வெள்ளி, 27 மார்ச், 2009

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-2

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்)
பகுதி-2


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பதிப்பு நோக்கம்:

ஒளவை சு. துரைசாமி அவர்கள் சங்க இலக்கியங்களில் ஐங்குறு நூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய நான்கு நூல்களுக்கே புதிய பதிப்பு முயற்சி மற்றும் விளக்கவுரை காணும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். நுண்மாண் நுழைபுலமிக்க ஒளவை அவர்கள் சங்க இலக்கியங்கள் முழுவதற்கும் விளக்கவுரை கண்டிருப்பார்களேயானால் சங்க இலக்கியங்களுக்கு அவ்வுரைகள் மணிமகுடம் போல் விளங்கியிருக்கும் என்பதில் ஐயமொன்றுமில்லை.
ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்பு நூல்களின் முதன்மை நோக்கம் புதிய விளக்கவுரையோடு நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்பதே ஆகும். மேற்கூறிய நான்கு நூல்களின் முன்னுரையையும் ஒப்பிட்டுக் காண்பவர்களுக்கு இக்கருத்து எளிதில் விளக்கம்பெறும். உரைகாணும் முயற்சியில் ஈடுபட்ட ஒளவை அவர்களுக்கு இளமைக் காலம் முதலே ஏடுகளைப் படித்தல், படியெடுத்தல் முதலியவற்றில் பயிற்சி இருந்ததனால் ஒத்த ஏடுகளை ஒப்பிட்டுப் பார்த்துப் பாடபேதம், மூலத்தின் விடுபாடுகளைக் கண்டறிதல் முதலான பணிகள் எளிமையாயின. எனவே ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் யாவும் விளக்கவுரைப் பதிப்புகள் என்ற தனித்தன்மையைப் பெறுகின்றன.

ஒளவை சு.துரைசாமியின் சங்க இலக்கியப் பதிப்புகளின் தனித்தன்மைகள்:
உரைவேந்தர் ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் யாவும் விளக்கவுரைப் பதிப்புகள் என்ற தனித்தன்மையோடு எளிய, இனிய, தனித்தமிழ்ப் பதிப்புகள் என்ற பெருமையினையும் பெற்றனவாகும். தமது பதிப்புகளில் ஒவ்வொரு செய்யுளுக்கும் முன்னுரை, உரை, உரை விளக்கம் என்னும் மூன்று பகுதிகளை அமைத்து ஒரே சீர்மைமிக்க கட்டமைப்போடு விளக்கவுரையினை அமைக்கின்றார் ஒளவை அவர்கள். புறநானூற்றுப் பதிப்பு இரண்டாம் பகுதி முன்னுரையில் ஒளவை தம் விளக்கவுரை பற்றிக் குறிப்பிடுவன பின்வருமாறு,
“முதற்பகுதி போல இவ்விரண்டாம் பகுதியிலும் ஒவ்வொரு பாட்டுக்கும் பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, பாட்டின் கருத்து, உரை, உரை விளக்கம் ஆகியவை தரப்பெற்றுள்ளன. பாடவேறுபாடுகளும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் அவ்வப் பாட்டின் உரை விளக்கம் முதலிய பகுதிகளில் குறிக்கப் பெற்றிருக்கின்றன. சங்கச் சான்றோர்களைப் பற்றிக் கிடைத்த வரலாற்றுக் குறிப்புகட்கேற்ற ஆதரவு நல்கும் கல்வெட்டு முதலிய சான்றுகள் விடாமல் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன.” (ஒளவை, புறம். இ.தொ., முன்னுரை, ப.எiii)
உரைவேந்தரின் இம்முன்னுரைப் பகுதி அவர் உரையின் கட்டமைப்பினைத் தெளிவாக உணர்த்துகிறது.

பாடலின் முன்னுரை: இப்பகுதியில் பாடிய புலவரின் வரலாறு, புலவர் பெயர் ஆராய்ச்சி, புலவரின் ஊர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, கல்வெட்டு முதலான சான்றுகள், புலவர் பெயர் குறித்த பாடபேதங்கள் முதற் பகுதியாகவும், பாடப்பட்டோர் வரலாறு, பெயர் ஆராய்ச்சி, ஊர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, கல்வெட்டு முதலான சான்றுகள் இரண்டாம் பகுதியாகவும், பாடல் செய்தி மற்றும் பாடல் தோன்றுவதற்குரிய சூழ்நிலை, பாடல் பொருளைத் துறைக் குறிப்புகளோடு பொருத்திக் காட்டுதல் முதலானவைகள் மூன்றாம் பகுதியாகவும் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் அமைத்துக்காட்டும் ஒளவையின் திறம் பாடல் கருத்தில் படிப்போர் உள்ளம் தோய்வதற்கு வழியமைத்துத் தந்துவிடும்.

