புதன், 17 நவம்பர், 2010

சிங்கப்பூர் கவிஞர் கி. கோவிந்தராசுவின் வேர்களின் வியர்வை -அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8
9943646563

உரைநடைக்கும் கவிதைக்கும் எழுதுவதில் வித்தியாசம் இருக்கிறதோ இல்லையோ? வாசிப்பதில், அனுபவிப்பதில் கண்டிப்பாகப் பெரிய அளவில் வித்தியாசமிருக்கிறது. உரைநடையை வாசிப்பவன் அப்படைப்பை ஒற்றைப் பரிமாணத்திலேயே வாசித்து முடித்துவிடுகிறான். வாசிப்பதை முடித்தவுடன் பெரிதும் உரைநடைப் படைப்பின் வேலையும் முடிந்துவிடுகிறது. ஆனால் கவிதை வாசிப்பு அப்படியில்லை. கவிதையைப் பல பரிமாணங்களில் வாசிக்க வேண்டியிருக்கிறது. வாசிப்பு முடிந்த பிறகுதான் கவிதைப் படைப்பு தன் முழுப் பரிமாணத்தையும் காட்டிப் பேருரு எடுக்கிறது.

வாமனனுக்கு மூன்றடி நிலம் தானம் கொடுத்த மாபலிச் சக்கரவர்த்தியின் நிலைதான் கவிதை வாசிப்பவன் நிலையும். சின்ன உருவம்தானே மூன்றடி எடுத்துக் கொள்ளட்டும் என்று வரம் கொடுக்கப்போய் சிற்றுரு பேருருவாகி எல்லாற்றையும் ஈரடியால் அளந்துமுடித்து மூன்றாவது அடிக்கு மாபலி தன் தலையையே கொடுக்க நேர்ந்தது போல்தான் இதுவும்.

கவிதை சிறியதோ பெரியதோ வாசிப்புக்கு அடங்கிவிடும் அதன் உருவத்திற்கும் அது தரும் அனுபவம் என்ற விஸ்வரூபத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகப்பெரிது. வாசிப்பு நம் அறிவு அனுபவங்களைத் தொட்டு உரசி நமக்குள்ளாக இறங்கி, ஐக்கியமாகி நம்மையே இழக்கும் நிலைக்குத் தள்ளும் போதுதான் மூன்றாவது அடிக்குத் தன் தலையையே தந்த மாபலியாகிறோம் நாம். வாசிப்பாளனுக்குக் கிட்டும் இந்த அனுபவம் படைப்பாளிகளுக்குக் கிட்டுமா? என்பது ஐயமே.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதுபோல்தான் கவிதை தரும் வாழ்க்கை குறித்த பதிவுகளும். சில சமயங்களில் உங்களுக்கும் எனக்கும் வாய்த்த அனுபவமே கூட, படைப்பாளனுக்கும் வாய்க்கலாம். நமக்கு வெறும் சம்பவங்களாய்ப் பதிவான அந்தத் தருணங்கள் படைப்பாளிகளுக்கு மட்டும் படைப்புக்கான வித்தாக மாறிவிடுகின்றனவே, அது எப்படி?. பூக்களிலிருந்து நீங்களும் நானும் அதன் இனிப்புச் சாற்றை எடுக்கலாம். ஆனால் அது தேன் ஆவதில்லை. தேனீக்கள் உறிஞ்சும் இனிப்புச் சாறு மட்டும் தேன் ஆகிறதே அப்படித்தான். தேனீக்கள் வயிற்றில் நடக்கும் ரசாயன மாற்றம் போல் படைப்பாளியின் உள்ளிருந்து படைப்பு வெளியாகிறது. நண்பர் கோவிந்தராசுவுக்கும் அப்படித்தான்.

