்களே ஊடகங்களின் பெரும்பான்மை வாசகர்கள்/ பார்வையாளர்கள். மிக எளிதில் வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளும் நெகிழ்ச்சிப் போக்காளர்களும் இவர்களே. உயர்மத்தியத் தர வகுப்பினர்களை நம்பித்தான் ஊடகம், விளம்பரம், நுகர்வோர் கலாச்சாரம், பொருளுற்பத்தி, விற்பனை, இலாபம், பணப் புழக்கம், முதலாளிகளின் நலன் என்ற சுழற்சிச் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கின்றது.

விளம்பரம் வரையறை:

ஒரு குறிப்பிட்ட அரசாங்கமோ, நிறுவனமோ, தனிநபரோ அல்லது பொருள் உற்பத்தியாளரோ, விற்பனையாளரோ தமது கருத்தைப் பரப்பவோ, பணியை அறிவிக்கவோ, தம் பொருள்களை விற்கவோ அல்லது தம் தேவைகளைப் பெறவோ தாமே பணம் செலவிட்டு வாய்மொழி, எழுத்து மொழி, படங்கள், அசை படங்கள் போன்ற ஊடகங்களின் வழியாகச் செய்யும் அறிவிப்பு அல்லது வேண்டுகோள் விளம்பரம் எனப்படும்.
பொதுவாக விளம்பரங்கள் என்றவுடன் விற்கவும் வாங்கவுமான பொருட்களே நம் நினைவுக்கு வருகின்றன. விளம்பரங்கள் பொருட்களை மட்டும் விற்பதில்லை. கருத்துக்களையும் விற்கின்றன. பணி மற்றும் சேவைகளையும் விளம்பரப் படுத்துகின்றன. “விளம்பரமாவது வாங்குவதற்கோ, விற்பதற்கோ, தருவதற்கோ, பெறுவதற்கோ, ஒன்றிற்காகப் பணியாற்றுவதற்கோ, துணைநிற்பதற்கோ விடுக்கப்படும் அழைப்பாகும்” என்று ரால்ப் ஹாரிஸ் விளம்பரத்தை விளக்குகின்றார்.

விளம்பரங்கள் பண்டம், சேவை, கொள்கை, செய்தி ஆகிய நான்கு நிலைகளில் செயல்பட்டாலும் பொதுநிலையில் விளம்பரங்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவன பண்டங்களை வாங்குதல் விற்றல் என்ற பயன்பாட்டில் செய்யப்படும் விளம்பரங்கள் மட்டுமே. விளம்பர முதலீட்டிலும் வணிகத்திலும், விளம்பர நகல் தயாரிப்பு குறித்த தொழில் நுட்பத்திலும் மிகுதியான ஆட்சி செலுத்துவன இவ்வகை விளம்பரங்களே.

விளம்பரத்தின் பணிகள்:

விளம்பரத்தின் முதல்பணி எப்படியாயினும் விற்பனையைப் பெருக்குவதே. உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் விளம்பரங்களின் மூலம் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்துப் பொருள்களை வாங்கச் செய்து அதிக அளவில் பொருட்களின் விற்பனையையும் உற்பத்தியையும் பெருக்கி இலாபம் ஈட்ட முயல்கின்றனர். விளம்பரங்கள் முதல்பணியும் முதன்;மைப் பணியும் இதுதான்.
விற்பனையைப் பெருக்குவதே விளம்பரங்களின் முதல்பணி என்றாலும் விளம்பரங்கள் அந்த அளவிலேயே தம்பணியை நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக நுகர்வோர் மீது அதீதமான ஆதிக்கத்தையும் விளம்பரங்கள் செலுத்துகின்றன. தொடர்ச்சியான விளம்பரங்களின் மூலம் நுகர்வோரின் பழைய கருத்தாக்கங்களைச் சிதைப்பதும் புதிய கருத்தாக்கங்களை விதைப்பதுமான பணிகளையும் அவை மேற்கொள்கின்றன. விளம்பரங்களின் செல்வாக்கால் சராசரி மனிதர்களின் மனோபாவங்கள், பழக்க வழக்கங்கள், நடையுடை, பாவனை ஆகிய அனைத்தும் மாறுதலுக்கு உள்ளாகின்றன. “நுகர்வோர் கலாச்சாரத்துக்காக நம்மைத் தயார்ப்படுத்தும் பணியில் விளம்பரங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. வாழ்க்கையையும் பொருட்களைப் போல வாங்கிவிட முடியும் என்கிற எண்ணத்தை நம் மனதில் அவை வளர்க்கின்றன” என்கிறார் சுரேஷ் பால். (மீடியா உலகம், பக்;. 290) ஆக விளம்பரங்கள் எதனை விளம்பரம் செய்கின்றனவோ அதோடு தம்பணியை முடித்துக் கொள்வதில்லை. மாறாக வேறொன்றையும் நம்மிடத்தில் விற்பனை செய்கின்றன. அதுதான் நுகர்வுக் கலாச்சாரம்.

நுகர்வுக் கலாச்சாரம்:

பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பே நுகர்வுக் கலாச்சாரத்தின் அடையாளம். நமக்கு எது தேவை? எவையெவை தேவையில்லை என்ற தெளிவில்லாமல், விளம்பரம் செய்யப்படும் அனைத்துமே நமக்குத் தேவை என்று எண்ணும் ஆசை மனம். இன்றைக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களுமே மக்களின் தேவை கருதி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நினைப்பது சரியல்ல. மாறாக உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு வந்துள்ள பொருட்களின் அடிப்படையிலேயே நம்முடைய தேவைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. சான்றாக, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் என்ற அறிமுகத்தோடு பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் 15 ரூபாய் வரை விற்கப்படும் மினரல் வாட்டர். இன்று மினரல் வாட்டர் குடிப்பதே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது என்பதே பொது நியதி ஆக்கப்பட்டு விட்டது. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் பாதுகாப்பானதா? ஆரோக்கியமானதா? என்றால் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். அது ஒரு புறமிருக்கட்டும். மினரல் வாட்டர் பாட்டில்கள் மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதா? அல்லது உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தபிறகு நம்முடைய தேவை நிர்ணயிக்க அல்லது நிர்பந்திக்கப்பட்டதா? என்று பார்த்தால் உற்பத்தி, விற்பனை, விளம்பரம் என்ற தொடர்ச்சியிலேயே அவை நம்மீது திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. நுகர்வோர் மனதில் தூய்மை, சுகாதாரம், ஆரோக்கியம் என்று கட்டப்பட்ட புனைவுகள் நுகர்வுக் கலாச்சாரத்தின் பண்பு.

நுகர்வுக் கலாச்சாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தைவிட அதன் வடிவமைப்பு, பேக்கிங், மிகுத்துச் சொல்லப்படும் வாக்குறுதிகள், விளம்பரப்படுத்தும் பிரபலம் இவைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகர் நடிகைகளும் தோன்றி விளம்பரம் செய்யும் பொருள்கள் அதிகம் விற்பனைகின்றன. தரமான பொருள்களுக்குத்தான் அவர்கள் விளம்பரம் செய்வார்கள் என்பதா உண்மை? எந்த நிறுவனம் அதிகக் கோடிகளைக் கூலியாகத் தருகிறதோ அந்த நிறுவனப் பொருள்களைத்தானே அவர் விளம்பரம் செய்வார். இதை நாம் தெரிந்திருந்தும் உணராமலிருக்கிறோமே அதுதான் நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்பு.
சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது? எது வாங்கினால் எது இலவசம்? எந்தப் பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி? முதலான நுகர்வுக் கலாச்சாரத் தகவல்களை ஊடகங்கள் நம்மீது வாரி இறைக்கின்றன. அந்தத் தகவல்களைச் சுமந்து கொண்டுதான் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உலகைப் பார்க்கிறார்கள். புதிதாகச் சந்தையில் அறிமுகமாகும் பொருள்கள், முன்பே அறிமுகமான பொருள்களுக்கான புதிய மாடல்கள், மேம்படுத்தப்பட்டதாக வாக்குறுதியளிக்கப் பழைய பொருள்கள் போன்றவை விளம்பரப் படுத்தப்படும்போது நுகர்வோரிடத்தில் ஒருவகைப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. புதியதை வாங்கும்வரை சமூக அந்தஸ்தில் பிறருக்குப் பின்தங்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு நுகர்வோர் ஆளாகிவிடுகின்றனர். பொருள்களை வாங்கும் ஆசையிருந்தும் வாங்க வசதியில்லாதவர்கள் ஒருவிதமான தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தேவை, ஆசை இரண்டும் சமனற்ற முரணிலேயே வாழ்க்கையைப் நிறுத்திவைக்கிறது நுகர்வுக் கலாச்சாரம். உண்மையில் விளம்பரங்கள் முன்னிறுத்தும் மகிழ்ச்சியான குடும்பம் என்பது ஒரு கற்பனையே.

விளம்பரங்கள் எதை விற்கின்றன?

ஒவ்வொரு விளம்பரத்தையும் தனித்தனியாகப் பார்த்து அவற்றின் செல்வாக்கை, தாக்கங்களைப் புரிந்துகொள்ள முயல்வது ஒருவகை அணுகுமுறை. ஒட்டுமொத்தமாக அனைத்து விளம்பரங்களையும் கூர்ந்து கவனித்து அவைகளைப் புரிந்துகொள்ள முயல்வது மற்றொரு அணுகுமுறை. இவ்விரண்டாம் அணுகுமுறையிலேயே விளம்பரங்களின் முழுமையான அரசியலை விளங்கிக் கொள்ளுதல் சாத்தியம்.
நாம் தினம் காலையில் ஏதோ ஒரு பிரஷ்ஷால் ஏதோ ஒரு பற்பசை கொண்டு பல் துலக்குகிறோம். ஏன்? எங்கே போயின நம் பல் குச்சிகள்! குளிக்கும்போது தலையைச் சுத்தம் செய்ய ஏதோ ஒரு ஷாம்புவைக் கொண்டு குளிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் சீகைக்காய்!. தாகமாயிருக்கிறதா? ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனக் குளிர்பானத்தைக் குடிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் நீராகாரமும், இளநீரும்! இப்படியே காப்பி, டீ, பூஸ்ட் இன்னும் எத்தனை எத்தனையோ! இவையெல்லாம் நம் வாழ்வின் அங்கங்களாயினமை எப்படி?
ஒரு குறிப்பிட்ட பற்பசையைப் பயன்படுத்தச் சொல்லி விளம்பரப் படுத்தியது விளம்பரம். ஆனால் நமது மரபான பல்துலக்கும் பழக்கத்திலிருந்து நம்மைப் பற்பசைகளுக்கும் பிரஷ்களுக்கும் மாற்றிய மனோநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். குறிப்பிட்ட ஷாம்புவை விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் ஏதேனும் ஒரு ஷாம்பு போட்டுத்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். அதேபோல் ஒரு குறிப்பிட்ட டீ யைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் டீயோ, காப்பியோ ஏதோ ஒன்றைக் குடித்தே தீரவேண்டுமென்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.

உடல் நலமில்லாத ஒருவரைப் பார்க்கச் செல்லும் பலர் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்கின்றனர். ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்லும்படி பிறரால் அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளிக்குப் பிறர் ஹார்லிக்ஸ் குடிக்க ஆலோசனை கூறுகிறார்கள். இதெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று? இனிப்பு கலந்த சோளமாவு, ஊட்டச் சத்துமிக்க பானமானது எப்படி? விளம்பரம் செய்த விந்தை இது. ஆழ்மனம் வரை ஊடுருவிச் சென்று அரியாசனமிட்டு அமர்ந்துகொண்டன விளம்பரங்கள் விற்பனை செய்த கருத்தாக்கங்கள்.

விளம்பரங்கள் விற்பதும் இலவசமும்:

விளம்பரங்களின் முழுமையான அரசியல் அது செய்யும் விளம்பரங்களில் இல்லை. மாறாக விளம்பரங்கள் விற்பனை செய்யும் நுகர்வோர் கலாச்சார மனோநிலையில்தான் உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்நாட்டில் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் மக்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல். இந்தியர்களில் பலருக்கு மூன்றுவேளை உணவு என்பதே பெருங்கனவு. அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், உணவு, உடை போன்றவைகள் இன்னும் இந்தியர்களுக்கு முழுமையாகக் கிடைத்துவிடவில்லை. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியத் திருநாட்டின் யதார்த்த நிலைமை இப்படியிருக்க, நம் ஊடக விளம்பரங்கள் சித்தரித்துக் காட்டும் வாழ்க்கை உண்மையில் யாருடைய வாழ்க்கை?

விளம்பரங்கள் உருவாக்கும் கனவு வாழ்க்கையும் மேற்கத்திய கருத்தாக்கங்களும், போலியான மதிப்பீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகு புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும் நுகர்வோராகிய நம் மனதில் ஆழப்பதிந்து பல்வேறு உளச் சிக்கல்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் நம்மை ஆளாக்குகின்றன. இந்தப் புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும்தாம் விளம்பரங்கள் நமக்கு இலவசமாய் வழங்கியவை.

இந்த இலவசங்களில் முக்கியமானவை பாலியில் சார்ந்த மதிப்பீடுகள். அழகு, கவர்ச்சி குறித்த புதிய சித்தாந்தங்கள். சிவப்பாயிருப்பதும், ஸ்லிம் என்ற மெல்லிய தேகமும், நீண்ட அடர்த்;தியான பட்டுப்போன்ற கூந்தலுமே அழகு. தமிழகத்தில் சிவப்பழகுக் கிரீமைத் தெரிந்துகொள்ளாதவர் அபூர்வம். இந்த அழகுகள் எல்லாம் ஓரிரு நாட்களில் ஒரு பாக்கெட் கிரீம், ஷாம்பு போன்றவைகளால் சாத்தியமாகும் என நம்பவைக்கின்றன விளம்பரங்கள். இத்தகு விளம்பரங்கள் பொருளை மட்டும் விற்கவில்லை. அழகு குறித்த புதிய சித்தாந்தங்களையும் விற்கின்றன. முழுக்க முழுக்க உடலுழைப்பு சார்ந்த, அழுக்கும் வியர்வையும் கொண்ட உண்மையான இந்தியக் கிராமியப் பெண்களுக்கும் இவ்வகை விளம்பரங்களுக்கும் உள்ள முரணை உணர்ந்தால் விளம்பரங்களின் அரசியல் புரியும்.