“செய்யுட் பொருளையுணர்ந்து இன்புறுதற்கு அவ்வச் செய்யுள் பாடப்பெற்ற செவ்வியினை அறிந்துகொள்ளுதல் இன்றியமையாதது. அதனால் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் புலவருள்ளத்திலிருந்து அப்பாடல் தோன்றுதற்குரிய சூழ்நிலையினையும் உள்ளத்து உணர்ச்சிகளையும் சொல்லோவியமாக இவ்விளக்கவுரையாசிரியர் புனைந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்முறை படிப்போருள்ளத்தில் பாடல் பொருளை நன்கு பதியும்படி செய்யும். மேலும் இவ்வாசிரியர் பாடற்பொருளைத் துறைக் குறிப்புடன் இயைத்துரைக்கும் முறை பெரிதும் சுவை பயப்பது.” (அ.சிதம்பரநாத செட்டியார், அணிந்துரை, புறம். இ.தொ., ப.ஒiii).

புறநானூறு இரண்டாம் தொகுதிக்கு அணிந்துரை வழங்கிய அ.சிதம்பரநாத செட்டியார் அவர்களின் மேற்குறித்த கூற்று உரைவேந்தர் ஒளவையின் பாடல் முன்னுரையின் சிறப்பினைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகும்.

உரை: பாடலுக்கு உரை காண்பதிலும் ஒளவை படிப்போர்க்கு சுமையேற்றாத எளிய இனிய உத்தியினைக் கையாளுகின்றார். கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைப்பது போலப் பாடலைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைக்கும் முறையினைப் பின்பற்றுகின்றார் ஒளவை. இவ்வுத்தி பழைய உரைகாரர்களில் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கையாண்ட உத்தியாகும். இவ்வுத்திக்குப் பாடலின் கண்ணழித்துப் பொருள் கூறுதல் என்று பெயர். பழைய உரையுள்ள பாடல்களுக்கு உரைகூறும் இடத்திலும் நீண்ட பழைய பொழிப்புரைகளை இம்முறைக்கேற்ப மாற்றி அமைக்கின்றார். அதாவது பாடலைத் தொடராகப் பிரித்து, அத்தொடருக்குரிய பழைய உரையைத் தக்க இடத்தில் பொருத்தி, பாடற் பொருள் எளிதாக விளங்கும் வகையில் உரை அமைக்கின்றார்.

உரை விளக்கம்: செய்யுள் உரைக்கு அடுத்து ஒளவை அவர்கள் அமைக்கும் பகுதி, உரை விளக்கம் என்பதாகும். இப்பகுதியில் பாட்டின் சொற்புணர்ச்சிகளில் அமைந்த வினைமுடிபுகளைச் சுட்டி, பாடல்பொருளின் திட்ப நுட்பங்களை விளக்குவதோடு அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறுதல், பிற நூல்களிலிருந்து ஒப்புமை காட்டுதல், இலக்கண அமைதியைப் புலப்படுத்துதல், வரலாற்றுச் செய்திகளைத் தொடர்பு படுத்துதல் முதலான விளக்கங்கள் இடம்பெறுகின்றன. மேலும் இவ்விளக்கவுரைப் பகுதியில் உரிய பாட வேறுபாட்டைத் தெரிவு செய்தல், பழைய உரையில் பொருந்தாததை மறுத்தல், கல்வெட்டுச் சான்றுகள் தந்து தம் கருத்தை நிறுவுதல், அறிவியல் கருத்துக்களை மேற்கோள் காட்டிப் புதிய விளக்கங்களைத் தருதல், அரிய செய்திகளைப் பதிவுசெய்தல், சொற்பொருள் விளக்கம் கூறல், இலக்கணச் சான்றுகள் தந்து விளக்கவுரை அமைத்தல் போன்ற பல்வேறு புதிய உத்திகளைக் கையாண்டு விளக்கவுரைப் பதிப்புக்கு அணி சேர்க்கின்றார் ஒளவை அவர்கள்.

