வெள்ளி, 14 ஜூன், 2013

முனைவர் நா.இளங்கோவின் "ஊடகங்களின் ஊடாக" நூல் அணிந்துரை -முனைவர் க.பஞ்சாங்கம்

முனைவர் க.பஞ்சாங்கம்
தமிழ்ப் பேராசிரியர் - திறனாய்வாளர்.


    நமது ஊடகங்கள் யார் கையில் இருக்கின்றன? யாருக்காக இருக்கின்றன? எத்தகைய செயல்திட்டங்களைக் கொண்டிருக்கின்றன? ஊடகங்களின் அதிகார அரசியலை, வணிகத்தை மையமிட்டுச் சுழலும் அதன் நச்சு வளையத்தைப் படித்தவர்கள் என்று அழைக்கப்படுவர்களே புரிந்து கொண்டிருக்கிறார்களா? இல்லை என்பதுதான் வேதனையோடு கூடிய பதில். இந்த உண்மையைத்தான் என்றும் எனது வியப்பிற்குரிய என் மாணவர், பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ, தகவல் தொடர்புச் சாதனங்களும் கதையாடலும் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். எந்தவொரு சிக்கலான, நுண்ணிய கருத்தாக்கத்தையும் கூட மிக எளிய முறையில் எல்லோருக்கும் புரியும்படியாக எடுத்துரைப்பதிலும் சொற்பொழிவு ஆற்றுவதிலும் நிகரற்ற வல்லமைமிக்கவர் இளங்கோ. இந்தக் கட்டுரையில் ஊடகங்கள் கட்டமைக்கின்ற புனைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நாம் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் ஒருபோதும் சரியான முறையில் அறிந்து கொள்ளவே முடியாது என்பதை அழகாக விளக்கிவிடுகிறார்.

ஊடகங்கள் தகவல்களை யதார்த்தத்தில் இருந்து உருவாக்குகின்றன தயாரிக்கின்றன் வெட்டி ஒட்டுகின்றன கோர்க்கின்றன அர்த்தங்களை உருவாக்குகின்றன. (ப.8)

என்று அவர் சுனாமி நிகழ்வை முன்வைத்துச் சான்றுகளோடு விளக்கும் போது நமது ஒவ்வொரு கணமும் எவ்வாறு சுயநலமிக்க மூலதன முதலாளிகளின் அதிகார வளையங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பதை வலியோடு உணரத் தொடங்குகிறோம். ஊடகங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் மொழியும், கதையாடலும், கேமிரா கோணங்களும், கூடவே ஊடகங்கள் கையாளும் மௌனங்களும் நமது அடையாளங்களை அழித்து நம்மை இல்லாமல் ஆக்கும் அநியாயத்தை மிகத் தெளிவான தமிழில் சொல்லிக் கொண்டு போகிறார். ஊடகங்கள் கட்டியமைக்கும் புனைவுகளில் மயங்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவன இத்தகைய கட்டுரைகள்தான்.

    திரைப்படம் பற்றிய இரண்டாவது கட்டுரையில் திரைப்படம் என்கின்ற எல்லாக் கலைகளின் சங்கமமாக விளங்கும் இந்த ஊடகம்  காற்று, நீர், வெளி போன்று தமிழர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார். ஆனால் அதன் தொழில்நுட்பம் குறித்துப் பெருவாரித் தமிழர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது எவ்வளவு பெரிய முரண் என்பதையும் எடுத்துக்காட்டித் திரைப்படத்தைச் சரியாகப் பார்த்துப் பழகுவதற்கு வழிகாட்டுகிறார். மேலும் தமிழ்த் திரைப்படத்தில் நிகழ்வு இடமும், கால நகர்வுக் குறியீடுகளும் எவ்வாறெல்லாம் அமைக்கப்படுகின்றன என்பதை மிக நுட்பமாகச் சாதாரண வாசகர்களும் உள்வாங்கும் முறையில் சொல்லுகின்ற பாணி இளங்கோவிற்கே உரியது.

    டி.பி.இராஜலட்சுமி குறித்த கட்டுரை திரைப்படம் என்னும் கனவுத் தொழிற்சாலையில் உழைக்கும் பெண் கலைஞர்களை நாம் எவ்வாறு அணுகி ஆராய வேண்டும் என்பதற்கு ஒரு மாதிரியாக அமைந்துள்ளது. வெறுமனே ஒரு காமப் பண்டமாகப் பெண் கலைஞர்களைப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போன தமிழ்த் திரைப்படப் பார்வையாளர்களுக்குள் இக்கட்டுரை வெளிச்சம் போலப் பாய்ந்து பரவக்கூடியது. அந்தளவிற்கு டி.பி.இராஜலட்சுமி என்கின்ற மிகப்பெரிய கலைஞரின் அனைத்து வகையான ஆளுமைகளும் படிக்கின்ற வாசகர்களுக்குச் சென்று சேரும்படி தகவல்களை மிக முறையாக அமைத்துத் தயாரிக்கப்பட்ட கட்டுரை அது. டி.பி.ராஜலட்சுமி எழுதிய ‘கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்’ என்ற நாவலில் ஓர் உரையாடலை இளங்கோ எடுத்துக்காட்டும் போது பெண் விடுதலை குறித்து இவ்வளவு உரக்க ஓர் ஆணால் பேசமுடியுமா என்ற ஐயம் எழத்தான் செய்கிறது:-

நீங்கள் கொஞ்சம் நன்றாய் ஆலோசித்துப் பாருங்கள். கல்யாணம் ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? இருபாலாருக்குந்தானே. அப்படியிருக்க ஆண்கள் மட்டும் பல பெண்களை மணக்க அனுமதிக்கும் நாம், பெண்கள் தங்கள் விருப்பப்படி ஒருவரை விவாகம் செய்து கொள்வதை ஏன் அனுமதிக்கக்கூடாது? குருட்டுத்தனமான இந்தக் கொடுமைகள் பெண்கள் சமூகத்திற்கே உலை வைப்பதாயிருக்கின்றன. பெண்கள் ஆண்களைவிட எவ்வகையி லேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு  கொடுமைப் படுத்துகிறோம். இது பெரும் பாவமான காரியமாகும். இன்னும் ஒரு வேடிக்கையைப் பாருங்கள். பெண்களுக்கு மட்டும் விதவைத் தன்மை கற்பிக்கப்பட்டிருக்கும் கொடுமை இப்பாழும் நாட்டைத் தவிர, வேறு நாகரீகம் பெற்ற எந்த நாட்டிலேனும் உண்டா? பெண்களைப் போலவே ஆண்களும் மனைவி மார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைத்துவிட்டால் அப்போது ஆணுலகம் அறிவு பெறும். (ப.50)
இதைப் படிக்கும் போது பெண் எழுத்தைப் பெண்கள்தாம் எழுத வேண்டும் என்கின்ற இன்றைய நவீனப் பெண்ணியல் குரல் சரிதான் எனச் சொல்லத் தோன்றுகிறது. இளங்கோ மிகச்சிறப்பாக இந்தக் கட்டுரையைப் படைத்தளித்துள்ளார்.

