திங்கள், 5 நவம்பர், 2007

காரை இறையடியானின் திருவருட்பாவை-ஓர் அறிமுகம்

காரை இறையடியானின் திருவருட்பாவை-ஓர் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் காரை இறையடியானின் இயற்பெயர் மு.முகம்மது அலி என்பதாகும். ஹாஜி, முகம்மது அப்துல்காதர், பாத்திமா அம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாக 17-11-1935 இல் பிறந்தவர்;பன்னிரு நூல்களை இயற்றிய கவிஞரும், மார்க்க அறிஞருமாகிய அமுதகவி அ.சாயபு மரைக்காயரின் பெயரனாகத் தோன்றியவர்; தமிழ் பிரவே, வித்துவான் முதலிய தமிழ்க் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்; காரைக்கால் மு.வி.ச. உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்; பூஞ்சோலை என்னும் தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழை ஒன்பதாண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர்; சமரசம் இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்; மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணரோடு தொடர்பு கொண்டு, அவர்தம் உலகத் தமிழ்க் கழகத்தில் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தொண்டாற்றியவர். தனித்தமிழ்க் கொள்கையைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றிய சிறப்பினால் தனித்தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப் பெற்றவர்.
பாவலர் காரை இறையடியான் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருந்தாலும் அச்சில் வெளிவந்துள்ள நூல்கள் பத்து மட்டுமே, அவை:
1. திருவருட்பாவை
2. திருநபி இரட்டை மணிமாலை
3. காரைக்கால் மஸ்தான் சாகிபு வலியுல்லா வரலாற்றுப் பேழை
4. தமிழமுதம்
5. வாழ்வியல்
6. அறிவியல் ஆத்திசூடி விளக்கவுரை
7. கல்லறைக் காதல்
8. கன்னித்தமிழ் வளர்த்த காரைக்கால் அம்மையார்
9. செந்தமிழ்த் தொண்டர் ஆற்றுப்படை
10. நபிமொழிக் குறள்
பாவலரின் பத்து நூல்களில் தமிழமுதம் என்ற கவிதைத் தொகுப்பு நூல் 1987 ஆம் ஆண்டின் தலைசிறந்த கவிதை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு அவர்தம் நபிமொழிக் குறள் என்னும் நூல் தத்துவம், சமயம், அறவியல் ஆகிய துறைகளில் வெளியான மிகச் சிறந்த நூல் என்று தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

திருவருட்பாவை:

காரை இறையடியானின் முதல்நூல் என்ற பெருமைக்குரிய படைப்பு அவரின் திருவருட்பாவையாகும். இஸ்லாத்தின் பெருமைகளை விளக்கும் பல சிற்றிலக்கியங்கள் தமிழில் உண்டு என்றாலும் பாவைப்பாடல் என்ற வகையில் எழுந்த முதல் இஸ்லாமியச் சிற்றிலக்கிய நூல் இதுவே.

சங்க காலத்தில் பெண்கள் விளையாடிய பாவை விளையாட்டில் தொடங்கிக் காலந்தோறும் பற்பல மாற்றங்களுடன் வளர்ச்சி பெற்றுப் பாவை எனும் சிற்றிலக்கியம் உருவாயிற்று. இறைவனின் அருட் குணங்களைப் போற்றியும் நாடு நலம் பெற மழைவேண்டியும் மகளிர் குழுவாகப் புறப்பட்டுப் பிற பெண்களைத் துயிலெழுப்பியும் நீராட அழைத்தும் பாடுவதாக அமைவதே பாவை இலக்கியம் ஆகும். பாவை விளையாட்டில் தொடங்கி, சமயச் சார்பு பெற்றுப் பாவை நோன்புக்கும் சமய வளர்ச்சிக்கும் பயன்பட்டு, அதன் பின்னர் நாடு, இனம், மொழி பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தும் பாட்டாய் பாவை இலக்கியம் வளர்ந்துள்ளது.

ஆண்டாள் எழுதிய திருப்பாவை வைணவத்திற்கும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை சைவத்துக்கும், அவிரோத நாதரின் சமணத் திருவெம்பாவை சமணத்திற்கும் பாவை நூல்களாகத் திகழ்வதைப் போன்று காரை இறையடியானின் திருவருட்பாவை இஸ்லாமிய பாவை இலக்கியமாகத் திகழ்கின்றது. பிற பாவை நூல்களில் கூறப்பட்ட துயிலெழுப்புதல், நீராடல் போன்ற பாவை இலக்கியக் கூறுகள் இந்நூலிலும் அமைந்து சிறக்கின்றன. பாவை பாடலுக்கென்றே அமைந்த ஏலோ ரெம்பாவாய் என்னும் தொடர் இத்திருவருட் பாவையின் ஒவ்வோர் பாடல் ஈற்றிலும் அமைந்திருப்பது பாவை சிற்றிலக்கிய மரபைக் காப்பதாய் அமைந்துள்ளது.

திருப்பாவை, திருவெம்பாவைகளில் பாவை நோன்பின் நோக்கங்களாக நல்ல கணவரை அடைதலும் நாடும் வீடும் சிறப்புற்றோங்கலும் வலியுறுத்தப்படுகின்றன. திருவருட்பாவையோ எல்லாம் வல்ல இறை அல்லாவின் திருவருளைத் தேடலும் பெறலுமே நோக்கமெனக் குறிப்பிடுகின்றது.

இஸ்லாமியப் பண்பாட்டை மறந்து ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்திருக்கும் சமுதாய மக்களுக்கு இஸ்லாமிய நெறியின் ஐந்து பெரும் கடமைகளை எடுத்துரைத்து வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. புனித இரமலான் மாத நோன்பின்போது முப்பது நாட்களும் இஸ்லாமியர் இல்லந்தோறும் பாடப்படும் வகையில் முப்பது பாடல்களால் இந்நூல் அமைந்திருப்பது மிகப் பொருத்தமுடையது. இம்முப்பது பாடல்களும் இறை, இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, பொருளறம், அருள்வெளிப் பயணம் என்னும் ஆறு தலைப்புகளாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஐந்து பாடல்கள் வீதம் அமைந்துள்ளது. இத்தகு பகுப்பு முறை ஏனைய பாவை நூல்களில் இடம்பெறவில்லை. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் வலியுறுத்தும் விதத்தில் நூலை அமைத்துள்ள கவிஞரின் திறத்தால் இந்நூல் அக அமைப்பு, புற அமைப்பு இரண்டிலும் சிறந்து விளங்குகின்றது.

இந்நூலுக்குச் சீரியதோர் உரையைத் தெளிவுரையாக இலக்கியத் தென்றல் பேராசிரியர் சா.நசீமாபானு அவர்கள் எழுதியுள்ளமை இந்நூலுக்கு மற்றுமோர் மணிமகுடம்.

காரை இறையடியானின் தமிழ்ப்பற்று:

கவிஞர் காரை இறையடியானின் தனிச்சிறப்பு அவரின் இறைப்பற்றும் இன்பத் தமிழ்ப் பற்றும். இரண்டையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் அவர் வெளிப்படுத்த மறப்பதே இல்லை.

