திங்கள், 17 செப்டம்பர், 2007

சொற்பொழிவுக் கலையின் நுணுக்கங்கள்

சொற்பொழிவுக் கலையின் நுணுக்கங்கள்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-605 008

பேச்சுக் கலை:
'பேச்சே வாழ்வின் மூச்சு" என்கிற இன்றையச் சூழலில் பேச்சாற்றல் மிகவும் அவசியமானதாகும். இன்றைய ஆட்சியாளரில் இருந்து புகழின் உச்சியில் உள்ள பலரின் உயர்வுக்கு அடிப்படையே அவர்தம் பேச்சாற்றல்தான் என்பது தெளிவு.திருவள்ளுவரும், கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் என்று சிறந்த பேச்சிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்.சொல்லும் கருத்துக்கள் தெளிவாக, அழகான சொற்களில், தர்க்க முறைக்கு மாறுபடாது, அனுபவத்துடன், எடுத்துக்காட்டுக்களோடு, கேட்பவர் உள்ளத்தில் ஊடுருவுமாறு, உணர்ச்சி தோன்ற, சொல்வது உண்மைதான் என்று கேட்பவர் உணரும்படி பேச்சு அமைந்திருக்க வேண்டும். இதுவே சிறந்த பேச்சு.

சிறந்த பேச்சுக்கான இலக்கணங்கள் சில:
சிறந்த சொற்பொழிவாளர்கள் பேசுவதைக் கேட்கும்போது பேச்சென்றால் இதுவல்லவா பேச்சு என்று பாராட்டத் தோன்றுகிறது. அத்தகைய சிறந்த பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் வெற்றிக்குக் கையாளும் உத்திகள் எவைஎவை என்பதைக் கூர்ந்து கவனித்தால் சிறந்த பேச்சின் இலக்கணங்களைக் கண்டுபிடித்துவிட முடியும்.தலைசிறந்த மேடைப் பேச்சுகள் பலவற்றை ஆழ்ந்து நோக்கி பலகால் பழகிய பழக்கத்தில் கீழ்க்கண்ட இலக்கணங்கள் சிலவற்றைச் சிறந்த பேச்சின் இலக்கணங்களாகப் பட்டியலிடுகின்றேன்.

1.பேச்சின் நோக்கம் தெளிவாக இருக்கவேண்டும். எதைப்பற்றிப் பேசப் போகின்றோம் என்பதில் நமக்கிருக்கும் தெளிவுதான் பேச்சு தெளிவாக அமைய உதவும்.
2.கடுநடையோ, அலங்கார நடையோ, செயற்கையான மொழிநடையோ இல்லாமல் எளிய நடையில் அழகாகவும் இனிமையாகவும் பேசுதல் வேண்டும்.
3.பேச்சின் முதல்பாதி வெற்றி நம் குரல்வளத்தில்தான் உள்ளது. குரல்வளம் சிறந்தால் பேச்சின் நடைநலம் சிறக்கும்.
4.பொருளோடு ஒட்டிய நகைச்சுவையை உணவிற்கு உப்புபோல் அளவாக அமைத்தால் பேச்சின் சுவையும் அழகும் கூடும். வெற்று நகைச்சுவைத் தோரணங்களால் அமையும் பேச்சு பயனற்ற பேச்சாய் முடிந்துவிடும். 5.பேசப்படும் கருத்திற்கு ஏற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் பேச்சின் வெளிப்பாடு விளங்க வேண்டும். மிகை உணர்ச்சி வெளிப்பாடுகளோ, உணர்ச்சியற்ற பேச்சோ இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை.
6.மிகையான அபிநயங்கள் பேச்சை வேடிக்கைப் பொருளாக்கிவிடும். தேவையற்ற அங்க அசைவுகள் தவிர்க்கப்பட்டு கம்பீரமாக நின்று பேசுதல் வேண்டும்.
7.உச்சரிப்பில் தெளிவும் பேச்சில் உரிய ஏற்ற இறக்கமும் அமைந்திருத்தல் அவசியம். ஒரே குரலில் சீராகப் பேசுவது பார்வையாளருக்கு விரைவில் சலிப்பை ஏற்படுத்திவிடும்
8.எடுப்பு தொடுப்பு முடிப்பு இம்மூன்று நிலைகளிலும் திட்டமிட்டு பேசுதல் வேண்டும். சிறந்த தொடக்கமும் சிறந்த முடிப்பும் சிறந்த பேச்சுக்கு மணிமகுடங்கள்.
9.பேச எடுத்துக் கொண்ட பொருளை விட்டுவிட்டு சுற்றி வளைத்து பேசுதல் கூடாது. சொல்லும் கருத்தானது பருந்தும் அதன் நிழலும் போலத் தொடர்ந்து வருமாறு சொற்பொழிவாற்ற வேண்டும்.
10.பேசும் மொழியைப் பிழையில்லாமல் உச்சரிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் பிழையான உச்சரிப்பு பேச்சையும் பேச்சாளரையும் வேடிக்கைப் பொருளாக்கிவிடும். உச்சரிப்புப் பிழையின்மை, மொழியழகு, சொற்குற்றம் இன்மை, சொல்லாட்சித் திறமை ஆகியனவற்றையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
11.சிறந்த பேச்சாளராக விரும்புவோர் முதலில் நூல்களோடு பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். அன்றாடம் நடைபெறுகின்ற நடைமுறை நிகழ்வுகளிலும் அதிகநாட்டம் கொள்ள வேண்டும். குறிப்பாகச் செய்தித்தாள் வாசிப்பது தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பழக்கங்களால் நடைமுறை உலகம் குறித்த அறிவைப் பெறமுடியும். நிரம்பப் படிக்கவும் புதியன அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுதல் நலம்பயக்கும்.