    விளம்பரம் குறித்த நான்காவது கட்டுரையில் ஊடகம், நிறுவனம், விளம்பரம், நுகர்வோர் ஆகிய நால்வருக்குமான உறவு எவ்வாறு ஒரு முடிச்சு போலப் பின்னப்பட்டுள்ளது என்பதை அழகாக விளக்குகிறார். விளம்பரங்கள் நம்மை உண்மைகளிலிருந்து வெகுதூரம் வெளியே இட்டுச் சென்று விடுகின்றன. வெறுமனே நுகர்வுக் கலாச்சாரம் என்கின்ற ஒன்றையொட்டியே ஓடிஓடி வாழும்படி மனித வாழ்வைக் கேவலப்படுத்துகின்றன என்றெல்லாம் அதனுடைய தீமைகளைப் பலவாறு சான்றுகளோடு எடுத்துக்காட்டும் இளங்கோ, இந்தத் தீமையில்லாமல் இவ்வளவு மலிவாக நமக்கு நமது வாசலிலேயே எல்லாமும் ஊடகம் வழியாகக் கிடைக்க முடியாது என்கின்ற உண்மையையும் சுட்டிக்காட்டுகிறார். இப்படித்தான் மனித வாழ்க்கை ஒவ்வொன்றும் நன்மை தீமைக்குள் சிக்குண்டு கிடக்கிறது. ஊடகங்கள் விளம்பரத்தின் மூலமாகப் பொருட்களை மட்டும் விற்கவில்லை நம்மையும் நமக்குத் தெரியாமலேயே  விற்றுவிடுகின்றன என்கின்ற நுட்பமான புரிதலை இந்தக் கட்டுரை வாசகர்களுக்கு வழங்குகின்றது.

இறுதியில் இடம்பெறும் இரண்டு கட்டுரைகளும் கணினி யுகத்தில் இன்றைக்கு நடந்துள்ள மிகப்பெரிய புரட்சியான வலைப் பதிவுகள் (Blogs) குறித்துப் பேசுகின்றன. என்னைப் போன்று கணினியோடு பெரிதும் பரிச்சயமாகாத வாசகர்களுக்கு அவை தகவல் களஞ்சியங்களாகும். அதோடு வலைப்பதிவை நாமே எவ்வாறு நமது கணினியில் அமைத்துக் கொள்வது என்கின்ற வழிகாட்டியுமாகும். இவ்வாறு வலைப்பதிவுகள் குறித்து விரிவான தகவல்களைத் தருகிற நூலாசிரியர் அது சமூகத்தின்மேல் நிகழ்த்தும் விளைவினையும் சுட்டுவது அவருடைய தனித்தன்மைக்குச் சான்றாகும். வலைப்பதிவுகளால் பதிப்புத் துறையில் நிலவும் அதிகார மையங்கள் தகர்க்கப்படுகின்றன என்பதை இவ்வாறு புலப்படுத்துகின்றார்:-

ஒருவர் எழுத்தின் மீது தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற அதிகார மையங்களற்ற வலைப்பதிவுகள் ஊடக வரலாற்றில் ஒரு புரட்சி. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் ஒருவரின் எழுத்து பொது வாசிப்புக்குக் காட்சிப்படுத்தப் படுகிறது. எல்லாத் தரப்பு வாசகர்களுக்கு முன்னாலும் எழுதப்படும் எல்லாப் படைப்புகளும் ஒரே வரிசையில் காட்சிப்படுத்தும் அதிகாரமைய உடைப்பு வலைப் பதிவுகளால் சாத்தியமாகியிருக்கிறது. (ப.82)

இவ்வாறு இச்சிறிய நூலில் மிகப்பெரிய பணியை இளங்கோ நிகழ்த்திக் காட்டியுள்ளார். உண்மையில் கீரை விற்பனையைக்கூட நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஆற்றல்மிக்க வடிவமாக இன்றைக்கு ஊடகங்கள் தமிழர் வாழ்வில் நிலைபெற்று வி;ட்டன. பணம் இருப்பவர்கள் எல்லாம் ஓர் ஊடகத்தைத் தொடங்கி விடுகிறார்கள். பணம் கூடக்கூட ஒரு நிறுவனமே பல்வேறு வகையான ஊடகங்களையும் தொடங்கி மிகப்பெரிய அதிகார மையமாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றது. அதிகாரத்திற்கும் ஊடகத்திற்கும் அப்படியொரு நெருக்கம். எனவே இன்றைக்குத் தமிழ் அறிவுத்தளத்தில் பெரிதும் தேவையானது இளங்கோவின் இந்தப் புத்தகம் போன்று ஊடகங்களின் அரசியல் குறித்த உரையாடல்கள்தாம். தமிழில் இத்தகைய புத்தகங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. காலச்சுவடு கண்ணனுடைய பிறக்கும் ஒரு புது அழகு (2007) என்ற புத்தகம் ஊடக அரசியலை மிக நுட்பமாகக் கண்காணித்து எழுதப்பட்டதாகும். அத்தகைய வரிசையில் இளங்கோவின் இந்தப் புத்தகமும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு நூலாகும். தொடர்ந்து இளங்கோ இத்தகைய பணியில் ஈடுபட வேண்டும். அவருக்குள் இருக்கும் நகைச்சுவையும், எதையும் நுட்பமாகக் கண்டறிந்து சுட்டிக்காட்டும் விமர்சனப் பார்வையும் இத்தகைய பணிக்குப் பயன்பட வேண்டும். 1979-இல் ஒரு மாணவராக அறிமுகமான காலந்தொட்டு அவரைக் கவனித்து வருகிறேன் என்கிற முறையில் தொடர்ந்து முனை மழுங்காமல் உழைத்துக் கொண்டு வரக்கூடிய அவரால் இதுபோன்று பல புத்தகங்களைத் தமிழர்களின் நலன் கருதி வழங்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். என் நம்பிக்கை பலிக்கட்டும்.