தண்டை தமிழ்பாடத் தாழம்பூத் தண்கூந்தல்
கொண்டை குலுங்கியெழிற் கூத்திடுங் கோதையீர்! (பா.3)

முத்தமிழால் பாராட்ட முந்தேலோ ரெம்பாவாய்! (பா.25)

மூல முழுமுதலை முத்தமிழைத்; தந்தானை (பா.13)

துயிலெழுப்பும் பெண்களின் தண்டை தமிழ் பாடுகிறதென்றும், அல்லாவை முத்தமிழால் பாராட்ட வேண்டுமென்றும் தமிழை மறக்காமல் குறிப்பிடும் கவிஞர், உலகுக்கெல்லாம் ஒரே இறைவன் அல்லா, அவனே உலக மொழிகள் அனைத்தையும் படைத்தவன் என்ற பொருளில் முத்தமிழைத் தந்தானை என்று குறிப்பிட்டு தம் இறைக்கொள்கையைத் தெளிவாக விளக்குகின்றார். இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என்ற கவிஞரின் கோட்பாட்டை விளக்கும் இத்தொடர் திருவருட்பாவையின் தலைசிறந்த தொடர் எனப்போற்றத் தக்கது.

நடைநலத்தால் சிறக்கும் திருவருட்பாவை:

காரை இறையடியானின் தனித்தமிழ்க் கவிதைநடை கற்பவர் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும் கவினுடையது. மரபுக்கவிதையில், எதுகை மோனை அழகுகளுடன் ஓசைநயம் மிக்கதாய் அவரின் பாவைப்பாடல்கள் அமைந்து சிறக்கின்றன.

கண்ணில் கயலாடக் கார்க்கூந்தல் காற்றாட
வண்ண வடிவெங்கும் வாகிளமை வந்தாடத் (பா.6)

அண்டம் அனைத்துலகும் ஆர்படைத்தான் ஆய்ந்திடுக. (பா.3)

அல்லலார் அம்புவியில் அல்லாவை ஆய்ந்துணர்மின் (பா.7)

மொட்டுப்ப+ மூக்காலே மூச்செறியும் மொய்ங்குழலீர்! (பா.10)

மேலே எடுத்துக்காட்டப்பட்ட அடிகள் மட்டுமல்ல நூல் முழுமையுமே இத்தகு மோனை சிறந்தோங்கும் நடைநயத்தைப் பரக்கக் காணலாம். திருவருட்பாவையின் பெரும்பாலான பாடல் அடிகள் நான்கு சீர்களிலும் மோனை அமைந்து முற்று மோனையாக அமைந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. இசையோடு பாடப்படுவதற்கு ஏற்ப முப்பது பாடல்களும் சொல்லழகுடன் அற்புதமான ஓசை ஒழுங்கும் பெற்று அமைந்துள்ளமையை இசைத்து மகிழ்வார் உணர்வர். இறைவனின் பெருமையைக் கூறும் பின்வரும் இரண்டடிகளில் அகரம், ஆகாரம், இகரம் என உயிர் எழுத்து வரிசையில் அல்லாவின் புகழை வருணிக்கும் நடை கற்போர் நெஞ்சைக் கவரக்கூடியது.

அன்பன் அருளறிவன் ஆகமிலாப் பேரழகன்
இன்பன் இறையல்லா இன்னுணர்வாய் என்நெஞ்சில் (பா.14)

அன்பன்- அருளன் என இறைவனின் பண்பை அடுக்கிக் கூறலும், ஆகமிலாப் பேரழகன் என இறைவனின் உருவமற்ற பேரழகை முரண்தொடை அமைய சிறப்பித்துக் கூறலும் இறையடியானின் கவிநயத்துக்குத் தக்க சான்றுகளாகும்.

காரை இறையடியானின் வருணனைத் திறம்:

திருவருட்பாவையின் முப்பது பாடல்களுமே வருணனைச் சிறப்புடன் விளங்குகின்றன. ஒவ்வொரு பாடலிலும் வரும் முதல் இரண்டடிகள் உறங்கும் பெண்களைத் துயிலெழுப்பி நீராட அழைக்கும் பெண்கள் ஒருவரையெருவர் வருணித்துக்கொள்வதாக அமைந்துள்ளன.

கோலக் குளிர்திங்கள் கொண்முகத்தீர், காண்கூந்தல்
நீல நெடுமுகிலீர், நெற்றிப் பிறையழகீர் (பா.5)

சித்திரப் பாவையீர்! செவ்விதழ்க் கோவையீர்!
முத்துநகைப் பூவையீர்! மொய்வளைச் செங்கையீர்! (பா.25)

நெற்றிக் களத்தில் நிறக் கருமை வில்லிரண்டால்
மற்றோர் மனங்குத்தும் மாவடுக்கண் அம்புடையீர்! (பா.15)

தமிழிலக்கியங்கள் காலந்தோறும் பெண்களை வருணித்துச் சிறப்பித்த அழகு வருணனைகளை யெல்லாம் உள்வாங்கித் தாம் படைத்த பாவை நூலில் பொருள் பொருத்தமுற அவ்வருணனைகளை இடம்பெறச் செய்த கவிஞரின் திறம் பாராட்டுதற்குரியது. காலைப் பொழுதில் பறவைகள் எழுப்பும் ஓசைகளை வருணிக்கும் பகுதியைப் பாருங்கள்,

காகக் கரைவும் கனற்கொண்டை பூச்சிறகாம்
ஆக வணியாடை அஞ்சேவல் கூவலும்
வேகமாய்க் கூர்ந்தும் விழவில்லையோ நுஞ்செவியில் (பா.11)

(காகங்கள் கரையும் ஓசையும் தீப்பிழம்புபோல் சிவந்த கொண்டையினையும் புள்ளிகள் பொருந்திய இறக்கைகளாகிய ஆடையினையும் உடைய அழகிய சேவல் கூவும் ஒலியும் வேகமாகக் கேட்கிறதே, உங்கள் செவிகளில் விழவில்லையா?) இந்தப் பாடலடிகளைக் கூர்ந்து கவனித்தால் காலைப் பொழுதின் வருணனையை ஓசைகளால் காட்சிப்படுத்திக் காட்டும் பாங்கும், அதேசமயம் சேவலை வருணிக்கும் போது அதன் சிவந்த கொண்டைகளை நெருப்புக்கு இணையாகயும் பூஞ்சிறகை ஆடையாகவும் நுட்பமாக வருணித்துக் காட்டும் பாங்கும் இணைந்து இவ்வருணனைப் பகுதியை அழகூட்டுகின்றன.

இயற்கை தரும் பாடம்:

இயற்கையைக் கூர்ந்து கவனித்தால் அதன் இயல்பான நடவடிக்கைகள் கூட நமக்குப் புதிய புதிய அறவுரைகளையும் அறிவுரைகளையும் தருவதாக உணரமுடியும். கவிஞர்களின் கற்பனை மனது இத்தகு பாடங்களை எளிதாகக் கண்டுணரவல்லது. காரை இறையடியான் நிலவின் வளர்பிறை தேய்பிறை மாற்றங்களைக் கண்டு நமக்குணர்ந்தும் பாடம் சிறப்பானது.