வேர்களின் வியர்வை எனும் இக்கவிதைத் தொகுப்பு இனிய நண்பர் கவிஞர் கி. கோவிந்தராசுவின் முதல் படைப்பு. மதுரையில் பிறந்து வளர்ந்து பிழைப்புக்காகச் சிங்கப்பூர் சென்று தம் உழைப்பால் சிங்கையின் உயர்வுக்குப் பாடுபடும் பல்லாயிரம் தோழர்களில் ஒருவராக வாழ்ந்து வருபவர். சிங்கப்பூரின் இலக்கிய உலகில் தமக்கென ஒரு தனியிடத்தைத் தம் பன்முக ஆற்றலால் ஏற்படுத்திக் கொண்டவர். சிங்கப்பூரில் கவிஞர் கோவிந்தராசு பங்கேற்காத கவியரங்கத்தைப் பார்ப்பது அரிது. கவிஞர், பலகுரல் கலைஞர், நாடக நடிகர், பேச்சாளர் என்ற பரிமாணங்களைக் கொண்டவர். இவர் ஓர் உழைப்புத் தேனீ.

வேர்களின் வியர்வை ஒரு சராசரி கவிதைத் தொகுப்பு இல்லை. கவிஞர் கோவிந்தராசுவும் ஒரு சராசரித் தமிழ்க் கவிஞர் இல்லை. சராசரிக் கவிஞர்கள் எதையும் கவிதையாக்கி விடுவார்கள். ஏனெனில் கவிதை அவர்களுக்கு ஓர் உற்பத்திப் பொருள். குயவன் உற்பத்தி செய்கிறானே பானை, அதைப்போல, நூற்றுக்கணக்கில் உற்பத்திசெய்து தள்ளிவிடுவார்கள். கோவிந்தராசு போன்ற கவிஞர்கள் சிற்பிகள். இவர் பானைகளும் பல வனைந்து தள்ளியிருக்கிறார், ஆனால் அவற்றினூடே அழியாத கலைப் பொக்கி~ங்களாக அபூர்வச் சிற்பங்களும் உண்டு. கவிஞன், கவிதை எழுத முடியாமல் கண்ணீர் வடிக்கிற போதுதான் உயர்ந்த கவியாகிறான். நான் என்னும் கவிதையில் கவிஞர் சொல்வதைக் கேளுங்கள்.

புவியதிர்ச்சி நிலநடுக்கம்
புதையும் மானுடம் -கண்டு
கவிவடிக்க மனம்வராது
கண்ணீர் வடிக்கிறேன்
காவிவேட்டி மனிதர்களைக்
கடவுள் என்றெண்ணும் -இந்தப்
பாவிமக்கள் நிலையை எண்ணிப்
பரித விக்கிறேன்.

குறையில்லாத நிலவினோடு
கொஞ்சி மகிழ்கிறேன் -அதில்
பிறைவரும் போதேனோ
நெஞ்சம் புழுங்குகிறேன்!
எவ்வுயிரும் நலம்வாழ
என்றும் துதிக்கிறேன் -இது
பொய்யாகிப் போகுமெனில்
நெஞ்சு கொதிக்கிறேன்.


மானுடப் பேரழிவுகளின் போது, கவிதைகள் எழுதிக் கடமை முடிந்துவிட்டது என்று பிழைப்பு நடத்தும் கவிஞர்களுக்கிடையே “கவிவடிக்க மனம்வராது கண்ணீர் வடிக்கும்” கோவிந்தராசு மானுடப் பேரழிவுக்கு மட்டும் இல்லை நிலவில் பிறைவந்தால் கூட அதன் உடல்குறை கண்டு நெஞ்சம் புழுங்குகின்றாரே இவரல்லவா உயர்ந்த கவி. எல்லாவுயிர்களும் இன்புற்றிருக்க வேண்டிப் புதுவை மணக்குள விநாயகரைப் பாடிய மகாகவி பாரதிக்குப் பேரன் இவர்.

விளம்பரத்திற்காக உலக உயிர்களுக்கு இரங்கிவிட்டுச் சொந்தத் தாய் தந்தையரை மறந்துவிடும் உலகம் இது.