ஒளவை அவர்களின் பதிப்புப் பணியில் விளக்கவுரையே முதன்மை பெற்றாலும் தமது ஒவ்வொரு பதிப்பையும் ஒன்றுக்கு மேற்பட்ட சுவடிகளுடன் ஒப்பிட்டு பாடவேறுகளை ஆராய்ந்து உரிய பாடத்தைத் தேர்வு செய்து பதிப்பிப்பதிலும், பெயர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கல்வெட்டு முதலான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு நிறுவுவதிலும் உரைவேந்தர் தீவிரக்கவனம் செலுத்துகின்றார். இவர் பதிப்பின் தனித்தன்மைகளில் இக்கூறே தலையாயது. பாடல் முதல்குறிப்பு அகரநிரல், அருஞ்சொல் தொடர் அகரநிரல் முதலான அடைவுகளைத் தயாரித்து இணைப்பதில் உ.வே.சா. அவர்களின் பதிப்பை ஒத்தே ஒளவை செயல்படுகின்றார். ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகளை ஆராய்ந்ததில் அவர் கையாளும் பதிப்பு நெறிமுறைகளாகப் பின்வருவற்றைச் சுட்டலாம்.

ஒளவை சு.துரைசாமி பதிப்பு முறைகள்:

1. பாட வேறுபாடுகளைக் குறிப்பிடுதல்.
2. பாடியோர் பெயர் வேறுபாடுகளைச் சுட்டல்
3. உரிய பாடவேறுபாடுகளைத் தெரிவு செய்தல்.
4. எளிய இனிய தனித்தமிழ்நடையில் உரை எழுதுதல்.
5. விடுபட்ட பாடலடிகளைப் புதிய ஏட்டுச்சுவடிகளின் துணையோடு சேர்த்தல்.
6. மயக்கம் தரும் சந்திகளைப் பிரித்துப் பதிப்பித்தல்.
7. ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் முன்னுரை கூறல்.
8. பாடலின் முன்னுரைப் பகுதியில் பாடியவர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, பாடல்செய்தி, பாடல் உருவான சூழல், பாடல் பொருளைத் துறைக் குறிப்புடன் பொருத்திக் காட்டுதல்.
9. பாடியோர், பாடப்பட்டவர் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி மற்றும் பெயர் ஆராய்ச்சி.
10. ஊர் பற்றிய குறிப்புகள் வரும்போது இப்போது அவ்வ+ர் எங்கே, எப்பெயரில் அழைக்கப்படுகிறது எனக் குறிப்பிடல்.
11. கல்வெட்டு, செப்பேடு முதலான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு முடிவுகூறல்.
12. பாடலைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் கூறும் முறை.
13. உரைக்குப் பின்னர் உரை விளக்கம் கூறும் முறை.
14. உரை விளக்கத்தில் பாடலின் வினைமுடிபுகளைச் சுட்டல், அருஞ்சொல் பொருள் கூறல், ஒப்புமை காட்டல், இலக்கண விளக்கம் தருதல், வரலாற்றுச் செய்திகள் மற்றும் அறிவியல் செய்திகளோடு பொருத்திக்காட்டுதல், பொருந்தாத உரைகளை மறுத்தல்.
15. நூலின் முன்னும் பின்னும் உரிய அடைவுகளை இணைத்தல்.
16. பதிப்புரை, முன்னுரை, அணிந்துரை, பாடினோர் வரலாறு, செய்யுள்களின் கூற்றுவகைப் பகுப்பு முதலான பகுதிகளை நூலின் முன்னே இணைத்தல்.
17. பாட்டு முதற்குறிப்பு அகரநிரல், அருஞ்சொல் தொடர் அகரநிரல், மேற்கோள் விளக்க அகரநிரல் (சுருக்கக் குறியீட்டு விளக்கம்) முதலான அடைவுகளை நூலின் பின்னே இணைத்தல்.

ஒளவை சு.துரைசாமி சங்க இலக்கியப் பதிப்புகள் ஒரு சிறப்புப் பார்வை:

ஒளவை அவர்களின் தமிழார்வமும் தமிழ்ப்புலமையும் அளவிட முடியாதது. சங்க இலக்கியங்கள் மீது அவர் மிகுந்த மதிப்பும் பற்றும் கொண்டிருந்தார்.
“மிகப்பழமை வாய்ந்த சங்க இலக்கியம் தோன்றிய காலம், தமிழகத்துத் தமிழ் மக்களைத் தமிழ் மன்னரே, தமிழ் நெறியில், தமிழ் மொழியில் ஆட்சி புரிந்த காலம். மக்கள் தமிழே நினைந்து, தமிழே மொழிந்து, தமிழ்ச் செயலே புரிந்த தனித்தமிழ்க் காலம். புலவர்கள் இயற்றமிழும், பாணர்கள் இசைத்தமிழும், கூத்தர்கள் நாடகத் தமிழும் பேணிவளர்க்க, முடிமன்னரும் குறுநிலத் தலைவரும் செல்வரும் அம்மூவர்க்கும் பெருங்கொடை புரிந்து முத்தமிழ் வளர்த்த பெருமைக்காலம்” (மேற்கோள், சாம்பசிவனார், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, ப.15)