ஆண்களின் சாதனையே பெண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன. ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் இவ்வகை விளம்பரங்கள் பெண்களைக் கொச்சைப் படுத்துவதோடு பாலியல் ஈர்ப்பு குறித்த பிழையான மதிப்பீடுகளையும் நம்மிடம் திணிக்கின்றன.

விளம்பரங்கள் பாலியல் ரீதியில் எவ்வளவுதான் புதிய கருத்தாக்கங்களோடும் மேற்கத்திய மதிப்பீடுகளோடும் படைக்கப்பட்டாலும் பெண் குறித்த நமது பழைய சித்தாந்தங்களை விளம்பரங்கள் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள் மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய விளம்பரங்களும் பழைய சித்தாந்தங்களை மீறாமல் கட்டிக் காப்பாற்றுகின்றன.

முடிப்பாக:

130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியநாடு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய சந்தை. முயற்சி செய்தால் இந்தியர்களிடம் எதையும் விற்கலாம் என்பதைப் பொருள் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் கண்டுகொண்டார்கள். இல்லையென்றால் அதிகத் தூசு, புழுதிக்கு வாய்ப்பில்லாத குளிர் நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும் வாக்குவம் கிளீனர்களை இந்தியா போன்ற அதிகத் தூசு, புழுதி மண்டிய வெப்பமண்டல நாட்டில் விற்க முடியுமா? முடிகிறதே என்றால் என்ன பொருள்? சக்திவாய்ந்த விளம்பரத்தின் மூலம் இந்திய நுகர்வோரிடம் எதையும் விற்க முடியும் என்பதுதானே பொருள்.

விளம்பரங்கள் நமக்கு எதிரிகள் இல்லை. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் விளம்பர வருவாய் மட்டும் இல்லையென்றால் ஊடகங்கள் இத்தனை மலிவாக நமக்குக் கிடைக்க வழியில்லை. பத்திரிக்கைகள் 1 ரூபாய், 2 ரூபாய்க்குக் கிடைப்பதும், 24 மணிநேரமும் தொடர்ந்து பல பண்பலை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிப்பதும் 100 ரூபாய் செலவில் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேனல்களைக் கண்டு களிப்பதும் விளம்பரங்களால் மட்டுமே சாத்தியமாயிருப்பது உண்மை. சந்தையில் வந்து குவியும் பொருட்களைத் தெரிந்து கொள்ளவும் தேர்ந்தெடுக்கவும் விளம்பரங்களே நமக்கு உற்றதுணை. என்றாலும் விளம்பரங்களிடத்தில் நாம் எப்பொழுதும் விழிப்பாயிருக்க வேண்டும். பொருட்களைப் போலவே வாழ்க்கையையும் வாங்கிவிடலாம் என்று விளம்பரங்கள் சொல்லாமல் சொல்கின்றன. நம் வாழ்க்கை நமக்கானது, அதை ஒருபோதும் விலைகொடுத்து வாங்கமுடியாது.

புதன், 20 மே, 2009

மானுடம் பயனுற - இர.தியாகராசன் நூல் அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

மானுடம் பயனுற - இர.தியாகராசன்

நூல் அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

இர.தியாகராசனின் மானுடம் பயனுற எனும் இக்கட்டுரைத் தொகுப்பு அவரின் முதல்நூல். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல படைப்புகள் எழுதப்பெறாத மனப் பிரதிகளாக உள்ளுறைகின்றன. சிலர் அவற்றுக்கு எழுத்து வடிவம் தந்து வெளியே உலவ விடுகின்றனர். பலர் அந்த முயற்சியில் இறங்குவதே இல்லை. ஒவ்வொரு மனிதனின் மறைவின் போதும் எழுதப்படாத பல பிரதிகள் அவனோடேயே மறைந்து விடுகின்றன.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவைகளுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஏனோ தெரியவில்லை தமிழில் கட்டுரைகள் பெரிதும் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை கிடைக்கின்ற பழந்தமிழ் முதல் நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடுகொடுக்கின்றன. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதையே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப்பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். ‘விவாதித்து விவரிப்பதே’ கட்டுரையின் பண்பு என்பார் கா.சிவத்தம்பி. இந்த விளக்கங்கள் எல்லாம் செய்திக் கட்டுரைகளுக்குப் பொருந்தும். கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. நுளளயல என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் இவ்வகைக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

II
மானுடம் பயனுற என்னும் இக்கட்டுரைத் தொகுப்பு. தன்னுணர்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்து படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுகின்றது. நூலாசிரியர் இர.தியாகராசன் இந்நூலில் பல்வேறு காலங்களில் தான் சந்தித்த, சிந்தித்த, பேசிய, கேட்ட, விவாதித்த, சாதித்த பல செய்திகள் மற்றும் சம்பங்களைத் தொகுத்தளிக்கின்றார். அரசியல், சமூகம், ஆன்மீகம் முதலான பல தளங்களில் செய்திகள் பேசப்படுகின்றன. நூலாசிரியருக்குச் சமூகத்தின் மீது ஏற்பட்ட கோபம், ஆத்திரம், எரிச்சல் போன்றவைகளே நூலில் அதிகம் பதிவுபெற்றுள்ளன. தான் நம்புகின்றவைகளே சரியானவை என்னும் தொனியில் நூலை அமைத்திருக்கும் ஆசிரியர் பல சமயங்களில் நீதிபோதனைகளைப் போதிக்கும் ஒரு போதானாசிரியனாகவே வெளிப்பட்டிருப்பது நூலின் பலம் என்றும் பலஹீனம் என்றும் கருதவாய்ப்பளிக்கிறது.

நூலாசிரியர் இர.தியாகராசன் கடவுள் நம்பிக்கை மிக்கவர். விதி, பாவ புண்ணியங்களின் பலாபலன்களைத் திடமாக நம்புபவர். அவரின் கருத்து முதல்வாதக் கொள்கைகள் எனக்கு உடன்பாடில்லை. ஆயினும் அவர் வலியுறுத்தும் மானுட மேம்பாடு குறித்த சிந்தனைகளோடு ஒத்துப்போகிறவன் நான். ஆன்மீகம் குறித்தும் ஆன்மீக வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் குறித்தும் நூலாசிரியர் செய்யும் பதிவுகள் மிக ஆழமானவை.

"இக்காலத்தில் பக்தி என்பது ஒரு சம்பிரதாயமாக சடங்குகளாக மாறிவிட்டது. அகண்ட ஓங்கார பூஜை, 1008 பாலகுட அபிஷேகம், 108 விளக்கு பூஜை, 1008 சங்காபிஷேகம் இவைகள் எல்லாமே வியாபார நோக்கில் காலம் காலமாக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை". (இர.தியாகராசன், பக்தி)

"எல்லா வக்கிர புத்திகளையும் கொண்ட மனிதர்கள்தான் பக்தி என்ற பெயரில் விரதம் என்ற பெயரில் கோயிலை நாடுகிறார்கள். உண்மையான பக்திமான் பொல் வேடம் போடுகிறார்கள். நான் வெளிஉலகில் இவர்கள் நடத்தையைக் கவனிக்கிறேன். இவர்கள் எல்லாம் இப்படிப் பகல்வேடம் போட்டு வாழ்கிறார்களே என்று அங்கலாய்ப்பது உண்டு. மனம் நொந்துபோவது உண்டு. இத்தகைய மனம் கொண்ட பேர்வழிகள் தான் சபரிமலை என்றும், திருப்பதி என்றும் புனித ஸ்தலங்களுக்குச் செல்கிறார்கள் இங்கு காணிக்கை போடுகிறார்கள். இவர்களுக்கு ஓர் எண்ணம் நாம் செய்யும் எல்லாத் தவறுகளுக்கும் விரதம் இருந்து காணிக்கை போட்டால் கடவுள் நம்பக்கம் வந்துவிடுவார் என்ற ஒரு அற்ப விபரீத எண்ணம்". (இர.தியாகராசன், மனிதனின் விரோதச் செயல்கள்)

"இதையே! இப்படிச் செய்தால் என்ன? அத்தனைப் பணங்களையும் திருவிழாச் செலவுகளைக் குறைத்துவிட்டு, அந்தந்த ஊரில் உள்ள ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, ஏழைப் பிள்ளைகளுக்குப் படிக்க வசதி, பசியால்வாடும் ஏழை மக்களுக்கு உணவுவசதி என்று செய்யலாமே! இறைவன் ஆனந்தக் கூத்தாடுவானே! அப்போதுதானே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுடியும்". (இர.தியாகராசன், பகட்டுவாழ்வு)

மேலே சான்று காட்டியுள்ள போலி ஆன்மீகம் குறித்த சாடல் பகுதிகளைக் கூர்ந்து கவனித்தால் நூலாசிரியர் இர.தியாகராசனின் ஆழ்ந்த மானுடநேயம் புலப்படுவதை அவதானிக்க முடியும்.

அடுத்ததாக, அரசியல் குறித்து இர.தியாகராசன் வெளிப்படுத்தும் சத்திய ஆவேசம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ‘அரசியல் ஒரு சாக்கடை’ அது நமக்குத் தேவையில்லை என்று ஒதுங்கிப் பொகும் சராசரி இந்தியனின் பொதுப்பார்வையிலிருந்து நூலாசிரியர் வேறுபடுகிறார். அரசியல் விவாதிக்கப்பட வேண்டிய விசயம். அதில் கற்க, கற்பிக்க, கோபப்பட, போராட என்று பல நிலைகள் உள்ளன. கட்சி அரசியலின், அரசியல்வாதிகளின் கயமைகள் குறித்த இவரின் கோபமும் ஆவேசமும் நூலின் தனிச்சிறப்பு.

"அரசியல் என்பது நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யக்கூடிய ஒரு வழி! மார்க்கம். சம்பாதிப்பதற்கு அல்ல. இப்போது அரசியலுக்கு வரும் 90 சதவீதம் பேர் வருமானம் தேடிக்கொள்வதற்காக வருகிறார்கள். ஏதோ முதல் போட்டு வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும் என்ற முறையில், பேராசையில் வருகிறார்கள். விளைவு தன்னுடைய குடும்பத்தாரை வளப்படுத்துகிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள்". (இர.தியாகராசன், நாட்டுப்பற்று)

"மாயையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். பாதகம் செய்பவர்களைக் கண்டால் மோதி மிதித்திட வேண்டும், முகத்தில் காரி உமிழ்ந்திட வேண்டும். அந்த தைரியம் வர வேண்டும். இது எல்லா அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும். அரசியல்வாதி என்ன தவறு செய்தாலும் அவருடைய தொண்டன் அப்படியே ஏற்றுக்கொள்கிறானே! இந்த அறியாமைப் போக வேண்டும். தவறு செய்தால் நீ யாராக இருந்தாலும் உன்னைத் தட்டிக் கேட்பேன் என்று சூளுரைக்க வேண்டும். அப்படி செய்து பாருங்கள். ஒரு அரசியல்வாதி கூட மிஞ்ச மாட்டான். தவறு செய்தால் பொதுமக்கள் சும்மாவிட மாட்டார்கள் என்ற பயம் வந்துவிடும். முடிவு! ஏமாற்ற மாட்டான். பொய் சொல்லமாட்டான். சரியாகக் காரியம் செய்வான்". (இர.தியாகராசன், அப்பழுக்கற்ற வாழ்வு)

இப்படி நூலின் தொட்ட இடமெல்லாம் வெளிப்படும் நூலாசிரியர் இர.தியாகராசனின் கோபம் ஒரு நியாயத்தில் மையம் கொண்டிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. அந்த நியாயம் மானிட மேன்மை என்பதாகும். ‘மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா’ என்றானே பட்டுக்கோட்டை அந்த வழியில் ‘மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்றானே பாவேந்தன் அந்த வழியில் இன்னும்.. இன்னும்.. வள்ளலார், பாரதி போன்ற மனிதநேயப் படைப்பாளிகளின் வழியில் இர.தியாகராசன் மானுடம் பயனுற இந்த நூலைப் படைத்துள்ளார்.

"ஒருவர் டாக்டராக, இன்ஜினியராக, அரசியல்வாதியாக, ஆன்மீகவாதியாக, நாத்திகனாக எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் கூட அதையும் தாண்டி மனிதனாக வாழ்கிறானா? என்ற கோணத்தில் மட்டும்தான் பார்ப்பேன். அதென்ன ‘மனிதனாக இரு’ என்று அடிக்கடி செல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ரொம்ப சாதாரணமாக! பிறருக்காக வாழ்வதுதான் மனித வாழ்க்கை. இல்லையென்றால் மிருக வாழ்க்கை". (இர.தியாகராசன், பிறருக்காக வாழ்வது)

பிறருக்காக வாழும் மனித வாழ்க்கையை வலியுறுத்தும் நூலாசிரியருக்கு இத்தகு சிந்தனை வெறும் ஏட்டுக்கல்வி மற்றும் கேள்வி ஞானத்தால் மட்டும் வந்ததில்லை. அது அவரின் பரம்பரைச் சொத்து.