தோற்ற முழுமதியம் தொண்டாற்றித் தேய்திங்கள்
ஆற்றல் அறிஞருக்கு அஃதோர் பெரும்பாடம்!
மாற்ற மதிபார்த்தும் மாமயக்கம் கொண்டீரேல் (பா.28)

(முழுமதியாக வலம் வரும் திங்கள் தொண்டு ஆற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்கிறது. ஆற்றல் மிக்க அறிவாளிகளுக்கும் கூட நிலையற்ற உலகில் வாழ்க்கையும் வளர்பிறை போன்றும், தேய்பிறை போன்றும் இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையும் மாறி மாறி அமைவது என்ற பெரிய பாடத்தை அது கற்பிப்பதாக உள்ளது.) திங்கள் தொண்டாற்றித் தேய்கிறது என்ற கவிஞரின் கூற்றில், நிலவு உலகத்துக்கு ஒளியைத் தந்து தந்து அதனால் தேய்ந்து ஒளிமங்குகிறது என்ற தற்குறிப்பேற்றம் உள்ளதை உணரமுடியும். முழு மதியம் தேய்ந்து மறைவதும் பின்னர் வளர்ந்து முழுமதியாவதும் வாழ்க்கையின் இன்ப துன்ப சுழற்சியைக் காட்டுகிறது என்ற இறையடியானின் கற்பனை திருவருட்பாவையின் பெருமைக்கு பெருமை சேர்க்கின்றது.

இலக்கிய ஆட்சி:

திருவருட்பாவையைக் கற்குந்தோறும் கவிஞரின் சொல்லாட்சி தமிழின் பல்வேறு இலக்கியங்களை நமக்கு நினைவு படுத்துகின்றது. கவிஞரின் இலக்கியப் புலமையையும் தமிழிலக்கியங்கள்பால் அவருக்கு உள்ள ஈடுபாடுமே இத்தகு இலக்கியச் சொல்லாட்சிகளுக்குக் காரணம்.

கற்றலால் காண்பயன் கண்ணியமெய் அல்லாவைப்
பற்றிப் பணிகின்ற பண்புத் தொழுகையன்றோ? (பா.15)

மேலே குறிப்பிட்டுள்ள திருவருட்பாவையின் அடிகள் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் தாக்கத்தால் உருவானது என்பதைக் கற்போர் உணர்வர்.

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள்: 2)

(நாமக்கல் கவிஞர் உரை: படிப்பதன் பயன் அறிவு பெறுதல். அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத ஒருபொருள் இருப்பதை உணர்ந்து அதைப் போற்றாவிட்டால் படிப்பினால் என்ன பயன்?) திருக்குறளின் கருத்தும் நாமக்கல் கவிஞரின் உரைக்கருத்தும் பின்னிப் பிணைந்திருப்பதைப் போல் இறையடியான் அவர்கள் மேலே குறிப்பிட்ட பாவை அடிகளை அமைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. தொழுகை என்பதைக் குறிப்பிடுமிடத்தில், பற்றிப் பணிகின்ற பண்புத் தொழுகை என்று அடைகள் பல சேர்த்துக் குறிப்பிட்டிருப்பது கவிஞரின் இஸ்லாமிய மெய்யறிவின் மேன்மையைப் புலப்படுத்துகின்றது.

திருவருட்பாவையின் நோக்கமும் பயனும்:

இஸ்லாமிய மார்க்கத்தை எளிதாக எடுத்துரைக்கும் வகையில் பாடப்பட்ட இத் திருவருட்பாவையை ஒரு முழுமைபெற்ற இலக்கியம் என்று சிறப்பித்துரைக்கலாம். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் கற்போர் மனம் கொள்ளும் வகையில் விரித்துக் கூறிய கவிஞர் முப்பதாவது பாடலாகிய கடைசிப் பாடலில் மிக அழகாகத் தொகுத்துக் கூறுகின்றார்.

உற்ற திருநோன்பை ஓர்திங்கள் ஏற்றுயர்ந்தோம்
பெற்ற நம்பேரின்பம் பேண்கடன் ஐந்துணர்ந்தோம்
சுற்றம் வறியோர்க்கும் சோரா தறஞ்செய்தோம்
பெற்றித் தொழுகையினால் பேருணர்வு யாம் எய்தோம்
குற்றங் குறைதீர் குணக்குர்-ஆன் கொண்டிசைத்தோம்
மற்றும் திருக்கஃபா மாமதினாச் சீருணர்ந்தோம்
வெற்றி யெனக்கீந்து வியன்தலைவன் நெஞ்சணைத்தான்
தெற்றத் திருவருளைத் தேடேலோ ரெம்பாவாய் (பா.30)

வெற்றிகரமாக நோன்பு நோற்றதும், ஐந்து கடமைகளை உணர்ந்ததும், அறஞ்செய்ததும், தொழுகைகளைத் தவறாது கடைபிடித்ததும், திருமறையை ஓதி உணர்ந்ததும், இறையில்லமாம் கஃபா, மதீனா இவைகளின் சிறப்புணர்ந்ததும் ஆகிய இஸ்லாம் மார்க்கத்தின் அனைத்துக் கடமைகளையும் சிறப்புற செய்து முடித்த செய்தி இப்பாடலில் தொகுத்துரைக்கப் பட்டுள்ளது. இக்கடமைகளைச் செய்து முடித்ததன் பயனாக வெற்றி எனக்கீந்து வியன் தலைவன் நெஞ்சனைத்தான் என்ற அடிகளில் அல்லாவின் அருளைப் பெற்ற பெண், ஆற்றுப்படை போல் தெற்றத் திருவருளைத் தேடேலோ ரெம்பாவாய்! என்று மற்ற பெண்களுக்கு ஆற்றுப்படுத்துகின்றாள். இந்நூலின் பயன் என கவிஞர் விதந்தோதுவது, திருவருளைத் தேடுங்கள் என்பதே.
இஸ்லாமிய திருநெறியின் சிறப்பம்சம், அது உலக வாழ்விலும் சிறப்பானதை, அழகானதை அனுபவிக்கச் செய்கிறது. எதிலும் வரம்பு மீறிடாத அளவோடு கூடிய, நியாயமான இவ்வுலக இன்பங்களைச் சுகிக்க அனுமதித்து, அத்தகு வரம்பிட்ட வாழ்க்கை முறையையே எதிர்கால நிலையான நீடித்த வாழ்க்கை முறைக்கு அடிப்படையாகவும் ஆக்கி வைத்திருக்கிறது. (சிராஜூல் மில்லத் சிந்தனைகள், ப.19)
தூக்கம் தேவையானதுதான், அது ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தூக்கம் எல்லை கடந்தால்,

சீர்மை யொளிரமலான் செப்பப் பிறைகண்டும்
கூர்மை விழிமயங்கக் கொண்டீரோ பேருறக்கம்
பார்மைப் பணிமுடங்கின் பண்பாடு மாழ்காதோ?
ஊர்மை உலகியலும் ஊழலாய் மாறாதோ?
நேர்மை நிலைதுலங்க நேரிழையீர் நீரெழுக! (பா.1)

இவ்வுலகில் நாம் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகள் தவறிடும், கடமைகள் தவறினால் நமக்கே உரிய பண்பாடுகள் அழிந்துவிடும், பண்பாடு அழிந்தால் நாம் வாழும் ஊரின் செயல்பாடுகளும் உலகின் நடைமுறைகளும் ஊழல் நிறைந்ததாகிவிடும் எனவே விழிமின்! எழுமின்! என உலக மக்களுக்கே விழிப்பை ஊட்டும் ஒப்பற்ற இலக்கியமாய் இத்திருவருட் பாவையைக் கவிஞர் காரை இறையடியான் படைத்துள்ளமை பாராட்டுதற்குரியது. தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிக் குவித்து தமிழுக்கும் இஸ்லாத்துக்கும் கடைசி மூச்சுவரைப் பணியாற்றிய காரை இறையடியானின் பணியை உலகம் உணர்தல் வேண்டும்.

