செவ்வாய், 23 நவம்பர், 2010

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-2)

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

பொதுவுடைமை அறம் கூறும் நூல்:
பாவலரேறுவின் உயிர்க்கொள்கைகள் மூன்றனுள் ஒன்றாகிய மார்க்சிய பொதுவடைமைக் கொள்கையை உலகியல் நூறின் பொதுமையியல், ஒப்புரவியல் பகுதிகளில் சிறப்பாக வலியுறுத்திப் பாடுகின்றார்.

ஊனுடம்பு வாய்த்த உயிர்க்கெல்லாம் வாழ்க்கை பொது (பா.62)

மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் உலகும் உலகவாழ்க்கையும் பொது, எனவே உலக வளங்களை அனைத்துயிர்களும் வேறுபாடின்றித் துய்த்தலே கடமை என்கிறார். வேறு பாடல்களிலும்,

உலகுடைமை யார்க்கும் உடைமை (பா.65) என்றும்
தொகையுலகில் இன்புறுதல் எல்லவர்க்கும் (பா.64)


என்றும் வரையறை செய்கின்றார். எல்லோரும் இன்புற்றிருக்க, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு ஈதல் வேண்டும் என்ற பழைய ஈகைக் கொள்கையைப் பாவலரேறு முன்மொழியவில்லை. மாறாக, ஈகையின் வடிவமான வள்ளண்மை என்பது உயர்வில்லை என்றும் இல்லாமையைப் பேணிப் பாதுகாக்கும் பழைய முயற்சியே அது என்றும் கூறுகின்றார்.

வள்ளண்மை
என்றும் உயர்வன்றே இல்லாமை பேணுமொரு
தொன்று முயல்வே அது! (பா.63)

என்பது அப்பாடல்.

உழைப்பொருபால் ஓங்கும் உவப்பொருபால் ஒன்னார்
இழைப்பொருபால் எய்தல் இகழாம் - தழைப்பெய்தல்
வேண்டின் உடலுழைப்பு வேளாண்மை துய்ப்பு
யாண்டும் பொதுவமைத்தல் யாப்பு (பா.16)

உடலுழைப்பு ஒருபக்கமும் உவப்பு ஒருபக்கமும் என்றிருத்தல் இழுக்கு. நாடும் மக்களும் செழிப்படைய வேண்டுமானால் உடல் உழைப்பைப் பொதுவாக்கல் வேண்டும், உழவையும் உழவுக்கான நிலத்தையும் பொதுவாக்கல் வேண்டும், உலக இன்பங்களை நுகரும் துய்ப்பையும் பொதுவாக்கல் வேண்டும் என்று ஒரே பாடலில் பொதுவுடைமைக் கொள்கையின் பிழிவைக் கூறி உலகியல் நூறு அறவிலக்கியத்தை உலக அறவிலக்கியமாக இலங்கச் செய்துள்ளார் பாவலரேறு. உடைமை பொதுவாகவில்லை யென்றால் நாட்டில் சமத்துவம் இருக்காது. ஒருபக்கம் வளமை, மறுபக்கம் வறுமை என உலகமே அலங்கோலமாயிருக்கும். இந்த வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைத்தல் நமது கடமை. இந்தக் கடமையில் நாம் தவறினால்,

திருக்குவைசூழ் மாடத் தெருக்கடையின் ஓரத்து
உருக்குலையும் வாழ்க்கை ஒழிக -பெருக்கமுறும்
வான்தோய் வளமனைக்குள் வன்குடில்வாழ் ஏழையர்தம்
கான்தோயும் காலம் வரும். (பா.18)


வன்குடில் வாழ் ஏழையர் வளமனைக்கும் நுழையும் காலம் வரும் என்பதற்கு, ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி, போராட்டம், புரட்சி வெடிக்கும் என்பதாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். பொதுமையியல், ஒப்புரவியல் என்ற இரண்டு இயல்களிலும் நூலாசிரியர் அமைக்கும் பத்து பாடல்களும் சுரண்டல் சமூகத்தின் இழிவையும் பொதுவுடைமைச் சமூகத்தின் மேன்மைகளையும் எடுத்துச்சொல்லி உலகின் இன்றைய தேவையை வலியுறுத்துகின்றன.

மாந்தவியல் எனும் பகுதியில் ஒழுக்கம் என்பதை விளக்கப் புகுந்த நூலாசிரியர் ஒழுக்கம் பசியின்மை ஊன்றுதொழில் கல்வி (பா.14) என்கிறார். நாட்டு மக்களுக்கு உணவு, தொழில், கல்வி என்ற இம்மூன்றையும் முறையாக வழங்கினால் ஒழுக்கம் தானாக நிலைபெறும் என்கிறார். சமமற்ற பகிர்வே நாட்டில் நிலவும் குற்றங்களுக்கு அடிப்படை. சமத்துவம் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும் என்பது ஆசிரியர் கருத்து.அறங்களும் சட்டங்களும் அனைவர்க்கும் பொதுவா? நாட்டியல் என்னும் பகுதியில் அதிகாரத்திற்கும் சட்டத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த தம் பார்வையைப் பதிவு செய்கிறார் பாவலரேறு.