இர.தியாகராசனின் தந்தையார் விடுதலைப் போராட்ட வீரர் சு.இரத்தின வேல் அவர்கள் கற்றுத்தந்த வாழ்வியல் கல்வி அது. பெரியவர் சு. இரத்தின வேல் ஐயா அவர்களை நான் நன்கு அறிவேன். அவர் ஒரு சேவை மாமணி, மறக்கலாகா மாமனிதர், வாழ்வியல் நெறியாளர். அவர் தம் மைந்தர்களுக்கு விட்டுச் சென்ற மிகப்பெரிய சொத்து சேவை மனப்பான்மை. அவரின் மூத்த மகன் நூலாசிரியர் இர.தியாகராசன், அடுத்தவர் இர.ஆனந்தராசன், சிறிய மகன் என்னுடைய அன்பு மாணவர் மற்றும் இனிய நண்பர் சிங்கை. இரத்தின. வேங்கடேசன் மூவரும் தந்தையாரின் சேவை மனப்பான்மையைப் பொன்னேபோல் போற்றி ஒல்லும் வகையிலெல்லாம் சமுதாயப்பணி செய்து வருகின்றார்கள். நூலாசிரியர் தம் முன்னுரையிலும் இதனைக் கோடிட்டுக் காட்டுகின்றார்.

இர.தியாகராசனின் மானுடம் பயனுற என்னும் இக் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒரு தனிமனிதத் தன்னுணர்ச்சிக் கட்டுரைகள் என்ற அளவில் சுருங்கிவிடாமல் ஆன்மீகம், அரசியல், சமூகம் குறித்த பல்வேறு சிந்தனைகளை உடன்பாட்டு நிலையிலும் எதிர்மறை நிலையிலும் தூண்டிவிடுவதோடு, வாசகனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பிலக்கியப் பணியினையும் செய்கிறது. நல்ல சிந்தனைகளை விதைக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.

நா.இளங்கோ
புதுவை-8
1-5-2009
(மே தினம்)

வியாழன், 30 ஏப்ரல், 2009

வண்ணத்துப் பூச்சி – மாநி நூல் அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

வண்ணத்துப் பூச்சி – மாநி
அணிந்துரை


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி-8

தமிழில் பரவலாகக் குழந்தை இலக்கியம் என்ற பெயரில் அறியப்படும் இலக்கிய வகையே ஆய்வாளர்களால் சிறுவர் இலக்கியம் என்று குறிப்பிடப்படுகின்றது. சிறுவர் இலக்கியம் என்று இந்தவகை இலக்கியங்களை அழைப்பதுதான் பொருத்தமுடையது. பதினைந்து வயது வரையிலானவர்களை யாரும் குழந்தைகள் என்று குறிப்பிடமாட்டார்கள், அவர்கள் சிறுவர்களே. இத்தகுச் சிறுவர்களுக்காகப் பாடப்படும் இலக்கியங்கள் சிறுவர் இலக்கியங்கள் தானே.
சிறுவர் இலக்கியம் சிறுவர்கள் பாடுவது, சிறுவர்களைப் பற்றிப் பாடுவது, சிறுவர்களுக்காகப் பாடுவது என மூன்று வகைப்படும். மேற்கூறிய மூன்று வகைகளில் சிறுவர்கள் பாடுவது என்றவகை இன்றைய ஆங்கிலவழிக் கல்வியின் வருகையால் பெரிதும் சிதைவுக்கு ஆளாகியுள்ளது. ஏனெனில் கிராமப்புறங்களில் சிறுவர்கள் பாடிவந்த நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள், சிறுவர் விளையாட்டுப் பாடல்கள், மொழிப் பயிற்சி எண்ணுப் பயிற்சிப் பாடல்கள் காணாமல் போய் மண்ணுக்கு அந்நியப்பட்ட நர்சரி ரைம்ஸ்களாக மாறிவிட்டன.

இரண்டாவது வகையாகிய சிறுவர்களைப் பற்றிய பாடல்கள் தமிழில் பாடப்படவே இல்லை என்று கூறலாம். இந்தவகை இலக்கியங்களை உருவாக்க அதிக உற்றுநோக்கலும் உளவியல் கல்வியும் அவசியம். எப்பொழுதும் நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களால் இது சாத்தியமில்லை.
மூன்றாவது வகையாகிய சிறுவர்களுக்காகப் பாடுவது என்ற வகையில் நிறைய சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் தமிழில் உண்டு. ஆனால் இவ்வகைச் சிறுவர் இலக்கியங்களில் அனைத்துவகை இலக்கிய வடிவங்களுக்கும் முக்கியத்துவம் தராமல் கவிதை இலக்கியம் படைப்பவர்களே அதிகம். சிறுவர்களுக்கான நாடகம், நாவல் கட்டுரை இலக்கியங்களைப் படைப்பவர்கள் தமிழில் அதிகமில்லை. சிறுவர் கவிதை இலக்கியம் படைப்பவர்கள் அதிகமிருந்தாலும் அவர்களில் தனித்தன்மை உடைய படைப்பாளிகளைக் காண்பது மிகவும் அரிதாகவுள்ளது. பல சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் நூல் எண்ணிக்கை, நூலக விற்பனை, பரிசு, விருது போன்ற வாய்ப்புகளுக்காக எழுதுவதுதான் அதிகம். தனித்தன்மை அற்ற இவ்வகைப் படைப்புகள் ஒன்றைப் பார்த்து ஒன்று எனப் போலச் செய்தலில் உருவாக்கப் பட்டவை.
தமிழில், இத்தகு சிறுவர் இலக்கியச் சூழலில் கவிஞர் மாநி (மார்க்ரெட் நிக்கோலஸ்) அவர்களின் வண்ணத்துப் பூச்சி சிறுவர்களுக்கான கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. புதுவை மாநகரம் கவிதைப் பாரம்பரியம் மிக்க நகரம். அண்மைக் காலங்களில் அதாவது 2000 க்குப் பிறகு புதுவையில் அதிக அளவில் நூல்கள் வெளியிடப் பெறுவதும் அதிலும் குறிப்பாகக் கவிதை நூல்கள் மிகுதியாக வெளிவருவதும் கண்கூடு. இலக்கியப் படைப்புகளின் பெருக்கம் எப்பொழுதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். மாநி அவர்களும் வாழையடி வாழையெனவரும் தமிழ்க் கவிஞர் கூட்டத்தில் ஒருவராகக் கலந்துகொண்டார். தமிழ்க் கவிஞர்கள் பரம்பரையில் மேலும் ஒரு பெண்கவிஞர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.
சங்ககாலம் தொடங்கி காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார் எனத் தொடர்ச்சியான பெண்கவிதை மரபுத் தொடர்ச்சி தமிழில் உண்டு. நாட்டுப்புறங்களில் எண்ணிலடங்காத் தாலாட்டுப் பாடல்களைப் படைத்து மகிழும் பெண்கள் ஏட்டிலக்கியங்களில். சிறப்பாகச் சிறுவர் இலக்கியங்கள் படைப்பதில் அதிகப் பங்களிப்பைச் செய்யாதது வியப்பாகத்தான் உள்ளது. தமிழில் சிறுவர் இலக்கியம் படைக்கும் பெண்கள் மிக மிகக் குறைவு என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மாநி தொடங்கி வைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து இன்னும் பல பெண் படைப்பாளிகள் சிறுவர் இலக்கியங்களின் பக்கம் தங்கள் படைப்புப் பார்வையைத் திருப்ப வேண்டுமென்பது நமது அவா!.

கவிஞர் மாநி அவர்களின் வண்ணத்துப் பூச்சி நூலைக் கவிதைத் தொகுப்பு என்று குறிப்பிடுவதை விட பாடல் தொகுப்பு என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாய் இpருக்கும். ஏனெனில் வருக வருகவே! என்ற முதல் பாடல் தொடங்கி அறிவுரை கேளாய்! என்று முடியும் ஐம்பத்தொன்றாம் பாடல் வரையிலான அனைத்துமே இசையோடு பாடுவதற்கேற்ற வகையில் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. சிறுவர் பாடல்களுக்கே உரிய மரபை ஒட்டி கவிஞர் மாநியும் சில அறிவுரைப் பாடல்கள், சில விலங்குப் பாடல்கள், தலைவர்கள் குறித்தப் பாடல்கள் சில என்ற மரபான தலைப்புகளிலேயே தம் நூலை அமைத்துச் செல்கிறார் என்றாலும் சில பாடல் தலைப்புகள் வண்ணத்துப் பூச்சியில் தனித்தன்மையோடு விளங்குகின்றன. குறிப்பாக வாழ்வுண்டு!, வாழ்வு காண்போம்!, வாழ்ந்திடுவாய்ப் பெண்ணே!, வாழ்க்கை முறை அறிந்திடு! முதலான தலைப்புகளைக் குறிப்பிடலாம். இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டுச் சிறுவர்கள் சென்ற நூற்றாண்டுச் சிறுவர்களைப் போலில்லை. அவர்கள் இன்றைய ஊடகச் சூழலில் மிகவும் மாற்றம் பெற்றுள்ளார்கள். எனவே அவர்களுக்கு வெறும் பொழுது போக்குப் பாடல்கள் மட்டும் போதா, வாழ்க்கை குறித்த சரியான புரிதலும் அவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்தே கவிஞர் மாநி அவர்கள் மேலே குறிப்பிட்ட வாழ்க்கை தொடர்பான பாடல்களை இணைத்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

பகையை அறுக்கப் போரிடு
பாய்ந்து சென்று வென்றிடு
வகையாய் வாழ்வை வகுத்திடு
வாழும் வரையில் உயர்ந்திடு
(மாநி, அறிவுரை கேளாய்!)

மேலே இடம் பெற்றுள்ள பாடலைப்போல் அறிவுரைப் பாடல்கள் பலவற்றிலும் புதிய புதிய உள்ளடக்கங்களோடு கவிஞர் மாநி படைத்துள்ள பாடல்கள் பொதுநிலையில் பார்ப்பவர்களுக்கு இவை சிறுவர் பாடல்களின்; உள்ளடக்கங்கள் தாமா? என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கலாம். ஆனால் இன்றைய சிறுவர்கள் மற்றும் அவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி வாழ்க்கைச் சூழல் இவைகளோடு பொருத்திப் பார்த்தால் இவ்வகை உள்ளடக்கங்களின் பொருத்தப்பாடு புலப்படும்.

சமூகம் இரண்டு வகையான உழைப்பாளிகளைக் கொண்டுள்ளது. ஒன்று உடலுழைப்பு, மற்றொன்று மூளை உழைப்பு. இரண்டு வகையான உழைப்புகளுமே சமூகத்திற்கு இன்றியமையாதனவாகும். ஆனால் மக்கள் மூளை உழைப்புக்குத் தருகிற அங்கீகாரத்தையோ மதிப்பையோ உடல் உழைப்புக்கும் உடல் உழைப்பாளிகளுக்கும் தருவதில்லை. உடலுழைப்பு, வியர்வை, அழுக்கு இவைகள் குறித்துச் சமூகத்தின் நடுத்தட்டு மக்கள் ஒருவகை அசூயையே கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்போதே உடலுழைப்புக்கு எதிரான மனநிலையிலேயே வளர்க்கின்றனர். வியர்வை வராத அழுக்கடைய வாய்ப்பில்லாத பணிகளையே தங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும், அதுவே சமூகத்தில் உயர்ந்த பணி என்று நினைக்கும் பெற்றோர் இதே மனநிலையைப் பிள்ளைகள் பெறும்படியாக மூளைச் சலவை செய்துவிடுகின்றனர். தங்கள் பிள்ளைகள் டாக்டராகவோ எஞ்சினியராகவோ வர வேண்டும் என்பதிலேயே அவர்கள் இலக்கு மையப்படுத்தப்படுகிறது. எனவேதான் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆங்கில வழிக் கல்வி, ரேங்க் போன்ற சில குறுகிய வட்டங்களுக்குள்ளேயே நடுத்தட்டு மக்களின் சிந்தனைகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. கவிஞர் மாநி இவ்வகை மாயைகளை எல்லாம் போட்டு நொறுக்குகின்றார்.

வாழ வேண்டும் புறப்படு!
வளர வேண்டும் புறப்படு!
வருவாய் கொள்ளப் புறப்படு!
வருந்தி உழைக்கப் புறப்படு!
வெற்றி கொண்டு புறப்படு!
வேர்வை சிந்தப் புறப்படு!
(மாநி, புறப்படு தம்பி)

விளையும் அறிவில் விருப்பங்கொள்!
வேர்வை சிந்த விருப்பங்கொள்!
(மாநி, விருப்பங்கொள்வாய்)

மூளை உழைப்புக்கு இணையாக, இல்லை ஒரு படி மேலாக உடலுழைப்பைப் போற்றுகின்றார் கவிஞர். உடலுழைப்பும் வியர்வையும் மாண்புடையனவாகக் கவிஞரால் சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய சிறுவர்கள் மனதில் இக்கருத்து விதைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே கவிஞர் இப்படிப் பாடுகிறார்.

உழவு செய்யும் உழவன்!
ஊரைக் காக்கும் தலைவன் !
(மாநி, உழவனைப் போற்றிடு)

என்று உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாம் உழவனை ஊரைக் காக்கும் தலைவன் என வருணிக்கும் கவிஞரின் சமூகப் பார்வை உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது.
வண்ணத்துப் பூச்சி என்ற இத்தொகுப்பில் நல்ல பாடல்கள் பல தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்பட்டு மனநிறைவளிக்கின்றன. விருப்பங்கொள்வாய்!, வாழ்வு காண்போம்!, இயற்கை!, ப+க்கள் தெரிந்திடு!, படிப்பே உலகம்! முதலான பாடல்களை அந்த வகையில் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். படிக்கப் படிக்க இன்பம் தரும் பாடல்கள் அவை.

ஆடும் கடலும் அருவி நீரும்
கூடும் நதியும் உயிரைக் காக்கும்!
பாடும் குயிலும் ஆடும் மயிலும்
ஆடும் மலரும் அழகைச் சேர்க்கும்

சிட்டாய்ப் பறக்கும் குருவியும் புறாவும்
பட்டான், தட்டான் யாவும் இங்கே
பட்டுப் போன்ற இனிமை யாகும்
விட்டு விலகாக் காட்சி என்போம்!

