வெள்ளி, 29 பிப்ரவரி, 2008

மக்கள் மொழியும் அதிகார உடைப்பும் - கருத்துரை

மக்கள் மொழியும் அதிகார உடைப்பும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

சங்க இலக்கியங்களுக்குப் பிறகு தமிழிலக்கியங்களும் இலக்கணங்களும் அறம், அதிகாரம், மதம் சார்ந்தே கட்டமைக்கப்பட்டன. அரசு, அதிகாரம், ஆலயம் என்ற மையத்துக்கு அப்பால் விளிம்புகளில் வாழும் மக்களின் மொழி வேறாக இருந்தது. திணை சார்ந்த நிலப்பரப்புகளில் வாழும் மக்களின் மொழியும் பண்பாடும் தொன்மங்களும் வழக்காறுகளும் தமிழிலக்கிய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டன. அவை நாட்டுப்புற வாழ்க்கையோடும் வழக்காறுகளோடும் பின்னிப் பிணைந்து கிடந்தன.

ஆங்கிலேயர் வருகை அச்சியந்திர நுழைவு முதலான காரணங்களால் 19 மற்றும் 20 நூற்றாண்டுகள் உரைநடை வழியாக இலக்கியங்களுக்கு விடுதலை வழங்கின. ஆனாலும் இந்திய தமிழகச் சூழலில் உரைநடை என்ற ஜனநாயக வடிவமும் உயர்சாதி அதிகார வலைக்குள் அகப்பட்டுத் துடித்தது. பேச்சு மொழிக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தாலும் அது உயர்சாதியினரின் பேச்சு மொழியாகத்தான் அமைந்தது.

வட்டார மொழிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பேச்சு மொழி இவைகள் இலக்கியத்துக்கு ஆகாத இழிசினர் வழக்காகவே கருதப்பட்டன. விளிம்பு நிலை மக்களுக்கு அன்னியமான பெருந்தெய்வங்கள், புராண இதிகாசத் தொன்மங்கள், பண்டிகைகள், மொழி இவைகள் இலக்கியத்துள் திணிக்கப்பட்டு பெருவழக்கு போல் சித்தரிக்கப்பட்டன. பெருவாரியான விளிம்பு நிலை மக்களின் கடவுளர்கள் (சிறு தெய்வங்கள்), தொன்மங்கள், கொண்டாட்டங்கள், மக்கள் மொழி இவைகள் தீணடப் படாதவைகளாயின. இத்தகு நெருக்கடியில் கி.ரா.வின் இலக்கிய வருகை இதுநாள் வரை இருந்த தமிழிலக்கியச் சூழலைப் புரட்டிப்போட்டது. கி.ரா. இதைத் திட்டமிட்டு நிகழ்த்தவில்லை என்றாலும் கி.ரா. விலிருந்து இந்தப் புரட்சி தொடக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை. அவரின் துணிச்சல் போட்ட புதிய பாதையிது.

தமிழிலக்கியம் முழுமைக்குமான ஒரே மொழி ஒரே பண்பாடு என்ற மையத்தை உடைத்துத் தமிழகச் சூழலில் பன்முகத் தன்மை கொண்ட மக்களின் வாழ்க்கைக்கேற்ப இலக்கியங்களும் இலக்கிய மொழிகளும் பன்முகத்தன்மை கொள்ளத் தொடங்கின. திணை சார்ந்த குறுநிலம் சார்ந்த இ.லக்கியத்தில் நிலம் - மண் முதன்மை பெறுகிறது. மழை, வெயில், உணவு, பஞ்சம், விவசாயம், தொழில்கள், மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், பழமொழிகள், விடுகதைகள், கதைகள், பாடல்கள் இவை போன்ற இன்னபிற படைப்பைத் தீர்மாணிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...