பெருகும்அன்புடன்                                   26.04.2010   
(க. பஞ்சாங்கம்)                               

ஞாயிறு, 9 ஜூன், 2013

முனைவர் நா.இளங்கோவின் படர்க்கை நூல் அணிந்துரை -முனைவர் வே.ச.திருமாவளவன்

அணிந்துரை

முனைவர் வே.ச.திருமாவளவன்
மேனாள் முதல்வர்,
பெருந்தலைவர் காமராசர் அரசு கலைக் கல்லூரி
புதுச்சேரி



முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்பில் (1979-81) மாணவராகப் பயின்ற காலந்தொட்டு அவரை நான் அறிவேன். மயிலம் தமிழ்க் கல்லூரியில் பி.லிட். பட்டம் முடித்த பின்னர்த் தமிழ் முதுகலை படிக்க வந்த இளைஞர் நா.இளங்கோ நாட்டுப் புறவியலில் நாட்டம் கொண்டவர். நான் 1980 ஆகஸ்டுத் திங்களில் காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியிலிருந்து மாற்றல் பெற்று தாகூர் கலைக் கல்லூரியில் பணியில் சேர்ந்த போது அப்போது தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த ம.ரா.பூபதி நாட்டுப்புறவியல் பாடத்தை எனக்கு ஒதுக்கியிருந்தார். சற்றும் எதிர்பாராத நிலையில் எனக்கு நாட்டுப்புறவியல் ஒதுக்கப்பட்ட போது திகைப்பேற்பட்டது. வகுப்பறையில் இருந்த மாணவர்களுள் இந்த இளங்கோ மட்டுமே நாட்டுப்புறவியல் அறிந்தவராக இருந்தார். நுண்ணறிவுடைய அவர் கேட்கும் வினாக்களுக்கு விடை தேடுவதற்காகவே நான் நாட்டுப்புறவியலை ஆழ்ந்து கற்கும் சூழல் ஏற்பட்டது. அவரும் வளர்ந்தார், நானும் வளர்ந்தேன். திறமையான மாணவர்கள் இருந்தால் திறமையான ஆசிரியர்கள் உருவாவார்கள் என்ற கருத்து வலுப்பெற்றது.

அவர் தாகூர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்து நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற (30-06-2001) காலம் வரையிலும் அதன் பின்னரும் அவருடைய வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். பேச்சிலும் எழுத்திலும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்று வருவதுகண்டு “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்” தாயின் மனநிலை கொள்கிறேன். இத்தகைய திறமையும் ஆற்றலும் உடைய மாணாக்கர்களைப் பெற்றவர்கள் நற்பேறுடையவர்கள் ஆவர்.

தமிழ் முதுகலையோடு தம் கல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதற்கு மேலும் தம்மை வளர்த்துக் கொண்டவர் முனைவர் நா.இளங்கோ. பரந்து பட்ட பல்துறை அறிவு சான்றவர். நாட்டுப்புறவியல், மலையாளம், நாடகம், மக்கள் தொடர்பியல், கணிப்பொறி மற்றும் இணையஇயல் முதலானவற்றில் தக்க பயிற்சியும் பட்டறிவும் மிக்கவர். நுண்மாண் நுழைபுலமிக்க ஆய்வாளராகவும் கவிஞராகவும் பேசியதையே பேசாத கருத்துரையாளராகவும் பேச்சுக்கலையை வளர்ப்பவராகவும் பன்முகமுடைய நா.இளங்கோ எட்ட வேண்டிய சிகரம் அண்மையில் உள்ளது.

பேராசிரியர் நா.இளங்கோ ‘மலையருவி’ எனும் பெயரில் படைத்த ‘காலடியில் தலை’ என்னும் கவிதைப் படைப்பிற்குப் பின்னர் ‘மலடியும் மழலையும்’, ‘நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும்’ என்னும் இரு நாட்டுப்புற ஆய்வு நூல்களும் ‘தமிழ்இணர்’ என்னும் இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பும் மாணாக்கர் பயனுறும் முறையில் தம் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயரோடு இணைநூல் ஆசிரியராக எழுதி வெளியிட்ட ‘மொழி பெயர்ப்பும் மொழிப் பயிற்சியும்’ என்ற நூலும் வெளியிட்டுத் தமிழுக்குச் சிறப்பு செய்துள்ளார். இப்போது ‘படர்க்கை’ –தமிழியல் கட்டுரைகள் தொகுப்பு நூல் வெளிவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக ஆரவாரமில்லாமல் தமிழ், தமிழர்நலம், சமுதாய முன்னேற்றம் ஆகிய இவற்றோடு இலக்கியப் பயணத்தையும் தொடர்ந்து நடாத்திக் கொண்டிருக்கும் முனைவர் நா.இளங்கோ நம் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் உரியவராவார்.

II
படர்க்கை என்ற பெயரில் தமிழியல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவரும் இந்நூல் மரபுத் தமிழ், புதுவைத் தமிழ், ஊடகத் தமிழ் என்ற மூன்று பகுப்புகளில் பதினெட்டுக் கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. வள்ளுவப் பேராசானின் முதற்குறள் ஆய்வு தொடங்கி இக்காலத்தில் மாந்த உள்ளத்தை மயக்கி வைத்திருக்கும் திரைப்படத்துறை முடிய பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
நூலின் முதல் பகுப்பான மரபுத்தமிழ் என்ற பகுதியில் ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முதல் கட்டுரை முதற்குறள் பற்றிய ஆய்வுகள்: மதிப்பீடு என்ற கட்டுரையாகும். திருக்குறளின்; முதற்குறள் பற்றி உரையாசிரியர்கள் கூறிய உரைகள் ஒருபால் இருக்க, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சூளை சோமசுந்தர நாயக்கர் தொடங்கி வைக்க அவர்க்குப் பின்வந்தவர்கள் சமய நூல்களின் அடிப்படையில் விளக்கமளித்த தரவுகளை எல்லாம் ஒருங்கே தொகுத்துப் பகுத்து மதிப்பீடு செய்து திருக்குறள் கூறும் ஆதிபகவன் என்பது சமணத் தீர்த்தங்கரர்களின் முதல்வராகிய இடபதேவரே என்பதைத் தம் முதல் கட்டுரையில் தெளிவு படுத்துகிறார் நூலாசிரியர்.

படர்க்கை நூலின் அடுத்த இரு கட்டுரைகளும் ஆந்திர நாட்டு அகநானூறு என்னும் காதா சப்தசதியை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளன. பிராகிருத மொழியில் படைக்கப்பட்ட காதா சப்தசதி என்னும் பழமரபு இலக்கியத்தைத் தமிழில் பன்மொழி அறிஞர்கள் இரா.மதிவாணன் என்பாரும் மு.கு.ஜகந்நாத ராஜாவும் மொழியாக்கம் செய்துள்ளனர். இந்நூல் தமிழ் அகப்பொருள் சாயலை ஒத்திருப்பதனால் முன்னவர் ‘ஆந்திர நாட்டு அகநானூறு’ என்னும் பெயரிலும் பின்னவர் ‘காதா சப்தசதி’ என்னும் பெயரிலும் வெளியிட்டனர். முதல்கட்டுரை காதா சப்தசதியில் மானுடவியல் கருத்துக்கள் இடம்பெற்றுள்ள பாங்கினை விளக்குகிறது. இரண்டாவது கட்டுரை சங்க அகப்பாடல்களோடு ஒத்துக் காதா சப்தசதிப் பாடல்கள் உள்ள பாங்கினை ஒப்பிட்டு நோக்கும் போக்கில் அமைந்துள்ளது.