கொட்டும் மழையும் குட்டை குளமும்
வட்டப் பாதையின் வளைவும் நெளிவும்
உயர்ந்த மலையும் உறையும் பனியும்
வயல்வெளி பசுமையும் வளமை ஆகும்
(மாநி, இயற்கை)

கவிஞர் மாநி தீட்டியுள்ள இயற்கை அழகோவியம் இது.
எளிய இனிய தமிழ்ச் சொற்கள், சந்த நயம், மரபுத் தொடர்ச்சி, புதிய உள்ளடக்கங்கள், சமுதாயச் சிந்தனைகள் என்று எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கும் வண்ணத்துப் ப+ச்சி என்ற இப்பாடல் தொகுப்பு நிச்சயம் பாராட்டத் தக்க ஒரு புதிய வரவு. கவிஞர் மாநி தொடர்ந்து பல நல்ல படைப்புளை உருவாக்கி தமிழுலகிற்கு அணி சேர்க்க வேண்டும்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்


என்பார் ஒளவையார். தொடர்ந்து பழகுவதால் எதுவும் சாத்தியமாகும், எளிமையாகும். கவிஞர் மாநி அவர்களும் தொடர்ந்து கவிதை எழுதிப் பழகப் பழக அவருக்கும் கவிதை சாத்தியமாகும் எளிமையாகும்.

வாழ்த்துக்களுடன்
நா.இளங்கோ
14-04-2009
அம்பேத்கர் பிறந்த நாள்

வெள்ளி, 27 மார்ச், 2009

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-1

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு

என்று பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட ஒளவை சு.துரைசாமி அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். மிகச் சாதாரண அரசுப் பணியில் தம் வாழ்க்கையைத் தொடங்கி தம் இடையறாத முயற்சியாலும் தளராத தன்னம்பிக்கையாலும் தமிழாசிரியர், கல்லூரிப் பேராசிரியர், பல்கலைக் கழகப் பேராசிரியர் எனத் தம்மை உயர்த்திக் கொண்டதோடு மட்டுமில்லாமல் தமிழின் உயர்வுக்கும் தளராது உழைத்தவர். உரைவேந்தர் என்று தமிழ்கூறு நல்லுலகத்தினரால் பாராட்டப்படும் தனிச்சிறப்பிற்கு உரியவர்.

ஒளவை சு.துரைசாமி வாழ்க்கைக் குறிப்பு:

ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள ஒளவையார் குப்பம் என்ற ஊரில் பிறந்தவர் (05.09.1902). இவர்தம் பெற்றோர் சுந்தரம் பிள்ளை-சந்திரமதி அம்மையார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் துரைசாமி. ஒளவையார் குப்பம் என்ற ஊர்ப்பெயரின் அடையாளமே சு.துரைசாமி பெயருக்கு முன்னொட்டாக அமைந்து ஒளவை சு. துரைசாமி என்று வழங்கலாயிற்று. உள்ளுரில் தொடக்கக் கல்வியைக் கற்ற ஒளவை, திண்டிவனத்தில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். பின்னர் வேலூர் ஊரிசு கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். கல்லூரிக் கல்வியைத் தொடர இயலாமல் உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார். அப்பணி அவருக்கு நிறைவளிக்காதலால் தமிழ்ப் பணிக்கு ஆயத்தமானார். ஒளவை சு.துரைசாமியின் குடும்பம் தமிழில் ஈடுபாடு உடைய குடும்பம். எனவே உரைவேந்தருக்குத் தமிழில் நல்ல ஈடுபாடு இருந்தது. உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது தமிழாசிரியர் சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள் ஒளவைக்குத் தமிழறிவு ஊட்டினார். அவரிடம் இருந்த சூளாமணி, ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படி மற்றும் ஏட்டுப்பிரதிகளை உரைவேந்தர் ஆராயும் திறன் பெற்றிருந்தார்.

தமிழ் ஆர்வம் கொண்ட ஒளவை சு.துரைசாமி அவர்கள் முறையாகத் தமிழ் கற்று தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிய விரும்பினார். அதனால் தாம் புரிந்த அலுவலை விடுத்துத் தம் 22 ஆம் அகவையில் தஞ்சையை அடுத்த கரந்தைப் புலவர் கல்லூரி அடைந்தார். கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவர் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் நம் ஒளவை துரைசாமியின் ஆற்றலறிந்து தமிழ்ச்சங்கப் பள்ளியில் தமிழாசிரியர் பணி தந்தார். கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்த கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் தமிழ்ப் புலமை ஒளவைக்கு உரம் சேர்த்தது. 1925 முதல் 1928 வரை கரந்தையில் ஒளவை சு.துரைசாமி தங்கியிருந்தார். அறிஞர் பெருமக்களுடன் உரையாடித் தமிழறிவு பெற்றார். 1930 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வு எழுதி வெற்றிபெற்றார். ஒளவை சு.துரைசாமி அவர்களுக்கு இல்லறத் துணையாக வாய்த்தவர் கோட்டுப்பாக்கம் (காவேரிப் பாக்கம்) உலோகாம்பாள் ஆவார்.

ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமிழ்மொழியில் நல்ல புலமை அமையப் பெற்றதுடன் ஆங்கிலத்திலும் நல்ல புலமையுடையவர். வடமொழியும் அறிந்தவர். உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல நிலைகளில் பணிபுரிந்து மிகச்சிறந்த மாணவர்கள் பலரை உருவாக்கியவர். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கியவர். கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு, சைவசித்தாந்தம் உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர்.

கரந்தையை விட்டு வெளியேறிய உரைவேந்தர் அவர்கள் 1929 முதல் 1941 வரை வடார்க்காடு மாவட்டத்தில் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்தார். காவிரிப்பாக்கம், காரை, திருவத்திபுரம் (செய்யாறு), போளூர், செங்கம் உள்ளிட்ட ஊர்களில் பணிபுரிந்துள்ளார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு விளங்கியதால் அக்கால ஆட்சியாளர்களால் அடிக்கடி ஒளவை பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது. உரைவேந்தர் பள்ளியில் பணியாற்றினாலும் தமிழ்ப்பொழில் இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதியுள்ளார். செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட இதழ்களிலும் பின்னாளில் எழுதினார்.

ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமக்கு உரிய ஆராய்ச்சிப் பணிக்கு ஏற்ற பணி வாய்ப்பு அமையாதா? என ஏங்கிய நிலையில் 1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. அங்குப் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்களின் தொடர்பால் அம்மொழி இலக்கியங்கள், வரலாறு, தத்துவம் முதலான புதிய துறைகள் ஒளவைக்கு அறிமுகம் ஆயின.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கற்று வல்ல அறிஞர்களைப் பணியிலமர்த்திய 1942 ஆம் ஆண்டளவில் ஒளவை சு. துரைசாமி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியில் அமர்ந்தார். சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் முதலான அரிய நூல்கள் இவர் வழியாக வெளிவந்தன. எட்டாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் இருந்தார். அதுபொழுது பணிபுரிந்த தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், க.வெள்ளைவாரணனார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகி மகிழ்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது புறநானூறு உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதினார். மதுரை தியாகராசர் கல்லூரியின் உரிமையாளர் கருமுத்து. தியாகராச செட்டியார் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி உரைவேந்தர் அவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் 1951, சூலைத் திங்களில் பணியில் இணைந்தார். ஒளவை சு. துரைசாமி அவர்கள் பேராசிரியர் பணிபுரிந்ததுடன் பல்வேறு இலக்கிய மேடைகளில் தம் கருத்துகளை நயம்பட எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர்.

ஒளவை சு. துரைசாமி அவர்களுக்குக் கல்வெட்டில் நல்ல பயற்சியும் புலமையும் இருந்ததால் தாம் எழுதிய சங்க இலக்கிய உரைகளுக்குச் சான்றாகக் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்குவதில் வல்லமை பெற்றிருந்தார். மேலும் உ.வே.சாமிநாதர் பதிப்பித்த பிறகு உரைவேந்தரின் உரைநூல்கள் வெளிவந்ததால் உ.வே.சா. அவர்களுக்குக் கிடைக்காத சில படிகளையும் பார்வையிட்டுச் செப்பம் செய்துள்ளார்.

ஒளவை சு.துரைசாமியின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டும்முகமாக மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் மிகப்பெரும் பாராட்டுவிழா அன்னாரின் மணிவிழா ஆண்டில் நிகழ்த்தப் பெற்றது (16.01.1964). இராதா தியாகராசனார் அவர்கள் தம் ஆசிரியரின் சிறப்புகளைப் பலப்படப் புகழ்ந்து "உரைவேந்தர்" என்னும் பட்டம் பொறிக்கப் பெற்ற தங்கப்பதக்கம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். தமிழ்ப்பணி, சமயப்பணி இரண்டையும் தம்மிரு கண்கள் எனப் போற்றிப் புரந்த நம் ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமது 79 ஆம் அகவையில், 03-04-1981 ஆம் நாளன்று மதுரையில் தமது இல்லத்தில் இயற்கை எய்தினார். உரைவேந்தரின் திருவருட்பா, ஐங்குறுநூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளிட்ட நூல்களின் பேருரைகள் யாவும் அவரின் தமிழ்ப்புகழை என்றும் பேசுவனவாகும்.

ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்:

ஒளவை அவர்கள் ஒப்புயர்வற்ற பேராசிரியராகவும் நாவண்மை மிக்க நாவலராகவும் திகழ்ந்தமை மட்டுமின்றி நுழைபுலமிக்க நூலாசிரியராகவும் திகழ்ந்தார். பி.வி.கிரி அவர்கள் தாம் தொகுத்த ‘உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு’ என்னும் சிறு வெளியீட்டில் ஒளவையின் நூல்கள் முப்பத்து நான்கினைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நூல்கள் அகரவரிசையில் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

01. ஊர்ப்பெயர்-வரலாற்றாராய்ச்சி (அச்சாகவில்லை)
02. ஐங்குறுநூறு உரை
03. ஒளவைத் தமிழ்
04. சிலப்பதிகார ஆராய்ச்சி
05. சிலப்பதிகாரச் சுருக்கம்
06. சிவஞானபோதச் செம்பொருள்
07. சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும்
08. சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
09. சீவக சிந்தாமணிச் சுருக்கம்
10. சூளாமணி
11. சைவ இலக்கிய வரலாறு
12. ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
13. தமிழ்த் தாமரை
14. தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்
15. திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
16. திருவருட்பா மூலமும் உரையும் (ஒன்பது தொகுதிகள்)
17. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
18. தெய்வப்புலவர் திருவள்ளுவர்
19. நந்தாவிளக்கு
20. நற்றிணை உரை
21. பதிற்றுப்பத்து உரை
22. பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு
23. பரணர்
24. புதுநெறித் தமிழ் இலக்கணம் (2 பகுதிகள்)
25. புறநானூறு மூலமும் உரையும் (2 பகுதிகள்)
26. பெருந்தகைப் பெண்டிர்
27. மணிமேகலை ஆராய்ச்சி
28. மணிமேகலைச் சுருக்கம்
29. மதுரைக்குமரனார்
30. மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு)
31. மருள்நீக்கியார் நாடகம் (அச்சாகவில்லை)
32. யசோதர காவியம் மூலமும் உரையும்
33. வரலாற்றுக் கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்)
34. Introduction to the Study of Thiruvalluvar

இந்தப் பட்டியலைப் பார்க்கும் பொழுது ஒளவை சு.துரைசாமி அவர்களின் எழுத்துப்பணிகள் பதிப்புப்பணி, உரைவிளக்கப்பணி என்பதாக மட்டுமின்றி கட்டுரைத் தொகுப்புகள், இலக்கிய வரலாற்று ஆய்வுகள், தமிழக வரலாற்று ஆய்வுகள், ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, சைவ சித்தாந்தத் தத்துவ நூல்கள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், ஆங்கில நூல்கள் எனப் பல்துறை சார்ந்த ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் நீண்டுள்ளமை உரைவேந்தரின் பல்துறைப் புலமைக்குத் தக்கதோர் சான்றாக விளங்குவதை உணர முடிகின்றது.

சங்க இலக்கியப் பதிப்புகள்:

1851 இல் திருமுருகாற்றுப்படையுடன் தொடங்கப் பெற்ற சங்க இலக்கிய முதற்பதிப்பு முயற்சி 1920 இல் வெளிவந்த அகநானூற்றுப் பதிப்புடன் நிறைவெய்துகிறது. திருமுருகாற்றுப்படை 1851 இல் ஆறுமுக நாவலரால் முதன்முதலில் பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலே சங்க இலக்கியங்களில் முதன்முதலில் பதிப்பிக்கப் பெற்ற நூல் என்ற செய்தியை ந.விசாலாட்சி, தம் பழந்தமிழ்ப் பதிப்புகள் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் பெரும்பாலான பதிவுகளில் 1887 இல் சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்த கலித்தொகையே முதல் சங்க இலக்கியப் பதிப்பு என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.

சங்க இலக்கியங்களின் முதல் பதிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் உ.வே.சாமிநாதய்யர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், பின்னத்தூர் அ. நாராயணசாமி, சௌரிப் பெருமாள் அரங்கன், ரா.இராகவய்யங்கார் ஆகிய அறுவர் ஆவர். இவர்களுள் உவே.சா. தவிர மற்ற ஐவரும் ஒவ்வொரு முதல்நூல் பதிப்புகளே பதிப்பிக்க, உ.வே.சா.அவர்களோ சங்க இலக்கியங்களில் முதல் பதிப்புகளாக ஐந்து இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார் என்பது தனிச்சிறப்பு.