அன்னையையும் தந்தையையும் மதித்தல் வேண்டும்
அவர்வயது முதிர்ந்த பின்னே காத்தல் வேண்டும்
சின்னதொரு உயிருக்கும் கெடுதல் செய்யாச்
சிந்தையினை எமக்கிறைவன் வழங்க வேண்டும்.


அன்னையையும் தந்தையையும் அவர்கள் தளர்ந்திருக்கும் முதுமைப் பருவத்தில் காத்திட வேண்டும் என்ற விருப்பும் சின்னதொரு உயிருக்கும் கெடுதல் செய்யாச் சிந்தை வேண்டும் என்ற விருப்பும் கவிஞரின் வேண்டும் வேண்டும் என்ற ஒரே கவிதையில் புனைவுகள் இல்லாமல் பதிவு செய்யப்படுவது வியப்பூட்டுகின்றது.

வேர்களின் வியர்வை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர் கி.கோவிந்தராசுவின் கவிதைகளைப் பின்வரும் வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம்.

1. இயற்கையைப் பாடும் கவிதைகள்
2. தலைவர்கள், கவிஞர்களைப் பாடும் கவிதைகள்
3. வாழ்க்கை குறித்த விசாரணைகளாக வெளிப்படும் கவிதைகள்
4. சிங்கப்பூர் குறித்த கவிதைகள்


இந்த நான்கு பிரிவுகளில் முதலிரண்டு பிரிவுகளில் அடங்கும் கவிதைகளைக் காட்டிலும் மூன்று மற்றும் நான்காம் பிரிவுகளில் அடங்கும் கவிதைகள் வீரியமிக்கவை. குறிப்பாக, சிங்கப்ப+ர் குறித்த கவிஞரின் கவிதைகளில் பதிவாகும் தனிமனித உணர்வுகளும் சமூக உணர்வுகளும் பிற கவிஞர்களிடமிருந்து கவிஞர் கோவிந்தராசுவை வேறுபடுத்துகின்றன.

உனக்காக… என்னும் கவிதையில் மனைவியைஃ காதலியைப் பிரிந்து பிழைக்க வந்த இடத்தில் தனிமையில் வாடும் ஒருவனின் மனமும் உடலும் சிதைவுகளுக்குள்ளாகும் புறச்சூழல்கள் சுட்டப்பட்டு, அச்சூழல்களுக்கு இடையேயும் கற்போடு இருக்க விரும்பும் ஒருவன் குறித்த பதிவு நுட்பமானது.

வண்டு பிடிக்கும் மலர்கள்
மலர் தேடும் வண்டுகள்
இத்தனையும் தாண்டி
எனக்கான –உன்
காத்திருப்புக்காய்
நான் இன்னும்
கற்போடு இருக்கிறேன்.


மற்றுமொரு சிறந்த படைப்பு ஆறுதல் தரும் அருமருந்து என்ற தலைப்பிலான கவிதை. இந்தக் கவிதையைப் புரிந்துகொள்ள சிங்கப்ப+ர்த் தமிழர்கள் குறித்த புரிதலும் அனுபவமும் வேண்டும். அப்பொழுதுதான் கவிதையின் முழுப் பரிமாணத்தையும் உணரமுடியும். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் மூன்று வகையினர் உண்டு. முதல்வகையினர், சில தலைமுறைகளுக்கு முன் சிங்கை சென்று குடியேறி வாழ்ந்துவரும் தமிழர்கள். இரண்டாம் வகையினர், ஹை-டெக் பணியிலிருக்கும் கொஞ்சம் வசதியான தமிழர்கள். மூன்றாம் வகையினர், உடல் உழைப்பாளிகளாக சிங்கப்பூரில் பணியாற்றும் நடுத்தட்டுக் கூலித் தொழிலாளத் தமிழர்கள்.