ஞாயிறு, 4 நவம்பர், 2007

பாரதியின் பகவத் கீதையும் விநாயகர் நான்மணி மாலையும்

பாரதியின் பகவத் கீதையும் விநாயகர் நான்மணி மாலையும்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

மனிதகுல வரலாற்றைச் சிந்தனைகளின் வரலாறு என்றும் சிந்தனையாளர்களின் வரலாறு என்றும் வருணிக்கலாம். ஏனெனில் மனிதகுல முன்னேற்றம் காலந்தோறும் பல்வகைப்பட்ட சிந்தனையாளர்களின் தத்துவச் சிந்தனைகளின் ஊடாகவே கோர்க்கப்படுகின்றது. இதில் பொருள்முதல் வாதத்தின் முற்போக்கான பங்களிப்பு அரசியல் அரங்கிலும் பொருளியல் அரங்கிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதகுல வரலாற்றில், உலகின் பெரும்பான்மை மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் கருத்துமுதல் வாதம் சார்ந்த ஆன்மீகத்தின் பங்களிப்பு என்ன? சமூக மாற்றத்திற்கும் சமத்துவத்திற்கும் ஆன்மீகத்தில் இடம் உண்டா? மனிதகுல முன்னேற்றத்திற்கு ஆன்மீகம் தந்துள்ள முற்போக்குச் சிந்தனைகளின் பாத்திரம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பாரதியியத்தின் வழி விடைகாண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
பாரதி ஆய்வு வரலாறு புதிரான பல பக்கங்களைக் கொண்டது. பாரதி வாழ்ந்த காலத்தில் அவரின் முழுப் பரிமாணத்தையும் அறிந்தவர்கள் அநேகமாக இல்லை என்றே கூறலாம். பாரதி மறைவுக்குப் பின்னரும் பாரதி ஆய்வுகள் ஒரு சமமற்ற போக்கிலேயே நிகழ்த்தப்பட்டன. பாரதியின் அரசியல் பற்றிய ஆய்வுகளும் பாரதியின் ஆன்மீகம் குறித்த ஆய்வுகளும் வேறு வேறு முனைகளிலிருந்து தொடங்கித் தனித்தனிப் பாதைகளில் பயணப்பட்டன. இதுவே பாரதி ஆய்வுகளின் அடிப்படை பலவீனம்.
பாரதி சிந்தனையில் பெரும்பங்கு வகித்த ஆன்மீகம் பற்றியும், பாரதியின் ஆன்மீகத் தேடலின் நோக்கம் பற்றியும், எதை இலக்காகக் கொண்டு பாரதி தன் ஆன்மீகத் தத்துவத்தைக் கட்டமைத்தான் என்பது குறித்தும் நாம் தெளிவுபெறுதல் அவசியம். இத்தகு நோக்கிலான பாரதி ஆய்வுக்கு உரிய களமாக அமையும் பாரதியின் படைப்புகள் இரண்டு. அவை,
1. பாரதியின் பகவத் கீதை முன்னுரையும் பகவத் கீதை உரையும்,
2. பாரதியின் விநாயகர் நான்மணி மாலை.
பாரதியின் புதுவை வாழ்க்கையில் அவர் படைத்த உயர்ந்த இலக்கியங்கள் என்று போற்றப்படும் கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற மூன்று இலக்கியங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் பாரதி படைத்த மிகச்சிறந்த இலக்கிய, தத்துவப் படைப்புகள்தாம் மேற்குறிப்பிட்ட இரண்டு படைப்புகளும். என்ன காரணத்தாலோ கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற மூன்று இலக்கியங்களும் பெற்ற விளம்பரத்தை பாரதியின் பகவத் கீதை உரையும், விநாயகர் நான்மணி மாலையும் பெறவில்லை.

பாரதியின் பகவத் கீதைஉரை:

பாரதி 1912 ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார் என்று அறிகிறோம். 1924 -25 ஆகிய இக்காலப் பகுதியில் பகவத் கீதை முன்னுரை, பகவத்கீதை மூலமும் உரையும் ஆகிய நூல்களைப் பாரதி பிரசுராலயத்தார் முதன் முதலில் பதிப்பித்தனர். பாரதி, கீதை உரை நூலுக்கு எழுதிய முன்னுரையை அதன் சிறப்பு நோக்கித் தனி நூலாகப் பாரதி பிரசுராலயத்தார் பகவத் கீதை முன்னுரை என்ற பெயரில் பதிப்பித்தார்கள்.

பாரதி தாம் எந்தக் கோணத்திலிருந்து கீதையை ஆராய்கிறார் என்பதைப் பகவத் கீதை முன்னுரை புலப்படுத்துகின்றது. பகவத் கீதைக்கு பாரதி அணிவித்த முத்தாரமே இம்முன்னுரை நூலாகும். (பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு, சீனி. விசுவநாதன், ப.270)

என்று பதிப்புரையில் பிரசுராலயத்தார் குறிப்பிடுவது இங்கு மனங்கொள்ளத் தக்கது. பின்னர் வேறு சிலரும் இம்முன்னுரையைத் தனி நூலாகப் பதிப்பித்துள்ளார்கள். தொல்காப்பியர் நூலகம் பதிப்பகத்தார் பகவத் கீதையின் உட்பொருள் என்ற பெயரில் இம்முன்னுரையை வெளியிட்-டுள்ளார்கள்.பகவத் கீதை உரையை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது பாரதி அந்நூலுக்கு எழுதிய முன்னுரையே. பாரதியின் தத்துவத் தேடல்களே அவரின் படைப்புகள். ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காக, மொழியினருக்காக, நாட்டினர்க்காக அல்ல அவரின் தேடல்கள், அந்தத் தேடல் மனிதகுலம் முழுமைக்குமான தேடல். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே நாளும் சிந்தித்த பாரதி அனைத்து உயிர்க் குலத்திற்குமான சமத்துவத்தைக் கீதையில் கண்டார். பாரதியின் தேடல் முழுமைபெற்ற இடம் அது.

எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரினும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான், ஸர்வமிதம் ப்ரஹம்! பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தால் அஞ்ஞானத்திற்கு லட்சணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைப்புகள் உடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு, எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.11)

எவ்வுயிரிடத்தும் எம்மனிதரிடத்தும் எவ்வித வேற்றுமையும் பாராதிருப்பதே, அதாவது சமத்துவமே விடுதலைக்குரிய வழி, அதுவே ஞானம் என்கிறார் பாரதி. பாரதி காலத்தில் அரசியல் அரங்கிலும் ஆன்மீக அரங்கிலும் நவீன இந்தியாவிற்கான எழுச்சியை பகவத் கீதையிலிருந்தே பலரும் பெற்றார்கள். குறிப்பாக, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, அரவிந்த கோஷ், ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் போன்ற பலருக்கும் கீதையே ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருந்தது. பாரதி இவர்கள் அனைவரின் பார்வையிலிருந்தும் முற்றிலும் வேறான நோக்கில் கீதையை தரிசித்தார். கீதை உரைக்கு அவர் எழுதிய நீண்ட முன்னுரை பகவத் கீதையின் உட்பொருள் என்ற பெயரிலேயே தனிநூலாகப் பதிப்பிக்கும் பெருமை பெற்றது. பாரதி கீதையில் தரிசித்த ஆன்மீகத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்து உருவாக்கிய இலக்கியமே விநாயகர் நான்மணிமாலை.