என்று சங்ககாலம் குறித்தும் சங்க இலக்கியங்கள் குறித்தும் கருத்துரைக்கும் ஒளவையின் மேற்கோளிலிருந்து அவரின் அரசியல் நிலைப்பாட்டை நாம் ஊகிக்க முடியும். இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் கட்டமைத்த தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்த சிந்தனைகளையே ஒளவையின் கருத்து எதிரொலிப்பதாக நாம்கொள்ள முடியும். சங்க இலக்கியப் பதிப்புகள் முழுமையாக வெளிவந்த நிலையில் ஆரிய, வடமொழி மேலாதிக்கத்திற்கு எதிர்வினையாக தமிழர் பழம்பெருமையை வலியுறுத்தும் தமிழ்த் தேசியச் சிந்தனைகள் முன்மொழியப்பட்டன. இக்குரலைத்தான் ஒளவையின் மேற்கோளில் நாம் கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தோன்றியதிலிருந்து, தமிழர்க்குத் தம் தாய்மொழியாம் தமிழில் உணர்ச்சி பிறந்தது. பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டுமென்பதில் ஆர்வம் எழுந்தது. தமிழில் கலைகளென்றால் புராண இதிகாசங்கள் தவிர வேறொன்றும் இல்லை என்ற எண்ணம் மிகுதியாக நிலைப் பெற்றிருந்த இந்த நாட்டிலே, சங்க இலக்கியங்கள் வெளிவந்துலாவின. அவற்றின் கருத்தை மக்களிடம் வளர்க்கப் பலரும் வேலை செய்தனர். ஒளவை அவர்களும் 1938 இல் கட்டாய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் வலுத்தபோது அப்போராட்டங்களுக்குத் துணைநின்ற காரணத்தால் அன்றைய ஆட்சியாளர்களால் பல ஊர்களுக்கும் பணிமாற்றல் ஒறுத்தல் என்ற அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். (கு.சிவமணி, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள், ப.301)

சங்க இலக்கியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரிய முயற்சியைத் திராவிட இயக்கம் முன்னின்று நடத்தியது. தங்களின் சமூக அரசியல் நோக்கங்களுக்குச் சங்க இலக்கியங்கள் சுட்டும் வளமார்ந்த சமூகச் சித்திரங்கள் பெரிதும் பொருந்திவரும் என்பதை அவர்கள் மிகச் சரியாகவே உணர்ந்து கொண்டார்கள். சி.என். அண்ணாத்துரை இதனை ஒரு வேண்டுகோளாகவே தமிழ் அறிஞர்களுக்குப் பிறப்பித்தார்.

“நாவலர்களும் பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலு பக்கமும் வேலிகள் அமைத்து இங்கு எட்டாத அளவுக்கு எட்டடி உயரத்தில் தடுப்புச் சுவரை எழுப்பி வைத்துக்கொண்டு உள்ளே ஆடுது காளி, வேடிக்கைப் பார்க்க வாடி என்பது போலத் தொல்காப்பியத்தைப் பாரீர், அதன் தொன்மையைக் காணீர் என்றால் அதனிடம் யார் அணுகுவார்? சங்க இலக்கியங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, நாட்டிலே நடமாட விடவேண்டும். நடன சுந்தரிகளாகச் சிறு சிறு பிரதிகள் மூலம். இன்றைய புலவர்கள் உண்மையிலேயே இனிமையையும் எளிமையையும் சங்க இலக்கியத்துடன் சேர்த்து மக்களுக்கு ஊட்டியிருப்பார்களானால் சங்க காலப் புலவர்களைப் போற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் ஒவ்வோர் இல்லத்தையும் இலக்கியப் பூங்காவாக்கும் உழவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை என்பதை நினைக்கும் பொழுதுதான் அவர்கள் இவ்வளவு நாட்களாக நாட்டுக்குச் செய்தது தொண்டு அல்ல, துரோகம் என்று எண்ண வேண்டியிருக்கிறது.” (சி.என். அண்ணாத்துரை, ஏ தாழ்ந்த தமிழகமே, பக்: 9)

