திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பிரஞ்சிந்திய விடுதலை வீரர் - மக்கள் தலைவர் -வ.சுப்பையா -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி- 605 008

சிறைவாழ்க்கையும் தலைமறைவு வாழ்க்கையும்:

1938 ஆம் ஆண்டு மத்தியில் பிரஞ்சு அரசானது புதுவையில் எழுந்த தேசிய விடுதலை இயக்கப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் சுப்பையாவைப் பிரஞ்சு எல்லையில் கைது செய்யும் ஆணையைப் பிறப்பித்தது. சென்னையில் பிரிட்டிஷ் எல்லையில் கைது செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆதலால் 1938 ஜூன் முதல் தோழர் வ.சுப்பையா அவர்கள் தலைமறைவானார். ஆயினும் சென்னையில் கைது செய்யப்பட்டு 1938 டிசம்பரில் மூன்று வாரகாலம் சிறை வைக்கப்பட்டார். பின்னர் பிரிட்டிஷ் அரசானது சுப்பையாவைப் பிரஞ்சு அரசிடம் ஒப்படைத்தது. 1939 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 11 வரை புதுவைச் சிறையில் வைக்கப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யென நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

1939 செப்டம்பர் 1 இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபின்னர் பிரிட்டி~; அரசானது தோழர் வ.சுப்பையா பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்னும் தடையை விதித்தது. ஆயினும் அவர் தடையை மீறிப் பேசினார். அதனால் 1941 ஜனவரியில் தஞ்சாவூரில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு 1942 செப்டம்பர் முதல் வேலூர் மத்தியச் சிறைச்சாலையில் அரசியல் கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார்.
1944 ஏப்ரல் 18 இல் பிறப்பிக்கப்பட்ட ஆணைப்படி தோழர் வ.சுப்பையா பிரஞ்சு எல்லையிலிருந்து நாடு கடத்தப்பட்டார். பின்னர் பிரான்சு விடுதலை பெற்று பாரிசில் புதிய ஆட்சி நிறுவப்பட்டவுடன் 1945 செப்டம்பர் 6 இல் சுப்பையா மீதிருந்த இத்தடை நீக்கப்பட்டது.

விடுதலைக்கான தேசிய ஜனநாயக முன்னணி:

புதுவையில் முழு அரசியல் தன்னாட்சி மாற்றம் தேவை என்பதை உணர்ந்த தோழர் வ.சுப்பையா அவர்கள் அந்நிய ஏகாதிபத்யத்திற்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற ஒரு பேரியக்கத்தைத் தொடங்கினார்.

1946 இன் இறுதியில் தோழர் சுப்பையா அவர்கள் பிரஞ்சுப் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 இல் பிரான்சு சென்றார். 1947 ஜூலை இறுதிவாக்கில் பண்டித நேரு அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுவை விடுதலை இயக்கச் செயல் திட்டம் குறித்து விவாதிக்க இந்தியா திரும்பினார்.

1947 ஆகஸ்ட் 15 இல் புதுச்சேரியின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது. 1948 இறுதியில் பிரஞ்சு அரசானது தோழர் சுப்பையா மீது பலதரப்பட்ட கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைக் கைது செய்ய முயன்றது. இதையறிந்த சுப்பையா தலைமறைவாக இருந்துகொண்டே விடுதலை இயக்கத்தை வழிகாட்டி நடத்தி வந்தார். 1950 ஜனவரி 15 அன்று பிரஞ்சு அரசின் கைக்கூலிகளாலும் போலீசாலும் தோழர் சுப்பையா அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஆயினும் தலைமறைவாக இருந்துகொண்டே புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்தார் சுப்பையா.

புதுச்சேரி விடுதலை 1954 நவம்பர்1:

1954 ஏப்ரல் 4 இல் தோழர் சுப்பையா அவர்கள் புதுடில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அக்கூட்டத்தில் புதுச்சேரி மக்களுக்கு இறுதிக்கட்டப் போராட்ட அறைகூவல் விடுத்தார். 1954 ஏப்ரல் 7 முதல் இறுதிக்கட்டப் போராட்டம் பெரும் வலிமை பெற்றது. அதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரஞ்சு ஏகாதிபத்யம் இந்தியாவை விட்டு வெளியேறியது.

1954 நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாளின் போது தோழர் சுப்பையா அவர்கள் கோட்டக்குப்பத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாகப் புதுச்சேரி எல்லைக்குள் நுழைந்தார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு தோழர் வ.சுப்பையா அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தார்கள். புதுச்சேரியின் வரலாற்றில் இந்தநாள் ஒரு மறக்க முடியாத பொன்னாள் ஆக அமைந்தது. உண்மையான மக்கள் தலைவர் இவர்தான் என வரலாறு தன் ஏட்டில் குறித்துக் கொண்டது.

புதுச்சேரி விடுதலைக்குப் பின்:

1955 இல் புதிதாக அமைக்கப்பட்ட புதுவைச் சட்டமன்றத்திற்குத் தோழர் வ.சுப்பையா அவர்கள் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார். 1969 முதல் 1977 வரை புதுவைச் சட்டமன்றத்தில் இருமுறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் மகாத்மா காந்தி, பண்டித நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வி.வி.கிரி, நேதாஜி சுபா~; சந்திர போஸ், சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாக்கிரு~;ணன், வினோபாஜி, பெருந்தலைவர் காமராசர், திரு.வி.க., பெரியார் மற்றும் பல தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப்பணியும் சமுதாயப் பணியும் ஆற்றியுள்ளார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் தனிப்பெரும் சிறப்புகள்:

தோழர் வ.சுப்பையா அவர்கள் புதுவை மண்ணிலிருந்து புறப்பட்ட போராட்ட வீரர், பாட்டாளிகளின் தோழன், மிகச் சிறந்த தேசபக்தர், சாமான்யர்களுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த சமூகநீதிக் காவலர், இந்திய தேசத்தலைவர்களுக்கெல்லாம் உற்ற நண்பர், மொத்தத்தில் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்.

பாரதத்தின் விடுதலை வரலாற்றிலும் புதுவையின் விடுதலை வரலாற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இணையற்ற வீரர். ஆங்கில ஏகாதிபத்யம், பிரஞ்சு ஏகாதிபத்யம் என்ற இரண்டு ஏகாதிபத்யங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட ஒரே விடுதலை வீரர் என்ற பெருமைக்குரியவர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

மக்கள் தலைவரின் பன்முகப்பட்ட பணிகள்:

தோழர் வ.சுப்பையா அவர்களின் பன்முகப்பட்ட பணிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், குறிப்பாகப் புதுவையின் விடுதலைப் போருக்கு வித்திட்டு வளர்த்து விடுதலையை முழுமைப்படுத்திப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த தேசபக்த விடுதலை மறவர். 1934 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் என்ற பத்திரிக்கையை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி முற்போக்கு இதழ்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்த சிறந்த பத்திரிக்கையாளர். அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்ற தேசிய அமைப்பில் திறமை மிக்க தலைவர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சமூக, பொருளாதார, அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் எழுத்தாற்றலும் நாவன்மையும் ஒருங்கே கொண்ட சிந்தனையாளர். அரசியலில் பல பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நிர்வாகம் செய்த ஆற்றல் மிக்க நிர்வாகி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் மதித்துப் போற்றப்படும் மக்கள் தலைவர்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...