பேச்சைத் தொடங்கும் முறை:
சொற்பொழிவு என்பது சொற்பொழிவு செய்யும் நபரின் ஆளுமை வெளிப்பாடாகும். அவரின் சிந்தனை மற்றும் அறிவின் வெளிப்பாடாகவும் சொற்பொழிவே அமைகின்றது. பேச்சாளர் தாம் பேசப்போகும் செய்திகள் குறித்து எத்துணை விழிப்புணர்வோடு இருக்கின்றாரோ அதே அளவு விழிப்புணர்வோடு பேசும் முறையிலும் கவனம் செலுத்துதல் வேண்டும். பேசும் முறை என்கிறபோது பேச்சை எப்படித் தொடங்குவது எப்படி முடிப்பது என்பதும் அதில் முக்கிய இடம்பெறுகின்றது. சிறந்த தொடக்கமும் சிறந்த முடிவுமே சொற்பொழிவுக்கு ஒரு வடிவத்தைக் கொடுக்கின்றது.
1. பேசத் தொடங்கும் முன்னர் பேசப்போகும் அவையைக் கூர்ந்து கவனித்து மதிப்பிடுதல் வேண்டும். யாருக்காகப் பேசப்போகின்றோம்? அவர்களின் கல்வித்தகுதி என்ன? என்பதையும் அவர்களின் சமூகப் பின்னணி குறித்தும் தெரிந்து பேசுவது நல்லது. அவையோரின் தரம் மற்றும் அவையின் சிறப்பைக் கருத்தில் கொண்டு பேச்சை வடிவமைத்துக் கொள்வது பேச்சு சிறக்க துணைபுரியும்.
2. பேச்சாளர் எந்த வரிசையில் பேசப்போகிறார் என்பதையும் பேசவேண்டிய கால அளவு குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும்.
3. அவையோரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பேச்சின் தொடக்கம் அமைதல் நலம். பொதுவாக, ஏதேனும் ஒரு பாடலைச் சொல்லியோ மேற்கோள் கூறியோ பேச்சைத் தொடங்கலாம்.
4. பேசப்போகும் பொருள் குறித்து நேரடியாகப் பேசத் தொடங்காமல் ஒரு சிறிய முன்னுரையோடு தொடங்கலாம். ஆனால் அதே சமயம் முன்னுரை மிக நீளமாக அமைந்து விடக் கூடாது. அது பேச்சின் தொடக்கத்தையே சலிப்புக்குள்ளாக்கிவிடும்.
5. அவையடக்கம் என்ற பேரில் தன்னைத்தானே மிகவும் தாழ்த்திக் கூறிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மிகையான அவையடக்கம் பேச்சாளர் குறித்து அவநம்பிக்கையை உண்டாக்கிவிடும். தன்னைப் பற்றி மிகையாகப் புகழ்ந்துகொள்ளுதலும் கூடாது.
6.எல்லோருக்கும் தெரிந்த பொதுவான செய்திகளைக் கூறாமல் கேட்போர் வியந்து மலைக்கும் வகையில் புதிய செய்திகளைச் சுவைபடக் கூறலாம்.
7.முன் பேசியவரின் கருத்தை மறுக்க வேண்டிய அவசியம் ஏற்படுமானால் மிக நாசுக்காகவும் நாகரீகத்துடனும் பகையுணர்ச்சியைத் தூண்டாத வகையில் மறுப்புக் கருத்தைப் பதிவுசெய்து பேச்சைத் தொடங்கவேண்டும்.
சிறந்த தொடக்கம் அமைந்துவிடுமேயானால் அதுவே பேச்சின் செம்பாதி வெற்றியாக அமைந்துவிடும்.