நூலின் நான்காவது கட்டுரை வள்ளலாரின் முற்போக்குச் சிந்தனைகளைத் தொட்டுக்காட்டிச் சமதாய நலத்திற்கான கருத்துக்களை முன்வைக்கிறது. சாதி மதம் பேசி மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு என்னும் நச்சுவிதைகளை விதைத்து அறுவடை செய்த சனாதனிகள் செல்வாக்குப் பெற்றிருந்த காலக்கட்டத்தில் வடலூர் இராமலிங்க சுவாமிகள் தோன்றினார் என்பது ஒரு வியக்கத்தக்க அற்புத நிகழ்வாகும். செல்வமும் செல்வாக்கும் தேடாத வெள்ளாடைத் துறவியாக வாழ்ந்த வள்ளலார் உயிர் இரக்கம் என்னும் உயரிய சிந்தனையையும் உயிர்களின் பசிபோக்கும் அறத்தொண்டினையும் தொடங்கி வைத்ததோடு தாய்மொழியில் பற்று மிக்கவராக மிளிர்ந்ததையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது இக்கட்டுரை.
வள்ளலாரின் காலத்தவராகவும் அவரோடு நட்புரிமை பூண்டவராகவும் இருந்த நீதியரசர் மாயூரம் வேதநாயகரின் சமுதாயச் சிந்தனைகளைத் தொகுத்துத் தருகிறது நூலின் ஐந்தாவது கட்டுரை.

திருவாவடுதுறை ஆதீனத் தலைவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வேதநாயகர் போலித்துறவிகளைத் தமிழ்ச் சாட்டையால் சாத்துவதையும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் வறுமையால் மக்கள் படும் வேதனையையும் பசியையும் போக்கக் கஞ்சித் தொட்டி அமைத்துப் பசி தீர்த்ததையும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டும் நூலாசிரியர் நா.இளங்கோ இந்திய, தமிழகப் பெண்களின் பரிதாப நிலை குறித்து முதன்முதலில் பாடியவர் மாய+ரம் வேதநாயகரே என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகின்றார்.

நூலின் இரண்டாவது பகுப்பான புதுவைத்தமிழ் என்ற பகுதியில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுப்பின் முதல்கட்டுரை பாரதியின் பகவத்கீதையும் விநாயகர் நான்மணி மாலையும் என்ற தலைப்பிலானது. இந்திய விடுதலைப் போராட்டக் காலங்களில் பகவத் கீதை அரசியல் தலைவர்களுக்குக் கைவிளக்காக இருந்தது போல, பாரதிக்கும் பயன்பட்டிருக்கிறது என்பதையும் பாரதியின் பகவத் கீதை முன்னுரையில் அமைந்துள்ள மனித குலத்திற்குத் தேவையான சிந்தனைகள் பாரதியின் மற்றொரு நூலான விநாயகர் நான்மணி மாலையில் இடம் பெற்றிருக்கும் சிறப்பினையும் புதிய தரிசனத்தோடு விவரிப்பதாக உள்ளது பாரதி குறித்த இக்கட்டுரை.

இரண்டாவது கட்டுரையில் பாவேந்தர் பாரதிதாசன் புதுவை முரசில் வெளியிட்ட சிறுகதைகளைப் பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பாரதி, மாதவய்யா, வ.வே.சு. ஐயர் ஆகிய மூவருக்குப் பின் தமிழ்ச் சிறுகதைத் துறையில் நாலாமவராகப் பாவேந்தர் விளங்குவதையும் அவருடைய சிறுகதைகள் மூடநம்பிக்கை எதிர்ப்பு,  விதவைத் துயர் போன்றவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டிருப்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

மூன்றாவது கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கிய குரலாக ஒலித்த தமிழ்ஒளியின் மாந்தநேயச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் நா.இளங்கோ மேதினத்தைப் பற்றி முதன்முதலில் பாடியவர் தமிழ்ஒளிதான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஏழைமக்களின் இருப்பிடத்தைக் ‘கந்தல் படுதாவில் கட்டியதோர் மாளிகையாம்’ என்று குறிப்பிடும் தமிழ்ஒளி அறிவியலை, அணுவாற்றலை வாழ்த்துவதையும் ‘உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்’ என்று முழங்குவதையும் சுட்டிக்காட்டுகிறார் நா.இளங்கோ.

நான்காவது கட்டுரையில் தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் மக்கள் தலைவர் சுப்பையா அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய ‘சுதந்திரம்’ இதழே என்பதனைத் தக்க தரவுகளோடு நிறுவியுள்ளார் நா.இளங்கோ. தமிழ் இதழியல் வரலாற்றில் இச்செய்தி பதிவுசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

சைவம் திருவெம்பாவையையும் வைணவம் திருப்பாவையையும் பெற்றிருப்பது போல இசுலாமுக்கும் ஒரு பாவை இலக்கியம் தேவை என்பதை உணர்ந்த காரை இறையடியான் திருவருட்பாவை என்ற தனித்தமிழ் நூலைப் படைத்தளித்தார். அதன் அமைப்பையும் இலக்கிய நயத்தையும் சுட்டிக்காட்டும் முறையில் காரை இறையடியானின் திருவருட்பாவை கட்டுரை ஐந்தாவதாக அமைந்துள்ளது.

காரை இறையடியானின் இளவலும் நூலாசிரியர் நா.இளங்கோவின் ஆசிரியருமான பேராசிரியர் மு.சாயபு மரைக்காயரின் சிறுகதைகளை ஆய்வு நோக்கில் அறிமுகம் செய்கிறது ஆறாவது கட்டுரை. சாயபு மரைக்காயரின் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள பெண்பாத்திரங்களை ஆய்ந்து பொற்கொடி என்ற பாத்திரப் படைப்பைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் நூலாசிரியர். “இவளின் பாத்திரப் படைப்பில் யதார்த்தம் மிகுதி. ஆனால் கதையில் அழுத்தம் குறைவு. எனவே வாசகர் நெஞ்சில் பொற்கொடி பதியவில்லை” உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி, நழுவலின்றி பதிவு செய்யும் நூலாசிரியரின் பாங்கு பாராட்டத்தக்கது.

ஏழாவது கட்டுரையில் கவிஞர் கல்லாடனின் ‘தைமகள் வந்தாள்’ என்ற கவிதைத் தொகுப்பு குறித்துக் கூறும் ஆசிரியர் கவிஞர்களை மூன்று வகையாக்கி இதில் கவிஞர் கல்லாடன் மூன்றாம் வகையைச் சார்ந்த கவிஞர் என்றும் அதனால்தான் இவர் கவிதைகளில் ஆற்றாமை மட்டுமில்லாமல் சரியான தீர்வுகளும் சொல்லப்படுகின்றன என்று பதிவு செய்துள்ளார். மூன்றாம் வகைக் கவிஞர்கள் என்பது குறைகளைச் சுட்டிக் காட்டுவதோடு அமையாமல் அவற்றைக் களையும் வழிவகைகளையும் கூறும் கவிஞர்கள் என்று குறிப்பிடுகிறார்.