ஏட்டுச் சுவடியிலிருந்து முதன்முதலில் அச்சேறிய சங்க இலக்கியங்களின் முதல் பதிப்பினைப் பதிப்பித்தவர் பெயர், பதிப்பித்த ஆண்டு பற்றிய அட்டவணை கீழே இடம்பெற்றுள்ளது. இதே அட்டவணையில் ஒளவை அவர்கள் பதிப்பித்த சங்க இலக்கியப் பதிப்புகள், பதிப்பித்த ஆண்டு குறித்த தகவல்களும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

எண் நூல் பதிப்பாளர் ஆண்டு ஒளவைப் பதிப்பு
1 திருமுருகாற்றுப்படை- உரையுடன் ஆறுமுக நாவலர் 1851
2 கலித்தொகை- உரையுடன் சி.வை.தாமோதரம் பிள்ளை 1887
3 பத்துப்பாட்டு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1889
4 புறநானூறு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1894 1947, 1951
5 ஐங்குநுறூறு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1903 1938, 1957
6 பதிற்றுப் பத்து- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1904 1951
7 நற்றிணை- உரையுடன் பின்னத்தூர் நாராயணசாமி 1915 1966
8 குறுந்தொகை- உரையுடன் சௌரிப் பெருமாள் அரங்கன் 1915
9 பரிபாடல்- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1918
10 அகநானூறு ரா.இராகவய்யங்கார் 1920

சங்க இலக்கிய முதன்முதல் பதிப்புகள் பத்து என்றாலும் ஒரே நூலுக்குப் பல பதிப்பாசிரியர், ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புகளை உருவாக்குதல், அதாவது மூலம் மட்டும், மூலமும் உரையும், ஒரு பகுதி மட்டும் எனப் பல்வேறு பதிப்புகளைத் தருவதால் சங்க இலக்கிய முதல் பதிப்புகளின் எண்ணிக்கை 160க்கும் மேற்பட்டதாகிறது. சங்க இலக்கியப் பதிப்புகளைக் கொண்டுவரும் முயற்சியில் 1996 வரை 65க்கும் மேற்பட்ட பதிப்பாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிகிறது. (தி.மகாலட்சுமி, பதிப்பு வரலாறு, சங்க இலக்கியம், ப.448) சங்க இலக்கியப் பதிப்பாசிரியர் அறுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் என்றாலும் தனித்தன்மை வாய்ந்த பதிப்பாசிரியராகவும் தகுதிவாய்ந்த உரையாசிரியராகவும் தனியிடம் பெற்றவர் உரைவேந்தர் என்ற அடைமொழிக்குரிய ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்களே. இவர் ஐங்குறுநூறு மூன்று தொகுதிகள், புறநானூறு இரண்டு தொகுதிகள், பதிற்றுப்பத்து ஒரு தொகுதி, நற்றிணை இரண்டு தொகுதிகள் என்று சங்க இலக்கிய எட்டுத்தொகையின் நான்கு நூல்களுக்கு எட்டுத் தொகுதிகளாகப் பதிப்பும் உரையும் செய்துள்ளார்.

ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள்:

ஐங்குறு நூறு

ஒளவை சு.துரைசாமி அவர்கள் முதன்முதலில் பதிப்பித்த சங்க இலக்கியம் ஐங்குறு நூறு- அதிலும் மருதத்திணை மட்டுமே. ஐங்குறு நூறு மருதம் மூலமும் விளக்கவுரையும் என்ற பெயரில் 1938 இல் இந்நூல் அச்சாகி வெளிவந்தது. இதனைப் பதிப்பித்தவர் ‘அவ்வைத் தமிழக மாணவர்’ திரு கா.கோவிந்தன் ஆவார். பின்னர் ஒளவையின் ஐங்குறு நூறு விளக்கவுரைப் பதிப்பு அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக 1. ஐங்குறு நூறு குறிஞ்சி, பாலை (1957), 2. ஐங்குறு நூறு மருதம், நெய்தல் (1957), 3. ஐங்குறு நூறு முல்லை (1958) என்ற மூன்று தொகுதிகளாகத் தனித்தனியே பதிப்பிக்கப்பெற்றது. 1958 அக்டோபரில் மூன்று தொகுதிகளையும் இணைத்து ஒரே தொகுதியாக ஐங்குறு நூறு மூலமும் விளக்கவுரையும் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

ஐங்குறு நூறு முழுமைக்குமான விளக்கவுரை எழுத நேர்ந்தமை குறித்து ஒளவை அவர்களே தம் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“அக்காலை அருள்திரு தம்பிரான் சுவாமி அவர்கள் நூன்முழுதிற்கும் உரையெழுதுமாறு அருளினார்கள். அதன்பின் தொடக்கத்தில் எனக்குத் தமிழ் கற்பித்த சீர்காழி, உயர்திரு கோவிந்தசாமி ரெட்டியார் அவர்களின் ஏட்டுப்பிரதி யொன்று கிடைத்தது. அதன்கண் அச்சுப் பிரதியில் காணப்படாத திருத்தங்களும் சில பாடல்களுக்குரிய குறிப்புரைகளும் காணப்பட்டன. அவற்றை இப்பொழுது ஆங்காங்கே குறித்துக் காட்டியுள்ளேன்”.

புறநானூறு:

புறநானூறு முதன் முதலில் உ.வே.சா. அவர்களால் 1894 இல் பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலின் 400 பாடல்களில் முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை கிடைத்துள்ளது. உ.வே.சா. பழைய உரை கிடைக்காத பாடல்களுக்குக் குறிப்புரை தந்துள்ளார்கள். ஒளவை துரைசாமி அவர்களின் உரை விளக்கத்துடன் கூடிய முதல் இருநூறு செய்யுள்கள் அடங்கிய முதல் தொகுதியை 1947 ஆம் ஆண்டிலும் அடுத்த இருநூறு செய்யுள்கள் கொண்ட இரண்டாம் தொகுதியை 1951 ஆம் ஆண்டிலும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டனர். பழைய உரை கிடைக்காத 269 முதல் 400 வரையுள்ள 132 செய்யுள்களுக்கும் உரைவேந்தர் ஒளவை அவர்கள் எழுதிய உரை தனிப்பெருஞ் சிறப்பு பெற்றதாகும்.

உ.வே.சா.வின் புறநானூறு அச்சுப் பிரதியுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து செப்பம் செய்வதற்கு வாய்ப்பாக அரித்துவார மங்கலம் இராசாளியாரின் விருப்பத்திற்கிணங்க திரு. கிருட்டிணசாமி சேனைநாட்டார் படியெடுத்து வைத்திருந்த புறநானூற்று ஓலைச்சுவடி ஒன்றின் எழுத்துப்படிவம் ஒன்று ஒளவைக்குக் கிடைத்தது. அந்த புறநானூற்று எழுத்துப்படிவமே ஒளவையின் புறநானூற்றுப் பதிப்புக்கு அடிப்படையாய் அமைந்தது. உ.வே.சாவின் அச்சுப்படியையும் சேனைநாட்டாரின் எமுத்துப் படிவத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்ததில் முற்பகுதியில் வேறுபாடுகள் அதிகம் காணப்படவில்லை யென்றும் பின்னர் உள்ள 200 பாடல்களில் சில பாடல்களில் அச்சுப்பிரதியில் விடுபட்டிருந்த சில அடிகளும் சிலவற்றில் சில திருத்தங்களும் காணப்பெற்றன என்றும் தம் பதிப்பின் செப்பம் குறித்துக் குறிப்பிடுகின்றார் ஒளவை அவர்கள்.

பதிற்றுப்பத்து:

பதிற்றுப்பத்தினை முதன்முதலாக உ.வே.சா அவர்கள் 1904 இல் பழைய உரையுடன் பதிப்பித்தார்கள். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பதிற்றுப்பத்தினை ஒளவை அவர்கள் பாடஞ்சொல்லும் சமயத்தில் இதற்கொரு விளக்கவுரை இருந்தால் நலமாயிருக்கும் என்றெண்ணி நண்பர்கள் சிலர் வாயிலாகப் பதிற்றுப்பத்து ஏடுகள் இரண்டினைப் பெற்று உ.வே.சாவின் அச்சுப்படியினையும் தமக்குக் கிடைத்த இரண்டு பதிற்றுப்பத்து ஏட்டுப்பிரதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார்கள். ஒப்பிட்டு ஆராய்ந்ததில் சில பாடவேறுபாடுகளும் சில பாடங்களில் காணப்பட்ட ஐயங்களுக்குத் தெளிவும் கிடைத்தன என்பார் ஒளவை அவர்கள். ஒளவை உரை எழுதுவதை அறிந்த அவருடைய ஆசிரியர் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, பதிற்றுப்பத்துக்குத் தாம் எழுதி வைத்திருந்த உரையையும் ஒளவை துரைசாமிக்குத் தந்துதவினார்.

ஒளவை எழுதிய உரையை நேரில் கண்டு ஊக்கப்படுத்திய அவருடைய மற்றொரு ஆசிரியர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பதிற்றுப்பத்தின் பதிகங்கங்கள் ஆராய்ச்சிக்கு இடமளிப்பதால் அவற்றுக்கு உரையெழுத வேண்டாமென்றும் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இடம்பெறும் ‘எரியன்ன நிறத்தன்’ என்னும் பாடலைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளாகக் கோத்து உரையெழுதுமாறும் அறிவுறுத்தினார். ஒளவை ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறே தம் பதிற்றுப்பத்து விளக்கவுரை நூலைப் பதிப்பித்தார். ஒளவை சு.துரைசாமியின் இப் பதிற்றுப்பத்து பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக 1951 இல் வெளிவந்தது. பதிகங்களுக்கு ஒளவை உரையெழுதாத காரணத்தால் கல்வெட்டு ஆய்வறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரால் எழுதப்பெற்ற பதிற்றுப்பத்தும் பதிகங்களும் எனும் தலைப்பிலான ஆய்வுரை ஒன்று நூலில் இணைக்கப் பெற்றுள்ளது.

நற்றிணை:

நற்றிணையை முதன்முதலில் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர் அவர்கள். ஏட்டுச்சுவடியிலிருந்த இந்நூலின் மூலத்தைத் தாம் எழுதிய உரையுடன் அச்சுக்குக் கொண்டு வந்தவர் அவரே. ஐங்குறு நூறு மருதத்திணைக்கு ஒளவை அவர்கள் எழுதிய விளக்கவுரையைக் கண்ட பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை ஒளவையை நேரில் சந்தித்து அவரின் உரைநலத்தைப் பாராட்டியதோடு அமையாது தம்மிடமிருந்த நற்றிணை ஏட்டுப்பிரதியினை ஒளவைக்குக் காட்டி இந்நூலையும் நீங்கள் ஆராய்ந்து விளக்கவுரையுடன் பதிப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நற்றிணை ஆராய்ச்சிக்குத் துணைசெய்த ஏடுகளாகப் பின்வரும் நான்கு ஏடுகளை ஒளவை தம் நற்றிணைப் பதிப்பு முன்னுரையில் குறித்துள்ளார்கள்.
1. அரசினர் கையெழுத்து நூல் நிலைய ஏடு.
2. மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஏடு.
3. டொம்மிச்சேரி கருப்பையாத் தேவர் ஏடு.
4. புதுப்பட்டி சிவ.மு. முத்தையா செட்டியார் ஏடு.
மேலும் நற்றிணைக்கு புதியதோர் விளக்கவுரைப் பதிப்பொன்றினைத் தாம் எழுதி வெளியிட நேர்ந்தமைக்கான காரணங்களாக ஒளவை அவர்கள் முன்னுரைப் பகுதியில் குறிப்பிடும் செய்திகள் இன்றியமையாதன.

“இவ்வேடுகளை உடன்வைத்து ஆராய்ந்ததில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பாடவேறுபாடுகளும், பெயர் தெரியாதிருந்த பல பாட்டுக்களின் ஆசிரியர் பெயர்களும் தெரியவந்தன. சில ஆசிரியர்களின் பெயர்களும் திருத்தமடைந்தன. அவற்றின் உண்மை வடிவு காண்டற்கும் ஆசிரியர் பெயர்களிலும் பாட்டுக்களிலும் காணப்படும் ஊர்களை அறிதற்கும் அரசியலார் வெளியிட்டிருக்கும் கல்வெட்டுத் தொகுதிகளும் ஆண்டறிக்கைகளும் போதிய துணைபுரிந்தன. ஏடுகளை ஒப்பு நோக்கியபோது காணப்பட்ட பாடவேறுபாடுகளால் பாட்டுகட்கு உரையே வேறு எழுதவேண்டிய இன்றியமையாமை பிறந்தது. அதனால் எனது இப்பதிப்பு நற்றிணை மூலத்தோடு விளக்கவுரை பெற்று வெளிவருகிறது.” (ஒளவை, முன்னுரை, நற்றிணை, மு.தொ., ப.ஐஓ-ஓ)

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-2

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்)
பகுதி-2


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பதிப்பு நோக்கம்:

ஒளவை சு. துரைசாமி அவர்கள் சங்க இலக்கியங்களில் ஐங்குறு நூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய நான்கு நூல்களுக்கே புதிய பதிப்பு முயற்சி மற்றும் விளக்கவுரை காணும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். நுண்மாண் நுழைபுலமிக்க ஒளவை அவர்கள் சங்க இலக்கியங்கள் முழுவதற்கும் விளக்கவுரை கண்டிருப்பார்களேயானால் சங்க இலக்கியங்களுக்கு அவ்வுரைகள் மணிமகுடம் போல் விளங்கியிருக்கும் என்பதில் ஐயமொன்றுமில்லை.
ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்பு நூல்களின் முதன்மை நோக்கம் புதிய விளக்கவுரையோடு நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்பதே ஆகும். மேற்கூறிய நான்கு நூல்களின் முன்னுரையையும் ஒப்பிட்டுக் காண்பவர்களுக்கு இக்கருத்து எளிதில் விளக்கம்பெறும். உரைகாணும் முயற்சியில் ஈடுபட்ட ஒளவை அவர்களுக்கு இளமைக் காலம் முதலே ஏடுகளைப் படித்தல், படியெடுத்தல் முதலியவற்றில் பயிற்சி இருந்ததனால் ஒத்த ஏடுகளை ஒப்பிட்டுப் பார்த்துப் பாடபேதம், மூலத்தின் விடுபாடுகளைக் கண்டறிதல் முதலான பணிகள் எளிமையாயின. எனவே ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் யாவும் விளக்கவுரைப் பதிப்புகள் என்ற தனித்தன்மையைப் பெறுகின்றன.

