வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

மக்கள் தலைவர் சுப்பையாவும் சுதந்திரமும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தோழர் சுப்பையா:

ரஷ்யாவுக்கு ஒரு லெனின், சீனாவுக்கு ஒரு மாவோ, இந்தியாவுக்கு ஒரு மகாத்மா அதுபோல் புதுவைக்கு ஒரு வ.சுப்பையா என்று சிறப்பிக்கக் கூடிய பெருமைக்குரிய தலைவர்தான் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

பிரஞ்சு ஏகாதிபத்தியம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என இரண்டு ஏகாதிபத்தியத்திய அரசுகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற புதுவைச் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.சுப்பையா. ஆசியாவிலேயே முதன் முதலாகத் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை உரிமையைப் பெற்றுத்தந்த மக்கள் தலைவர். இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தளபதிகளில் முன்னணித் தலைவர். இவர் தமது 23 ஆம் வயதில் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்ட மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சியே சுதந்திரம் இதழ்.

இதழ் அறிமுகம்:

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு

என்ற பாரதியின் பாடல் அடிகளைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1934 ஜூன் மாதம் மாலை: 1, மலர்: 1 என்ற எண்ணிக்கைக் கணக்கோடு மாத இதழாகச் சுதந்திரம் வெளிவரலாயிற்று.

முதல் இதழிலிருந்தே ஆசிரியராக இருந்தவர் வ.சுப்பையா என்றாலும் மூன்றாவது இதழிலிருந்துதான் ஆசிரியர்:- வ.சுப்பையா என்று இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதழின் மேலட்டை பலவண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. 1க்கு 8 டம்மி அளவில் மேலட்டை நீங்கலாக 52 பக்கங்களில் முதல் இதழும், பிற இதழ்கள் 60 பக்கங்களிலும் வெளிவந்துள்ளன.

முதல் மூன்று இதழ்களின் மேலட்டைகளில் குதிரை மீதமர்ந்த சுதந்திர அன்னையின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த மேலட்டை குறித்து ஆசிரியர் தமது ஆசிரியர் குறிப்பு பகுதியில் குறிப்பிடும் செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு,

நமது சுதந்திர அன்னை சமூகமென்னும் பரியின் மீது அமர்ந்து ஒரு கரத்தில் சுதந்திரக் கொடியையும் மற்றொன்றில் வீரச்சின்னத்தையும் ஏந்தி, சுதந்திர முழக்கம் செய்துகொண்டு, அடிமையென்னும் கோட்டையினின்று வெளியேறி முன்னேற்றமென்னும் கனவேகத்துடன் சென்று தமிழக முழுவதும் தனது வெற்றிக்கனலைப் பரப்ப, சுதந்திர லட்சியத்தை உலகத்திற்கே முதலில் போதித்த பிரான்சின் குடியாட்சியிலிருக்கும் புதுவையிலிருந்து இன்று வெளிவருகிறாள். இவள் பணி தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதையூட்டி வீரர்களாக வாழச்செய்ய வேண்டுமென்பதாகும்.(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.2)

இதழின் நோக்கம்:

இந்த இதழைத் தொடங்கும் போது வ.சுப்பையா அவர்கள் தமது நோக்கமாக, ‘தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதை ஊட்டவே இந்தச் சுதந்திர அன்னை வருகிறாள்’ என்று குறிப்பிடும் பகுதி கவனத்தில் கொள்ளத் தக்கது. மேலும் இந்த முதல் இதழில் ஆசிரியர் குறிப்பிடும் பல செய்திகள் அவரின் சமூகம் குறித்த சரியான புரிதல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது. சான்றாக,

நமது சமூகத்திலே மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சுமார் ஏழு கோடி மக்களான நமது இந்தியச் சகோதரர்களை முதலில் விடுதலையடையச் செய்யவேண்டும்.
சமுதாயத்தில் ஒரு நேத்திரம் போல் விளங்கும் சுமார் 18 கோடிக்கு அதிகமான பெற்ற தாய்மாரையும் உடன்பிறந்த சகோதரிகளையும் நசுக்கி, அடிமைப்படுத்தி இழிவுறுத்தும் நாடு நம்நாடன்றோ?

(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப-ள்.3,4)

என்று எழுதும் இடங்களில் தலித் விடுதலை குறித்த சிந்தனையையும், பெண் விடுதலை குறித்த சிந்தனையையும் சரியான புரிதலோடு குறிப்பிடுகின்றார். இன்றைக்குப் பெருவளர்ச்சி பெற்றுள்ள தலித்திய, பெண்ணியச் சிந்தனைகளை முதல் இதழிலேயே ஆசிரிய உரையில் குறிப்பிடும் வ.சுப்பையா அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.

அகத்திலுள்ள உயர்வு தாழ்வு என்கிற அசடுகளை நீக்குவோம். எல்லோரும் ஓர் குலமெனப் பாடுவோம், பின் வீர சுதந்திரத்தை நிரந்தரமாக நாட்டுவோம். இதுவே உண்மைச் சுதந்திரம். இதுவே இன்பச் சுதந்திரம்
(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.4)
என்பது சுதந்திரம் ஆசிரியர் வ.சுப்பையா அவர்களின் தெளிவான முடிவு.

சுதந்திரமும் பொதுவுடைமையும்:

மகாத்மா காந்தியடிகள் 1933 இல் அரிசன சேவா சங்கத்தை ஏற்படுத்தினார். அரிசன சேவா சங்கத்தில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றிய வ.சுப்பையா அவர்கள் 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த இன்னல்களுக்கிடையே மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். பிறகு அரசியல் ரீதியாக எவ்வாறு செயல்பட்டார் என்பதைப் பின்வரும் பகுதியில் சுப்பையாவே குறிப்பிடுகின்றார்.

அரிசன மக்களோடு எனக்கிருந்த நெருக்கத்தின் காரணமாகப் பஞ்சாலைத் தொழிலாளர்களின் இயக்கத்தோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின் அரசியலிலும் நேரடியாக ஈடுபட நேர்ந்தது. அரசியல் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட நான், 1934 ஜூனில் சுதந்திரம் எனும் பத்திரிக்கையைத் தொடங்கினேன். அது இன்றுவரை தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக ஏந்தப்பட்ட போர்க்கொடியாகச் செயல்பட்டு வருகிறது.

தோழர் அமீர் அய்தர்கான் என்பவர்தான் தமிழகத்தில் பொதுவடைமை இயக்கத்தைத் தோற்றுவிக்கத் தூண்டுகோலாய் இருந்தவர். 1934 ஜூலையில் அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தின் காரணமாகப் பொதுவுடைமைக் கட்சியோடு நெருக்கமும் ஏற்பட்டது. அந்தக் கட்சியின் தொடர்பு காரணமாகத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்தது. (சுதந்திரம் பொன்விழா மலர்-3, ப.40)

தோழர் வ.சுப்பையா அவர்கள் பொதுவுடைமை இயக்கத்தோடு தமக்குத் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே சுதந்திரம் இதழைத் தொடங்கியுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...