பாரதியின் விநாயகர் நான்மணி மாலை:

பாரதி தம் தம்பி விசுவநாத ஐயருக்கு 3-8-1918 இல் எழுதிய கடிதத்தில் விநாயகர் ஸ்தோத்திரம் என்ற தம் நூலைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இந்த விநாயகர் ஸ்தோத்திரம் தான், விநாயகர் நான்மணி மாலை. 1918 க்கு முன் பாரதி புதுவையில் வாழ்ந்த காலத்தில் புதுவை மணக்குள விநாயகரை முன்னிறுத்திப் பாடிய இந்த நூல் அச்சில் வெளிவந்தது பாரதி மறைவுக்குப் பின் 1929 இல்தான். பாரதி பிரசுராலயத்தார் 1929 இல் இந்நூலைப் பதிப்பிக்கும் போது பின்வருமாறு தம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்,இந்நூல் பாரதியாரின் கையெழுத்துப் பிரதி அபூர்ணமாயிருந்த இடங்களில் ஸ்ரீதேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஸ்ரீசுத்தாநந்த பாரதியார் அவர்கள் முதலியவர்களைக் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டது. கையெழுத்துப் பிரதியில் காணாதன நகவளைவு(பிராக்கெட்) களுக்குள் தரப்பட்டுள்ளன. (பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு, சீனி. விசுவநாதன், ப.284)பாரதி வழக்கமான பக்தி இலக்கியமாக இந்நூலைப் படைக்கவில்ல. மாறாக, தம் தத்துவத் தேடலின் பிரதியாகத்தான் படைத்துள்ளார். இவ்வுலகில் கலியைக் கொன்று கிருதயுகத்தினைக் கொணர்ந்து எல்லோரும் இம் மண்ணிலேயே அமரத்தன்மை எய்தும் வகையைச் சாத்தியமாக்கும் பிரகடணமாகவே இந்நூலைச் சமைத்துள்ளார்.

கீதையும் நான்மணி மாலையும்:

பாரதியின் கீதை முன்னுரையையும் விநாயகர் நான்மணி மாலை நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் இரண்டில் முன்னது இலக்கணம் போலவும் பின்னது இலக்கியம் போலவும் படைக்கப்பட்டுள்ள திறன் வியப்புக்குரியதாயுள்ளது. பாரதி பகவத்கீதை முன்னுரையில் குறிப்பிடும் கீதையின் உட்பொருள்கள் சிலவும் அதே உட்பொருளை விளக்கும் வகையில் பாரதி பாடிய விநாயகர் நான்மணி மாலைப் பாடல் பகுதிகளும் வருமாறு,

1. உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று, மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். கவிதைகளெல்லாம் நாடகங்களெல்லாம் சட்டங்களெல்லாம் கதை-களெல்லாம் காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.11)

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
சிந்தையே இம்மூன்றும் செய் (வி.நா.மா., பா.25)

2. எல்லாத் துயரங்களும், எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.7)

மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே
கவலைப் படுதலே கருநரகம்மா
கவலையற்றி ருத்தலே முக்தி (வி.நா.மா., பா.36)

3. சாகாதிருத்தல், மண்மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை, இஃதே வேத ரகஸ்யம். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.18)

துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்,
இஃது உணர்வீரே! (வி.நா.மா., பா.4)

4. மோட்சத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு அவனுடைய சொந்த மனமேயாம். உள்ளப்பகையைக் களைந்துவிட்டால் புறப்பகை தானே நழுவிப்போய்விடும். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.23,24)

மனமே! எனைநீ வாழ்வித்திடுவாய்!
வீணே உழலுதல் வேண்டா! (வி.நா.மா., பா.12)

மேவி மேவித் துயரில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன் எதற்குமினி அஞ்சேல். (வி.நா.மா., பா.36)

5. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டுச் சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகைப் படைத்தாய்? நீயா இதை நடத்துகின்றாய்? உன்னைக் கேட்டா ந~த்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில் எவனும் கவலைப்படுதலும் துயர்ப்படுதலும் அறியாமையன்றோ? (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.8,9)

அச்ச மில்லை அமுங்குத லில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் (வி.நா.மா., பா.24)

மூட நெஞ்சே! முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன், இன்னும் உரைப்பேன்
தலையில் இடிவிழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கேன்? என்றிரு,
பாராசக்தி உளத்தின் படியுலகம் நிகழும்
நமக்கேன் பொறுப்பு? (வி.நா.மா., பா.36)

6. கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் புசித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களின்றும் விடுபட்டு ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழி.....(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.32,33)

துறந்தார் திறமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாலும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயுந்தவமே. (வி.நா.மா., பா.10)

7. எல்லாம் கடவுள் மயம் எல்லாத் தோற்றங்களும் எல்லா வடிவங்களும் எல்லா உருவங்களும் எல்லாக் காட்சிகளும் எல்லாக் கோலங்களும் எல்லா நிலைமைகளும் எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும் எல்லாச் சக்திகளும் எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாச் செயல்களும் எல்லாம் ஈசன் மயம். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.8

யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே (வி.நா.மா., பா.20)
பல்லுருவாகிப் படர்ந்த வான்பொருளை (வி.நா.மா., பா.12)

8. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.16)

மண்மீதுள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவும்என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா! (வி.நா.மா., பா.32)

9. இடைக்காலத்தில் மாயை பொய் என்றதொரு வாதம் உண்டாயிற்று. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுள் திருமேனி. (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.46)

வான முண்டு மாரி யுண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும் காணநல் லுலகமும்
என்றும் இங்குளவாம்....... (வி.நா.மா., பா.32)

மேலே காட்டப்பட்ட ஒப்புமைப் பகுதிகள் சிலவே. பாரதி தாம் விவரித்த பகவத் கீதை உட்பொருளை விளக்கிக் காட்டும் இலக்கியமாகத்தான் விநாயகர் நான்மணி மாலை படைத்தார் என்பது மேலே உள்ள இருநூல்களின் மேற்கோள்களாலும் இனிதே விளங்கும். ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விரிக்கின் பெருகும் என்பதால் சான்றாதாரங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டன.

பாரதி கட்டமைக்கும் ஆன்மீகத்தின் முற்போக்குப் பாத்திரம்:

பாரதி பேசும் ஆன்மீகத்தின் தனித்தன்மையை உணர பாரதி கால அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். 1908 ஏப்ரல் 30 அன்று முஜாப்ப+ரில் நிகழ்ந்த இந்தியாவின் முதல் வெடிகுண்டு வீச்சைத் தொடர்ந்து, ஆங்கில அரசாங்கம் மிருகத்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்நிகழ்ச்சியின் உடன்விளைவாகத் தீவிர தேசிய இயக்கத்தினர் பலரும் கைது செய்யப்பட்டார்கள். பாரதி புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தான்.1905 ஆம் ஆண்டின் வங்கப் பிரிவினையோடு பிறந்த சுதேசிய இயக்கம், 1908 ஆம் ஆண்டின் முதல் வெடிகுண்டு வீச்சுக்குப் பின் தேய்ந்து நலிந்து 1911 ஆம் ஆண்டின் இறுதியில்... அடுத்து என்ன? என்ற கேள்விக்குறியாக மாறிவிட்டது.(பாரதி காலமும் கருத்தும், ரகுநாதன், ப.543). 1908-1911 ஆம் ஆண்டுகளில் விடுதலை இயக்கமே சிந்திச் சிதறிச் சீர்குலைந்து போய்விட்ட நிலையில், அதில் ஈடுபட்டிருந்த தீவிர தேசியவாத இயக்கத்தையும் புரட்சிகர இயக்கத்தையும் சேர்ந்த இளைஞர்கள் பலரும், அதன்பின் வௌ;வேறு மார்க்கங்களைத் தேர்ந்தெடுத்தனர்.(மேலது, ப.544)பலரும் வேறு வேறு மார்க்கங்களைத் தேடி ஓடிச் சிதறிப் போனாலும், புதுவையில் தஞ்சம் புகுந்த பாரதி போராட்ட உணர்வுகளிலிருந்து விலகினார் என்றோ, தனிமனித ஆன்ம ஈடேற்றம் காணும் வழியைத் தேடினான் என்றோ யாரும் சொல்லமுடியாது. புதுவைப் படைப்பான பாஞ்சாலி சபதத்தில் பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றும் தேசிய விடுதலைப் போராட்ட எழுச்சியின் பின்னடைவையும் மீண்டும் தோன்றப்போகும் விழிப்பையும் குறிக்கும் விதத்தில் தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் என்றும் பாடி நம்பிக்கை ஊட்டுகிறான். ஆன்மீகத்தின் பக்கம் பார்வையைத் திருப்பினாலும் கூட பாரதியின் ஆன்மீகம் முற்போக்கு ஆன்மீகமாகவே கருக்கொண்டது.

கீதையில் பாரதி கண்ட புதிய தரிசனங்கள்:

காலம் காலமாகக் கருத்துமுதல் வாதிகளின் கரங்களில் கிடந்து வருணாசிரம தர்மம் பேசவும், எல்லாம் பொய் என்னும் வரட்டு வேதாந்தம் பேசவும், இவ்வுலக வாழ்வை வெறுத்தொதுக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பகவத்கீதைக்கு பாரதி முற்றிலும் வேறான முற்போக்கு விளக்கங்கள் கொடுத்து புதிய தரிசனங்களை கீதையில் காண்கிறார்.
1. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் - எல்லா மனிதரும் சமம், மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை.
2. கீதை அமிர்த சாஸ்திரம், அமரத்தன்மை இதுவே வேத ரகஸ்யம்.
3. மனிதனுடைய ஒரே சத்ரு அவனுடைய சொந்த மனமேயாகும். எனவே அச்சப்படாதே, கவலைப்படாதே,
4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய், அன்பே சிறந்த தவம்.
5. துறவைவிட இல்லறமே மேலானது. இல்லறமே சுவர்க்கம்.
6. மாயை பொய்யென்னும் போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத்கீதை எழுதப்பட்டது. மாயை பொய்யில்லை, அது கடவுளின் திருமேனி.
7. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். சமத்துவமே விடுதலைக்கு வழி.

பாரதியின் இந்தப் புதிய தரிசனங்களோடு படைக்கப்பட்டிருப்பதுதான் விநாயகர் நான்மணி மாலையின் தனிச்சிறப்பு.

முடிவுரை:

பாரதியின் கடைசிப் படைப்பு என்று கருதப்படும் பின்வரும் பாடலில், முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை. (பாரத சமுதாயம், பாரதி) என்று சொன்ன பாரதி, அதே பாடலில் ஒரு புதுமை செய்கிறான், எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான் எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும் (பாரத சமுதாயம், பாரதி)பாரதி இந்தப் பாடலில் சமத்துவத்தையும் பகவத் கீதையையும் இணைத்திருக்கின்றார். எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்ற கீதை வாசகம் இங்கே நினைவ+ட்டப்பட்டிருக்கிறது. எல்லாம் கடவுள் மயம் என்பதிலிருந்துதான் பாரதி அன்பை, விடுதலையை, சமத்துவத்துவத்தைக் கட்டமைக்கிறார். பாரதி கூறும் அமரநிலை என்பது சமத்துவ சமூகமே. அதுவே கிருத யுகம். பாரதி ஆன்மீகத்தின் தனித்தன்மையும் இதுவே.

ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:
1. சி.சுப்பிரமணிய பாரதி, பாரதியார் கவிதைகள்.
2. சுப்பிரமணிய பாரதியார், பகவத்கீதையின் உட்பொருள்.
3. சி.ரகுநாதன், பாரதி காலமும் கருத்தும்.
4. சீனி. விசுவநாதன், பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு.

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் முற்போக்குச் சிந்தனைகள்

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் முற்போக்குச் சிந்தனைகள்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் கண்ணதாசனுக்குத் தனியிடம் உண்டென்றால் அதற்குக் காரணம் கண்ணதாசனின் இந்த வரிகள்தான்,

""தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்''

கவிஞர் கண்ணதாசனின் தலைவர்கள் மாறியிருக்கிறார்கள் தர்பார்கள் மாறியிருக்கின்றன ஆனால் கவிஞரின் தத்துவங்கள் மட்டும் அட்சயப் பாத்திரங்களாகச் சுரந்து கொண்டேயிருந்தன. கண்ணதாசன் தொடக்கம் முதல் இறுதிவரை எழுதிய அரசியல் கவிதைகளைக் காண்போர் வளர்ச்சி எனக் கணிப்பதும் உண்டு, வழுக்கல் என முகம் சுளிப்பதும் உண்டு அவர்களுக்குரிய பதிலைக் கவிஞரே கூறிவிடுகிறார்,

நானிடறி வீழ்ந்தஇடம் நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகன்என நான்கூறி விற்றபொருள்
நல்லபொருள் இல்லை அதிகம் .

இந்த வாக்குமுலத்தைக் கவிஞரே தந்தாலும், தனித்தனியாகத் தன்னைப் பற்றி மதிப்பீடு செய்வதைத் தவிர்க்கச் சொல்லுகிறார். தன்னைப் பற்றிய தீர்ப்பு எழுதும் பொறுப்பை நம்மிடம் விடும் கவிஞர் மரணத்திற்குப் பிறகே தீர்பெழுத வேண்டும் என்கிறார்.

இவைசரி என்றால் இயம்புவது என்தொழில்
இவை தவறாயின் எதிர்ப்பது என்வேலை
வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு.

கவிஞரின் காலமும் கவிதையும்:

கவிஞர் கண்ணதாசன் பல்வேறு சூழல்களில் பலவகைப்பட்ட முரண்பட்ட மாறுபட்ட கவிதைகளை எழுதினாலும் அவரின் எழுத்துலகக் காலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்

1. 1949 முதல் 1960 வரை திராவிட அரசியல் கவிதைக்காலம்
2. 1960 முதல் 1972 வரை தேசிய அரசியல் கவிதைக்காலம்
3. 1972 முதல் 1981 வரை தத்துவ ஆன்மீக கவிதைக்காலம்.