எட்டாவது கட்டுரையில் பிரஞ்சிந்தியப் புதுச்சேரியில் ஆலை அதிபர்களுக்கு எதிராக ஆலைத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்ததும் பிரஞ்சிந்திய அரசு ஆதிக்க வன்முறை வெறியாட்டம் ஆடிய போது தொழிலாளர் ஒன்றிணைந்து போராடியதுமான வீர வரலாற்றை நூலாசிரியர் குறிப்பிட்டு அந்த 1936 ஜூலை 30 புதுச்சேரி விடுதலைப் போரின் வித்து ஊன்றப்பட்ட நாள் என்ற வரலாற்றை அழுத்தமாகப் பதிவு செய்கின்றார்.

அடுத்துள்ள குறிப்பிடத் தக்க கட்டுரை புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய கட்டுரை ‘பிஜீத் தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்களும் உலகத் தமிழர்கள் கற்க வேண்டிய பாடங்களும்’ என்பதாகும். பிஜீத் தீவில் வாழும் தமிழர்கள் நாம் தமிழர்கள் என்பதையும் தமிழ்மொழியையும் மறந்து பெயரளவில் மட்டும் தமிழராக இருக்கும் அவலம் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டப்படுகிறது. பிஜிக்குப் புலம் பெயர்ந்த முதல் தலைமுறைத் தமிழர்கள் தாய்மொழிக் கல்வியை வேண்டவும் அடுத்த தலைமுறை அதனைப் புறக்கணிக்கவுமான சூழ்நிலை அமைந்ததையும் தமிழர்கள் இந்தி கற்கத் தொடங்கி, இந்திய இனக் கலப்பும் மொழிக் கலப்பும் ஏற்பட்டு தமிழ்க் குடும்பங்கள் இந்திக் குடும்பங்களாக மாறியுள்ளதையும் உள வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர் நா.இளங்கோ. இந்நிலை மாற, தமிழர்கள் பிற இன மக்களோடு மணஉறவு கொள்ளும் போது மிகவும் விழிப்பாயிருந்து தம் துணையையும் வீட்டில் தமிழ் பேசுமாறு ஆற்றுப் படுத்துதல் நல்லது, இத்தகு நுட்பமான மொழி அரசியல் இன்றை அவசியத் தேவை என்பதை உலகத் தமிழர்கள் உணர்தல் வேண்டும் எனத் தெளிவுபடுத்தியிருப்பது இன்றைய காலத்தின் தேவை.

நூலின் மூன்றாவது பகுப்பான ஊடகத்தமிழ் என்ற பகுதியில் நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முதல் கட்டுரை தகவல் தொடர்புச் சாதனங்களும் கதையாடலும் என்பதாகும். ஊடகங்கள் உருவாக்கும் நிகழ்வுகளில் ஊடகங்கள் பயன்படுத்தும் மொழி, செய்திகளைக் கதையாகப் புனைந்து கூறும் பாங்கு, அவ்வாறு செய்திகள் கதையாக்கப்படும் போது எழுப்பப்படும் முக்கிய கேள்விகள், ஐயங்கள் தீர்க்கப்படாமலே போகும் சூழ்நிலை முதலியன இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன.

அடுத்த இரண்டு கட்டுரைகளும் வலைப்பதிவுகள் தொடர்பான கட்டுரைகளாகும். புதிய படைப்பாளர்களின் படைப்புகளின் மீது குழு, மதம், சாதி, கட்சி, இயக்கம், சித்தாந்தம் முதலானவை எவ்வளவு அதிகாரம் செலுத்துகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வலைப்பதிவுகள் குறித்தான கட்டுரை சிந்தனைக்குரியது. தமக்குத் தேவையான வலைப்பதிவுகளைத் தாமே உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் கணினி பற்றிய அறிவு சிறிதளவு இருந்தாலும் போதும் என்றும் நம்பிக்கை தரும் செய்திகள் பல இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. அடுத்த கட்டுரை வலைப்பதிவுகளின் அமைப்பை விளக்கிக் காட்டுகிறது.

நூலின் நிறைவுக் கட்டுரை திரைப்பட மொழி சார்ந்த கட்டுரையாகும். இக்கட்டுரையில் நூலாசிரியர் ஒரு திரைப்படத்தை எப்படி நோக்க வேண்டும் என்பதை மிகவும் நுட்பமாக விளக்கியுள்ளார். காமிரா, ஒலி, ஒளி இவைகளால் கட்டமைக்கப் படுவதே திரைப்படத்தின் மொழி என்ற புரிதலை வழங்கும் இக்கட்டுரை புத்துலக ஆக்கமான திரைப்படத்தோடு தொல்காப்பியம் குறிப்பிடும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றையும் இணைத்துப் பேசும் நுட்பம் பாராட்டிற்குரியது.
‘படர்க்கை’ தமிழியல் கட்டுரைகளில் பேராசிரியர் நா.இளங்கோ மூன்றாம் மனிதனாக- தற்சார்பில்லாத ஓர் ஆய்வாளராகத் திருக்குறள் தொடங்கித் திரைப்படம் ஈறாகத் தாம் ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கட்டுரைகளாக ஆக்கித் தமிழுக்கும் தமிழர் சிந்தனைக்கும் புதிய விருந்தளித்துள்ளார். பேராசிரியர் நா.இளங்கோ அவர்தம் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

6-12-2008

திங்கள், 18 பிப்ரவரி, 2013

மனிதத் தின்னிகள் (கவிதை) -மின்நூல்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மனிதத் தின்னிகள் -மலையருவி 
மலையருவியின் புதிய கவிதை நூல் மின்பதிப்பு


Click to launch the full edition in a new window
Publisher Software from YUDU

சனி, 16 பிப்ரவரி, 2013

புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு

நாளை 17-02-2013 புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

வருக! பயன்பெறுக!

புதன், 6 பிப்ரவரி, 2013

புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப்பேராசிரியர்
புதுச்சேரி-8



புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் 
இணைந்து  நடத்தும்
தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் 


நிகழ்ச்சி நாள்: 17-02-2013 ஞாயிறு,  
காலை 9.30 மணி முதல்... 
(காலை 9.15 மணிக்கு பதிவு தொடங்கப்படும்).
இடம்: மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம், 
66. கடலூர் சாலை,
முதலியார் பேட்டை,
புதுச்சேரி -605 004.