அமைத்த அதிகாரத் தாள்வோர்க்குச் சார்பாய்
சமைத்துக் கொளும்நெறியே சட்டம் -இமைத்துரைப்பின்
ஆனைக் குழுசெய் அறநெறியாங் கோர்ஏழைப்
பூனைக் குதவுமெனல் பொய். (பா.7)

சட்டங்கள் என்றைக்குமே அதிகாரத்தைக் கட்டமைக்கவும் விளிம்பு நிலை மக்களை ஒடுக்கவுமே உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையை விளக்குவதோடு ஆனைக் குழு அதாவது அதிகாரம் படைத்தவர்கள் உருவாக்கும் சட்டம் பூனைக் குழுவிற்கு அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றைக்குமே உதவாது என்கிறார் ஆசிரியர். மேலும் இப்பாடலில் சட்டங்;கள் குறித்து அவர்முன் வைத்த விமர்சனங்கள் அறநெறிகளுக்கும் பொருந்தும் என்கிறார். அறநெறிகளை விளக்கப் புகுந்த ஓர் அறவியல் இலக்கியத்தில் அறம் - அதிகாரம் இவைகளுக்கு இடையிலான தொடர்பினைச் சரியான பார்வையில் எடுத்துக் காட்டுவதன் மூலம் நூலை வாசிப்பவர்களுக்கு உரிய வழிகாட்டியாகவும் திகழ்கிறார் பாவலரேறு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வெற்று முழக்கத்தைக் கேட்டுப் பழகிய நமக்குப் பாவரேறுவின் குரல் ஒரு புரட்சிக் குரலாகவே ஒலிக்கிறது.

தொண்டின் மேன்மை:

புகழியல் எனும் பகுதியில் தொண்டுநிலை பற்றி விளக்குமிடத்து, தோய்ந்தார் பொருட்டு உழைத்தல் தொண்டென்ப என்று தொண்டிற்கு இலக்கணம் வகுப்பதோடு தொண்டு செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளையும் பட்டியலிடுகிறார். பாடல் பின்வருமாறு,

தோய்ந்தார் பொருட்டுழைத்தல் தொண்டென்ப உள்ளச்சீர்
வாய்ந்தார் துணிவின் வயப்படுக -ஆய்ந்துரைக்கின்
துன்பம் இழவிழிவு தோளின்மை தூங்காமை
இன்பென்பார் ஆற்றல் இனிது. (பா.75)

இப்பாடலில் துன்பம், இழப்பு, இழிவு, துணையில்லாமை, சோர்தலில்லாமை இவைகளை யார் இனிது என்று கருதி உழைக்க அணியமாய் இருக்கின்றார்களோ அவர்களே தொண்டு செய்தல் முடியும் என்கிறார். பாவலரேறு அவர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடிப்பதாக உள்ளது இப்பாடல். தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்க்கையையே அதற்காக ஈடு கொடுத்த ஆசிரியர் மேற்கூறிய இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார் என்பது மிகையன்று.
அதே புகழியல் பகுதியில் மான நிலை என்ற பொருளில் பாடும் போது,

மனவுயர்ச்சி தாழவரல் மானம் அதுதான்
இனவுயர்ச்சி காட்டும் எழுச்சி -இனவுயர்ச்சி
உள்ளுவார்க் கில்லை உயர்மானம் ஆங்கதனைக்
கொள்ளுவார்க் கில்லை குனிவு (பா.74)


என்று பாடுகிறார். மனவுயர்ச்சிக்குத் தாழ்வு வருமானால் அச்சூழலில் தோன்றும் நல்லுணர்வே மானம் என்றும் இந்த நல்லுணர்வுதான் ஓர் இனத்தின் உயர்வைக் காட்டும் அடையாளம் என்றும் குறிப்பிடும் ஆசிரியர், இனவுயர்ச்சியைக் கருதி உழைக்கின்றவனுக்குத் தன்பொருட்டு இந்த மானவுணர்ச்சி தேவையில்லை என்றும் அதனால் தாழ்ச்சியொன்றும் இல்லை என்றும் கூறுகின்றார். இனத்தின் உயர்வுக்குப் பாடுபடும் தொண்டன், போராளி தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழ் இனவுயர்ச்சிக்காகப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரும் தம் தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எத்தனையோ அவமானங்களையும் தாழ்வுகளையும் ஏற்றுப் போராடினார் என்பது இங்கே நினைத்துப் பார்க்கத்தக்கது.

பிறப்பியலும் உடற்கூற்று வண்ணமும்:

பிறப்பியல் என்னும் இயலில் உடல் நுகர்ச்சி நிலை, கருநிலை, உருநிலை முதலான பாடல்களில் மனித உயிர் பிறப்பின் நுணுக்கங்களை வியப்புற விவரித்துச் சொல்கின்றார்.

விழிமின்பாய்ந் துள்வெதுப்ப வேண்மதநீர் ஓடிக்
கழிபெருநற் காமம் கனப்பப் -பொழியன்பால்
சொல்லிதழ்க்கை மொய்த்தூர்ந்துள் ஒத்துச் சுரப்பாடி
வல்லுறுத்துத் துய்த்தல் வரைத்து (பா.81)

ஆண் பெண் உடல்நுகர்ச்சியை வருணிக்கும் இப்பாடல் படித்து இன்புறுதற்குரியது. அடுத்த பாடலில்

வித்துசினை ஒன்றித்தாய் வேதுநீர் உள்வாங்கிப்
பத்துமதி தாங்கிப் படர்ந்து (பா.82)

என்று கருநிலையை விவரிக்கும் பகுதி, ஒருமட மாது.. .. எனத்தொடங்கும் பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணத்தை ஒத்த நயமான பகுதியாகும்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...