ஆறுதல் தரும் அருமருந்து என்ற கவிதை மூன்றாம் வகைத் தமிழர்களைப் பற்றியது. சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் கூடும் இந்தத் தமிழர்களின் உடல் மனஉணர்வுகள் வார்த்தைகளுக்குள் சிக்காதவை. அந்தச் சூழலைக் கண்டு அனுபவித்தவர்களுக்கே அதன் கனம் புரியம். கவிஞர் அதனை வார்த்தைகளில் கொண்டுவர முயன்று வெற்றியும் கண்டுள்ளார். “இதில் பார்வையாளர்கள் எவருமில்லை, அனைவரும் பேச்சாளர்களே” அற்புதமான பதிவு. கவிதையின் ஒரு பகுதி இதோ,

ஒவ்வொரு ஞாயிறும்
வாரம் தவறாத
மாநாட்டுக் கூட்டம்
இதில்
பார்வையாளர் எவருமில்லை
அனைவரும் பேச்சாளர்களே!

தொற்றிக் கொண்ட துக்கம்
தொலைந்து போன தூக்கம்
பற்றிக் கொண்ட ஏக்கம்
பணியில் கண்ட கலக்கம்
ஆறுநாட்கள் சேமிப்பிற்குப் பின்
அணையுடைத்த நீராய்
ஆறுதல் தேடி ஆர்ப்பரிக்கும்.


சிங்கப்பூர் குறித்த கவிதைகளில் மற்றொரு வகை அதன் பெருமை பேசும் கவிதைகள். அந்தவகையில் குறிப்பிடத்தக்க கவிதை லீ வாழ்க! எனும் கவிதை. சிங்கையின் பெருமைகளையும் அதன் பிதாமகன் லீக் வான் யூ அவர்களின் புகழையும் பேசும் நல்ல கவிதை அது.

கவிஞர் கி. கோவிந்தராசுவின் கவிதைகளில் காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகள் என்ற பெருமையைப் பெறுவன, வாழ்க்கை குறித்த விசாரணைகளாக வெளிப்படும் கவிதைகளே. அந்தவகையில் குறிப்பிடத்தக்க கவிதைகளாகப் பின்வருவற்றைப் பட்டியலிடலாம்.

1. வேரில் பழுத்த பலா
2. உயிர் வலி
3. ஒப்பனை உறவுகள்
4. தியாகம்
5. தொலைந்த நாட்கள்
6. குப்பைத் தொட்டி
7. அம்மாவுக்கு ஒரு கடிதம்


கவிஞரின் கவிதைகளில் வெற்று அலங்காரங்களைக் காண்பது அரிது. அணிகளாலும் உத்திகளாலும் தம் கவிதைகளை அவர் நையப் புடைப்பது இல்லை. உருவமும் உள்ளடக்கமும் இணைந்த ஒரு முழுமையே கோவிந்தராசு கவிதைகளின் தனித்த அடையாளம். ஒப்பனைகள் இல்லாத அவரின் கவிதைகள் குறித்து அவரே தரும்
வாக்குமூலம் இதோ.

கற்பனையில் வாழ்கிறேன்
கவிதைகள் வடிக்கிறேன்
ஒப்பனைகள் இல்லாமல்
ஒளிர்ந்திடத் துடிக்கிறேன்.


கவிஞர் கி. கோவிந்தராசுவின் முதல் படைப்பு இந்த வேர்களின் வியர்வை. இனிவரும் படைப்புகளில் இன்னும் முதிர்ச்சி வெளிப்படும் என்பது திண்ணம். ஏனெனில் இந்தத் தொகுதியே அதற்கான அடையாள வித்துகள் பலவற்றைப் பெற்றுள்ளது. வேர்களின் வியர்வை தமிழ்கூறு நல்லுலகத்தில் நல்ல வரவேற்பினைப் பெறும், பெறவேண்டும் அதுவே நம் பெருவிருப்பு.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...