இந்த நிகழ்ச்சியில் தமிழா நிறுவனத்தின் குறுந்தகடு வெளியிடப்படும், இதனைத் தொடர்ந்து  தமிழ்க் கணினி தொடர்பாக கீழ்க்கண்டவைகள் பற்றிய  காட்சி விளக்கம் (Power point Presentation) அளிக்கப்படும்.
  1. தமிழில் இயங்குதளம்: விண்டோசு மற்றும் லினக்சு (Ubuntu),
  2. தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
  3. கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
  4. கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற..
  5. தமிழில்  இணைய உலவிகள் ( Web Browsers) 
  6. ஒருங்குகுறி பற்றிய விளக்கம்,
  7. தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்,
  8. தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
  9. வலைப்பதிவு செய்தல்: பிளாக், மற்றும் வேர்டு பிரசு,
  10. திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி உள்ளிட்டவைகளில் இணைப்பு அதன் பயன்பாடு,
  11. சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தல்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
  12. தமிழில் மின்நூல் உருவாக்கல், மின்நூலகப் பயன்பாடு
  13. தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்.
  14. தமிழ் தொடர்பான பிற செய்திகள் 

இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து பங்கேற்பவர்களுக்குத்
தமிழ் மென்பொருட்கள்  அடங்கிய குறுந்தகடு, மற்றும்
குறிப்பேடு, எழுதுகோல்,
பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
காலை மற்றும் பிற்பகலில் தேநீர்,
மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
நிகழ்ச்சியைத் திட்டமிட ஏந்தாக
பங்கேற்பதற்குப் பதிவு செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
பதிவு செய்ய விரும்புகிறவர்கள்
இந்த  பதிவுப் படிவத்தினை சொடுக்கிப் பதிவுசெய்து கொள்ளவும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணம்
மாணவர்களுக்கு ரூ 50/-
மற்றவர்களுக்கு ரூ 100/-

இந்தப் பயிலரங்கில் பங்கேற்க
இந்தப் படிவத்தின் பதிவு
நிபந்தனைகளுக்கு உட்டது.
பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் வருகை தரவேண்டும்.
9.15 முதல் 9.30 வரை பதிவு நேரமாகும்.

பதிவு நேரத்திற்கு பின் வருபவர்களின் இடம் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
 
மேலும் விவரங்களுக்கு :
  
முனைவர் நா.இளங்கோ     9943646563,

இரா.சுகுமாரன்     9443105825,

எல்லை.சிவக்குமார்.     9843177943


ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

பழந்தமிழனின் பாறை ஓவியங்கள் - கீழ்வாலை - சிற்றுலா (26-01-2013)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சிற்றூர் கீழ்வாலை. நெடுஞ்சாலையை ஒட்டித் தெற்கே அரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக்குகைகளும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் மிச்ச சொச்சங்களுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.


கீழ்வாலையின் அந்தப் பாறைகளில் பழங்கற்கால மனிதர்கள் வரைந்துள்ள சிவப்புநிற ஓவியங்கள் பல காணப்படுகின்றன. இத்தகு பாறை ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்கள் என்று அழைக்கப்  படுகின்றன. அப்பாறையில் இடம்பெற்றுள்ள சில குறியீடுகள் சிந்து சமவெளிக் குறியீடுகளை ஒத்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு.



கீழ்வாலையின் பாறைகளில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள், குறியீடுகள் இவற்றில் காலவெள்ளத்தில் அழிந்தவை போக எஞ்சியிக்கும் ஓவியங்கள் வெகுசிலவே. கடந்த இருபதாண்டுகளுக்கு முன் நான் பார்த்தபோது தெளிவாகத் தெரிந்த ஓவியங்கள் பலவும் இப்போது மங்கி அழிவின் விளிம்பில் இருக்கின்றன.



இப்பொழுதும் மிக அழகாகக் காட்சியளிக்கும் ஓர் ஓவியம் நம்கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க வகையில் தீட்டப்பட்டிருக்கிறது. அவ்வோவியத்தில் குதிரை போன்றதோர் விலங்கின் மீது ஒருவன் அமர்ந்திருக்க அவ்விலங்கைப் பிணித்துள்ள கயிற்றினைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் முன்னே செல்வது போன்றும் எதிரில் ஒரு மனிதன் எதிர்ப்படுவது போன்றும் அமைந்துள்ளது அவ்வோவியம். மனிதர்களின் முகங்கள் பறவைகளின் அலகுகளோடு தீட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



அதே பாறையின் ஒருபுறத்தில் ஐந்து குறியீடுகள் வரிசையாக வரையப்பட்டுள்ளன. அந்த ஐந்து குறியீடுகளும் சிந்துசமவெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள எழுத்துக் குறியீடுகளை ஒத்துள்ளன.
எழுத்துக் குறியீடுகளும் ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ள குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது. அந்தக் குகையில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. ஆதி மனிதர்களின் இந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்று உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை அந்த ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் குகையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் அரிய வரலாற்றுப் புதையல்களாகும்.





இத்தகு அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் இன்று கவனிப்பாரற்று எத்தகைய பராமரிப்பும் இல்லாமல் சிதைந்து சீரழிந்து வருவது வேதனையளிக்கக் கூடிய செய்தியாகும். கீழ்வாலையின் பாறைக் குன்றுகள் தற்போது வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுக் கருங்கல் ஜல்லிகளாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநாளில் கீழ்வாலையின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்துபோகக் கூடிய ஆபத்து இருக்கிறது.




சில நூறாண்டுக் காலச் சின்னங்களைக் கூட அரிய வரலாற்றுப் பெட்டகங்களாகப் போற்றிப் பராமரித்துக் காட்சிப் பொருளாக்கிப் பெருமைபேசும் மேற்கத்திய நாடுகளிடமிருந்து நாம் கற்கத் தவறிய பாடம் இது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அகிலின் கூடுகள் சிதைந்தபோது -நூல் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் ஓர் ஈழத்தமிழ் எழுத்தாளர். ஈழத்தின் யாழ் மாவட்டத்தில் சரவணை என்னும் ஊரில் பிறந்தவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவருபவர். திசைமாறிய தென்றல், கண்ணின்மணி நீயெனக்கு என்ற இரண்டு நாவல்களின் வழியாகத் தமிழுலகிற்கு ஏற்கனவே அறிமுகமானவர். தமிழ் ஆத்தர்ஸ்.காம் என்ற அவரது இணையதளத்தின் மூலம் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பெரும்பணியைச் செய்துவருபவர். புலம்பெயர் இலக்கியப் படைப்பாளிகளில் அறியப்படவேண்டிய ஆளுமைக்குச் சொந்தக்காரர்.

புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் என்ற இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் அகிலின் சிறுகதைத் தொகுதியை அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நூலினை முழுமையாகப் பலமுறை வாசித்தேன். கல்விப் புலத்தில் எங்கள் பட்ட மேற்படிப்பு மைய முதுகலைத் தமிழ் வகுப்பிற்கு ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் என்ற பாடத்திட்டத்தை வகுத்ததோடு அப்பாடத்தை மாணாக்கர்களுக்குப் பயிற்றுவிக்கவும் கிடைத்த வாய்ப்பினால் தொடர்ந்து பல ஈழத்தமிழர் புலம்பெயர் இலக்கியங்களை வாசித்து வருபவன் நான். அந்த வாசிப்பு அனுபவத்தினை முன்னிறுத்தி, அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகுதி குறித்து சில சொல்லிட முனைகிறேன்.
இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது, வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மௌனியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர் களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்;கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகள் எல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதிப் பரவசப் படுத்துகின்றன. ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த சோகம், அதிர்ச்சி, சிலிர்ப்பு, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான். தோழர் அகிலின் சிறுகதைகளும் அதைத்தான் செய்கின்றன.