ஒளவை சு.துரைசாமியின் சங்க இலக்கியப் பதிப்புகளின் தனித்தன்மைகள்:
உரைவேந்தர் ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் யாவும் விளக்கவுரைப் பதிப்புகள் என்ற தனித்தன்மையோடு எளிய, இனிய, தனித்தமிழ்ப் பதிப்புகள் என்ற பெருமையினையும் பெற்றனவாகும். தமது பதிப்புகளில் ஒவ்வொரு செய்யுளுக்கும் முன்னுரை, உரை, உரை விளக்கம் என்னும் மூன்று பகுதிகளை அமைத்து ஒரே சீர்மைமிக்க கட்டமைப்போடு விளக்கவுரையினை அமைக்கின்றார் ஒளவை அவர்கள். புறநானூற்றுப் பதிப்பு இரண்டாம் பகுதி முன்னுரையில் ஒளவை தம் விளக்கவுரை பற்றிக் குறிப்பிடுவன பின்வருமாறு,
“முதற்பகுதி போல இவ்விரண்டாம் பகுதியிலும் ஒவ்வொரு பாட்டுக்கும் பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, பாட்டின் கருத்து, உரை, உரை விளக்கம் ஆகியவை தரப்பெற்றுள்ளன. பாடவேறுபாடுகளும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் அவ்வப் பாட்டின் உரை விளக்கம் முதலிய பகுதிகளில் குறிக்கப் பெற்றிருக்கின்றன. சங்கச் சான்றோர்களைப் பற்றிக் கிடைத்த வரலாற்றுக் குறிப்புகட்கேற்ற ஆதரவு நல்கும் கல்வெட்டு முதலிய சான்றுகள் விடாமல் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன.” (ஒளவை, புறம். இ.தொ., முன்னுரை, ப.எiii)
உரைவேந்தரின் இம்முன்னுரைப் பகுதி அவர் உரையின் கட்டமைப்பினைத் தெளிவாக உணர்த்துகிறது.

பாடலின் முன்னுரை: இப்பகுதியில் பாடிய புலவரின் வரலாறு, புலவர் பெயர் ஆராய்ச்சி, புலவரின் ஊர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, கல்வெட்டு முதலான சான்றுகள், புலவர் பெயர் குறித்த பாடபேதங்கள் முதற் பகுதியாகவும், பாடப்பட்டோர் வரலாறு, பெயர் ஆராய்ச்சி, ஊர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, கல்வெட்டு முதலான சான்றுகள் இரண்டாம் பகுதியாகவும், பாடல் செய்தி மற்றும் பாடல் தோன்றுவதற்குரிய சூழ்நிலை, பாடல் பொருளைத் துறைக் குறிப்புகளோடு பொருத்திக் காட்டுதல் முதலானவைகள் மூன்றாம் பகுதியாகவும் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் அமைத்துக்காட்டும் ஒளவையின் திறம் பாடல் கருத்தில் படிப்போர் உள்ளம் தோய்வதற்கு வழியமைத்துத் தந்துவிடும்.

“செய்யுட் பொருளையுணர்ந்து இன்புறுதற்கு அவ்வச் செய்யுள் பாடப்பெற்ற செவ்வியினை அறிந்துகொள்ளுதல் இன்றியமையாதது. அதனால் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் புலவருள்ளத்திலிருந்து அப்பாடல் தோன்றுதற்குரிய சூழ்நிலையினையும் உள்ளத்து உணர்ச்சிகளையும் சொல்லோவியமாக இவ்விளக்கவுரையாசிரியர் புனைந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்முறை படிப்போருள்ளத்தில் பாடல் பொருளை நன்கு பதியும்படி செய்யும். மேலும் இவ்வாசிரியர் பாடற்பொருளைத் துறைக் குறிப்புடன் இயைத்துரைக்கும் முறை பெரிதும் சுவை பயப்பது.” (அ.சிதம்பரநாத செட்டியார், அணிந்துரை, புறம். இ.தொ., ப.ஒiii).

புறநானூறு இரண்டாம் தொகுதிக்கு அணிந்துரை வழங்கிய அ.சிதம்பரநாத செட்டியார் அவர்களின் மேற்குறித்த கூற்று உரைவேந்தர் ஒளவையின் பாடல் முன்னுரையின் சிறப்பினைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகும்.

உரை: பாடலுக்கு உரை காண்பதிலும் ஒளவை படிப்போர்க்கு சுமையேற்றாத எளிய இனிய உத்தியினைக் கையாளுகின்றார். கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைப்பது போலப் பாடலைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைக்கும் முறையினைப் பின்பற்றுகின்றார் ஒளவை. இவ்வுத்தி பழைய உரைகாரர்களில் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கையாண்ட உத்தியாகும். இவ்வுத்திக்குப் பாடலின் கண்ணழித்துப் பொருள் கூறுதல் என்று பெயர். பழைய உரையுள்ள பாடல்களுக்கு உரைகூறும் இடத்திலும் நீண்ட பழைய பொழிப்புரைகளை இம்முறைக்கேற்ப மாற்றி அமைக்கின்றார். அதாவது பாடலைத் தொடராகப் பிரித்து, அத்தொடருக்குரிய பழைய உரையைத் தக்க இடத்தில் பொருத்தி, பாடற் பொருள் எளிதாக விளங்கும் வகையில் உரை அமைக்கின்றார்.

உரை விளக்கம்: செய்யுள் உரைக்கு அடுத்து ஒளவை அவர்கள் அமைக்கும் பகுதி, உரை விளக்கம் என்பதாகும். இப்பகுதியில் பாட்டின் சொற்புணர்ச்சிகளில் அமைந்த வினைமுடிபுகளைச் சுட்டி, பாடல்பொருளின் திட்ப நுட்பங்களை விளக்குவதோடு அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறுதல், பிற நூல்களிலிருந்து ஒப்புமை காட்டுதல், இலக்கண அமைதியைப் புலப்படுத்துதல், வரலாற்றுச் செய்திகளைத் தொடர்பு படுத்துதல் முதலான விளக்கங்கள் இடம்பெறுகின்றன. மேலும் இவ்விளக்கவுரைப் பகுதியில் உரிய பாட வேறுபாட்டைத் தெரிவு செய்தல், பழைய உரையில் பொருந்தாததை மறுத்தல், கல்வெட்டுச் சான்றுகள் தந்து தம் கருத்தை நிறுவுதல், அறிவியல் கருத்துக்களை மேற்கோள் காட்டிப் புதிய விளக்கங்களைத் தருதல், அரிய செய்திகளைப் பதிவுசெய்தல், சொற்பொருள் விளக்கம் கூறல், இலக்கணச் சான்றுகள் தந்து விளக்கவுரை அமைத்தல் போன்ற பல்வேறு புதிய உத்திகளைக் கையாண்டு விளக்கவுரைப் பதிப்புக்கு அணி சேர்க்கின்றார் ஒளவை அவர்கள்.

ஒளவை அவர்களின் பதிப்புப் பணியில் விளக்கவுரையே முதன்மை பெற்றாலும் தமது ஒவ்வொரு பதிப்பையும் ஒன்றுக்கு மேற்பட்ட சுவடிகளுடன் ஒப்பிட்டு பாடவேறுகளை ஆராய்ந்து உரிய பாடத்தைத் தேர்வு செய்து பதிப்பிப்பதிலும், பெயர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கல்வெட்டு முதலான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு நிறுவுவதிலும் உரைவேந்தர் தீவிரக்கவனம் செலுத்துகின்றார். இவர் பதிப்பின் தனித்தன்மைகளில் இக்கூறே தலையாயது. பாடல் முதல்குறிப்பு அகரநிரல், அருஞ்சொல் தொடர் அகரநிரல் முதலான அடைவுகளைத் தயாரித்து இணைப்பதில் உ.வே.சா. அவர்களின் பதிப்பை ஒத்தே ஒளவை செயல்படுகின்றார். ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகளை ஆராய்ந்ததில் அவர் கையாளும் பதிப்பு நெறிமுறைகளாகப் பின்வருவற்றைச் சுட்டலாம்.

ஒளவை சு.துரைசாமி பதிப்பு முறைகள்:

1. பாட வேறுபாடுகளைக் குறிப்பிடுதல்.
2. பாடியோர் பெயர் வேறுபாடுகளைச் சுட்டல்
3. உரிய பாடவேறுபாடுகளைத் தெரிவு செய்தல்.
4. எளிய இனிய தனித்தமிழ்நடையில் உரை எழுதுதல்.
5. விடுபட்ட பாடலடிகளைப் புதிய ஏட்டுச்சுவடிகளின் துணையோடு சேர்த்தல்.
6. மயக்கம் தரும் சந்திகளைப் பிரித்துப் பதிப்பித்தல்.
7. ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் முன்னுரை கூறல்.
8. பாடலின் முன்னுரைப் பகுதியில் பாடியவர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, பாடல்செய்தி, பாடல் உருவான சூழல், பாடல் பொருளைத் துறைக் குறிப்புடன் பொருத்திக் காட்டுதல்.
9. பாடியோர், பாடப்பட்டவர் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி மற்றும் பெயர் ஆராய்ச்சி.
10. ஊர் பற்றிய குறிப்புகள் வரும்போது இப்போது அவ்வ+ர் எங்கே, எப்பெயரில் அழைக்கப்படுகிறது எனக் குறிப்பிடல்.
11. கல்வெட்டு, செப்பேடு முதலான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு முடிவுகூறல்.
12. பாடலைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் கூறும் முறை.
13. உரைக்குப் பின்னர் உரை விளக்கம் கூறும் முறை.
14. உரை விளக்கத்தில் பாடலின் வினைமுடிபுகளைச் சுட்டல், அருஞ்சொல் பொருள் கூறல், ஒப்புமை காட்டல், இலக்கண விளக்கம் தருதல், வரலாற்றுச் செய்திகள் மற்றும் அறிவியல் செய்திகளோடு பொருத்திக்காட்டுதல், பொருந்தாத உரைகளை மறுத்தல்.
15. நூலின் முன்னும் பின்னும் உரிய அடைவுகளை இணைத்தல்.
16. பதிப்புரை, முன்னுரை, அணிந்துரை, பாடினோர் வரலாறு, செய்யுள்களின் கூற்றுவகைப் பகுப்பு முதலான பகுதிகளை நூலின் முன்னே இணைத்தல்.
17. பாட்டு முதற்குறிப்பு அகரநிரல், அருஞ்சொல் தொடர் அகரநிரல், மேற்கோள் விளக்க அகரநிரல் (சுருக்கக் குறியீட்டு விளக்கம்) முதலான அடைவுகளை நூலின் பின்னே இணைத்தல்.

ஒளவை சு.துரைசாமி சங்க இலக்கியப் பதிப்புகள் ஒரு சிறப்புப் பார்வை:

ஒளவை அவர்களின் தமிழார்வமும் தமிழ்ப்புலமையும் அளவிட முடியாதது. சங்க இலக்கியங்கள் மீது அவர் மிகுந்த மதிப்பும் பற்றும் கொண்டிருந்தார்.
“மிகப்பழமை வாய்ந்த சங்க இலக்கியம் தோன்றிய காலம், தமிழகத்துத் தமிழ் மக்களைத் தமிழ் மன்னரே, தமிழ் நெறியில், தமிழ் மொழியில் ஆட்சி புரிந்த காலம். மக்கள் தமிழே நினைந்து, தமிழே மொழிந்து, தமிழ்ச் செயலே புரிந்த தனித்தமிழ்க் காலம். புலவர்கள் இயற்றமிழும், பாணர்கள் இசைத்தமிழும், கூத்தர்கள் நாடகத் தமிழும் பேணிவளர்க்க, முடிமன்னரும் குறுநிலத் தலைவரும் செல்வரும் அம்மூவர்க்கும் பெருங்கொடை புரிந்து முத்தமிழ் வளர்த்த பெருமைக்காலம்” (மேற்கோள், சாம்பசிவனார், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, ப.15)

என்று சங்ககாலம் குறித்தும் சங்க இலக்கியங்கள் குறித்தும் கருத்துரைக்கும் ஒளவையின் மேற்கோளிலிருந்து அவரின் அரசியல் நிலைப்பாட்டை நாம் ஊகிக்க முடியும். இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் கட்டமைத்த தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்த சிந்தனைகளையே ஒளவையின் கருத்து எதிரொலிப்பதாக நாம்கொள்ள முடியும். சங்க இலக்கியப் பதிப்புகள் முழுமையாக வெளிவந்த நிலையில் ஆரிய, வடமொழி மேலாதிக்கத்திற்கு எதிர்வினையாக தமிழர் பழம்பெருமையை வலியுறுத்தும் தமிழ்த் தேசியச் சிந்தனைகள் முன்மொழியப்பட்டன. இக்குரலைத்தான் ஒளவையின் மேற்கோளில் நாம் கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தோன்றியதிலிருந்து, தமிழர்க்குத் தம் தாய்மொழியாம் தமிழில் உணர்ச்சி பிறந்தது. பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டுமென்பதில் ஆர்வம் எழுந்தது. தமிழில் கலைகளென்றால் புராண இதிகாசங்கள் தவிர வேறொன்றும் இல்லை என்ற எண்ணம் மிகுதியாக நிலைப் பெற்றிருந்த இந்த நாட்டிலே, சங்க இலக்கியங்கள் வெளிவந்துலாவின. அவற்றின் கருத்தை மக்களிடம் வளர்க்கப் பலரும் வேலை செய்தனர். ஒளவை அவர்களும் 1938 இல் கட்டாய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் வலுத்தபோது அப்போராட்டங்களுக்குத் துணைநின்ற காரணத்தால் அன்றைய ஆட்சியாளர்களால் பல ஊர்களுக்கும் பணிமாற்றல் ஒறுத்தல் என்ற அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். (கு.சிவமணி, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள், ப.301)

சங்க இலக்கியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரிய முயற்சியைத் திராவிட இயக்கம் முன்னின்று நடத்தியது. தங்களின் சமூக அரசியல் நோக்கங்களுக்குச் சங்க இலக்கியங்கள் சுட்டும் வளமார்ந்த சமூகச் சித்திரங்கள் பெரிதும் பொருந்திவரும் என்பதை அவர்கள் மிகச் சரியாகவே உணர்ந்து கொண்டார்கள். சி.என். அண்ணாத்துரை இதனை ஒரு வேண்டுகோளாகவே தமிழ் அறிஞர்களுக்குப் பிறப்பித்தார்.