என்பன அவை.இந்த மூன்று காலங்களிலும் அவர் எழுதிய கவிதைகளில் எதை எழுதினாலும் கருப்படு பொருளை உருப்பட வைத்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கவிஞரின் முற்போக்குச் சிந்தனைகள்

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடல் கண்டும் சிந்தை இரங்காரடி' என்று பாரதி கோபப்பட்டதைப் போல மக்கள் பசித்திருக்க தத்துவங்கள் பேசி கனவுலகில் வாழும் பேதையாகக் கவிஞர்கள் ஒருபோதும் இருக்க விரும்ப மாட்டார்கள் எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்பதறிந்து ஏகுமென் சாலை என்பதே கண்ணதாசனின் கோட்பாடாக இருக்கையில் பசியைக் கண்டு கொதிக்கிறார் கவிஞர்,

இப்படியே பசி நீளுமென்றால்
இதுஎன்ன சுதந்திர பூமி-ஏன்
இத்தனை ஆயிரம் சாமி

திருவள்ளுவருக்கு இருந்த கோபம், பாரதிக்கு வந்த கோபம் கண்ணதாசனுக்கும் வருகிறது. வயிற்றுக்குச் சோறிட வழியில்லை என்றால் ஏன் இத்தனைக் கடவுள்கள்? கடவுள்களால் மக்களுக்கு என்ன பயன்? என்றெல்லாம் சிந்திக்கின்றார், அதுமட்டுமின்றி பெற்ற சுதந்திரத்தால் வந்த பயன் என்ன? இதற்கா சுதந்திரம் என்றெல்லாம் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகிறது. ஜனநாயகத்தால் பணநாயகம்தான் செழிக்கிறது என்றால் என்ன செய்வது? கவிஞரே ஒரு வழியும் கூறுகிறார், அது என்ன வழி?,

'நாடு முன்னேற நலங்கள் பெருக
வேண்டுமென்றால் விதியொன்று செய்வோம்
ஜனநாயகத்தைச் சற்றே நிறுத்திச்
சவுக்கை எடுப்போம் தரித்திரம் நீங்கும்'

ஓட்டுப் போட்டவனுக்குப் பயன்படாத ஜனநாயகத்தை நிறுத்துவதும் கையில் ஆயுதம் எடுப்பதும்தான் அந்த வழி. ஏனென்றால் ஜனநாயகம் ஜனங்களின் நாயகம் அல்ல அது

முட்டாள்கள் பலர்கூடி முடிவுசெய் தாலதே
முழுதான ஜனநாயகம்.

இதுதான் ஜனநாயகம் பற்றிய கவிஞரின் மதிப்பீடு. ஓடப்பனை உயர்த்த, ஒப்பப்பரை உருவாக்க வேறு வழியில்லை என்கிறார். கவிஞரின் கோபம் எல்லைமீறிப் பொகிறது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்காத போது இந்த நாடு இருந்தென்ன அழிந்தென்ன என்று நினைக்கிறார்

எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்
இல்லையெனில் இந்நாடு அழியவேண்டும்

ஒருவனுக்கு உணவில்லை என்றாலும் இந்த உலகத்தையே அழித்திடலாம் என்ற பாரதியின் கோபத்திற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல கண்ணதாசனின் கோபம்.

தனியுடைமை நீங்கிப் பொதுவுடைமை:

சமத்துவம் ஓங்க தரித்திரம் நீங்க தனியுடைமை மாறவேண்டும் எவருக்கும் இல்லை என்ற நிலையே இல்லாத நாடு வேண்டும் எல்லாரும் எல்லாமும் பெறும் பொதுவுடைமை பூக்க வேண்டும் இதுவே கவிஞரின் விருப்பம்,

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை-நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை.

இது எளிதான காரியம் இல்லையே, சொத்துரிமை இருக்கும் வரை சுரண்டல் இருப்பது இயல்புதானே அழிவைத் தடுக்க முடியுமா? முடியும் என்கிறார்

தொழிலைப் பொதுவாக்கிச்
சொத்துரிமை நீக்கிவிட்டால்
அழிவைத் தடுப்பதற்கு
அடிப்படைபோ லாகிவிடும்

தொழிலைப் பொதுவாக்குவதும் சொத்துரிமையை நீக்குவதும்தான் அடிப்படையான பணி என்கிறார் கவிஞர்.உட்கார்ந்து உண்டு கொழுக்கும் ஒருகூட்டம், உழைத்து உழைத்து ஒடாய்ப்போய் ஒட்டிய வயிறுடன் பெருங்கூட்டம் இந்நிலை மாற, வர்க்கங்கள் வீழ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஒரே வழி, இப்போராட்டத்தில் மரணமே பரிசு என்றாலும் அஞ்சிடாமல்இந்த சமுதாயம் துணிந்துவிடும்

இருவேறு வர்க்கம் இனிமேல் கிடையாது
ஏழைக்கு வாழ்வு எல்லோர்க்கும் ஒருவீடு
மாறிவரும் காலம் மாறத்தான் வேண்டும்-இதில்
சாவுவரும் என்றாலும் சமுதாயம் துணிந்துவரும்

என்பது கவிஞரின் நம்பிக்கை.

போராட வாருங்கள் தோழர்களே:

தனியுடைமைக் கொடுமையைச் சாய்க்கப் போராடுவதின் அவசியத்தையும் எப்படியெல்லாம் போராடவேண்டும் என்பதையும் பல பாடல்களில் பலபடியாகப் பாடுகிறார் கவிஞர்,

நெஞ்சை நிமிர்த்துங்கன் தோழர்களே-இனி
நேருக்கு நேர்நின்று பார்ப்போம்-சம
நீதிக்குப் போர்ப்படை சேர்ப்போம்,

என்று பாடுவதோடு மட்டுமின்றி பஞ்சையாய்ப் பராரியாய் வாழும் உழைக்கும் மக்கள் இனித் துஞ்சி இரந்துண்ணும் வாழ்க்கையை விட்டுத் தீமையை, அடக்குமுறையை, ஒடுக்கு முறையை வேரோடு சாய்க்கப் போராடவேண்டும் என்கிறார். மேலும்,

மூடிய கைகளை மேலுயர்த்து உந்தன்
மூச்சில் கனல்விட்டுக் காட்டு-உந்தன்
பேச்சில் புரட்சியை ஊட்டு-பல
கோடிப் பராரிகள் ஒன்றுபட்டாலது
கோட்டை தகர்ந்திடும் கூட்டு-அதைக்
கூட்டட்டும் நாட்டிலென் பாட்டு

என்றும் பாடுவதன் மூலம் ஒற்றுமை-முழக்கம்-போராட்டம் எனப் படிநிலைகளாகப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார். ஒவ்வொரு கவிஞனும் தம்பணி எது என்பதை உணர வேண்டும் அதை மக்களுக்கும் உணர்த்த வேண்டும் இதுவே கவிஞனுக்குரிய மிகப்பெரிய கடமையாகும். தோழர்களை ஒன்றிணைத்துத் கோட்டை தகர்த்திடும் கூட்டை உருவாக்குவதே என்பாட்டின் பணி என்று நெஞ்சுயர்த்திப் பாடுகிறார் கவிஞர்.

எப்படிப் புரட்சிவரும்?

அசையாத மாளிகையில் சொகுசாக வாழ்ந்து வரும் சீமான்களுக்கு வேட்டு வைக்கும் புரட்சி எப்படி வரும்? யாரால் வரும்? இருவேறு குடும்பங்கள்- ஒன்று செல்வர்கள் இல்லம், மற்றொன்று ஏழ்மையின் குடிசை இரண்டுக்கும் என்ன வேறுபாடு,

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன்வண்ணக் கிண்ணத்தில் பால்கஞ்சி

ஏழைக்குடிசையிலோ,

கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி,

இந்த வேறுபாடுகள் புரிந்தால்தான், கஞ்சி குடிப்பதற்கில்லாத காரணங்கள் புரிந்தால்தான,; பாமரர்கள் சேர்ந்தெழுவர் இதைஉணர்ந்திருந்தார் கவிஞர் கண்ணதாசன், எனவேதான் பசியால் புரட்சிவரும் என்கிறார்.