இச்சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பதினான்கு கதைகளுமே சிற்றிதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியானவை. இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற சில கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தேர்ந்த வாசகர்களின் வாசிப்பினைத் தொடர்ந்தே இக்கதைகள் நூல் உருப்பெற்றுள்ளன. 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டுக் கால இடைவெளியில் உருவானவைகளே இக்கதைகள். அந்த வகையில் ஈழத்தமிழர்களின் அண்மைய வாழ்க்கைப் பதிவாக இக்கதைகள் உருவாகியுள்ளன. இத்தொகுதியில் உள்ள அண்ணாநகரில் கடவுள் என்ற ஒருகதை தவிர மற்ற பதின்மூன்று கதைகளுமே ஈழம் மற்றும் புலம்பெயர் கனடாவினைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. கதைக் களத்தைப் போலவே கதைக்கருவும் ஈழம், கனடா வாழ் தமிழர்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன.

பொதுவாகப் புலம்பெயர் இலக்கியங்களைப் புலம்பல் இலக்கியம் என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. ஏனெனில் புலம்பெயர்ந்த படைப்பாளி, புகலிடச் சூழலில் வெளிப்படுத்தும் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளே இத்தகு படைப்புகளில் மிகுதியும் நிறைந்திருக்கும். அகிலின் சிறுகதையைப் பொறுத்தமட்டில் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளையும் மீறி வெளிப்படுவது மானுடநேயம். அதாவது நாடு, மொழி, இன பேதங்களைக் கடந்த மானுடநேயம். சக மனிதர்களை நேசிப்பது என்பதோடு அகிலின் கதைகள் நின்று விடுவதில்லை, அதனையும் கடந்து பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிர்களையும் நேசிக்கும் விரிந்த தளத்திலானது. வலி, கிறுக்கன், கூடுகள் சிதைந்தபோது முதலான கதைகள் இதற்குச் சான்று. பாம்பு கடித்து இறந்துபோன தனது வளர்ப்பு நாயையும் பூனையையும் பார்த்துக் கண்ணீர்விடும் கிறுக்கனும், கனடா சாலையொன்றில் இணைக்குருவிகளில் ஒன்று விபத்துக்குள்ளாகி இறப்பதையும் இறந்த குருவியின் பிரிவுத்துயர் தாங்காமல் தவிக்கும் துணைக்குருவியின் சோகத்தையும் கண்டு மனம் பரிதவிக்கும் கூடுகள் சிதைந்த போது கதையின் நாயகனும் இறைச்சிக்காக வெட்டப்படும் பன்றி, மாடுகளின் அவலத்துக்கு மனம் வெதும்பும் மயூரனும் அகிலின் பிரதிநிதிகளாக நம்முன் மானுடநேயத்தைப் பதித்துச் செல்கிறார்கள்.

ஈழத்தின் போர்ச்சூழலின் பின்னணியில் படைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு, பெரிய கல்வீடு, கண்ணீர் அஞ்சலி, கூடுகள் சிதைந்தபோது ஆகிய நான்கு கதைகளும் தமிழக வாசகர்களுக்குப் புதிய காட்சிப் படிமங்களை முன்நிறுத்துகின்றன. வன்னிப்போர்ச் சூழலும் முள்ளிவாய்க்காலில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயரும் அப்பாவித் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத் தாக்குதலும், யாழ்நகரத் தாக்குதலும் அகிலின் விவரிப்பில் வாசகர்களின் மனதில் ஆழ்ந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்துவது நிஜம். பத்திரிக்கைகளில் செய்தியாக மட்டுமே வாசித்துக் கடந்த நமக்கு இச்சிறுகதைகள் பேரினவாதத்தின் திட்டமிட்ட அழிப்பையும் தமிழர்களின் உயிர், உடைமை இழப்பையும் ஆறாத வடுக்களாக நெஞ்சில் நிலை நிறுத்துகின்றன.

இத்தொகுப்பின் செம்பாதிக் கதைகள் புலம்பெயர்ச் சூழலில் நம் தமிழர்கள் எதிர்கொள்ளும் பணம், குடும்பம், உறவு, சாதி, பண்பாடு தொடர்பான சிக்கல்களை முன்நிறுத்துகின்றன. புகலிடம் தேடி மேற்கத்திய நாடுகளில், சென்ற தலைமுறையில் குறிப்பாக 80களில் புலம் பெயர்ந்து சென்றவர்களின் அடுத்த தலைமுறை புலம்பெயர் நாட்டுப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்து பெரியவர்களாகிற போது, மூத்த தலைமுறை தம் தாய் மண்ணின் பண்பாட்டுச் சுவடுகளைக் காக்கவும் முடியாமல் மீறவும் மனமில்லாமல் படும்பாடு புகலிடத் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு சிக்கலான பகுதியாகும். அகில் இத்தகு பண்பாட்டு நெருக்கடிகளைத் தம் சிறுகதைகளில் குறிப்பாக இது இவர்களின் காலம் என்ற சிறுகதையில் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
சாதீய சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்றத் துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதிக்க மனோபாவத்தை விமர்சிக்கும் வெளியில் எல்லாம் பேசலாம், பெரிய கல்வீடு என்ற இரண்டு சிறுகதைகளும் முக்கியமானவை. பெரிய கல்வீடு கதை, உக்கிரமான போர்ச்சூழலிலும் தீண்டாமையைக் கட்டிக் காப்பாற்றத் துடிக்கும் பெரிய சாதியாரையும் வெளியில் எல்லாம் பேசலாம் கதை, மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சூழலிலும் தம் சாதி மேட்டிமையை விட்டுக் கொடுக்க விரும்பாத பிற்போக்காளர்களையும் இனம்காட்டுகின்றது.

குடும்பம் என்ற சமூக அமைப்பு சிதைவடையும் மாற்றக் காலத்தின் அடையாளங்களை முன்நிறுத்துவன அம்மா எங்கே போகிறாய், உறுத்தல் என்கிற இரண்டு கதைகளும். புலம்பெயர் நாடுகளில் தங்கள் வயதான பெற்றோர்களின் உடலுழைப்பு, வருவாய் இரண்டும் பயன்படும் காலம் வரையிலும் அவர்களைத் தம்மோடு வைத்திருந்துவிட்டுப் பின்னர் அவர்களை உதாசீனப்படுத்தும் இன்றைய இளம் தலைமுறையினரின் உளப்பாங்கை வெளிப்படுத்துவன இக்கதைகள். ஆனால் இந்த இரண்டு கதைகளிலும் பெற்றோர்களைப் புறக்கணிக்கும் இளம் தலைமுறையினரின் குற்ற உணர்ச்சியைக் கோடிட்டுக் காட்டியிருப்பதன் மூலம் அகில் இப்பிரச்சனை குறித்தான தம் விமர்சனத்தை நுட்பமாகப் பதிவுசெய்திருப்பது இந்தக் கதைகளின் பலம் எனலாம்.
இத்தொகுதியின் பதினான்கு கதைகளில் அண்ணாநகரில் கடவுள், ஓர் இதயத்திலே என்கிற இரண்டு கதைகளைத் தவிர மற்ற பன்னிரண்டு கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையன. அதிலும் வலி, கூடுகள் சிதைந்தபோது என்ற இரண்டு கதைகளையும் இத்தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் இனம் காண்கிறேன். அகிலின் படைப்பாக்கச் செய்நேர்த்தியில் உச்சத்தைத் தொட்ட கதைகளாக இவற்றைக் குறிப்பிடமுடியும்.