“நாவலர்களும் பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலு பக்கமும் வேலிகள் அமைத்து இங்கு எட்டாத அளவுக்கு எட்டடி உயரத்தில் தடுப்புச் சுவரை எழுப்பி வைத்துக்கொண்டு உள்ளே ஆடுது காளி, வேடிக்கைப் பார்க்க வாடி என்பது போலத் தொல்காப்பியத்தைப் பாரீர், அதன் தொன்மையைக் காணீர் என்றால் அதனிடம் யார் அணுகுவார்? சங்க இலக்கியங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, நாட்டிலே நடமாட விடவேண்டும். நடன சுந்தரிகளாகச் சிறு சிறு பிரதிகள் மூலம். இன்றைய புலவர்கள் உண்மையிலேயே இனிமையையும் எளிமையையும் சங்க இலக்கியத்துடன் சேர்த்து மக்களுக்கு ஊட்டியிருப்பார்களானால் சங்க காலப் புலவர்களைப் போற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் ஒவ்வோர் இல்லத்தையும் இலக்கியப் பூங்காவாக்கும் உழவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை என்பதை நினைக்கும் பொழுதுதான் அவர்கள் இவ்வளவு நாட்களாக நாட்டுக்குச் செய்தது தொண்டு அல்ல, துரோகம் என்று எண்ண வேண்டியிருக்கிறது.” (சி.என். அண்ணாத்துரை, ஏ தாழ்ந்த தமிழகமே, பக்: 9)

இத்தகு அரசியல் பின்புலத்தில் ஒளவை அவர்களின் பதிப்பு முயற்சிகளை நாம் மதிப்பிட வேண்டும். இவரின் சங்க இலக்கியப் பதிப்புகளில் சிறப்பிடம் பெறும் பாடலுக்கான முன்னுரைப் பகுதி முழுக்க முழுக்கத் தமிழ்த் தேசிய அரசியல் பார்வையுடையது. அதனால்தான் அம்முன்னுரைப் பகுதியை ஒரு கதை போலப் புனைந்துரைத்து ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையோரும் சங்க இலக்கியப் பொருள் நலங்களைத் தெளிவாக உணர்ந்து இன்புறும்படி செய்கின்றார். இவ்வுத்தி பழைய பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் யாரும் செய்யாதது, செய்யத் துணியாதது.

ஒளவை அவர்களின் புறநூனூறு முதல் தொகுதிக்கு முன்னுரை வரைந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இத்தகு அரசியல் நிலைப்பாடு குறித்தும் அதற்கு ஒளவையாரின் உரைகள் பயன்படும் என்பது குறித்தும் வெளிப்படையாகவே கருத்துரைத்துள்ளார்கள்.

“இந்நாளைய அரசியல் இயக்கத்தின் விளைவாகத் தமிழகம் தமிழர்க்கே யுரிய தனியுரிமை நாடாகும் தகுதிபெற இருக்கிறது. அத்தகுதியைப் பெறாவாறு தடுக்கும் தடைகளைத் தகர்த்தெறிதற்கும் பண்டைத் தொகை நூலறிவு பெருந்துணையாகும். .. .. ஆந்திரரும் கன்னடரும் கேரளரும் மொழிவகையிலும் நடைவகையிலும் எத்துணை வேற்றுமை மேற்கொள்ளினும் உள்ளத்து எண்ண வகையால் தமிழராய் வாழ்வது இனிது விளங்கித் தோன்றி நிற்கிறது. இவர்களது தொன்மையும் பண்பாடும் இனிது காண்டற்கண் இப்புறநானூறு முதலிய தொகைநூல்கள் மிகுதியும் பயன்படுகின்றன. .. .. இனி, இவ்வேற்றுமை (ஆந்திரர், கன்னடர், கேரளர் என்ற வேற்றுமை) யொழிதற்கும், ஆந்திரர் முதலியோர் தமிழரென ஒன்றுபட்டு வாழ்ந்து சிறத்தற்கும் இவரனைவரும் கூடிய ஒருமையரசியல் வகுத்து அரசியல் தனியுரிமை வாழ்வு பெறவேண்டும் எனும் முயற்சி ஒருபால் நிலவுகிறது. .. .. அரசியல் ஆக்க முயற்சிகளுள் கலந்து தமிழரசியலில் பணிபுரிய விரும்புவோர்க்கு இப்புறநானூறு முதலிய தொகை நூல்களின் அறிவு இன்றியமையாததாகும்”. (கழகத்தார், புறநானூறு, முன்னுரை பக். 4-5)

மேலே காட்டப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் முன்னுரையில் தனித் திராவிட நாடு அடையும் அரசியல் முயற்சி குறித்த நம்பிக்கையும் அதற்கு சங்க இலக்கியங்கள் குறிப்பாக, புறநூனூறு மக்களைச் சென்றடைய வேண்டிய தேவையும், அத்தேவைக்கு உரைவேந்தர் ஒளவையின் பதிப்பும் உரையும் பயன்படும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதை நாம் உணரமுடியும்.

ஒளவை சு.துரைசாமி அவர்களின் சங்க இலக்கியப் பதிப்புகளின் எளிமையும் இனிமையும் அவரின் அரசியல் நிலைப்பாட்டின் ஓர் அங்கம். ஊர்ப்பெயர்கள் குறித்து ஒளவை காட்டும் தீவிர ஈடுபாடு சங்க இலக்கியங்களை வரலாற்று ஆவணங்களாக்க முயலும் முயற்சியின் ஒரு பகுதியே. அவரின் பாடலுக்கான முன்னுரைப் பகுதி பண்டிதர்களுக்கானதன்று. தமிழ்கற்ற பொதுமக்களுக்கானது. இத்தகு குறிக்கோளோடு இயங்கும் ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் உரிய இலக்கை அடைந்துள்ளன என்பது தமிழர்க்கு நிறைவளிக்கும் செய்தி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள்

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

பேரறிஞர் அண்ணா ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்லர், அவர் ஓர் அறிவுலக மேதை. உலக வரலாற்றில் தம் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக வளர்த்த பெருமைக்குரிய தலைவர் அவர். தலைவர்- தொண்டர் என்ற நிலையை மாற்றி அண்ணன்- தம்பி என்ற உறவுநிலையை நிலைநாட்டிய அரசியல் அறிஞர், அண்ணா அவர்கள். “தம்பி நான் உனக்குத் தலைவனில்லை. உனக்கு அண்ணன். உன் குடும்பத்தின் மூத்த மகன். ஒரு தாய் நம்மைச் சுமக்க முடியாத காரணத்தால் தனித்தனியாகப் பிறந்திருக்கிறோம்.” -அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் அறிவாற்றல் பன்முக ஆற்றலாகப் பரிணமித்து அவரைத் தனிப்பெருமை மிக்க சான்றாளர் ஆக்கியது. ஓர் ஆற்றல் மிக்க பேச்சாளர், வலிமை மிக்க எழுத்தாளர், வளமிக்க நாடகாசிரியர், எளிமையான கவிஞர், கண்ணியம் மிக்க அரசியல் தலைவர், நேர்மையான நிர்வாகி, மனிதநேயப் பண்பாளர், மக்கள் சிந்தனையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட தலைவர் அண்ணாவிற்கு முன்பும் இருந்ததில்லை. பின்பும் இருப்பதரிது.

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்:

“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அண்ணா. அவருடைய பேச்சிலே எளிமை இருக்கும், இனிமை இருக்கும், கருத்துச் செறிவு இருக்கும். அண்ணாவின் பேச்சாற்றலுக்கு முன்னுதாரணமாக உலக வரலாற்றில் யாரையும் சொல்லமுடியாது. அண்ணாவின் பேச்சு நடையும் தனித்தன்மையானது. இலக்கியத் தமிழும் அடுக்கு நடையும் எதுகை, மோனை, இயைபு நயங்களும் அவர் பேச்சில் துள்ளி விளையாடும். அதே சமயம் வெறும் அலங்காரப் பேச்சாக ஒருபோதும் தம் சொற்பொழிவை அண்ணா அமைத்துக் கொண்டதில்லை. கருத்தாழமிக்க பொழிவாகவே அவருடைய ஒவ்வொரு பேச்சும் அமைந்து சிறக்கும்.
பேச்சாற்றலில் சிறந்து விளங்கிய பேரறிஞர் அண்ணா எழுத்தாற்றலிலும் தன்னிகரற்று விளங்கினார். அண்ணாவின் பேச்சாற்றல் நாற்றங்கால் என்றால் அவரின் எழுத்தாற்றல் விளைநிலத்திற்கு ஒப்பாகும். பேச்சுக்கும் எழுத்துக்குமான இடைவெளியை அண்ணா பெரிதும் குறைத்தார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அவர் எழுதுவது போலப் பேசினார். பேசுவது போல எழுதினார். அண்ணா எழுதிய தம்பிக்குக் கடிதங்கள் என்ற மடல் இலக்கியம் இதற்குத் தக்கதோர் சான்று. அண்ணாவின் எழுத்துப் படைப்புகளாகத் தற்போது கிடைப்பன,
சிறுகதைகள் 117
புதினங்கள் 6
குறும் புதினங்கள் 25
நாடகங்கள் 15
ஓரங்க நாடகங்கள் 75
கடிதங்கள் 219
கவிதைத் தொகுப்பு 1
இவற்றைத் தவிர அண்ணா ஆசிரியர் பொறுப்பில் இருந்த பொழுது நாளிதழ், வார இதழ் ஆகியவற்றில் எழுதிய தலையங்கங்கள், அறிக்கைகள், கட்டுரைகள் ஆயிரக் கணக்கானவையாகும்.

அண்ணாவின் கவிதைகள்:

பேரறிஞர் அண்ணா கவிதைகள் அதிகம் எழுதவில்லை. 1937 முதல் அவர் பல சூழல்களில் வடித்த இசைப்பாடல்கள், இதழ்வாழ்த்து, பொங்கல்வாழ்த்துப் பாக்கள், கதைப்பாடல்கள், அட்டைப்பட விளக்கக் கவிதைகள், அரசியல் அங்கதப் பாக்கள், மொழி பெயர்ப்புக் கவிதைகள் முதலானவற்றைத் தொகுத்து 1981 இல் பூம்புகார் பதிப்பகம் ‘அண்ணாவின் கவிதைகள்’ என்ற தலைப்பில் தனி நூலாகப் பதிப்பித்துள்ளது. இக் கவிதைத் தொகுப்பே இக்கட்டுரைக்கு முதன்மை ஆதாரம். இத்தொகுப்பில் மூன்றடிக் கவிதைகள் முதல் பலநூறு அடிகளைக் கொண்ட கவிதைகள் வரை உள்ளன. மொத்தக் கவிதைகள் எழுபத்தாறு. இவை 1.வாழ்த்துப் பாடல்கள் 2.இசைப் பாடல்கள் 3.கதைப் பாடல்கள் 4.அட்டைப்படப் பாடல்கள் 5.பல்சுவைப் பாடல்கள் என்ற ஐவகைப் பகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
அண்ணாவின் பேச்சு நடையே கவிதை நடைபோல் இருக்கும் அழகு பலராலும் பாராட்டப்பட்டது என்றாலும் அண்ணா தம் கவிதைகள் குறித்து எப்பொழுதுமே கொஞ்சம் குறைவான மதிப்பே கொண்டிருந்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரின் பெரும்பாலான கவிதைகளில் அண்ணாவே தம் கைப்பட ‘கவிதை அல்ல ஆக்கிக் கொள்ளலாம்’ என்ற குறிப்பினை எழுதியுள்ளார்கள். குறிப்பாக, ‘தேம்புகின்றேன்’ என்ற கதைப்பாடலின் இறுதியில்,
தெய்வ நெறியைத் தமிழகத்தில் பரப்பும் மெய்ஞ்ஞானி என்று நம்பி, ஓர் கபட வேடதாரியிடம் சீடனாகிக் காவி அணிந்து பணியாற்றிய இளைஞன், உண்மை கண்டு உள்ளம் வெதும்பி, காவி களைந்து விட்டு, இல்லறம் புகுந்து, நல்லறம் கற்றிடும் மாணவனான கதை. கவிதை அல்ல புலவர் துணைகொண்டு கவிதை யாக்கிக் கொள்க. (திராவிடநாடு, சூலை 18, 1954.)
என்று எழுதியுள்ளார். மேலும் தம் கவிதை குறித்து அவரே எழுதியுள்ள கவிதை ஒன்றில் ‘ஆசை பற்றி அறையலுற்றனன்’ என்று கம்பர் குறிப்பிடுவது போல் ஆசையால் கவிதைபோல் தருகிறேன் அதில் உள்ள செய்திகளே முக்கியம் என்பதனைக் குறிப்பிடுகின்றார்.