இத்தகு அரசியல் பின்புலத்தில் ஒளவை அவர்களின் பதிப்பு முயற்சிகளை நாம் மதிப்பிட வேண்டும். இவரின் சங்க இலக்கியப் பதிப்புகளில் சிறப்பிடம் பெறும் பாடலுக்கான முன்னுரைப் பகுதி முழுக்க முழுக்கத் தமிழ்த் தேசிய அரசியல் பார்வையுடையது. அதனால்தான் அம்முன்னுரைப் பகுதியை ஒரு கதை போலப் புனைந்துரைத்து ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையோரும் சங்க இலக்கியப் பொருள் நலங்களைத் தெளிவாக உணர்ந்து இன்புறும்படி செய்கின்றார். இவ்வுத்தி பழைய பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் யாரும் செய்யாதது, செய்யத் துணியாதது.

ஒளவை அவர்களின் புறநூனூறு முதல் தொகுதிக்கு முன்னுரை வரைந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இத்தகு அரசியல் நிலைப்பாடு குறித்தும் அதற்கு ஒளவையாரின் உரைகள் பயன்படும் என்பது குறித்தும் வெளிப்படையாகவே கருத்துரைத்துள்ளார்கள்.

“இந்நாளைய அரசியல் இயக்கத்தின் விளைவாகத் தமிழகம் தமிழர்க்கே யுரிய தனியுரிமை நாடாகும் தகுதிபெற இருக்கிறது. அத்தகுதியைப் பெறாவாறு தடுக்கும் தடைகளைத் தகர்த்தெறிதற்கும் பண்டைத் தொகை நூலறிவு பெருந்துணையாகும். .. .. ஆந்திரரும் கன்னடரும் கேரளரும் மொழிவகையிலும் நடைவகையிலும் எத்துணை வேற்றுமை மேற்கொள்ளினும் உள்ளத்து எண்ண வகையால் தமிழராய் வாழ்வது இனிது விளங்கித் தோன்றி நிற்கிறது. இவர்களது தொன்மையும் பண்பாடும் இனிது காண்டற்கண் இப்புறநானூறு முதலிய தொகைநூல்கள் மிகுதியும் பயன்படுகின்றன. .. .. இனி, இவ்வேற்றுமை (ஆந்திரர், கன்னடர், கேரளர் என்ற வேற்றுமை) யொழிதற்கும், ஆந்திரர் முதலியோர் தமிழரென ஒன்றுபட்டு வாழ்ந்து சிறத்தற்கும் இவரனைவரும் கூடிய ஒருமையரசியல் வகுத்து அரசியல் தனியுரிமை வாழ்வு பெறவேண்டும் எனும் முயற்சி ஒருபால் நிலவுகிறது. .. .. அரசியல் ஆக்க முயற்சிகளுள் கலந்து தமிழரசியலில் பணிபுரிய விரும்புவோர்க்கு இப்புறநானூறு முதலிய தொகை நூல்களின் அறிவு இன்றியமையாததாகும்”. (கழகத்தார், புறநானூறு, முன்னுரை பக். 4-5)

மேலே காட்டப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் முன்னுரையில் தனித் திராவிட நாடு அடையும் அரசியல் முயற்சி குறித்த நம்பிக்கையும் அதற்கு சங்க இலக்கியங்கள் குறிப்பாக, புறநூனூறு மக்களைச் சென்றடைய வேண்டிய தேவையும், அத்தேவைக்கு உரைவேந்தர் ஒளவையின் பதிப்பும் உரையும் பயன்படும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதை நாம் உணரமுடியும்.

ஒளவை சு.துரைசாமி அவர்களின் சங்க இலக்கியப் பதிப்புகளின் எளிமையும் இனிமையும் அவரின் அரசியல் நிலைப்பாட்டின் ஓர் அங்கம். ஊர்ப்பெயர்கள் குறித்து ஒளவை காட்டும் தீவிர ஈடுபாடு சங்க இலக்கியங்களை வரலாற்று ஆவணங்களாக்க முயலும் முயற்சியின் ஒரு பகுதியே. அவரின் பாடலுக்கான முன்னுரைப் பகுதி பண்டிதர்களுக்கானதன்று. தமிழ்கற்ற பொதுமக்களுக்கானது. இத்தகு குறிக்கோளோடு இயங்கும் ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் உரிய இலக்கை அடைந்துள்ளன என்பது தமிழர்க்கு நிறைவளிக்கும் செய்தி

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...