பேச்சை முடிக்கும் முறை:
பேச்சைத் தொடங்குவதில் எத்துணை கவனம் தேவையோ அதைவிட மிகுந்த கவனம் பேச்சை முடிப்பதில் தேவை. பேச்சை முடிக்கும் முறை சிறப்பாக அமையவில்லை என்றால் நாம் இதுவரைப் பேசிய பேச்சு அனைத்துமே மதிப்பிழந்து போகும். கேட்கத் தூண்டுவது பேச்சின் தொடக்கம் என்றால் கேட்டதின் பயனை உணர்த்துவது பேச்சின் முடிப்பு ஆகும்.
1.பேச்சின் நோக்கம் எதுவோ? பேச்சின் குறிக்கோள் எதுவோ? அதை உணர்த்தும் வகையில் ஓட்டப்பந்தய எல்லையைத் தொடும் வீரனைப்போல் உணர்ச்சி ததும்பப் பேசி முடிக்கலாம்.
2.சிலபேர் பேச்சை முடிக்கும் தருவாயில் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன் இனிமேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது, கேட்டால் கேளுங்கள் இல்லையென்றால் போங்கள் என்பதுபோல் விரக்தியாகப் பேசி முடிப்பார்கள் இத்தகைய முடிப்பு கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
3. பேச்சைத் தொடங்கத் தெரிந்த பலபேருக்குப் பேச்சை முடிக்கத் தெரியாது. ஆகவே, எனவே, நான் என்ன சொல்ல நினைத்தேன் என்றால் என்பது போலத் திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லி முடிக்க முடியாமல் குழம்பக்கூடாது.
4. இதுவரைப் பேசிய செய்திகளையெல்லாம் சுருக்கமாகத் தொகுத்துக் கூறி பேச்சை முடிப்பது மிகுந்த பயனளிக்கக் கூடியதாயிருக்கும்.
5. அவையோர் பேச்சாளரின் பேச்சில் மிகவும் ஈடுபட்டுப் பேச்சைக் கேட்டுக்கொண்டிக்கும் போதே, இன்னும் கொஞ்சநேரம் பேசியிருக்கலாமே அதற்குள் முடித்துவிட்டாரே என்று நினைக்கும் வகையில் பேச்சை முடித்துக்கொள்வது மிகுந்த பாராட்டுதலைப் பெறும்.
6. நிகழ்ச்சியின் நோக்கத்தைச் சிறப்பித்துப் பாராட்டியோ நிகழ்ச்சி அமைப்பாளர்களைப் பாராட்டியோ பேச்சை முடிக்கலாம்.
7. சுவையான பயனுள்ள மேற்கோள்களைக் கூறி பேச்சை முடிப்பதும் ஒருவகை உத்தியாகும். இவ்வகை உத்தி பேச்சின் மையக்கருத்துக்கு வலுவ+ட்டுவதாக அமையும்.உரிய இடத்தில் உரிய நேரத்தில் பேச்சை முடிப்பதில்தான் பேச்சாளர்களின் வெற்றி இரகசியமே அமைந்துள்ளது.

சில சிறப்புக் குறிப்புகள்:
சிறந்த பேச்சாளராக விரும்பும் தொடக்கநிலைப் பேச்சாளர்களுக்குத் தேவையான சில இன்றியமையாத நுணுக்கங்களைப் பார்ப்போம்.
1. தமக்கெனத் தனிபாணி வேண்டும்-பிறரைப்போல் பேச முயலக்கூடாது.
2. பயிற்சியால் அவையச்சத்தை வெல்ல வேண்டும்.
3. சொல்லும் பொருளுக்கேற்ப குரலில் ஏற்ற இறக்கங்கள் வேண்டும்.
4. தலைப்பிற்கேற்பச் செய்திகளைச் சேகரித்துப் பேச்சை தயாரித்துக் கொள்ளவேண்டும்.
5. மனதிலேயே பேசப்போகும் கருத்துக்களை வரிசைப்படுத்தி ஒரு ஒத்திகைப் பார்த்துக் கொள்வது நல்லது.
6. கொள்கையின்றி இடத்துக்குத் தக்கவாறு நேர்மையின்றி பேசுதல் முற்றும் தவறு.
7. நமக்குப் புரியாத எந்தச் செய்தியையும் பிறருக்கு விளக்க முற்படுவது தோல்வியில் முடியும்.
8. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...