பாடுகின்றான் அண்ணன் ஓர்கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன்பிறந் தாரே!
சீர் அறியேன், அணி அறியேன் சிந்தைஉந்தும்
செய்திதனைத் தெரிவித்தேன் ஆசையாலே

(அண்ணாவின் கவிதைகள், ப.7)

இப்படியெல்லாம் அண்ணா தம் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும் மதிப்பீடுகளைப் புலவர் மரபில் சொல்லப்படும் அவையடக்கமாக நாம் கொள்ளமுடியாது. உண்மையில் அண்ணா அவர்கள் கவிதைகள் மீது கொண்டிருந்த அளவற்ற மதிப்பே தம் கவிதைகளைக் குறைத்து மதிப்பிட வைத்துள்ளது எனலாம்.

கவிதையும் எழுத்துக்களும் யாருக்காக:

ஒரு படைப்பாளி தம் படைப்பை யாருக்காகப் படைக்க வேண்டும்? என்பது ஒரு முக்கியமான வினாவாகும். ஒரு கவிஞன் யாரைப் பாடுகின்றான், யாரைப் பாடுவதில்லை என்பதைக் கொண்டே அக்கவிஞனின் அரசியலை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இவரைப் பாடுவேன், இவரைப் பாடமாட்டேன் என்று கவிஞன் பிரகடனப் படுத்துவதற்கு என்ன பொருள் என்றால், கவிஞன் யார் பக்கம் நின்று தம் படைப்பைத் தருகின்றான் என்பதற்கான கொள்கை முழக்கமே அதுதான். உலகத்தில் இரண்டு வர்க்கங்கள் உண்டு. ஒன்று ஆளுகிற, சுரண்டுகிற வர்க்கம் அதாவது முதலாளி வர்க்கம் மற்றது ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கம் அதாவது தொழிலாளி வர்க்கம். இந்த இரண்டு வர்க்கங்களில் யார் பக்கம் நின்று பேரறிஞர் அண்ணா தம் படைப்பை, கவிதையைத் தருகின்றார் என்பதனை அவரே ஒரு கவிதையில் வெளிப்படையாக, மிகத் தெளிவாகக் கொள்கை முழக்கம் செய்கின்றார். ‘பொற்காலம் காண’ என்ற தலைப்பில் அவர் வரைந்துள்ள அந்தக் கவிதை ஒரு மொழி பெயர்ப்புக் கவிதையாகும். கவிஞர் ஜான் மேங்ஸல்டு என்பவரின் கவிதையை ஒட்டிப் புனையப்பட்ட அக்கவிதையில்,

எவரைப் பாடமாட்டேன்?
வாழ்வின் சுவை தன்னை
வகையாய்ப் பல்லாண்டு
உண்டு, உடல் பெருத்து
ஊழியர் புடை சூழ
தண்டு தளவாடமுடன்
தார் அணிந்து தேர் ஏறும்
அரசகுமாரர் அருளாலய அதிபர்
தமைக் குறித்து அல்ல.

பாடுவேன் இவரை
குடிமகனாய் உள்ளோன்
ஊர்சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்
தாங்கொணாப் பாரந்தன்னைத்
தூக்கித் தத்தளிப்போன்
களத்தில் பணிபுரிவோன்
உலைக் கூடத்து உழல்வோன்
ஏரடிப்போன்
தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும் கண் கொண்டோன்
குளிர் கொட்ட மழை வாட்ட
குமுறிக் கிடந்தோர்
விழி இழந்தோர்
முடமானோர்
இவர்பற்றி என் கவிதை
இஃதே என் காவியம் காண்
(காஞ்சி 1965)
அண்ணாவின் கவிதைகள், பப.137-138

பேரறிஞர் அண்ணாவின் குரல் அவரின் கவிதைகளில் உழைக்கும் மக்களுக்கான குரலாக ஒலித்தது என்பதுதான் அவர் கவிதைகளின் தனிப் பெரும் சிறப்பாகும்.

அண்ணாவின் இசைப்பாடல்கள்:

தமிழகத்தில் தமிழிசை எழுச்சி பெற்ற காலக்கட்டத்தில் அண்ணா, கவிதைகள் எழுதத் தொடங்கினார். குறிப்பாகக் கவிஞர் பலரும் இசையமைத்துப் பாடுவதற்குரிய பாடல்களைத் தமிழில் தொடர்ந்து எழுதி வந்த காலம் அது. பாவேந்தர்கூட இசையமுது தொகுதிகள் எழுதி வெளியிட்டதை நாம் நினைவில் கொள்ளலாம். அண்ணாவின் கவிதைத் தொகுப்பில் கூட இசைப்பாடல்கள் என்ற பகுப்பில் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் அண்ணா இப்பகுதியில் இடம்பெற்றுள்ள சில பாடல்களுக்கு மெட்டுக்களை அவரே குறிப்பிட்டுள்ளார். சில பாடல்களுக்கு ‘மெட்டு அமைந்திடுக’ என்ற குறிப்பினை வழங்கியுள்ளார். இந்த இசைப்பாடல் பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஒன்று வடிவத்தால் சிறந்த இசைப்பாடல், மற்றது உள்ளடக்கத்தால் சிறந்த இசைப்பாடல்.
‘வண்டு கண்டேன்’ என்ற தலைப்பில் அண்ணா வடித்த இசைப்பாடல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இப்பாடலை அண்ணா, அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து வடிவத்தை ஒட்டி அமைத்துள்ளார்.

மலரிடைக் குதித்துமே
மதுவினை ருசித்துமே
மொண்டு, நிரம்ப உண்டு,
களி கொண்டு, பண்டு
பாடிய பண்மறந்து
மலரைத் துறந்து
வேறிடம் பறந்து
பண்பாடும் வண்டு கண்டேன் -காதல்
பண்பாடும் வண்டு கண்டேன்
(திராவிட நாடு 1955)

அண்ணாவின் கவிதைகள், ப.40

மேலே உள்ள அண்ணாவின் இசைப்பாடலைப் படித்த பிறகு பின்வரும் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடலைப் படித்துப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.
மூசுவண்டு வாசமண்டு காவில் மொண்டு தேனை உண்டு
மோகன முகாரி ராகம் பாடுமே –மைய
லாகவே பெடையுடனே கூடுமே.
(அ.ரெ.காவடிச் சிந்து, கழுகுமலை வளம் பா.2)

பேரறிஞர் அண்ணா போகிற போக்கில் ஏனோதானோ என்று கவிதைகளைப் படைக்காமல் தமிழில் உள்ள மரபுச் செல்வங்களை உள்வாங்கிக் கவிதைகளைப் படைத்துள்ளார் என்பதற்கு இதுவே தக்கதோர் சான்று.

அடுத்து உள்ளடக்கத்தால் சிறந்த இசைப்பாடலைக் காண்போம். ‘கொலைகாரன் கோட்ஸே’ என்ற தலைப்பில் அண்ணா படைத்துள்ள இந்த இசைப்பாடல் 1956 இல் எழுதப்பட்டது. ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் இப்பாடல் பதிவு செய்யும் சமூக அவலங்களும், மதநல்லிணக்கத்திற்கு எதிரான இந்துத்துவ மதவெறியும் அதே கோட்ஸே கூட்டத்தால் வழிநடத்தப்படுவதைக் காணும்போது இப்பாடலின் உள்ளடக்கச் சிறப்பு நம்மை வியக்க வைக்கிறது. பாடலைப் பார்ப்போம்,

இந்துவும் முஸ்லீமும் ஒண்ணுன்னு சொன்னாரு
இங்கே மதச்சண்டைகள் ஏனுன்னு கேட்டாரு
இதுக்காகப் பார்ப்பன கோட்சே
கொலைசெய்யத் துணிஞ் சானுங்கோ

கோட்ஸே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்
குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும்
(திராவிடநாடு 1956)

அண்ணாவின் கவிதைகள், பப. 41-42

சாதாரணப் பாமரர்களின் மொழிநடையில் படைக்கப்பட்டுள்ள இவ்விசைப்பாடல் நம்முன் எழுப்பும் கேள்விகளுக்கு இந்தத் தலைமுறையிலாவது நாம் விடைகாண வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா அடிக்கடிக் குறிப்பிடும் அவரின் கொள்கை முழக்கம் இப்பாடலில் பாமரத் தமிழில் ‘குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு’ என்று பதிவாகியுள்ளமை சிறப்பாகக் கவனிக்கத் தக்கது.

அண்ணாவின் கதைப்பாடல்கள்:

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகளில் அளவால் பெரிய கவிதைகளைக் கொண்ட பகுதி அவரின் கதைப்பாடல்கள் பகுதியே. இப்பகுதியில் மொத்தம் எட்டுக் கதைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பல பாடல்கள் 100 அடிகளுக்கு மேல் 300 அடிகளையும் கடந்து பாடப்பட்டுள்ளன. அண்ணா கவிதைகளின் தனிச் சிறப்பை இக்கதைப்பாடல் பகுதியில்தான் நாம் காணமுடியும். நல்ல ஆற்றொழுக்கான கவிதை நடையும் துள்ளல் நடையும் கலந்து எதுகை மோனைத் தொடைநலங்கள் சிறக்க அண்ணா கவிதையில் கதை சொல்லும் பாங்கு அலாதியானது.
‘தேம்புகின்றேன்’ என்ற தலைப்பில் அமைந்த கதைப்பாடலில் கதைத் தலைவன், உண்மை ஞானி என்று நம்பி ஒரு கபடவேடச் சாமியாரிடம் சீடனாகச் சேர்கிறான். ஒருநாள் போலி சந்நியாசியின் காமக்கூத்து அரங்கேறும் காட்சியைக் காண நேரிட்ட போது இளைஞன் திடுக்கிடுகின்றான். இனி அண்ணாவின் கவிதைநடையில் காண்போம்,

பதறினேன்! பயந்தேன்! நைந்தேன்
அறம் இது தானோ ஐயா!
அருள் தரும் முறை இதானோ!
சீலமோ! சிவநெறியோ!

சிற்றின்பக் கூடமோ! இம்மாடம் தானும்!
காடுடைய சுடலைப் பொடி கொண்டு
கண்ணிலே தூவிடுதல் கற்றீர் நன்று
கா~hயம் கட்டியதும் கட்டிலறை காண்பதற்கோ
ஏன்தானோ இவ்வெளி வேஷம்!
அண்ணாவின் கவிதைகள், ப.45

அண்ணா மேடைப் பேச்சின் அலங்காரமும் லாவகமும் துள்ளலும் இக்கதைப்பாடல் அடிகளில் துள்ளி விளையாடுவதைக் காண்போர் அண்ணா கவிதைத் துறையிலும் சாதிக்கத் தவறவில்லை என்பதை உணர்வர்.

அண்ணாவின் புதுக்கவிதைகள்:

பேரறிஞர் அண்ணா மரபுக் கவிதை மற்றும் இசைப்பாடல்கள் எழுதியதோடு நிறைவடைந்து விடவில்லை. புதுக்கவிதைகளின் நடையிலேயும் சில கவிதைகளைப் படைத்துத் தந்துள்ளார். அண்ணாவின் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல்சுவைப் பாடல்கள் பகுதியின் பெரும்பாலான கவிதைகள் அண்ணாவின் மொழி பெயர்ப்புக் கவிதைகளே. இம் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பெரிதும் புதுக்கவிதை பாணியிலேயே அண்ணா மொழி பெயர்த்துள்ளார்.

மனிதா!
நீ யாருக்கும் தலை வணங்காதே
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளி எறி!
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத
கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்!
செயலாற்று.
(திராவிட நாடு 1955)

அண்ணாவின் கவிதைகள், ப.135

‘மனிதன்’ என்ற தலைப்பில் அண்ணா மொழி பெயர்த்துள்ள இக்கவிதையின் மொழிநடை சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் எழுதப்பட்ட வானம்பாடிக் கவிதைகளுக்கு முன்னோடியாகப் புதுக்கவிதை பாணியில் வடிவம், உணர்த்துமுறை, உத்திகளால் சிறந்து அமைந்துள்ளமை கண்கூடு.

நிறைவாக:

அண்ணா எழுதியுள்ள இக்கவிதைகள் கவிதைகள்தாமா? அல்லது உரை வீச்சா? என்றெல்லாம் பண்டிதர்கள் கவலைப்படலாம். அந்த அச்சம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே இருந்துள்ளது அதனால்தான் தற்காப்பாக ‘கவிதை அல்ல ஆக்கிக்கொள்ளலாம்’ என்றார். கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளதைப் போல் அண்ணா, கவிதைகளின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் அத்தகையது. சரி! கவிதைகளுக்கு என்னதான் அளவுகோல்? அண்ணாவின் கவிதைகளை அளந்து பார்த்துவிடலாம் என்று துணிந்தால், நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் கவிதைகளுக்குச் சொல்லும் இலக்கணம்தான் நம்முன் நிற்கிறது.

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.
(நன்னூல் நூ. 268)

கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது!. கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. பவணந்தியார் சொல்லும் இலக்கணம் எல்லாக் கவிதைகளுக்கும் பொதுவானது.

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள் நன்னூலார் கூறும் கவிதை இலக்கணங்களுக்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது. அண்ணா உணர்வினின் வல்லோர் என்பதிலோ அவர் கவிதைகள் அணிபெறச் செய்யப்பட்டுள்ளன என்பதிலோ யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. பொருட்கு இடனாக அதாவது உயர்ந்த கருத்து வளத்தோடு அண்ணா எழுதினார், பேசினார், கவிதைகளிலும் அதைத்தான் செய்தார் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. அண்ணா கவிதைகளின் வடிவம்தான் பண்டிதர்களுக்கு நிறைவளிக்காமல் போகலாம். அதைப்பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. முடிபாக, கருத்தும் உணர்ச்சியும் அணிகளும் நிறைந்து அண்ணா கவிதைகள் கற்பவர் நெஞ்சைக் கவர்வன என்பதே நம் துணிபு.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...