பசியால் புரட்சிவரும்
பாமரர்கள் சேர்ந்தெழுந்தால்
அசையாத மாளிகையும்
ஆடிப் பொடிபடுமாம்

அடிவயிறு பற்றிவிட்டால்
அடுத்து நடப்பதென்ன
கொடிய பசி வந்துவிட்டால்
குமுறும் எரிமலைதான்

கவிஞரின் தீர்க்கதரிசனம் இது.

சோவியத்நாடு துயரிலா நாடு:

திராவிட இயக்கங்கள், தேசிய இயக்கம் இவைகளில் மூழ்கிய கவிஞருக்கு இந்த ஞானமெல்லாம் எங்கிருந்து வந்தது? இயல்பாகவே சமூக அக்கறை உடைய கவிஞருக்குச் சோவியத் நாட்டுச் சுற்றுப்பயணமே சமூகச்சிக்கல்கள் குறித்த மிகப்பெரிய தெளிவைத் தந்தது எனலாம். எனவேதான் பொருளாதாரத் துறையிலேயும் சமுதாயத் துறையிலேயும் நமது நாட்டில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு வருந்தி அவற்றைச் சீராக்கி பொதுவுடைமை உலகு படைக்கும் வழிகளைச் சிந்திக்கத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாகவே சோவியத் நாட்டைப் பற்றியும், கூட்டுப்பண்ணைகளின் மேன்மைகள் பற்றியும் பலபடப் புகழ்ந்து எழுதத் தொடங்கினார்.திருவள்ளுவர் நாடு பற்றிக்கூறிய வரையறைகள் அனைத்தையும் தம்மகத்தே பொருத்தமுறப் பொருத்திக் கொண்ட நாடு சோவியத் நாடுதான் என்பது கவிஞரின் திட்டவட்டமான முடிவு

நாடெனில் யாதென நாட்டிய வள்ளுவன்
பாடல் கூறிய பக்குவத்தே ஓர்
நாடு உண்டாயின் நாமறிந்தவரை
சோவியத் நாடே துயரில்லா நாடு

உறுபசியும் ஓவாப்பிணியும் நீங்கி,
தள்ளா விளையுளும் தக்காரும் பெற்று,
நாடா வளத்தனவாய்

வள்ளுவன் வாக்கிற்கு முற்றும் பொருந்திய நாடாகச் சோவியத்தைக் காண்கிறார் கவிஞர். அதுமட்டுமா? சோவியத் நாட்டின் கூட்டுப்பண்ணைகளில் நெஞ்சைப் பறிகொடுக்கிறார் நம்கவிஞர்

பாடுபடும் உழவருக்குப்
பணமும் உண்டு உணவுமுண்டு
நாடுபெறும் லாபத்திலே
பயனும் உண்டு-எல்லாம்
நமது என்று எண்ணுகின்ற
நினைவும் உண்டு.

அதனால் கூட்டுப் பண்ணை-நாடு பயனடையப் பயிர் வளர்த்துக் கூட்டும் பண்ணை என்று கூட்டுப் பண்ணைகளின் மேன்மைகளைப் புகழ்வதோடு இத்தகு நன்மைகளுக்கெல்லாம் காரணமான சோஷலிசம் கொண்டுவந்தால் நமது நாட்டிலும் சோற்றுக்கென்று சண்டைபோடும் உயிர்கள் தங்கும் என்று தன் அவாவையும் வெளிப்படுத்துகிறார்.

நூறுவேலி மிராசுதாரும்
நோய்பிடித்த உழவர்மாரும்
சோறுக்கென்று சண்டைபோடும்
உலகம் எங்கும்-அந்த
சோஷலிசம் கொண்டு வந்தால்
உயிர்கள் தங்கும்.

இப்படிச் சோஷலிச சோவியத் புகழ்பாடும் கவிஞரின் மனதில் நீங்கா இடம் பிடித்த அரசியல் தத்துவம் சமதருமமே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சத்தியத்தின் எச்சரிக்கை
சமதருமம் நாடுங்கள்
சத்தியத்தின் எச்சரிக்கை
சரித்திரத்தை மாற்றுங்கள்

என்று சரித்திரத்தையே மாற்றத் துடிக்கும் அவா கவிஞருடையது.

மாசேதுங்கை மறக்காத கவிஞர்:

இந்திய சீன எல்லைப்போரின் போது சீனாவை இடித்துரைக்கத் தவறாத கவிஞர் கண்ணதாசன் சீனாவை எப்போதும் பகைநாடாகவே பார்க்கும் இயல்புடையவர். ஆனால் பொதுவுடைமைப் புரட்சியாளர் மாவோ என்றழைக்கப்படும் மாசேதுங்கைப் பாராட்ட அவர் மறக்கவில்லை.

கண்டு சுதந்திரத்தைக் கவலையுடன் மாசேதுங்
பெற்ற மறுஆண்டில் பெரும்புகழைத் தான்சேர்த்தான்
தன்னாட்டுத் தேவைகளைத் தானே நிறைவுசெயும்
பொன்னாடாகப் புகழ்பெற்றான் இன்றங்கே
ஏழை அடிமையிலை இரப்போர் எவருமிலை

என்று ஏழ்மையை, அடிமைத்தனத்தை, இல்லாமையை ஒழித்த அவரின் புரட்சிக்காகவும் தன்னாட்டைப் பொன்னாடாக மாற்றிய புகழுக்காகவும் வாயாரப் புகழ்கிறார். மேலும்

துப்பாக்கி யாலேதான்
துரைத்தனங்கள் சேரும் எனச்
செப்பியவன் அந்தச்
சிவப்புநிலா மாசேதுங்

சிவப்புநிலா என்று பட்டம் சூட்டி மகிழும் அளவிற்கு அவரது சித்தாந்தங்களை மதிக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

தொகுப்புரை
1. சாமான்யர்களின் பசியைக் கண்டு கோபம் கொண்டு கொதித்தெழுந்தவர் கண்ணதாசன்.
2. நாட்டு முன்னேற்றத்திற்கு ஜனநாயகம் பயன்படாது என்றும் தனியுடைமை நீக்கிப் பொதுவுடைமை ஏற்பதே பொருத்தம் என்றும் கூறுகின்றார் கண்ணதாசன்.
3. பொதுவுடைமை காணும் புரட்சிக்கு என்பாட்டுப் பயன்பட வேண்டும் என்கிறார் கண்ணதாசன்.
4. பசியால் புரட்சி வரும் என்று துணிகிறார் கண்ணதாசன்.
5. சோவியத் நாடே திருவள்ளுவர் சொன்ன பொன்னாடு என்கிறார் கண்ணதாசன்.
6. மாசேதுங்கைச் சிவப்புநிலா என்று புகழ்கிறார் கண்ணதாசன்.

மேற்கூறிய கருத்துக்களால் மக்கள் நிறைவான வாழ்வு வாழப் பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்குவதே நம் முதண்மையான பணி முழுமையான பணி என்று கவிஞர் கருதுகின்றார் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...