வியாழன், 18 பிப்ரவரி, 2010

ஆண்களுக்குத் தலை பத்தா? வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-1

ஆண்களுக்குத் தலை பத்தா?
வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-1


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

இன்றைக்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கீழ்க்கண்ட பாடலைக் கவனியுங்கள்,

கேளும் பூமான்களே – கிருபை வைத்து
ஆளும் சீமான்களே
நாளும் கதியில்லா எங்கள் மேல் வர்மமோ
தாளுறும் தூசி போல் தள்ளுதல் தர்மமோ

காலைக்கும் மாலைக்கும் மூளைக்குள் எங்களை
ஆலைக்கரும்பு போல் தேய்த்தீர் - பாக
சாலைக்கும் மன்மத லீலைக்கும் ஏவின
வேலைக்கும் எங்களை மாய்த்தீர்


மூலக்கல்வி நாங்கள் வாசித்தால் ஆபத்தோ
மூடப்பெண் கொள்வீர் உமக்குப் பெரும்பித்தோ
கலைக்கிரந்தங்கள் உங்கள் பாட்டன் சொத்தோ
உமக்கென்ன காணும் தலைமேல் தலை பத்தோ

உங்கட்கு உதவியாய் எங்களைத் தேவன்
உண்டாக்கியதை அறியீரோ - செல்வ
மங்கை உடன் கல்வி நங்கை
முதலானோர்மாதர் என்று குறியீரோ

எங்களை அல்லாமல் நீங்கள் உதித்தீரோ
ஏறி ஆகாயத் திருந்து குதித்தீரோ
அங்கப்பால் உண்ணாமல் தேகம் உதித்தீரோ
அடிமை என்றெங்கள் தலையில் விதித்தீரோ


போதக யூரோப்பு மாதர்களைக் கண்டு
பொங்கிப் பொறாமை கொண்டோமே - என்றும்
பேதம் இல்லா இந்தியாதனில் நாங்கள்
பிறந்தென்ன லாபம் கண்டோமே

நாதக்கல்விக்கு நகை எந்த மூலையே
நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே
வேதநாயகன் செய் பெண்மதிமாலையே
வேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே.

(சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் ப-ள்: 184-186)

தங்களுக்குப் படிப்பிக்கும்படி ஸ்திரிகள் புருஷர்களுக்கு வேண்டுதல் என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் பெண் கேட்கிறாள், நாள் முழுவதும் ஆலையிட்ட கரும்பு போல் எங்களைக் கசக்கிக் பிழிகின்றிர்களே! அடுப்பங்கரையிலும் படுக்கையறையிலும் ஏவிய வேலைகளுக்குமாக எங்களைச் சாகடிக்கின்றீர்களே!

நாங்கள் கல்வி கற்றால் அதனால் ஏதும் ஆபத்தா? படிக்காத மூடப்பெண்தான் வேண்டும் என்று கேட்கிறீர்களே உங்களுக்கென்ன பைத்தியமா? படிப்பு என்பது உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா? ஆண்களாகிய உங்களுக்கெல்லாம் தலைக்கு மேல் தலையாகப் பத்துத் தலையா இருக்கிறது? பாடலின் முதல்பத்தி இது.

இன்னும் முழுப்பாடலிலும் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் இப்பெண்ணின் கலகக் குரலைக் கேட்டால்… இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் புரட்சிப் பெண்ணின் குரலை விட மிக அழுத்தமாகவும் அறிவு பூர்வமாகவும் ஒலிக்கும். யார் இந்தப் புரட்சிப்பெண்? பாரதியின் புதுமைப் பெண்ணை விட ஓங்கி ஒலிக்கும் குரலுக்குரியவள்.

ஆண்களெல்லாம் என்ன ஆகாயத்திலிருந்தா குதித்தீர்கள்? என்று கேட்கும் அந்தப் பெண் மாயூரம் வேதநாயகர் படைத்த புரட்சிப்பெண். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட அந்தக் காலத்திலேயே எங்களுக்கும் கல்வி கொடு! பெண்ணை விட ஆண் என்ன உசத்தி! என்றெல்லாம் குரல்கொடுத்த வேதநாயகரின் குரல்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...