வலி என்ற சிறுகதை மூன்று அடுக்களில் கதையை நகர்த்துகின்றது.
1.கணவன் மனைவி இடையிலான சைவ, அசைவ உணவுப் பழக்க முரண்.
2.டிரக்கில் அடைக்கப்பட்டு மாமிசத்திற்காகக் கொண்டு செல்லப்படும் பன்றிக் குட்டிகளும் அதனூடாகப் புலம் பெயர்தல் தொடர்பான மயூரனின் கொடிய அனுபவங்களும்
3.யுத்தக் கொடூரங்களுக்கிடையே உயிருக்கு அஞ்சி, புலம்பெயரும் வாழ்க்கையையும் மாமிசத்துக்காகவே விலங்குகள் வளர்க்கப்பட்டு ஒன்று பார்க்க ஒன்றைக் கொல்லும் மனிதக் கொடூரத்தையும் உயிர்வதை என்ற ஒற்றைப்புள்ளியில் இணைத்துக்காணும் மயூரனின் மாறுபட்ட பார்வை.

இந்தக் கதையை ஒரு சைவ உணவுப் பிரச்சாரக் கதையாகப் பார்ப்பதைவிட உயிர்வதை என்ற ஒற்றைப் புள்ளியில் உலகின் சகல ஜீவராசிகளும் ஒன்றுதான் என்ற விரிந்த தளத்தில் வாசிக்க வேண்டும். இந்தப் புள்ளியை நோக்கிய கதையின் ஊடாக விரியும் புலப்பெயர்வுச் சிக்கல்கள் கதைக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தருகின்றன. நடைநலத்திலும், பாத்திர வார்ப்பிலும், கதையின் கட்டுக்கோப்பிலும் முழுமை பெற்ற வலி குறித்துப் பேசிக் கொண்டே போகலாம்.

கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதை வாசிப்பவர்களின் உறக்கத்தைப் பறிக்கும் கதை. சிங்கள ராணுவத்தின் இனஅழிப்புத் தாக்குதலில் செத்துமடிந்த பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் ரத்தசாட்சியாய்ப் படைக்கப்பட்ட கதை. வயிற்றுப் பிள்ளைக்காரியான தன் இளம் மனைவியைக் கண்ணெதிரே ராணுவத் தாக்குதலுக்குப் பலிகொடுத்துவிட்டு அந்த உடலை அடக்கம் செய்யக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடிவந்த கணவனின் மனக்குமுறலாய் வெளிப்படும் கதை. கதையின் கருவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணைக்குருவிகளில் ஒன்று தன் துணைக்குருவி வாகனம் மோதி நசுங்கிக் கிடக்கக்கண்டு செய்வதறியாது உழலும் காட்சி. இரத்தமும் சதையுமாய்க் உடல் சிதைந்து சின்னாபின்னமாய்க் கிடக்கும் குருவியைப் பார்க்கையில் இப்படித்தான் என்ற சசியும்.. என்று அவன் கதறும்போது வாசிப்பவர்களின் நெஞ்சம் சோகத்தில் சிதறும். ஈழப்போரின் பேரழிவு நினைவுகளைக் கனடா மண்ணிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் பின்நோக்கு உத்தியில் படைக்கப்பட்ட கதை. இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் வாசித்தால்தான் கதையின் அருமை புரியும். அகில் அவர்கள் இந்தத் தொகுப்பிற்கு, கூடுகள் சிதைந்தபோது என்ற தலைப்பினை வைத்தது உண்மையில் மிகப்பொருத்தம்.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத் தொகுதியின் சிறப்புகளாக நான் பட்டியலிட விரும்புபவை:
1. தமிழகத்தில் வெளிவரும் வட்டார வழக்குப் புனைகதைகளைப் போல் ஈழத்தமிழின் வட்டார நடை அகிலின் சிறுகதைகளில் மிக இயல்பாகப் பொருந்திப் போகிறது.
2. ஆசிரியரின் கதை சொல்லும் பாங்கும் பங்கேற்பும் கதையின் நம்பகத் தன்மையை மிகுவித்து வாசகர்களைக் கதைக்களங்களோடு ஒன்றிப்போகச் செய்கின்றன.
3. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் யாருமே எதிர்நிலைப் பாத்திரங்கள் இல்லை என்பது ஒரு தனிச்சிறப்பு. பாத்திரப்படைப்பில் அகில் கையாண்டுள்ள இந்த அணுகுமுறை முற்றிலும் புதுமையானது
4. இத்தொகுதி உயிர்க்குலம் தழுவிய மானுடநேயத்தைக் கதைகளின் ஊடாகப் பரப்புரையற்ற தொனியில் முன்நிறுத்துகின்றன.
5. அகிலின் கதைகள் தலைமுறை இடைவெளிகளால் சிதைவுற்றுக் கிடக்கும் குடும்ப உறவுகள் மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்கின்றன.
6. பாத்திரங்கள் மட்டுமின்றிப் பெரிய கல்வீடு, வானொலிப் பெட்டி, இணைக் குருவிகள் போன்ற சில அஃறிணைப் பொருட்களைக் குறியீடுகளாக்கிக் கதைக்கருவை முழுமைப்படுத்தும் உத்தி, அகிலின் கதைசொல்லலில் கையாளப் படுகின்றது.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது தொகுதியை வெறுமனே வாசித்துக் கடப்பது என்பது அத்துணை எளிய செயலன்று. ஒவ்வொரு கதையும் வாசகனிடம் ஓர் இனந்தெரியாத சோகத்தை, வலியை ஏற்படுத்துவது நிச்சயம். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் சொந்த மண்ணிலும் புலம்பெயர்தலிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் படும் வேதனைகள் வார்த்தைகளில் வடித்துவிட முடியாதவை. இத்தொகுதியில் அகிலின் சிறுகதைகள் எவ்விதப் புனைவுகளுமின்றி இரத்தமும் சதையுமாக அவர்களின் வாழ்க்கையை முன்நிறுத்துகின்றன. பேரினவாதம் ஏற்படுத்தும் இனஅழிப்பின் தாக்கங்களைத் தம் சிறுகதைகளின் ஊடாகக் காட்சிப்படுத்தும் இத்தொகுதி ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். படைப்பாளிகள் வெற்றிபெறுவது முக்கியமில்லை. படைப்புகள் வெற்றிபெற வேண்டும். அந்த வகையில் அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற படைப்பின் வெற்றி, காலத்தின் தேவை.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...